தந்தை பெரியாரை பற்றியும்,அவர் தொடங்கிய இயக்கம்,கொள்கை,கருத்துகள் மற்றும் கட்டுரைகள் இடம்பெறும்.
வியாழன், 14 மே, 2015
புதன், 13 மே, 2015
தாழ்த்தப்பட்டோருக்கான வீடுகள் ஊரின் நடுவே அமைத்திட வேண்டும்
- தந்தை பெரியார்
டாக்டர் அம்பேத்கர் பிறந்ததின விழாவில், டாக்டர் அம்பேத்கர் அவர் களை நாம் பாராட்டுவது மட்டும் போதாது; அவரின் தொண்டினைப் பாராட்டவேண்டும். அவர் கொள்கை யினைப் பின் பற்றவேண்டும்.
டாக்டர் அம்பேத்கர் பேரறிஞர். செயற்கரிய செய்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய தொண்டு யாரும் செய்ய முடியாத தொண்டு ஆகும்.
தாழ்த்தப்பட்ட மக்களுடைய எண் ணிக்கை எவ்வளவோ அத்துணை விகிதத்தில் கல்வி, உத்தியோகப் பதவி களைப் பெற்றுத் தந்தவர் ஆவார்.
உண்மையை உண்மையாக எடுத்துச் சொல்லுவதில் அவருக்கு ஈடு யாரும் இல்லை. சிறந்த படிப்பாளி. தம் மனதில் பட்ட கருத்துகளைத் துணிந்து கூறி வந்தவர். எதிர்ப்புக்காகத் தம் கொள் கையில் இருந்து பின் வாங்காதவர்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எண்ணிக் கைக்குத் தகுந்தாற்போல சலுகைகள் கிடைத்தது அவரின் தொண்டு காரண மாக என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இங்கு அரிஜன நல மாணவர் முன் னேற்றக் கழகம் என்று துவக்கியுள் ளார்கள்.
அதில் எனக்கு ஓர் அதிருப்தி என்ன வென்றால், அரிஜனம் என்ற பெயரை நீங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது; காந்தி வைத்த பெயர் இது. அரிஜனம் என்றால் கடவுள் சாதி; விஷ்ணுவின் ஜனங்கள் என்று பெயர் வைத்தார்.
அதற்கு முன் உங்களுக்குச் சங்கர சாதி என்று பெயர் இருந்தது. அது சிவ னுக்குச் சம்பந்தம் உள்ளதாக இருப்பதால் காந்தி, விஷ்ணுவுக்குச் சம்பந்தம் இருக்க வேண்டும் என்று அரிஜனங்கள் என்று பெயர் வைத்தார்.
நாங்கள் தான் கண்டித்து எழுதி னோம். நீங்கள் தாழ்ந்தவர்கள் தாழ்த்தப் பட்ட மக்கள். உங்களைத் தாழ்த்தியது இந்த விஷ்ணு, சிவன் முதலிய கட வுள்கள் தான். எனவே, இந்தப் பெயரை ஏற்கக்கூடாது என்று எழுதினேன்.
இதனை ஒரு சமுதாய முன்னேற்ற ஸ்தாபனமாக வைத்துப் பாடுபட வேண் டும். இன்றைக்குச் சமுதாய முன்னேற் றத்துக்குப் பாடுபடுகின்றேன் என்று பலர் பல சங்கங்கள் வைத்து உள்ளார்கள். அதில் ஈடுபட்டு உள்ளவர்கள் தாங்கள் முன்னேறப் பார்க்கின்றார்களே ஒழிய, சமுதாய முன் னேற்றத்தில் அக்கறை அற்றவர்களாகவே இருக்கின்றார்கள்.
காரணம், அரசியலில் ஈடுபட்டவர் களாக இருக்கின்றதனால் ஓட்டுக்காக, பதவிக்காகக் காரியம் ஆற்றுகின்றவர்களாக இருக்கின்றார்கள்.
எனவே, நீங்கள் அரிஜன மாணவர் நல முன்னேற்றக் கழகம் என்பதை விட்டு விட்டுத் தாழ்த்தப்பட்டோர் மாணவர் நலமுன்னேற்றக் கழகம் என்று வைத்துக் கொள்ளவேண்டும். இந்தப் பேர் கூட நான் முயற்சி பண்ணி வைத்தது.
அதற்கு முன்பு பின் தங்கிய வகுப்பார், தாழ்ந்த வகுப்பார் என்றுதான் இருந்தது. நான் தான் கூறினேன், எழுதினேன். எப்படிப் பின் தங்கிய வகுப்பார் என்ப வர்களைப் பிற்படுத்தப்பட்டோர் என்று கூறப்படுகின்றதோ, அதுபோலத் தாழ்ந்த வகுப்பார்களைத் தாழ்த்தப்பட்டோர் என்று அழைக்கவேண்டும் என்று. நீங்களாகத் தாழ்ந்தவர்கள் அல்லவே. மேல் சாதிக்காரர் களால் தாழ்த்தப்பட்டவர்கள் ஆக்கப்பட் டவர்கள்தானே, ஆகவே தாழ்த்தப்பட் டோர் என்றே நீங்கள் போடவேண்டுமே ஒழிய அரிசனங்கள் என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
உங்களைத் தாழ்த்தப்பட்டவர்களாக - இழிமக்களாக ஆக்கியது கடவுள் காரண மாகத்தானே! நாங்கள் கடவுளின் ஜனங்கள் என்பதை ஒத்துக் கொண்டு நான் ஏன் இழிமகன், தாழ்த்தப்பட்ட மகன் என்று கேட்டால் என்ன நியாயம்?
இன்றைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாகக் கூறிக் கொண்டு, அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தருகின்றேன் என்று கூறி ஊருக்கு வெளியே, ஒதுக்குப் புறத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கின்றார்கள்.
முன்பு ஊருக்கு வெளியே சேரியில் குடி இருக்கின்றதற்கும் இதற்கும் என்ன வித்தி யாசம். தாழ்த்தப்பட்ட மக்களைப் புதிய சேரியில் தனியாகக் குடி ஏற்றுவதாகத் தானே ஆகின்றது.
அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுக்க வேண்டும். மற்ற மக்களோடு கலந்து வாழச் செய்ய வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மக்களாகிய நீங்கள் குடிசை வீட்டில் குடி இருந்தாலும் ஊருக்கு நடுவில் இருப்பதையே பெரிதாகக் கருத வேண்டுமே ஒழிய, ஊருக்கு வெளியே கட்டிக் கொடுக்கக் கூடிய வீட்டினை ஏற்றுக் கொள்ளக்கூடாது.
காரணம், இந்த முறை மேலும் உங்களை ஒதுக்கி வைக்கத்தானே உதவுகின்றது.
தோழர்களே, இன்றைக்கும் தாழ்த்தப் பட்ட மக்களுக்குத் தமிழகத்தில் கூட தீண் டாமை, தொல்லைகள் முற்றிலும் இல்லை என்று கூறமுடியாது.
தொல்லைகள், கொடுமைகள் நடந்து கொண்டு தான் வருகின்றன.
பார்ப்பான் மட்டும் அல்லவே; பார்ப் பனர் அல்லாத மக்களும் கூட முட்டாள் தனமாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சில இடங்களில் கொடுமை இழைக்கின்றார்கள்.
முட்டாள்தனமாக இப்படிச் செய்கின் றார்கள். பார்ப்பான் அவனைச் சூத்திரன் என்றால் நான் எப்படி சூத்திரன் என்று கேட்கின்றவன், தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் எப்படித் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று கூறமுடியும்? தாழ்த்தப்பட்ட மக்கள் படித்துவிட்டு வெள்ளையும், சள்ளையுமாக வெளியே போவதைப் பார்த்து ஆத்திரப்படுவது முட்டாள்தனம் ஆகும்.
தாழ்த்தப்பட்ட மக்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.
உங்களுக்குக் கடவுள் நம்பிக்கையோ, மத நம்பிக்கையோ இருக்கக்கூடாது. உங்களை இந்தத் தாழ்ந்த நிலைக்கு ஆக்கியது இந்துக் கடவுளும், மதமும் தான் என்பதை உணர வேண்டும்.
நீங்கள் உங்கள் அறிவையே பிரதான மாக நம்ப வேண்டும். உங்களை ஈடேற் றுவது உங்கள் அறிவே தவிர கடவுளும், மதமும் அல்ல.
உங்கள் முன்னேற்றத்திற்காக அரசாங் கம் பல நல்ல காரியங்களைச் செய்து வருகிறது. இவற்றை முழுமையும் பயன் படுத்திக் கொண்டு முன்னுக்கு வர வேண்டும். இந்த அரசாங்கமானபடியால் இதன் ஆட்சிக் காலத்திலேயே நீங்கள் வளர்ச்சி அடைந்தால் தான் உண்டு. மற்றவர் ஆட்சியில் இந்த அளவு உங்களுக்குச் சலுகை கிடைக்காது.
மேல்சாதி என்று கருதிக் கொண்டு இருக்கின்ற பார்ப்பனர் அல்லாத மக்களுக் கும் கூறுவேன். நீங்களும் தாழ்த்தப்பட்ட மக்களையும் மனிதர்கள் நம் இனத்தைச் சார்ந்தவர்கள் என்று கருதவேண்டும். அவர்களிடம் அன்பாக இருக்கவேண்டும். அவர்கள் முன்னேற உதவி செய்ய வேண்டும். அப்போதுதான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இருக்கிற சாதி இழிவு மட்டும் அல்ல, உங்களுக்கும் இருக்கின்ற சாதி இழிவும் ஒழியும். சாதிகள் அற்ற சமுதாயம் ஏற்படவும் வழி பிறக்கும்.
23.6.1972 அன்று நொய்யலில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு
(விடுதலை, 3.7.1972)
தந்தை பெரியார் உலகமயமாகிறார்
தந்தை பெரியார் உலகமயமாகிறார்
கொலம்பியா பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் சிந்தனைப் பரிமாற்றம்
நியூயார்க், ஏப்.19_ அமெரிக்கா _ நியூயார்க் அருகில் அமைந்துள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் தந்தை பெரி யார்பற்றிய சிந்தனைகள் பரிமாறிக் கொள்ளப்பட் டன.
அமெரிக்காவின் நியூ யார்க் நகரிலே அமைந் துள்ள கொலம்பியா பல்கலைக் கழகம் உலகப் புகழ் பெற்றது.அங்கு பாபாசாகேப் அம்பேத்கர் பயின்ற சட்டக்கல்லூரிக்கு அடுத்துள்ள அரங்கில் ஏப்ரல் 10,11 ஆம் நாட் களில் ஒரு மாநாடு நடந் தது. அதன் தலைப்பே புது மையானது. சாமியில்லாத சாவு. ஞிஹ்வீஸீரீ ஷ்வீலீஷீ ஞிமீடஹ் பேராசிரியர் பால்கர்ட்சு நிறுவிய அறிவியல் மனித நேய அமைப்பின் ஏற்பாட் டில் பல்துறை வல்லுநர்கள் பங்கேற்றும், கலந்து கொண்டும் இந்த மாநாடு நடைபெற்றது.
பலருக்கு வாழ்வின் கடைசி நாட்கள் வரும் என்று தெரிந்ததும் நம்பிக் கையின்மையும், அச்சமும் வந்து விடுகின்றன. அவர் களைக் கடவுள் என்ன காப்பாற்றவா போகின்றார்?
கடவுள் ,மத நம்பிக்கை யில்லாமல் வாழ்வின் முடிவை எப்படி எதிர் கொள்வது என்பதைப் பற்றியும் அதில் மருத்துவ மனைகள்,அங்கு ஆறுதல் சொல்லும் ஆர்வலர்கள் ,சட்ட திட்டங்கள் பற்றி யும் கட்டுரைகள் வாசிக் கப்பட்டன.
மக்களுக்குச் சாவதற்கு உரிமை உள்ளதா? அமெ ரிக்காவின் அய்ந்து மாநி லங்களில் உள்ளது. இரண்டு மருத்துவர்கள் தனித்தனியே பரிசோதித்து கடும் நோயாலும், வலியா லும் துன்பப்படுவோர் 6 மாதங்களில் இறந்து விடு வார்கள் என்று சான்றிதழ் தந்து, அதை உறவினர் களும் ஏற்றுக்கொண்டு 15 நாட்கள் கழித்து அவர்கள் வாழ்வை அவர்களே முடித்துக்கொள்ள உரிமை உள்ளது. இது பற்றி விளக் கமாக விவாதிக்கப்பட்டது .அய்ரோப்பிய நாடுகளிலும் இது போல் உள்ளது.
தற்கொலைக்கு எதி ரான மனிதநேயக் கருத் துக்கள் ஆராயப்பட்டன. மனித உடல் உறுப்புக்கள் நன்கொடையும் அதில் மட்டும் மத,இன வேறு பாடுகள் இல்லாமல் பெற்றுக் கொள்வதையும் பற்றி ஒரு கருப்பினப் பெண் உணர்ச்சியுடன் பேசினார் . உடல் உறுப்புக் கள் பெரிய வணிகமாகி விட்டதை அலசினார்.
தந்தை பெரியார் பற்றி நன்கு அறிந்தவரும் பெரி யார் பன்னாட்டமைப்பின் நிகழ்வில் பங்கேற்றுமுள்ள மார்க்ரெட் டவுணி அம்மையார் கல்லறையா? மரியாதையா ? என்ற தலைப்பில் இறப்பில் மனிதநேயம் தழைத் தோங்க வேண்டும், உடல் நன்கொடை பெருக வேண்டும் என்று எடுத்து ரைத்தார் .அந்த நிகழ்விற்கு நடுவராக இருந்த சோம. இளங்கோவன் அவர்கள் பெரியார் பற்றியும் நமது தோழர்களின் குருதிக் கொடை உடல் நன்கொடை பற்றியும் விளக்கினார்.
கனடாவிலிருந்து மனநல மருத்துவர் ராபர்ட் லூயிசு எப்படி மதவாத ஆறுதல் அளிப்போர் (றிணீஷீக்ஷீ) நிறுவனமே அவரை அழைத்து மத நம் பிக்கையில்லாதவர்களுக்கு ஆறுதல் கூறும் வழி முறைகள் பற்றிப் பேச்சு சொல்லியுள்ளனர் என்று எடுத்துரைத்தார் .அங்கு பகுத்தறிவு பல முனை களில் அமைதியாக வெற்றி பெற்று வருவதைப் பற்றிப் பெருமைப் பட்டார். மத நம்பிக்கையில்லாதவர்கட்கு உள்ள உரிமைகள் செயல்படுத் தப்படுவதை உரைத்தார்.
தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகள் நடத்தி யுள்ளவரும், ஒரு மில் லியன் டாலர் பந்தயத்தைப் பல ஆண்டுகளாக மத வாதிகளிடம் வைத்துள்ள ஜேம்ஸ் லேண்டி நிறு வனத் தலைவராகவும் இருந்த டி ஜே கிராத்தியை அறிமுகப் படுத்திய மருத் துவர் சரோ இளங்கோவன் தந்தை பெரியாரின் படத்தைக் காண்பித்து, எப்படி பல ஆண்டு களுக்கு முன்னேயே நூறாண்டுகள் வாழலாம், அறிஞர்கள் மனிதன் எளிமையாக இறப்பதற்கு ஆராய்ச்சி செய்வார்கள் என்று சொன்னதை எடுத் துச் சொன்னார்.
இனி வரும் உலகம் ஆங்கில நூலும் அங்கு விற்கப்பட் டது .நீண்ட வாழ்வு பற்றி சொற்பொழிவாற்றிய கிரோத்தி என்னென்ன ஏமாற்று வேலைகள் நடக்கின்றன ,உண்மை யான ஆராய்ச்சிகள் எவை என்றெல்லாம் எடுத் துரைத்தார் .
சமுதாயத் தொண்டர் களும் வழக்குரைஞர்களும், எப்படி ஒரு நாத்திகர் இறந்ததும் அவருடைய கருத்துக்கு எதிராக மத வாத, மூடப்பழக்கத்துடன் இறுதி நிகழ்ச்சி நடத்து கின்றனர்,அதைத் தடுக்க எப்படி நாம் உயிருடன் உள்ள போதே உறவினர் களையும், நண்பர்களையும் உடன் வைத்துப் பேசி எழுத்திலும் வைக்க வேண் டும் என்று காண்பித்தனர் . நமது பகுத்தறிவு வாதிகள் செய்வது போன்றே இருந் தது. பல மனித நேய அமைப்புக்கள் பங்கேற்றன.
பல பேராசிரியர்களும், ஒருவர் மூன்று முனைவர் பட்டம் பெற்றவர் ,மருத் துவ, சட்ட, சமுதாய மேதைகளும் பங்கேற்று கேள்வி பதில்கள் சிறப்பாக இருந்தன.
தந்தை பெரியார் கொள்கை, உலகை மாற்றும்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
தகவல்: சோம.இளங்கோவன்,
பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா.
பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா.
-விடுதலை19.4.15 பக்கம்-1
திங்கள், 11 மே, 2015
வெற்றி நம்முடையது தான்
வெற்றிநம்முடையதுதான்
ஏசு, கோவில்களைக் கள்ளர்குகை என்றார், புத்தர் பார்ப்பனியத்திற்கு அஸ்தி வாரத்தில் வெடி வைத்தார், முகமது நபி விக்கிரகங்களை, கடவுளை பரிகாசம் செய்யும் சின்னம் ஆதலால் கண்ட கண்ட பக்கம் அதை வெறுங்கள் என்றார், காந்தியார் கோவில்களை குச்சுக்காரிகள் விடுதி என்றார். மற்றும் பல பெரியார்கள் கல்லிலும், மரத்திலும், செம்பிலும், காரை யிலும் சித்திரத்திலும் கடவுள் இருப்பாரா மடையர்களே என்றார்கள். இதைவிடவா நாம் சொல்லுகிறோம்? இவ்வளவு கூட நாம் சொல்லுவதில்லையே, இப்படியெல்லாமும் நாம் செய்வதில்லையே, அப்படி இருக்க இந்தப் பார்ப்பனர்கள் பழி சுமத்தி நம்மை ஒழிக்கப் பார்க்கிறார்கள்
நம் கழகச் சார்பாக சென்ற மாதம் இரு கூட்டங்கள் நடந்தன. அதற்குப் பிறகு பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. 1. சென்னை மந்திரிசபை அமைப்பு 2. இங்கிலாந்து தூது கோஷ்டி தோல்வி 3. மதுரை கலவரம் முதலிய காரியங் களாகும். மந்திரி சபை அமைப்பு பற்றி காங்கிரஸ் தலைவர்களுக்குள் எவ்வளவு கோளாறுகள் இருந்தாலும் நமக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை.
ஆனால் அதில் ஆந்திரர், தமிழர் என் கின்ற பாஷை உணர்ச்சியும், பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்ற வகுப்பு பேத உணர்ச்சியும், அந்நிய மாகாணத்தார் பிரவேசம் கூடாது என்கின்ற மாகாண உணர்ச்சியும், யார் முதல் மந்திரி, யார் சாதாரண மந்திரி என்ற பதவி வேட்டைப் போராட்டமும், காங்கிரசுசார் இதுவரை குறை சொல்லி வந்த மற்ற கட்சிகள் நடத்தையையே சர்வ சாதாரணமாகக் காண்கிறோம். காங்கிரகாரர்கள் அல் லாமல் தேவர்களே வந்து மந்திரி சபை நடத்தினாலும் இந்தப் போராட்டங்கள் நடந்துதான் தீரும்.
இது அரசியலுக்கு இயற்கையே ஆகும். ஏனெனில் அர சியல் என்பது வடிகட்டிய சுயநலம், பித்தலாட்டம். ஆகவே எந்தப் பித்தலாட் டமும், ஏன், தெய்வீகமும் சில நாள் களுக்குத்தான் செல்லும். இது எப்படி இருந்தாலும் நமக்குக் கவலையில்லை. நம்மைப் பொறுத்தவரை நாம் இந்த மந்திரிசபையினால் நல்லது கிடைப்பதை நன்றியோடு பெற இருக்கிறோம். கேடு ஏற்பட்டால் போராடவும் பின்வாங்கப் போவதில்லை. போருக்குத் தயாராகவே இருக்கிறோம்.
இந்தி வந்தால் அனுமதிப்போம் என்று நான் சொன்னதாகச் சொல்லு கிறார்கள். அது தவறு. அதைவிட முக்கிய வேலை இருக்கிறது. வந்தால் பார்த்துக் கொள்ள ஆட்கள் இருக் கிறார்கள். ஏற்படுத்தி விட்டு விட்டோம் என்றுதான் சொன்னேன். மற்றும் நம் பேச்சுக்களில் பார்ப்பனர்களைக் குறை கூறியதாக சில பார்ப்பனர்கள் பேசிக் கொண்டார்களாம்.
அதுவும் தவறு, நாம் அவர்களைக் குறை கூறுவதே இல்லை. நம் குறைகளைப் பற்றிப் பேசினால் அது அவர்களைக் குறைகூறுவதாகக் கருது கிறார்கள். அக்குறைகள் நீங்கும்படி சட்டம் ஏற்பட்டால் ஒழிய அல்லது அவர்கள் திருத்திக் கொண்டால் ஒழிய இந்த நிலைமை இன்னும் அதிகமாகுமே தவிர, குறையப் போவதில்லை.
ஆதலால் குறையையும் காரணங்களையும் சொல் லுகிறோம். இது அவர்களைத் திட்டு வதாகாது. அவர்களையும் அதாவது, பார்ப்பனர்களையும், நம்மையும் பார்த் தால் நமக்கு இருந்துவரும் குறையும், இழிவும், அசவுகரியமும் எவ்வளவு இருக்கின்றன? இதை அவர்களில் யார் சிந்திக்கிறார்கள்? தங்களைக் குறை கூறுவதாய்க் கருதும் பார்ப்பன சமுகம் இதற்காக என்ன செய்தது? என்ன செய் கிறது? அவர்கள் எப்போதும் அதி காரத்தில் இருப்பவர்கள், மதத்தில் பெரியவர்கள், ஆதலால் அந்த அதிகாரத்தை, மதத்தைக் கொண்டு நம்மை எவ்வளவு பாரபட்சமாகவும், இழிவாகவும் நடத்துகிறார்கள். அவர்கள் பத்திரிகை ஆதிக்கக்காரர்கள்.
அப்பத் திரிகைகளைக் கொண்டும் நம்மக்களை, நம் இயக்கத்தை எவ்வளவு கொடுமை யாக நடத்தி இழித்துக் கூறி நம்மைத் தலையெடுக்க விடாமல் எவ்வளவு வன்நெஞ்சமாய் அக்கிரமம் செய் கிறார்கள்? நம்மையும், நம் தலைவர் களையும், நம் ஸ்தாபனங்களையும் இழிவு படுத்திக் கடும் பழி சுமத்தி நாடெல்லாம் விஷமப் பிரசாரம் செய்கிறார்கள். மற்ற மாகாணத்தார் நம்மை இழிவாய்க் கருதுகிறார்கள்.
சென்னை மந்திரி சபை அமைப்பில் பிரகாசம் - ராஜகோபாலாச் சாரி கட்சி சண்டை இருந்தாலும், பிரகாசம் அவர்கள் மீது ஆச்சாரியார் கும்பலுக்கு எவ்வளவுதான் அசூயையும் ஆத்திரமும் இருந்தாலும், கட்சித் தலைவர் தேர்தலில் ஆச்சாரியார் கட்சியார், பிரகாசம் தலைவராக வரும்படியாகத்தான் நடந்து கொண்டார்களே தவிர, முத்துரங்க முதலியார் தலைவராக வருவது பார்ப்பனர் களுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை.
ஆச்சாரியார் கூட்டம் உண்மையில் பிரகாசம் கூடாது என்று நினைத்து இருந் தால் அவர் தலைவராக ஆகி இருக்க முடியாது. எனவே பார்ப்பனர்களுக்குள் தங்கள் தங்கள் தனிப்பட்ட காரியம் வரும்போது தான் தங்களுக்குள் போட் டியே ஒழிய, பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் போட்டி வரும்போது பார்ப்பனர் யாவரும் ஒன்றுதான், நாம் தான் தனிப்பட்ட நமக்கு இல்லாவிட்டால் பார்ப்பனரே வரட்டும் என்று விபீஷணர்களாக நடப்பவர்களாக இருந்து வருகிறோம்.
இன்றும் பார்ப்பன மந்திரிகள் 5 பேர்கள் ஆகிவிட்டார்கள். இன்னும் ஒருவர் வரலாம். முக்கியமான இலாகாக்கள் பணம் கொழிக்கும் இலாகாக்கள் யாவும் அவர்கள் இடமே தஞ்சமடைந்துவிட்டன. வெறுந்தப் பட்டைகள்தான் நம்மவர்கள் இடம் அளிக் கப்பட்டு இருக்கின்றன. இப்படி இருந்தாலும் மந்திரி சபையில் காங்கிரசில் துவேஷப் புகை புகைந்து கொண்டிருக்கிறது.
இனி அடுத்தாற்போல் பிரிட்டிஷ் மந்திரி தூதுகோஷ்டி விஷயம். இது தோல்வி அடைந்ததில் அதிசயமென்ன? காங்கிரசு காரர்கள் (ஆரியர்கள்) ஒரு நாளும் பிரிட் டிஷாரை வெளியேற விடமாட்டார்கள். பிரிட்டிஷார் வெளியேறினால் இந்தியா முஸ்லிம் ராஜ்ஜியமாகிவிடும் என்கின்ற பயம் வடநாட்டுத் தலைவர்களுக்கு (ஆரியர் களுக்கு) உண்டு. ஏனெனில் முஸ்லிம்கள் ஒரே ஜாதி, கட்டுப்பாடுடைய ஜாதியாரா வார்கள். அவர்கள் தவிர்த்த இந்தியர்கள் பல ஜாதி, கட்டுப்பாடு இல்லாத விபீஷ ணர்கள் ஜாதி, ஆதலால் கட்டுப்பாடுடைய ஒரு ஜாதிதான் அவர்கள் யாராய் இருந் தாலும் எவ்வளவு சில தொகையினரானா லும் இந்தியாவை ஆளமுடியும். அதனால் தான் காங்கிரசார் வெள்ளையனை வெளியேற அனுமதிக்க மாட்டார்கள் என்கிறேன்.
ஆனால் வெள்ளையனே வெளியேறு என்று அவர்கள் மக்களை ஏமாற்றப் பித்தலாட்டத்தைச் சொல்லிக் கொண்டே வெள்ளையனோடு ஒப்பந்தம் பேசிக் கொண்டு மேல் ஜாதியாரும், பணக்காரர் களும் ஆன ஆரியர்கள் நன்றாக வாழ வழி செய்து கொள்வார்கள். இதனால்தான் தூது கோஷ்டி தோல்வி என்ற நடிப்பை நடத்தினார்களே ஒழிய உண்மையில் தோல்வி இல்லை. அது வெற்றி பெற்றிருந் தால் முஸ்லிம்களுக்குப் பகுதி ஆதிக்கம் வந்துவிடும். இதற்கு, வருணாசிரமத்திற்கும் பணக்காரர்களுக்கும் பரம பக்தரான காந்தியார் சம்மதிப்பாரா? ஆகவே, தூது கோஷ்டி தோல்வி என்பது ஆரியருக்கு வெற்றியேயாகும். இனி அடுத்தாற்போல் மதுரை சம்பவ விஷயம்.
மதுரை சம்பவம் நமக்கு மொத்தத்தில் கணக்குப் பார்த்தால் சிலர் அடிபட்டாலும் பலனில் லாபமே தவிர நட்டமில்லை. நமது இயக்கமும் கருப்புச்சட்டைப் படை அமைப்பும், இந்தியா முழுவதும் பரவி விட்டது.
மதுரை சம்பவம் நமக்கு மொத்தத்தில் கணக்குப் பார்த்தால் சிலர் அடிபட்டாலும் பலனில் லாபமே தவிர நட்டமில்லை. நமது இயக்கமும் கருப்புச்சட்டைப் படை அமைப்பும், இந்தியா முழுவதும் பரவி விட்டது.
நமது கொள்கைகளும் இந்தியா வெங்கும் தெரிந்து விட்டன. இது எதிர் பாராமல் நமக்குக் கிடைத்த லாபமாகும். இதில் பார்ப்பனர்கள் ஏமாந்து போய் விட்டார்கள் என்றே சொல்லலாம். நம்மில் பலருக்கு அடி உண்டு. நல்ல நஷ்டமும் உண்டு. போனால் போகட்டும். இலாபம் எவ்வளவு பெரிது பாருங்கள். உருவக் கடவுள் பேரால் அவர்கள் அடிக்கும் கொள்ளைபற்றியும் ஜாதிக் கொடுமைப் பற்றியும் நமது அப்பிராயம் என்ன? கருப்புச் சட்டைப்படை நோக்கமென்ன? திராவிடர் கழகக் கொள்கை என்ன? என்பவை ஒருவாறு இந்தியா பூராவும் விளம்பரம் செய்யப்பட்டுவிட்டன. இவர்கள் இப்படி செய்யாதிருந்தால் இந்தக் கொள்கை பரவுவது லேசான காரியமல்ல. இதைப் பரப்புவதற்கு ஒரு சிலர் அடி உதை பட்டால் இழிவு அல்ல.
இதற்கு ஆகவேதான் 2000 ஆண்டு களுக்கு முன்பே புத்தர், கிறிஸ்துநாதர், முகமது நபி ஆகிய சீர்திருத்தக்காரர்கள் பாடு பட்டார்கள். ஆனால், அது நம் நாட்டில் வெற்றி பெறவில்லை. இப்போது அதையே தான் நாம் செய்கிறோம். அவர்கள் பட்ட கஷ்டநஷ்டங்களைப் போலவே நமக்கும் கஷ்ட நஷ்டம் வந்துதான் தீரும். அதற்குப் பயப்படக் கூடாது. அப்படிப்பட்ட அந்தக் காட்டுமிராண்டி காலத்தில் அவர்கள் இந்தியா தவிர, மற்ற நாடுகளில் வெற்றி பெற்று விட்டார்கள் என்றால் இந்த விஞ்ஞான காலத்தில் அதே கொள்கை களில் அதுவும் அக்கொள்கைகளில் உலகத் தில் 200 கோடி மக்கள் இருக்கும்போது நாம் ஏன் வெற்றி பெற முடியாது? மதுரை சமணர்களைக் கழுவேற்றின ஊரல்லவா? அதை ஆதரித்துக் கழுவேற்றினவர்களுக்கு முக்தி கொடுத்த சிவன் உறையும் ஊரல் லவா? அது இப்போது சிலரை கல்லால் தடியால் அடித்து, மடியில் உள்ளதைப் பிடுங்கிக் கொண்டு, போய் கொட்ட கைக்குத் தீ வைப்பது மதுரைக்கு எப்படி இழிவாகும்? ஆதலால் மதுரை சம்பவம் பற்றி நாம் அதிசயப்படவோ குறைகூறவோ இடமில்லை.
ஏசு, கோவில்களைக் கள்ளர்குகை என்றார், புத்தர் பார்ப்பனியத்திற்கு அஸ்தி வாரத்தில் வெடி வைத்தார், முகமது நபி விக்கிரகங்களை, கடவுளை பரிகாசம் செய்யும் சின்னம் ஆதலால் கண்ட கண்ட பக்கம் அதை வெறுங்கள் என்றார், காந்தியார் கோவில்களை குச்சுக்காரிகள் விடுதி என்றார். மற்றும் பல பெரியார்கள் கல்லிலும், மரத்திலும், செம்பிலும், காரை யிலும் சித்திரத்திலும் கடவுள் இருப்பாரா மடையர்களே என்றார்கள். இதைவிடவா நாம் சொல்லுகிறோம்? இவ்வளவு கூட நாம் சொல்லுவதில்லையே, இப்படியெல்லாமும் நாம் செய்வதில்லையே, அப்படி இருக்க இந்தப் பார்ப்பனர்கள் பழி சுமத்தி நம்மை ஒழிக்கப் பார்க்கிறார்கள். மதுரை காலித் தனத்திற்கு அஸ்திவாரம், பிறப்பிடம் தோழர் வைத்திய நாதய்யர் என்கின்ற ஒரு பார்ப் பனரின் மூளையும், பணமும், ஆத்திரமும் என்பதாக அப்போதே மக்கள் என்னிடம் சொன்னார்கள். நான் முதலில் நம்ப வில்லை.
பிறகு அவரே அவரது தந்திர மான நடத்தையில் அதை வெளியாக்கிக் கொண்டு விட்டார். பிறகும் எனக்கு ஏராளமான கடிதங்கள் வந்தன. இந்தப் பார்ப்பனர், பார்ப்பனரில் யோக்கியர் என்று சொல்லப்படுபவர். இவர் சங்கதி இப்படி யானால் மற்றவர்கள் எப்படி இருப்பார்கள். மதுரையில் நான் நம் தொண்டர்களை அடக்கிவிட்டதால் நமக்கு அடிவிழ நேரிட்டதென்றும், விட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காதென்றும் நம்பிள் ளைகள் என் மீது குற்றம் சொல்லு கிறார்கள். நான் விட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? இன்னும் சிலர் இரு பக்கத்திலும் செத்திருப்பார்கள். இதனால் நமக்கு என்ன லாபம்? நம்மவர்கள்தானே இருபக்கமும் அடிபட்டு சாகவேண்டி இருக்கும். ஆதலாலேயே நான் எங்கு சென்றாலும் நம்மவர்களை அடக்குவதும், பலாத்காரம் கூடாது என்பதும் ஆகுமே தவிர பயத்தால் அல்ல. காங்கிரசாரானா லும், கம்யூனிட்ஸ் ஆனாலும் அவர்களில் நம்மவர்கள் என்றால் நாம் சற்று அடங்கி மரியாதையாய் நடந்து கொள்ள வேண்டும். அதுதான் நாகரிகமாகும். இனி எந்தக் கட்சி ஆனாலும் நம்மவர்களுக்குள் சண்டை, கலகம், வசவு கூடாது.
கருப்புச் சட்டை படைக்கு இது முக்கிய கவனமாக இருக்க வேண்டும். அவர்களி டம் சிநேகம் கொள்ளுங்கள். இந்த புத்தி இல்லாததாலேயே பொது எதிரியை மறந்து அவனுக்கு மானங்கெட்ட அடிமையாகி விட்டோம். இதைத்தான் மதுரையில் முதல்நாள் கூட்டத்தில் வலியுறுத்திப் பேசி இருக்கிறேன்.
இப்போது மந்திரிசபை பார்ப்பன ஆதிக்கமாகிவிட்டது. சர்க்கார் காரியா லயம் பெரிதும் ஏற்கனவே பார்ப்பன அக்கிரகாரம், வெளி அய்.சி.எ. அதிகாரிகள், ஜட்ஜுகள், பெரிதும் பார்ப்பனர்கள். நம்ம வர்களிலும் பலர் அவர்கள் அடிமைகள், பத்திரிகைகளும் யாவும் அவர்களுடைய தும் அவர்களது ஆதிக்கத்தில் இருப்பது மாகும். நம் மந்திரிகள், நம் அதிகாரிகள் யாராவது (திராவிடர்கள்) இருந்தால் அவர்கள் சக்தி அற்றவர்கள், ஆதரவற்ற வர்கள். தங்களைக் காப்பாற்றிக் கொள் ளவே பாததீர்த்தம் அருந்த வேண்டிய வர்கள். இந்த நிலையில் நாம் இப்போது நான் செய்வதற்கு மேல் என்ன செய்ய முடியும்? இருக்கும் சக்தியையும், முஸ்தீபு சாதனங்களையும் வைத்துக் கொண்டு எவ்வளவு செய்யமுடியுமோ அதற்கு மேலேயே செய்வேனே ஒழிய விட்டுக் கொடுத்துவிடமாட்டேன். மாணவர்கள், இளைஞர்கள் சில பெரியார்களிடத்தில் எனக்கு உள்ள நம்பிக்கையையும் அவர் களுக்கு என்னிடத்தில் உள்ள அன்பையும் கொண்டு நம் முக்கிய குறைபாடுகளை நீக்கி நமக்குள் ஒரு ஒற்றுமை ஏற்படவே நான் திட்டம் வைத்திருக்கிறேன்.
அது நடைபெற வெற்றிபெற நீங்கள் கட்டுப் பாடாக, குயுக்தி இல்லாமல், உங்கள் சவு கரியத்திற்கு ஆக காரியங்களையே கெடுக்கப் பார்க்காமல் எனக்கு உதவி செய்யுங்கள், பொறுமையாய், கண்ணிய மாய், ஒழுக்கமாய், ஒழுங்கு முறைப்படி நடந்து கொள்ளுங்கள், வெற்றி நம்முடையதுதான். சந்தேகமில்லை.
(26.05.1946 அன்று தேதி ஈரோடு காரைவாய்க்கால் மைதானத்தில் தோழர் குகநாதன் அவர்கள் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டம் இரவு 10 மணிக்கு மேல் துவக்கப்பட்டது. 5000 மக்கள் வரை வந்து இருந்தனர். நள்ளிரவு ஒரு மணி வரை சொற்பொழிவுகள் நடந் தன. அக்கூட்டத்தில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு )
குடிஅரசு - சொற்பொழிவு - 15.06.1946
(26.05.1946 அன்று தேதி ஈரோடு காரைவாய்க்கால் மைதானத்தில் தோழர் குகநாதன் அவர்கள் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டம் இரவு 10 மணிக்கு மேல் துவக்கப்பட்டது. 5000 மக்கள் வரை வந்து இருந்தனர். நள்ளிரவு ஒரு மணி வரை சொற்பொழிவுகள் நடந் தன. அக்கூட்டத்தில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு )
குடிஅரசு - சொற்பொழிவு - 15.06.1946
ஞாயிறு, 19 ஏப்ரல், 2015
வைக்கம் போரட்டம் பகுதி-1
தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத் துக்காக தமிழ்நாடு காங்கிரசிலிருந்து ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டு இருந்தது. அதற்குரிய கணக்கு வவுச்சர் உட்பட தந்தை பெரியாரால் கொடுக்கப்பட்டு விட்டது. அந்தக் கணக்குள் ஆபீசில் கிடைக்க வில்லை என்று சொன்னார்கள். அந்த சமயம் தந்தை பெரியார் காங்கிரசை வெளுத்துக் கட்டிக் கொண்டி ருந்த சமயம். பெரியார் மீது ஏதாவது குற்றம் சுமத்த வேண்டும் என்று ஆதாரத்தைத் தேடிக் கொண்டு இருந்தவர்கள் இதைப் பிடித்துக் கொண்டார்கள். தோழர் முத்துரங்க முதலியார் காங்கிரஸ் ஆபீசுக்கு அதிகாரியாக வந்தார். அவரை விட்டு பெரியாருக்கு ரிஜிஸ்டர் நோட்டீஸ் அனுப்பினார்கள். கணக்கை அனுப்பாவிட்டால் பத்திரிகைகளில் வெளியிடப்படும் என்று அதில் மிரட்டி எழுதி இருந்தார்கள். மறுபடியும் ரிஜிஸ்டர் தபாலில் தந்தை பெரியார் அவர்கள் கணக்கை அனுப்பி வைத்தார்கள்.
யார் யாருக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கணக்கில் பெரியார் குறிப்பிட்டிருந்தாரோ அவர்களுக்கெல்லாம் காங்கிரஸ் ஆபீசிலிருந்து கடிதம் எழுதி அவ்வாறு பணம் பெறப்பட்டதா என்று கேட்டார்கள். சம்பந்தப்பட்ட அத்தனைப் பேரும் தொகை பெறப்பட்டதாகப் பதில் எழுதிவிட்டார்கள். ஆயிரம் ரூபாயில் எழுநூறு ரூபாய் வைக்கம் சத்தியாகக்கிரகக் காரியதரிசிக்குக் கொடுக்கப்பட்டது. மீதி ரூபாய் 300இல் பாலக்காடு சவுரி ஆசிரமத்துக்குக் கதருக்குப் பஞ்சு வாங்கி அனுப்பியது. மீதி நூற்றுச் சில்லரை ரூபாய் கோட்டார் சத்தியாக்கிரகத்துக்குக் கொடுக்கப்பட்டது. இவ்வாறு சரியாக தந்தை பெரியாரால் கணக்கு ஒப்படைக்கப்பட்டதும் காங்கிரஸ்காரர்கள் ஒன்றும் சொல்ல முடியாமல் வாயடைத்து நின்றனர். ஆதாரம்: குடிஅரசு 24.11.1935 பக்கம் 11,12
-விடுதலை,1.9.12
சனி, 18 ஏப்ரல், 2015
ஞாயிறு, 5 ஏப்ரல், 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)