மனித வாழ்க்கை என்பதன் தகுதியான லட்சியம் இதுதான்.
- தந்தை பெரியார், (‘விடுதலை’ 21.03.1956)
-விடுதலை ஞாம.,10.9.16
தந்தை பெரியாரை பற்றியும்,அவர் தொடங்கிய இயக்கம்,கொள்கை,கருத்துகள் மற்றும் கட்டுரைகள் இடம்பெறும்.
8.6.1930- குடிஅரசிலிருந்து...
ஒரு காலத்தில் தருமம் என்று சொல்லப்படுவது மற்றொரு காலத்தில் முட்டாள் தனமாகத் தோன்றப் படுவதை நேரில் பார்க்கிறோம்.
உதாரணமாக, மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்தது பணம் சேகரித்து, அவற்றைப் பார்ப்பனர்கட்கு அள்ளிக் கொடுத்து, ஆசிர்வாதம் பெறுவது மனிதனுடைய கடமையான தருமம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் அவை இன்றைய தினம் சுத்த மூடத்தனம் என்றும், ஏமாற்றுத்தனம் என்றும் தோன்றிவிட்டது.
அதுபோலவே, ஏழைகளை ஏமாற்றிக் கொடுமைப்படுத்திச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு கோயில் கட்டுவது மோட்சத்தில் இடம் சம்பாதித்துக் கொள்வதற்காகச் செய்யப்படும் தர்மம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால், இப்போது அதை முட்டாள் தனமென்றும், தேசத்திற்குக் கெடுதியை விளை விக்கத்தக்கதான தேசத்துரோகம் என்றும் தோன்றி அனேகர்களுக்கு பள்ளிக்கூடம், தொழிற்சாலை, வைத்திய சாலை முதலியவைகட்கு உபயோகப் படுத்த வேண்டியது முக்கியமான தர்மம் என்று தோன்றிவிட்டது.
ஒரு காலத்தில் மூன்று வேளை குளித்து, நான்கு வேளை சாப்பிட்டுவிட்டு, சாம்பலையும், மண்ணையும் பூசிக்கொண்டு உத்திராட்சத்தையும், துளசி மணியையும் உருட்டுவது தர்மமென்று நினைக்கப்பட்டது.
ஆனால், இப்போது அது திருடர்களுடையவும், சோம்பேறிகளுடையவும் வேலையென்று நினைத்து அப்படிப்பட்ட மனிதர்களிடம் வெறுப்பு ஏற்பட்டு இரண்டு வேளையும் உடலை வருத்திக் கஷ்டப்பட்டு சாப்பிடு கின்றவர்களிடம் இரக்கமும், அன்பும், நம்பிக்கையும், ஏற்பட்டுவிட்டது.
ஒரு காலத்தில், கள்ளையும், சாராயத்தையும் குடிக்கக் கூடியதாகவும், ஆட்டையும், எருமையையும் பலியாக சாப்பிடக் கூடியனதாகவும் உள்ள குணங்கள் கற்பிக்கப்பட்ட சாமி என்பதைக் கும்பிட்டுக் கொண்டு அவைகளை அதற்கு வைத்துப் படைத்துக் கொண்டு, தாங்களும் சாப்பிடுவது கடவுள் வணக்கத் தருமமென்று கருதப்பட்டு வந்தது. இப்பொழுது அவைகள் காட்டு மிராண்டித்தனமென்று உணர்ந்து மக்களுக்கு உணர்த்தப் பட்டு வருகிறது.
மற்றும் ஒரு கூட்டத்தாருக்கு ஆடும், பன்றியும் தின்பது தருமமாகயிருக்கிறது. மாடு தின்பது அதர்மமாய் இருக் கிறது. இன்னொரு கூட்டத்தாருக்கு மாடு தின்பது தருமமாக இருக்கிறது. பன்றி தின்பது அதர்மமாக இருக்கிறது. வேறொருக் கூட்டத்தாருக்கு எந்த ஜந்துவையும் சாப்பி டுவது தருமமாக இருக்கிறது. பிறிதொருக் கூட்டத்தாருக்கு எந்த ஜந்துவையானாலும் சாப்பிடுவது அதர்மமா யிருக்கிறது.
ஒரு மதக்காரருக்கு, மதக் கொள்கைபடி கள்ளு, சாராயம் குடிப்பது தரும மாயிருக்கிறது. வேறொரு மதக்காரருக்கு, அவைகளைத் தொடுவது அதர்மமாயி ருக்கிறது. ஒரு கூட்டத்தாருக்கு மனிதனை மனிதன் தொடுவது தீட்டாகக் கருதப்படுகிறது. இன்னொரு கூட்டத்தாருக்கு யாரைத் தொட்டாலும் தீட்டில்லை என்று சொல்லப்படுகிறது. அதுபோலவே, விவாக சம்பந்த முறையிலும் ஒரு கூட்டத்தார் அத்தைப் பெண்ணை மணக்கிறார்கள். மற்றொரு கூட்டத்தார் சித்தப்பன், பெரியப்பன் பெண்ணை மணக்கிறார்கள்.
பிறிதொரு கூட்டத்தார் சிறிய தாயார் பெண்ணை மணக்கிறார்கள். இனியொரு கூட்டத்தார் மாமன் பெண்ணை மணக்கிறார்கள்.
ஒரு வகுப்பார் தங்கையை மணக்கிறார்கள். வேறொரு கூட்டத்தார் யாரையும் மணந்து கொள்கிறார்கள். மற்றொரு கூட்டத்தார் விபசாரத்தனத்தை வெறுக்கிறார்கள். இன் னொரு கூட்டத்தார் விபசாரத்தனத்தை தங்கள் குல தருமமாக கொள்ளுகிறார்கள்.
வேறொரு கூட்டத்தார், பார்ப்பனர்களை யோக்கிய மற்றவர்களென்று வெறுக்கிறார்கள். மற்றொரு கூட்டத்தார், பார்ப்பனர்களைப் புணருவது மோட்ச சாதனமென்று கருதுகிறார்கள்.
இப்படி எத்தனையோ விதமாக ஒன்றுக்கொன்று விபரீதமான முறைகள் தருமமாகக் காணப்படுகிறது. மேலும் இதுபோலவே, சாஸ்திர விடயங்களிலும் ஒரு காலத்தில் மனித சமுகத்திற்குக் கடவுளால் அளிக்கப்பட்ட தருமமென்று சொல்கிற மனுதரும சாஸ்திரம் வெகு பக்தி சிரத்தையோடு பின்பற்றப்பட்டு வந்தது.
இப்போது அவை சுயநலக்காரர்களின், சூழ்ச்சிக்காரர் களின் அயோக்கியத்தனமான செய்கையென்று நெருப்பு வைத்து கொளுத்தப்படுகிறது. இதுபோலவே காலத்திற்கும், தேசத்திற்கும், அறிவிற்கும் தகுந்தபடி தருமங்கள் மாறுவது சகஜமாக இருக்கிறது.
என்னைப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக்கூட கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டு மென்கிறேன். யாராவது ஒருத்தன்தான் நடத்தக் கூடியவனாக இருக்க முடியுமே தவிர, எல்லோருமே தலைவர்களாக இருக்க முடியாது. மற்றவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்க வேண்டிய வர்கள்தான்.
புராணங்களுக்கு மதிப்பு ஏற்பட்டதற்குக் கார ணம் என்னவென்றால் அவைகள் எவ்வளவு ஆபாச மாகவும் காட்டு மிராண்டித்தனமாகவும் எழுதி இருந் தாலும் முதலிலும் கடைசியிலும் இப்புராணத்தைப் படித்தோருக்கு மோட்சம், படிக்க வைத்தோருக்கு மோட்சம், கேட்டோருக்கு மோட்சம், கேட்டவரைக் கண்டோருக்கு மோட்சம், கண்டவரைக் கண்டால் மோட்சம் கிடைப்பதுடன் வாழ்க்கையில் பணமும் பொருளும் சேரு மென்றும் செத்த பிறகு இராஜாவாய் பிரபுவாய் மறுஜென்மம் எடுப்பாய் என்றும் எழுதி வைத்ததே காரணமாகும்.
- -தந்தை பெரியார்
-விடுதலை,4.11.16
ஆங்கிலேயருக்குவக்காலத்தா?
வழக்கமாக ஒரு பல்லவியைப் பாடுவது
பார்ப்பனர்களின் வழக்கம்! ஆங்கிலேயருக்கு வக்காலத்து வாங்கிய ஈ.வெ.ரா. என்று ஒரு சுப்பு எழுதுகிறது (துக்ளக் 16.1.2013 பக்கம் 9)
எங்கே வாங்கினார்? எப்பொழுது வாங்கினார்? எப்படி வாங்கினார்?
என்ற கேள்விகளையெல்லாம் கேட்கக் கூடாது. அக்னியைக் கையில் வைத்துக் கொண்டல்லவா எழுதுகின்றனர்? எதிர்க்கேள்வி கேட்கலாமா?
இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்? என்று குடிஅரசில் (29.12.1933) தலையங்கம் தீட்டியதற்காக வெள்ளையர் ஆட்சியால் 124ஆ அரச வெறுப்புக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் தந்தை பெரியார்; வழக்கின் முடிவில் ரூ.300 அபராதமும் 9 மாதத் தண்டனையும் அளிக்கப்பட்டார் பெரியார் கோவை மாவட்ட ஆட்சியர் (வெள்ளைக்காரர்) ஜீ. டபுள்யூ வெல்ஸ் அய்.சி.எஸ். என்பவரால் என்ற வரலாறு எல்லாம் தெரியாமல் பார்ப்பனக் கொழுப்பெடுத்து எழுதலாமா?
தந்தை பெரியாரின் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாள் அவர்களும் தண்டனைக்கு உள்ளானாரே!
அதே நேரத்தில் அவாளின் ஆச்சாரியார் (ராஜாஜி) 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது அண்டர் கிரவுண்ட் ஆனாரே அதையெல்லாம் வசதியாக மறந்து விடுவார்கள். மறையவர்கள் அல்லவா!
இந்தியரில் முதல் நீதிபதி என்று ஏற்றிப் போற்றுகின்றனரே, அந்த ஜஸ்டிஸ் முத்துசாமி அய்யர் சென்னை பட்டதாரிகளுக்குக் கூறிய அறிவுரையையும் அய்யன்மார்களே கேண்மின் கேண்மின்!!
நமது மாட்சிமை மிக்க அரசுக்கும், பிரிட்டானியா நாட்டிற்கும் ஆழ்ந்த விசுவாசம் காட்டும் வகையில் உங்கள் எண்ணமும், செயலும் அமையட்டும். எக்காலத்தும் போதிய அளவில் திரும்பச் செலுத்த முடியாத வகையில் நாம் அவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆரிய இனத்தில் இரு பிரிவுகளும் கடவுளின் விதிப்படி இந்தியாவில் ஒன்று சேர்ந்திருக்கின்றன. அதனுடைய பெருங் கடமையை இந்தியாவிற்கு ஆற்ற பிரிட்டானிய ஆட்சிக்குத் திறமை இருக்கிறது என்று துக்ளக்கின் முன்னோரான அக்ரகாரத்து நீதிபதி முத்துசாமி அய்யர் பேசினாரா இல்லையா? (Politics and Nationalist Awakening in South India) தமிழில் மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம் பக்கம் 44 -_ பேராசிரியர் கு.வெ.கி. ஆசான்).
ஆரியர்களும் வெள்ளைக்காரர்களும் ஓரினத்தவர்களாம்; கடவுளின் விதிப்படி அவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்களாம். இந்த யோக்கிய சிகாமணிகள் தான் தியாகத் திருவுருவமாம் தந்தை பெரியார்மீது சேற்றைவாரி இறைக்கத் துடிக்கிறார்கள்! வெட்கக் கேடு!
பார்ப்பனரைப் புரிந்து கொள்வீர்!
------------------- மின்சாரம் அவர்கள் 19-1-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை