புதன், 19 ஜூன், 2019

சுயராஜ்யம் (முதல் அத்தியாயம்) - சித்திரபுத்திரன்

3.4.1948  - குடிஅரசிலிருந்து

சென்ற வாரத் தொடர்ச்சி

என்ன கண்டு பிடித்தார் என்றால் இவ் வளவு அக்கிரமத்துக்கும், அநீதிக்கும், கொலைக்கும், கொள்ளைக்கும், நாசத்துக்கும், கற்பழிப்புக்கும், கொலை பாதகத்துக்கும் காந்தியார்தான் காரணம் என்று கண்டு பிடித்தார். சரியான கண்டுபிடிப்புத்தானே இது? சரியோ தப்போ ஆண்டவன் கண்டு பிடித்த முடிவு என்றால் அப்புறம் அப்பீல் ஏது?

தீர்ப்பு

முடிவுக்கு ஏற்ற தண்டனை வேண்டாமா? வேண்டும். யோசித்தார் யோசித்தார். நிரம்பவும் குறைந்த தண்டனை கொடுக்க வேண்டுமென்று கருதி ஒரு சிறு தண்டனை கொடுத்தார். எப்படிக் கொடுத்தார்? தன்னடிச் சோதிக்கு அழைத்துக் கொள்வது என்ற மோட்சப் பிராப்த (மரண) தண்டனை கொடுத்தார். அதை எப்படி நிறைவேற்றினார் என்று கேட்பீர்கள். தானே கொலையாளியாய் இருந்து கொல்லுகிற மரண தண்டனை கொடுத்தார். கடவுள் பார்ப்பன ரூபம் தானே, ஆதலால் பார்ப்பனனாக, கோட்சேயாக, பி.ஏ.படித்த பார்ப்பனனாக வந்தார். ஒன், டூ, திரி என்று மூன்று வேட்டுகள் போட்டார். சரி காந்தி முடிந்தார். மோட்சமடைந்தார்.

இந்தப் பிராதை கடவுளே அல்லாமல் ஒரு சர்வதேச சங்கம் விசாரித்தாலும் இந்தத் தண்டனைதானே கொடுக்கும். இதற்குக் கடவுள் எதற்கு? என்று சிலர் கேட்கலாம்.

அதற்கும் இதற்கும் வெகு வித்தியாசம் உண்டு.

சர்வதேச சங்கம் தண்டனை கொடுத்தால் காந்தியாருக்கு அது தெரியும். தண்டனை நிறைவேற்றப்படும்வரை அவர் மனம் பதறும். அப்பீல் அல்லது கருணை மனு போடச் சொல்லும். பிறகு என்ன ஆகுமோ? கடைசி காலத்தில் அவர் மனம் வருந்தலாமா? ஆகை யால் ஆண்டவன் அந்தப் பிராதைத் தன் பைலிலேயே வைத்துக் கொண்டு காந்தியா ருக்கும் மனம் நோகாமல் பிராதுக்காரருக்கும் திருப்தி ஏற்படும்படி பார்ப்பனனாகவே ஆண்டவன் வந்து கேசையும் தண்டனை யையும் முடித்துத் தள்ளிவிட்டார்.

கடவுளே கொலைகாரனாக வந்து காந்தியைக் கொன்று விட்டதால், கொலை செய்யப்பட்ட விஷயமும் கிணற்றில் விழுந்த கல்லுப்போல் அடியில் போய் அமர்ந்து விட்டது.

அடுத்தபடி நேரு கேஸ் விசாரணையில் இருக்கிறது. பிரசாரத்துக்கு வாரண்டு வந்து தேடுகிறது. அகிம்சா தர்ம சுயராஜ்யத்தின் முதல் அத்தியாயம் முடிந்தது.

-  விடுதலை நாளேடு, 14.6.19

நாகரிகமும் நமது கடமையும் (2)



10.01.1948 - குடிஅரசிலிருந்து...

25.5.2019 -இன் தொடர்ச்சி

ஒரு காலத்தில் தனித் தனி தத்துவம் நாகரிகமாகக் கருதப் பட்டது. உதாரணமாக, ஒரு தனித்தனி ஜாதி நன்மையும் - தேச நன்மையும் சிலாக் கியமாகக் கருதப்பட்டது. ஆனால் ஒரு ஜாதியின் அனுகூலம் பிற ஜாதி யானுக்குப் பாதகம் என்பதையும், ஒரு தேச நன்மை மற்றொரு தேசத்திற்குப் பொல்லாங்கு என்பதையும், நாம் இன்று நன்கு உணர ஆரம்பித்து விட்டோம்.

அனுபவம், அறிவு, ஆராய்ச்சியால் முற்போக்கு

தோழர்களே! நான் குறிப்பாக ஒரு விஷயத்தைப்பற்றி வற்புறுத்தி இங்கு கூற விரும்புகிறேன். அதாவது நாம் அனுபவ முதிர்ச்சியால், அறிவு ஆராய்ச்சியால், நாம் முற்போக்காகிக் கொண்டு வருகிறோம் என்பதேயாம். நாம் எல்லா மனிதர்களையும் அறி வின் உணர்ச்சியால் ஆழ்ந்து கவனிக் கிறோம். உதாரணமாக, வியாபாரி களை-மக்கள் சமுகத்தின் நலனைக் கெடுத்து லாபமடையும் கோஷ்டியைச் சேர்ந்தவ ர்களென்றும், லேவாதேவிக்காரர்களை - மனித சமுக நாச கர்த்தாக்களென்றும், மத ஆதிக்கங்கொண்ட வர்க்கத்தினர்களை-மனித சமுக விரோதிகளென்றும் கண்டிக் கின்றோம்.

நாகரிகம் என்பது பிடிபடாத ஒரு விஷயமென்று முன்பே கூறினேன். நம் நாட்டுப் பெண்கள் எப்படி பெல்ட் கட்டாமல் சேலை கட்டு கிறார்களென்றும் அது இடுப்பில் எவ்வாறு தங்கி இருக்கிறதென்றும், தலைக்கு ஊசி இல்லாமல் பெண்கள் எவ்வாறு மயிர்களைச் சேர்த்து முடிந்து கொள்ளுகிறார்களென்றும், நாம் சாப் பாட்டுக்கு தினம் ஒரு இலை எப்படிச் செலவு செய்கின்றோம், என்ன மகத்தான நஷ்டமென்றும், மேனாட்டார் ஆச்சரியப் பட்டு நம்மவர்களைக் கேட்பதையும் கேட்டி ருக்கிறோம்.

ஒவ்வொருவரும் அவர்களின் செய் கையைச் சரியாக உணராத தினால் சிலவற்றை ஆச்சரியமாகக் கருத நேரிடுகிறது.

நம்மிடையேயுள்ள சாதி அபி மானம், சொந்தக்கார அபிமானம், பாஷா அபிமானம், தேசாபிமானம் எல்லாம் தொலைய வேண்டும். இல்லாவிட்டால் எந்த நல்ல விஷயத் திலும் நாம் முடிவு காணுவது சரியாக ஆகிவிடாது.

காந்தியார் மேனாட்டில் முழுங் கால் துண்டோடு-போதிய ஆடையின்றிப் போன பெருமையைப்பற்றி ஒரு நண்பர் குறிப்பிட்டார்.

இது எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமான தாகும். சவுகரியத்திற்காகவும்-நன் மைக்கா கவும் அங்கு அதிக ஆடைகளைப் பந்தோ பஸ்துக்காக அணிந்து கொள்ளாமல், பிடிவாதத்தோடு-கேவலம் இந்திய தர்மம் என்ற வெறும் எண்ணத்திற்காக, குளிரில் விரைத்துப் போக இங்கிலாந்து வாசம் செய்தது எவ்வளவு தூரம் நியாயமான செய்கையாகும்?

பகுத்தறிவுகொண்டு பாடுபட வாரீர்!

புதிய எண்ணங்களும், புதிய எழுச்சிகளும்-புதிய காரியங்களும் நிகழுகின்றன. நீங்களும் காலப் போக்கின் உயரியபலனை வீணாக் காது பகுத்தறிவை மேற்போட்டுக் கொண்டு ஜனசமுதாய நன்மையைத் தேடி பாடுபட முன் வாருங்கள். உங்களுடைய முயற்சிக்கு எல்லாம் வெற்றியே உண்டு.

வெறும் கடவுள் நம்பிக்கை கொண்டி ருந்தவர்களும் கூட, தங்களுடைய போக்கை மாற்றிக் கொண்டு முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் என்று சொல்லி வருகிறார்கள்.

ஆகவே தோழர்களே! நீங்கள் தன் னம்பிக்கை கொண்டு-மக்களின் விடுதலைக்குச் சரியான வழிகளில் பகுத்தறிவை அடிப் படையாகக் கொண்டு போராட வாருங்கள்.

- விடுதலை நாளேடு, 8. 6 .19

ஞாயிறு, 16 ஜூன், 2019

இந்தி நுழைகிறது

தந்தை பெரியார்




செகண்டரிக் கல்விமுறையில் திருத்தம் என்ற பெயரில் 49, 50ஆம் ஆண்டுக்காக என்று சென்னை சர்க்கார் சென்றமாதம் 30ஆம் நாள் வெளியிட்டிருக்கும் திட்டத்தின் வழியாக மீண்டும் சென்னை மாகாணத்தில் இந்தியை நுழைக்கின்றார்கள்.

சென்னை சர்க்கார் செய்திருக்கும் கல்வி மாறுதல்களில் குறிப்பிடக் கூடியவை.

(1) முதல் பாரத்திலிருந்து 3ஆம் பாரம் வரை கைத்தொழிலை அடிப்படையாக வைத்துப் பாடத்திட்டம் வகுத்திருப்பது.

(2) ஆந்திரம், கன்னடம், மலையாளம் ஆகிய மண்ட லங்களில் இந்துஸ்தானி, சமஸ்கிருதம், அரபு, பாரசீக மொழி அல்லது உருது ஆகியவைகளில் ஏதேனும் ஒன்று 2ஆவது மொழியாக கட்டாயமாகப் படிக்க வேண்டிய தாகும். தமிழ் மண்டலத்தில் மட்டும் மாணவர் விரும் பினால் படிக்கக் கூடிய விருப்பப்பாடமாக இருக்கும்.

(3) ஆங்கிலம் 2 ஆம் பாரத்திலிருந்து 6ஆம் பாரம் வரை கற்பிக்கப்படும். இது 3 ஆவது மொழியாக இருக்கும்.

குறிப்பிடத்தகுந்த இந்த மூன்று மாறுதல்களைப் பற்றியும் நம் கருத்து என்ன? என்பதை விளக்க வேண்டு மென்றாலும், இப்போது 2 ஆவது மாறுதலைப்பற்றி மட்டும் அதாவது தமிழ் நாட்டில் விரும்பினால் இந்தி படிக்கலாம், விரும்பாவிட்டால் கட்டாயம் இல்லை; ஆனால் தமிழ்நாடு தவிர்த்த மற்ற பகுதிகளில் கட்டாய மாகப் படிக்க வேண்டும். என்கிற இரட்டை முறை (சின்ன வருணாசிரம முறை)யைப் பற்றி மட்டும் குறிப்பிடுகிறோம்.

ஆச்சாரியாரின் மந்திரிசபை, வடநாட்டில் யாருக்கோ ஒருவருக்கு வாக்குக் கொடுத்தேன் என்ற சாக்கைக் கூறிச் சென்னை மாகாணத்தில் இந்தியைக் கட்டாய இந்தியாகத் திணித்து ஆயிரக்கணக்கான தாய்மார்களையும், கட்டிளங் காளைகளையும் வெஞ்சிறை (காங்கிரஸ்காரர் புகுந்த சொகுசான சிறையல்ல) புகச் செய்தும், ஈவு இரக்கம் என்பதைச் சுட்டுப் பொசுக்கி விட்ட ஆட்சியாளர்களால், திராவிடத்தின் தனிப் பெருந்தந்தை வெப்பமிகுந்த பெல்லாரிச் சிறையில் தள்ளப்பட்டு, உடல் வாடவும் தாளமுத்து-நடராஜர்களின் பிணங்களைக் கண்டும் வெறி தணியாமல் அற்பாயுளில் ஓடிவிட, அதன்பின் வந்த ஆலோசகர் சர்க்கார் அந்தக் கட்டாய இந்தியை ரத்துச் செய்ததை நாங்கள் மறக்கவில்லை என்பதை இப் போதையச் சென்னைச் சர்க்கார் - ஓமந்தூரார் மந்திரிசபை இந்த உத்தரவால் காட்டிக் கொண்டிருக்கிறது.

எதிர்ப்பிருப்பதை மறக்காத இந்த மந்திரிசபையார், எதிர்கால விஞ்ஞான வாழ்வுக்குக் கொஞ்சமும் பயன் படக்கூடிய நிலையில் இல்லாத, மனிதப் பண்பை விளக் கும் இலக்கியப் பெருமையையுடையது என்றுகூட சொல் லும்படியான நிலையில் இல்லாத, மிகுந்த பிற்போக்குடைய இந்தியை மீண்டும் சென்னை மாகாணத்தில் திணிக்க முன்வந்து விட்டார்கள்.

தமிழ், தெலுங்கு போன்ற தொன்மையும், பண்பாடும் நிறைந்த மொழி மண்டலங்களில், அவ்விரண்டும் அற்ற இந்தியைப் புகுத்த நினைப்பது தவறு! புகுத்துவதற்காகச் செய்யப்படும் முயற்சி எவ்வளவு பெரியதாயிருந்தாலும், நீண்ட காலம் தொடர்ந்து அந்த முயற்சி நடந்தாலும் திராவிட மண்டலத்தில் அது நிறைவேறாது! கருதுகிற பலன் கைகூடாது என்ற அறிஞரின் வாக்கியத்தை ஆள வந்தார்களுக்கு நாம் நினைப்பூட்டுகிறோம். இக்கருத்தைச் சொல்லுகிறவர் பெரியார் இராமசாமி அல்ல! சர்.கே.வி ரெட்டி நாயுடும் அல்ல! பசுமலைப் பாரதியாரும் அல்ல! ஒரு சென்னை மாகாணத்தவரே அல்ல! வடநாட்டுக்காரர், ஒரு பல்கலைக் கழகத் துணைவேந்தர், அமர்நாத்ஷா என்பதையும் அறிய வேண்டுகிறோம்.

மக்களின் அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்ய முடியாத இந்த இந்தியை, இந்தியாவின் பெரும் பகுதியில் பேசினால் புரிந்து கொள்ள முடியும் என்ற காரணத்தையும், வடநாட்டு வியாபாரத்துக்கு வசதியாயிருக்க முடியும் என்ற காரணத்தையும், வடநாட்டுத் தலைவர்களோடு அரசியல் குறித்து அளவளாவ அமைப்புடையது என்ற காரணத்தையும், வேளைக்கு ஒன்றாகக் கூறி வந்த காங்கிரஸ்காரர்களின் உண்மையான நோக்கம், திராவிட நாகரிகம், கலாச்சாரம் ஆகியவைகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, திராவிடர்கள் ஆரிய நாகரிகத்தை ஏற்று மானமிழந்து வாழ்வதுடன், வடநாட்டாருக்கு என்றைக் கும் மீளா அடிமைகளாகவே விளங்க வேண்டும் என்பது தான் என்கிற உண்மையைப் பலமுறை நாம் விளக்கி வந்திருக்கின்றோம். இதை நாம் முன்பு கூறியபோது ஒப்புக் கொள்ளாத காங்கிரஸ் மந்திரிகள், இப்பொழுது வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அரசாங்க உத்தியோகங்களுக்கு இந்திப்படிப்பும் ஒரு தகுதி என்கிற அமைச்சர்களின் உண்மையான நோக்கம் என்ன?

உன் நாட்டில் உனக்கு உத்தியோகம் வேண்டுமானால் இந்தியைப் படி! என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டு, மாகாணத்தின் மற்ற மண்டலங்களில் இந்தியை, 2 ஆவது மொழியை கட்டாயப்படுத்தி விட்டு, தமிழ் மண்டலத்தில் மட்டும் விரும்பினால் படியுங்கள்! விரும்பாவிட்டால் உங்கள் இஷ்டம்! என்கிற இந்தத் திட்டத்தைக் கண்டு திராவிடர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று மந்திரி சபை எதிர்பார்க்க மாட்டாது என்று நம்புகிறோம். ஏன் என்றால் இந்தி இந்த நாட்டில் பரவக்கூடாது என்று கருதுபவர்களின் உண்மையான நோக்கம் என்ன? என்பதை இந்த மந்திரிசபை அறிந்தே இருக்க வேண்டும். இந்தி என்பது வேற்று மொழி - வடநாட்டு மொழி என்கிற துவேஷத் திற்காக இந்நாட்டில் எதிர்ப்பு உண்டாகவில்லை. இந்தியைப் பரப்புவதால் இறந்துபட்ட சமஸ்கிருதத்திற்கு - இந்த நாட்டு மக்களைச் சூத்திரர்களாகவும், தீண்டப் படாதவர்களாகவும், வேசி மக்களாகவும் ஆக்கி வைத்த சமஸ்கிருதத்திற்கு - புத்துயிர் கொடுக்கப்பட்டு, பார்ப்பான் காலைக் கழுவிக் குடிப்பதே மோட்சம் என்று கருதும்படி செய்த பழைய நிலைமை மாறி, பார்ப்பானுக்குப் பிறந்த வர்கள் நாங்கள் என்று சொல்லும்படியான கேவலமான புதிய நிலைமை உண்டாகத்தான் பயன்படுவதாயிருக்க முடியும் என்பதையும், இந்த அனுமானம் காட்சிப் பிரமாணத்தினால் கண்டது என்பதையும், இதுதான் இந்தி பரவக் கூடாது என்பவர்களின் உண்மையான நோக்கம் என்பதையும் அறிந்து கொண்டிருக்கிற மந்திரி சபை - மேலும் இந்தியை எதிர்ப்பவர்களின் நோக்கம் தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல், சென்னை மாகாணம் முழுவதுமே இந்தி பரவக்கூடாது என்பதுதான் என்பதை அறிந்து கொண்டிருக்கிற மந்திரி சபை - இந்த இரட்டை ஆட்சி முறையை ஏன் கைக் கொள்ள வேண்டும்? மந்திரிகளின் பொறுப்பற்ற தன்மையை, வஞ்சகமாய்த் தன்னினத்தைக் கழுத்தறுக்கும் கொடுமையை இந் நடவடிக்கை காட்டவில்லையா? என்பதோடு இம்மந்திரி களின் யோக்கியதையைப் பற்றியும் எவருக்கும் சந்தே கத்தைக் கொடுக்காதா? என்றும் கேட்கின்றோம்.

ஆந்திரம், கன்னடம், மலையாளம் ஆகிய மண்டலங் களில் இந்தி அல்லது இரண்டாவது மொழி, கட்டாயம் என்று மந்திரிசபை சொல்வதிலிருந்து, அந்த மண்டலங் களில் உள்ள மக்களைச் சர்க்கார் எப்படிக் கருதுகிறது? சமஸ்கிருத அடிமைகளான அவர்கள் கட்டாய இந்தியை எதிர்க்க மாட்டார்கள் என்கிற நினைப்போ, கையாலாகாத கயவர்கள் என்கிற கருத்தோதானே இந்த வருணா சிரமத்திற்குக் காரணமாய் இருக்க முடியும்!

ஒரே இனமான திராவிடர்களை, பிரித்தாளும் சூழ்ச்சியே வெற்றிதரும் என்று கண்ட பார்ப்பனர்களின் பழைய வருணாசிரம முறையை இப்போதும் கைக் கொள்வதுதான் வெற்றியைத் தரும் என்ற வஞ்சகமல்லவா இந்த இரட்டை ஆட்சிக்குக் காரணமாகும்? என்றும் கேட்கின்றோம்.

தமிழ்நாட்டுக்கு இந்தி இஷ்ட பாடம் என்றாலும்கூட இதனுடைய பலன் எப்படியாகும்? இன்றைக்கு ஹைஸ்கூல் களில் தலைமை ஆசிரியர்களாய் இருப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்களாகவும், காங்கிரஸ்காரர் களாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு அடிபணிந்துதானே ஆகவேண்டும் என்கிற நிலையிலிருப்பவர்களாகவுமே இருக்கின்றார்கள். இப்பேர்ப்பட்ட தலைமை ஆசிரியர்கள் இந்தச் சட்டத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்வார்கள்?

படிக்கிற மாணவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் வளர்ந்து கொண்டு வருகிறது! படிப்புச் சொல்லிக் கொடுக்கும் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையோ அன்றிருந்த மேனிக்கு அழிவில்லாமல் இருக்கிறது! இந்த நிலைமையில் மாணவனுக்கு இடமில்லை என்பதையே பல்லவியாகத் தலைமையாசிரியர்கள் பாடிக் கொண்டு வருகிறார்கள் என்பதைக் கழிந்த பல ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டு வருகிறோம். பள்ளிக்கூடத்தில் இடமில்லை, படிப்பவன் விரும்பினால் இந்தி படிக்கலாம் என்கிற இந்த நிலைமையைத் தலைமை ஆசிரியர்கள் எப்படிப் பயன்படுத்துவார்கள்? மாணவனைப் பள்ளிக் கூடத்தில் சேர்க்க வந்திருக்கும் கார்டியன், இந்த நெருக்கடியான கட்டத்தில், எப்படியாவது பையன் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து விட வேண்டுமென்று விரும் புவானா? அல்லது இந்தியை வெறுப்பதினால் தன் பையன் படிக்காமலே போகட்டும் என்பதை விரும்புவானா?

100க்கு 90 தற்குறிகளாக இருக்கும் திராவிட மக்களைக் கார்டியனாகப் பெற்றிருக்கும் மாணவர்கள், தலைமை ஆசிரியர் வழியாகக் கட்டாயப்படுத்தப்பட்டு, இந்தி படித்தேயாக வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு தான், பெயரளவில் இந்தி இஷ்ட பாடம் என்று இன்றைய மந்திரிசபை இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

ஆகவே, தமிழ் மண்டலத்தில் இந்தி இஷ்ட பாடம் என்றாலும், உண்மையாய்க் கட்டாய பாடமாகவே ஆகிறது என்பதைத் தமிழ் மக்களும் தெரியாதவர்களல்லர்.

இப்போது தமிழறிஞர்கள் என்று பெயர் படைத் திருக்கிற தமிழ்ப் பெரியார்கள் என்ன செய்யப் போகின்றார்கள்? மற்ற திராவிட மொழிகளின் அறிஞர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்?

இந்தியை வரவேற்றுச் சிந்து பாடமாட்டார்கள் என்பதுறுதி என்றாலும், ஆட்சியின் கொடுங்கோன்மைக்கு அஞ்சி வாய்மூடி மவுனிகளாக விளங்குவார்களா? அல்லது திராவிடத்தின் சிதைவுக்குத் திட்டமிட்டுச் செய்யப்படும் இந்தத் தீச் செயலை தீரத்துடன் எதிர்த்து, சென்னை மாகாணத் திலேயே இந்தி நுழையாதபடி எதிர்ப்பு முன்னணியில் நிற்கப் போகிறார்களா?

திராவிடத்தின் மொழியறிஞர்கள்தான் திராவிடத்தின் சீர்கேட்டிற்குக் காரணம் என்றிருக்கும் பழி மறைவதற்கு, அந்த அறிஞர்களுக்குத் தரப்பட்டிருக்கும் கடைசிச் சந்தர்ப்பம் என்றே நாம் உண்மையாய், உறுதியாய் இந்தத் திட்டத்தைக் குறித்து எண்ணுகிறோம்.

திராவிடப் பெருங்குடி மக்களே! உங்கள் நாட்டை ஆளப்போவது இந்தி மொழி! ஆளுகிறவர்கள் வட நாட்டுக் கையாட்கள்!

ஆட்டி வைப்பவர்கள் வடநாட்டுப் பனியாக் கும்பல்! சுரண்டும் கும்பல் தயாரித்த, உங்கள் சுகவாழ்க்கைக்கு வழிகாணாத, உங்களை மனிதர் களென்றே மதியாத அரசியல் நிர்ணயத்திட்டமே உங் களுக்கிடப்படும் விலங்கு! இருந்து வரும் கொஞ்சநஞ்சம் உரிமைகளுக்கும் வேட்டு வைக்கிறது, எடுத்துவிடப் போகும் வகுப்பு வாரித்திட்டம்! இதனுடைய பொருள் என்ன?

திராவிடன் வாழ்வதற்குத் திராவிடத்தில் உரிமையில்லை! உரிமையற்ற, ஒடுக்கப்பட்ட மக்களாக, விலங்கு களிலும் கேடாக வாழ்ந்தால் வாழவேண்டும். இன்றேல் வாழ்வா-சாவா என்ற இரண்டிலொன்றை முன் நிறுத்தி எதிர்த்து நிற்க வேண்டும். இந்த இரண்டில் ஒன்றுதானே இந்தத் திட்டங்களின் பயனாய் இருக்க முடியும். நீங்கள் என்ன முடிவு கட்டுகிறீர்கள்? எதை விரும்புகிறீர்கள்?

'குடிஅரசு' -  துணை தலையங்கம் - 05.06.1948
-  விடுதலை நாளேடு, 16.6.19

புதன், 12 ஜூன், 2019

பார்ப்பனர் - வடவரோடு இந்திப் போட்டி பலிக்குமா?



தந்தை பெரியார்

அன்புமிக்க தலைவர் அவர்களே! தோழர்களே! தாய்மார்களே!

இந்தக்கூட்டம் நாளை இச்சென்னையில் நடைபெற இருக்கும் இந்தி எதிர்ப்பு மறியலைக் குறித்து மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டமாகும். இந்நாட்டில் அதுவும் இச்சென்னை மாநகரில் இந்தி எதிர்ப்பைக் குறித்து யாருக்காவது விளங்க வைக்க வேண்டுமென்றால், சென்ற 10 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திராத குழந்தைகளுக்கும், அன்று விளக்கம் தெரியாது விபரம் தெரியாது இருந்த குழந்தைகளுக்கும் தான் சற்று விளக்கம் கூறவேண்டியிருக்குமே ஒழிய, மற்றையோருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம் அவ்வளவு விளக்கமாக அன்று நாம் இந்தி எதிர்ப்பின் அவசியத்தைப் பற்றிப் பேசியிருக்கிறோம் என்பதால்தான். சென்ற 10 ஆண்டுகளுக்கு முந்தி, இதே இந்தி மொழி மூலம் நமது திராவிட மொழிக்கும், திராவிடர் கலாச்சாரத்திற்கும், திராவிட மக்களுக்கும் வரநேர்ந்த ஆபத்தைத் தடுக்க வேண்டு மென்று நாம் ஒரு போராட்டத்தை இதே சென்னையில் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதால்தான். அக்காலத்தில் ஏற்பட்ட ஆபத்துக்கும், இக்காலத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்துக்கும் பல வேற்றுமைகள் உண்டு. ஏதாவது கடினமான காய்ச்சலைப்பற்றிக் கூற வேண்டு மானால், இக்காய்ச்சல் மிக "விருலன்ட் பாரத்தில்" அதாவது மிகக் கொடூரமான, வேகமான, ஆபத்துக் கிடமான தன்மையில் வந்துள்ளது என்று கூறுவார்கள். அதே போல் நமது கலாச்சாரத்திற்கு இன்று வந்துள்ள ஆபத்து முன்னை விடச் சற்று கடினமான, சற்று தொந்தரவான தன்மையில் வந்துள்ளது.

பழைய இந்தி நுழைப்பு!

10 ஆண்டுகளுக்கு முன்பு இன்று கவர்னர் ஜெனரலாக இருக்கும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் முதன்மந்திரியாய் இருந்த காலத்தில், இதே இந்தி கட்டாயப் பாடமாகக்கூட அல்ல, இஷ்டபாடமாக வைக்கப்பட்டது. அதுவும் மாகாணம் பூராவுக்கும் 40 அல்லது 50 பள்ளிகளில் மட்டுமே பாடமாக வைக்க ப்பட்டது. அன்று அதைக்கூட நாம் எதிர்த்தோம். நமது எதிர்ப்பின் வலிவைக் கண்டதும், இந்தியை இஷ்டப் பட்டுப் படிப்பவர்கள் கூட, இஷ்டப்பட்டாலொழிய பரீட்சைக்குப் போக வேண்டாம், சென்றாலும் தேற வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறப்பட்டது.

எதிர்ப்பு வளர வளர ஏதோ 100-வார்த்தைகளாவது இந்தியில் ஒரு மாணவன் தெரிந்து கொண்டால் போதுமானது என்று கூறப்பட்டது. கடைசியாக, "இவ்வளவு அதிருப்தி மக்களுக்கு இருக்குமென்று தெரிந்திருந்தால் நான் இந்த மொழியைப் புகுத்தியே இருக்கமாட்டேன்" என்று அவரே கூறும்படியான நிலைகூட ஏற்பட்டது. கடைசியில் இவ்வாறு கூறுமாறு செய்யப்பட்ட அவர், முதல் முதலாக இந்தி எதிர்ப்புப் போர் துவக்கப்பட்டபோது என்ன கூறினார் தெரியுமா?

ஆணவம் குறைச்சலில்லை

"நான் இம்மாகாணத்தின் முதன்மந்திரி. மக்களால் தெரிந்து எடுக்கப்பட்டு மந்திரியாக வந்துள்ளவன். நான் உத்தரவிடுகிறேன் என்றால், மக்களின் பிரதிநிதியாகிய நான் உத்தரவிடுகிறேன் என்று பொருள். அப்படியிருக்க மக்களின் பிரதிநிதிகள் அல்லாத, யாரோ வெளியில் உள்ள ஒரு ராமசாமி நாயக்கரும், ஒரு சோமசுந்தர பாரதி யாரும் எதிர்க்கிறார்கள் என்பதற்காகவா உத்திரவை மாற்றுவேன்? அவர்களுக்காகவா விட்டுக் கொடுப்பேன்? அது நடக்காது, முடியாது" என்று ஆணவத்தோடு கூறினார். அதற்காக நாம் அன்று அஞ்சினோம் இல்லை. மக்களிடம் இந்தியால் விளையக் கூடிய கேடுகளைப் பற்றித் தெளிவாக எடுத்துக் கூறினோம். அவர்களும் ஒப்புக் கொண்டு பேராதரவு அளிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ராஜி பேசிய படலம்

அதைக்கண்டு அன்று ஆணவத்தோடு சவால்விட்ட ஆச்சாரியாரும் சமரசத்திற்கு வர, ராஜிபேச முன்னுக்கு வர நேரிட்டது. ராஜிபேச வந்தவர் ஜெயில் சூப்ரன் டெண்ட் முன்னிலையில்தான் என்னுடன் பேசினார். சமரசம் பேச வந்தவரும் கூட இன்றும் உயிருடன்தான் இருக்கிறார். அவர் யார் என்பதையும்தான் தெரிவித்து விடுகிறேனே! வேறு யாருமில்லை. இன்றைய மத்திய அரசாங்க நிதி மந்திரியாயுள்ள தோழர் சண்முகம் செட்டியார்தான் என்னுடன் ராஜிபேச அனுப்பப்பட்டார். அவர் கூறினார். "இப்போது இந்தி புகுத்தப்பட்டுள்ள நாற்பது பள்ளிகளோடு இந்தி நுழைப்பை நிறுத்திக் கொள்ள ஒப்புக் கொள்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்திக் கொள்ளச் சம்மதம் தானா" என்று கேட்டார். அதற்கு நான் சொன்னேன் "இது வெறும் வீம்புதானே, இந்தி தேவையில்லையென்று அவர் உணருவதாயிருந்தால் இந்த 40 பள்ளிகளில் கூட எடுத்துவிடுவது தானே. நான் ஜெயித்தேனா, அவர் ஜெயித்தாரா என்று காட்டிக் கொள்ளத்தானே இப்படிக் கூறுகிறார்? இதற்கு ஒப்புக் கொள்ள முடியாது" என்று கூறினேன். அதற்கு அவர் சொன்னார்.

"இந்த 40 பள்ளிகளில் கூட இந்தி நிரந்தரமாக இராது. அதுவும் குறைக்கப்பட்டு விடும் என்று கூடக் கூறுகிறார். அப்படிச் செய்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்தச் சம்மதம்தானா" என்று கேட்டார். அப்படியானால் முடிவாக 40 பள்ளிகளிலும் இந்தி மொழி எடுக்கப்பட்டு விடும் என்று முடிவான தேதியைக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள், எனக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. அந்தத் தேதிக்குள் எடுக்கப்படா விட்டால் மறுபடியும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்துகிறேன் என்று கூறினேன். அதற்கு அவர் தன்னால் பொறுப்பேற்க முடியாதென்றும், அந்தத் தேதியைக் கேட்டுத் தெரிவித்து விடுவதாகவும் கூறிச் சென்றார்.

வேகமும் வீம்பும்

இந்தப் பேச்சு நடந்தது சென்னை ஜெயிலில். இப்பேச்சு நடந்த சில நாட்களில் எனக்குக் காய்ச்சல் வரவும் என்னைப் பெல்லாரிச் சிறைக்கு மாற்றினார்கள். அங்கும் காய்ச்சல் ஏற்பட்டது. அங்கிருந்து கோவைக்கு மாற்றப்பட்டேன். நான் பெல்லாரியில் இருந்தபோது இங்கு இந்தி எதிர்ப்பை நடத்தியவர்கள் சற்று வேகமாகப் போய்விட்டார்கள். அதன் பயனாய் சர்க்காருக்கும் வீம்பு அதிகமாகிவிட்டது. அதன் பயனாய் சமரசப் பேச்சு கைவிடப்பட்டது. கோவையிலும் எனக்குக் காய்ச்சல் ஏற்பட்டு வயிற்றுப் போக்கும் ஏற்படவே, கோவை ஜெயில் சூப்ரின்டெண்ட் கொஞ்சம் பயந்து விட்டார். அவர் ஒரு டாக்டர். அவர் உடனே ராஜ கோபாலாச்சாரியாரைப் பார்த்து நிலைமையைச் சொன்னார். ராஜகோபாலாச்சாரியாரும் "தாளமுத்துவுக் கும், நடராஜனுக்கும் ஏற்பட்ட கதி இவனுக்கும் ஏற்பட்டுவிட்டால் என்ன நேருமோ" என்று அஞ்சி "உடனே ஓடோடியும் போய் விடுதலை செய்துவிடு. வெளியில் போய் என்ன வேண்டுமானாலும் ஆகட்டும்" என்று கூறிவிட்டார். ஞாயிறன்று சூப்ரண்டென்டு அவரைப் பார்த்தார். ஞாயிற்றுக்கிழமையன்றே விடுதலை உத்தரவும் செய்யப்பட்டது. பிறகு இந்தி எதிர்ப்புக்காக சிறை சென்றவர்களை, அவர்கள் சிறைவாசம் முடியும் முன்பே கொஞ்சம், கொஞ்சமாக விடுதலை செய்து கொண்டே வந்தார். அதையொட்டி இந்தி இன்று எடுபடும், நாளை எடுபடும் என்று பேச்சு உலாவ ஆரம்பித்தது. அப்படிப்பட்ட நிலையில் யுத்தமும் வந்தது. நாம் போட்ட உத்தரவை நாம் எடுப்பானேன்! வெள்ளையனே எடுத்துவிடட்டுமே என்ற நினைப்பில், காங்கிரஸ் மந்திரிகளும் பேசாமலே யிருந்து கடைசியாக ராஜினாமா கொடுத்து விட்டுச் சென்றார்கள். வெள்ளையர் சர்க்கார் ஆலோசகர்களாக வந்ததும் அந்த உத்தரவை ரத்து செய்து விட்டார்கள். இதுதான் பழைய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் சுருக்கமாகும்.

இன்றைய இந்தி நுழைப்பு முறை

இந்தச் சங்கதியை நன்றாக அறிந்துள்ளவர்கள் இன்று தாம் பதவிக்கு வந்ததும் அதே காரியத்தை மறுபடியும் செய்ய முற்பட்டிருக்கிறார்கள். சுதந்திர அரசாங்கத்தில், சொந்த அரசாங்கத்தில் தான் அன்னிய வடநாட்டு மொழி நம் நாட்டில் புகுத்தப்படுகிறது. அதுவும் முன்னையைவிட சற்றுக் கடினமான முறையிலேயே புகுத்தப்பட்டுள்ளது. எனவே, நமது போராட்டத்தின் அளவும் முன்னையதைவிடச் சற்று விரிவானதாகவே அமையும். உத்தரவு பிறப்பித்தவர் களும், திடீரென்று இந்தியை இந்நாட்டில் கட்டாய பாடமாக்கிவிடவில்லை. இதுதான் நாம் சிந்திக்க வேண் டிய விஷயம். இந்தியை இன்னும் சில பாஷைகளோடு சேர்த்து அவற்றில் ஏதாவதொன்றை இரண்டாவது மொழியாகப் படிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தவர்கள் மாகாணம் பூராவுக்கும் ஒரே மாதிரி உத்தரவைப் பிறப்பிக்கவில்லை. இரண்டாம் மொழி கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய பகுதிகளில் மட்டுமே கட்டாயம் ஆக்கப்பட்டது, தமிழ் நாட்டில் இஷ்டபாடமாக வைக்கப்பட்டது. அந்த உத்தரவிலேயே அதற்குக் காரணமும் கூறியுள்ளார்கள். தமிழ்ப் பகுதியில் இந்தி புகுத்தப்படுவதைச் சிலர் ஆட்சேபிப்பதால் இரண்டாம் மொழியை இப்பகுதியில் மட்டும் கட்டாய மாக்கவில்லை என்று திட்டமாகக் கூறியுள்ளார்கள்.

சண்டைக்குப் போவானேன் என்றே கருதினோம்

இந்தி இந்நாட்டில் இஷ்டபாடமாக வைக்கப்பட்டது கூடத் தவறு; மறுபடியும் ஆட்சியாளர்கள் நம்மை வலுவில் சண்டைக்கு இழுக்கத் துணிந்து விட்டார்கள் போல் இருக்கிறது என்று இவ்வுத்தரவைக் கண்டித்து 'விடுதலை'யில் எழுதி இருந்தோம். என்றாலும் அப்போது இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை நடத்த வேண்டு மென்று நாங்கள் தீர்மானம் செய்யவில்லை. சண்டைக் குப் போவானேன், இஷ்டப்பட்டவர்கள் வேண்டு மானால் படித்துக் கொள்ளட்டுமே என்று எங்கள் கருத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு மட்டும் நிறுத்திக் கொண்டோம்.

பார்ப்பனர் வயிறெரிந்தால்.........

தமிழ்நாட்டில் மட்டும் இந்தி இஷ்டமாக்கப்பட்டது ஒன்றிரண்டு பார்ப்பனர்களுக்கு வயிற்றெச்சலை உண்டாக்கியது. கோவைக்கு மந்திரியார் சென்றிருந்த போது 'ஏன் தமிழ் நாட்டில் மட்டும் இந்தி இஷ்டப் பாடமாக்கப்பட்டது' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் விளக்கமாக பதில் கூறியிருக்கிறார். அப்பதில் என்ன தெரியுமா?

"வேண்டுமென்று தான் நாங்கள் இந்நாட்டில் இந்தியைக் கட்டாயமாக்கவில்லை. இந்த நாட்டு மக்கள் இந்தி மொழியை விரும்ப மாட்டார்கள் என்பதை உணர்ந்துதான் அப்படிச் செய்தோம். அந்த உத்தரவிற்கு ஆட்சேபணை வராததிலிருந்து நாங்கள் நினைத்தது சரியென்றே தெரிகிறது" என்று பதில் கூறியிருக்கிறார். இச்சேதி 24.06.1948ஆம் தேதி சுதேசமித்திரனில் 22.06.1948இல் மந்திரியார் பேசியதாக "இந்தியும் கட்டாய பாடமும்" என்கிற தலைப்பில் வெளிவந்துள்ளது. படிக்கிறேன் கேளுங்கள். வேண்டுமென்றுதான் இந்தி இந்நாட்டில் (தமிழ்நாட்டில்) கட்டாயமாக்கப்படவில்லை. பொது மக்கள் இவ்வுத்தரவை எப்படி ஏற்கிறார்கள் என்று கவனிக்கவே இப்படி உத்தரவு பிறப்பித்தோம். இரண்டொரு இடத்தைத் தவிர இவ்வுத்தரவிற்கு ஆட்சேபணை வரவில்லையே. அப்படி இருக்க எப்படி பொதுமக்கள் அபிப்பிராயத்திற்கு விரோதமாக எப்படி இந்தியைக் கட்டாயப்படுத்துவது என்று பதில் கூறியிருக்கிறார். இதை நீங்கள் நன்கு யோசித்துப் பார்க்க வேண்டும். ஆட்சேபணையே வரவில்லையே என்று இரண்டு ஏகாரம் போட்டுப் பேசியிருக்கிறார். அதே 24.6.1948 தேதியில் இந்தச் சேதியையும் வெளியிட்டு விட்டு, "இந்தி கட்டாயமாகத் தேவை" என்று சுதேச மித்திரன் ஒரு தலையங்கமும் தீட்டிவிட்டது. அதுவும் இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதுதான் பொதுஜன அபிப்பிராயம் என்று கூடக் கூறிவிட்டது. அதற்கு ஆதாரமாக உத்தரவில் சிலர் ஆட்சேபிப்பதால் கட்டாயமாக்கவில்லை என்று கூறியிருப்பதைக் காட்டி கட்டாய இந்தியை ஆட்சேபிப்பவர்கள் ஒரு சிலர்தான் என்பதை மந்திரியார் உணர்ந்திருக்கும் போது அந்த ஒரு சிலருக்காக இஷ்ட பாடமாக்குவதா? என்று கேட்டி ருப்பதோடு சர்க்காரை எப்போதும் எதிர்ப்ப வர்கள் எந்த நல்ல காரியத்தையும் எதிர்க்கத்தான் செய்வார்கள். அதற்காக நல்ல காரியத்தைக் கைவிட்டு விடுவதா? நல்லகாரியத்திற்குக்கூட ஒரு சிலர் ஆட்சேபணை செய்து கொண்டுதான் இருப்பார்கள் என்று கூறி மது விலக்குக்கூட சிலர் ஆட்சேபிக்கவில்லையா? என்று உதாரணம் காட்டியிருக்கிறது.

கட்டாய உத்தரவு

ஆட்சேபணையே வரவில்லையே என்று கூறிய மந்திரியார், சுதேசமித்திரனுடைய ஆட் சேபணையைக் கண்டதும், உடனே தம் உத்திரவை மாற்றி விட்டார். மாற்றும் போதும் தெளிவாகவே கூறியிருக்கிறார். தமிழ்நாட்டிலும் இந்தி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக் கிறார். முந்திய உத்திரவில் தமிழ்நாடு மட்டும் கட்டாயத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது; இப்போது மற்ற பகுதிகளோடு தமிழ்நாடும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறதென்று.

ஏதோ ஒன்றென்றால் ஏனோ வாத்தியாரும் சலுகையும் கட்டாயம்?

இவ்வளவுக்கும் பிறகு இப்போது சர்க்கார் கூறும் முக்கிய வாதம்" நாங்கள் இந்தி கட்டாயம் என்று சொல்ல வில்லையே" என்பது தான். சர்க்கார் உத்திரவிலும், மந்திரிகள் பேச்சுக்களிலும் கட்டாயம் என்கிற வார்த்தை பலமுறை காணப்படுகிற போதிலும், தாங்கள் கட்டாய பாடமாக்கவில்லை என்றுகூறி மக்களை ஏய்க்கப் பார்க்கிறார்கள் - எப்படிக் கட்டாயமில்லை என்று கூறுகிறார்கள் என்றால் இந்தியை எங்கு கட்டாயம் என்றோம். இந்தி அல்லது சமஸ்கிருதம் அல்லது உருது அல்லது மற்ற ஏதாவதொரு இந்திய மொழி ஒன்றைத் தானே கட்டாயமாக்கியிருக்கிறோம். இரண்டாம் மொழி தான் கட்டாயமே ஒழிய இந்தியல்லவே என்கிறார்கள். இந்தி அல்லது சமஸ்கிருதம் அல்லது அரபி அல்லது உருது அல்லது தெலுங்கு என்று ஒரு 5 மொழிகளில், ஏதாவதொன்றை எடுத்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, இந்தி படிப்பவர்களுக்குத்தான் சர்க்கார் உத்தியோகம் அளிக்கப்படும், சர்க்கார் சலுகை அளிக்கப்படும் என்றால், இந்தி தவிர வேறு எதைக் கற்பார்கள் மாணவர்கள்? ஏதாவதொன்றைப் படிக்கலாம் என்று கூறுப வர்கள் இந்திக்கு மட்டும் எல்லாப் பள்ளிகளிலும் வாத்தியார்களை நியமிப்பானேன்? இந்தி வாத்தியார் களை உற்பத்தி செய்யமட்டும் பணம் ஒதுக்கி வைப் பானேன்? இந்தி தவிர மற்ற மொழிகளுக்கு இவ்வித ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதிலிருந்தே, சர்க்காரின் பித்தலாட்டம் வெளிப்படுகிறதா, இல் லையா? இதுதான் போகட்டும்.

சர்க்கார் பத்திரிகை இது!

சாகசப் பித்தலாட்டம் இது!

சர்க்காரின் கருத்தைத் தெரிவிக்கச் சர்க்காரால் நடத்தப்பட்டுவரும் "சென்னைச் செய்தி" என்ற மாத வெளியீட்டில், கனம் கல்வி மந்திரியார் என்ன கூறியிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். இது சர்க்கார் பத்திரிகை. இதில் கனம் கல்வி மந்திரி அவினாசிலிங்கம் செட்டியார் எழுதியது என்று போடப்பட்டு அவரது போட்டோவுடனும், கையெழுத்துடனும் வெளி வந்துள்ளது. என்ன வென்று கவனியுங்கள் 01.08.1948இல் வெளியாகி 02.08.1948இல் எங்களுக்குக் கிடைத்தி ருக்கும் இப்பத்திரிகையில் (பத்திரிகையும் போட்டோ வையும் காட்டி) இந்தியைப்பற்றி ஏதேதோ எழுதிவிட்டு இந்நாட்டு மாணவர்கள் ஒவ்வொரு வருக்கும் ஒரு சிறு அளவுக்கேனும் இந்தி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்பதை வற்புறுத்த வேண்டியது அனாவசியம். எனவேதான் எல்லா ஹைகூல்களிலும் இந்தியைக் கட்டாயப் பாடமாகப் போதிக்கப்பட வேண்டுமென்று சர்க்கார் உத்திரவு பிறப்பித்துள்ளார்கள் என்று எழுதியிருக் கிறார். இப்படி எழுதிவிட்டு நான் எங்கே இந்தியை கட்டாயமாக்கி இருக்கிறேன் என்று கூறினால் அது பித்தலாட்டமா அல்லவா? நேற்று முந்தா நாள் நடைபெற்ற சம்பாஷணையின்போது இதையெல் லாம் எடுத்துக்காட்டினேன் என்றாலும் அவர்கள் சொன்னதையே தான் திரும்பித்திரும்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

முடியாததை முடியாதென்பதா வெட்கம்?

இப்போதோ கட்டாயப் பாடம் மட்டும் இல்லை; கட்டாயப் பரீட்சையும் உண்டு. அதில் நல்லமார்க்கு வாங்கினால்தான் தேர்ச்சியும் உண்டு. நமது பிள்ளைகள் எப்படி இந்தியைக் கற்றுத் தேற முடியும்? மிக கஷ்டமாயிருக்குமே என்று கூறினால் "அப்படிச் சொல்லிக் கொள்வது வெட்கமாயில்லையா" என்று மந்திரியார் கேட்கிறார். "நம்மால் செய்ய முடியாத ஒன்றை நம்மால் செய்ய முடியாதே" என்று கூறுவதற்கு நாம் ஏன் வெட்கப்படவேண்டும்? முடியாத ஒன்றை முடியாது என்று கூறுவதில் அவமானம் என்ன இருக்கிறது? நான் கேட்கிறேன் மந்திரியாரை உங்களுக்கு நீக்ரோ பாஷை தெரியுமா? அப்பாஷை உங்கள் நாக்கில் நுழையுமா என்று, நுழையாது என்றுதானே மந்திரி பதில் கூறுவார். நீக்ரோ பாஷை என் நாக்கில் நுழையாது என்கிறாயே, அதைக் கூறிக் கொள்வது அவமானமில்லையா என்று கேட்டால் அதற்கென்ன பதில் கூறுவார் மந்திரியார்? தமிழ்நாட்டில் பிறந்த ஒருவருக்கு தமிழ் படிக்கத் தெரியவில்லை, தமிழ் பேசத் தெரியவில்லை என்றால், அதற்காக வெட்கப்படுவதில் வேண்டுமானால் நியாயம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பிறந்தவன் தனக்கு இந்தி வராது என்று கூறுவதில் என்ன வெட்கப்பட வேண்டியிருக்கிறது.

சிறுவர்களின் மீது திணிப்பதா?

பார்ப்பனர்கள் சமஸ்கிருதம் படித்தவர்களின் சந்ததி யார்கள். சமஸ்கிருதத்தில் ஒவ்வொரு எழுத்துக்கும் 4 சப்தங்கள் உண்டு. இந்திக்கும் அப்படியேதான். நாலு சப்தங்களுக்கேற்ப எழுத்துருவங்களும் மாறியிருக் கின்றன. ஆனால் தமிழ் மொழியில் அப்படிக்கில்லை. சப்தத்தில் மாறுதல் இருந்தாலும் எழுத்து உருவத்தில் மாறுதல் இல்லை. தமிழ் எழுத்துக்களை உச்சரிப்பதும் வெகுசுலபம். தமிழ் எழுத்துக்களையே உச்சரித்துப் பண்பட்ட தமிழன் நாக்கால் இந்திச் சப்தத்தைச் சரிவர உச்சரிக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு மொழியை நமது சிறுவர்களின் மீது திணித்து அவர்களைக் கொடுமைப் படுத்தலாமா? என்பது தான் எங்கள் கேள்வி.

தெலுங்கு ரெட்டியார்தான் ஆனால் தெலுங்கைச் சரியாகப் பேசுவாரா?

நான் ஒன்று சொல்ல நினைக்கிறேன். அதற்காக நண்பர் ரெட்டியாரும் என் மீது கோபித்துக் கொள்ளமாட்டார் என்று கருதுகிறேன். ரெட்டியார் ஒரு தெலுங்கரானாலும் அவருக்குச் சரியாகத் தெலுங்குப் பேசத் தெரியாது. நான் ஒரு கன்னடியன் என்றாலும் எனக்குச் சரியாகக் கன்னடம் பேசத் தெரியாது. ஏன்? ரெட்டியாரின் மூதாதையர் தமிழ்நாட்டில் வந்து குடியேறி சுமார் 600 ஆண்டுகள் சுமார் 10 - தலைமுறைகள் ஆகியிருக்கும். அதற்கும் பல ஆண்டுகள் முந்தித்தான் எனது மூதாதையரும் தமிழ்நாட்டை அடைந்திருக்க வேண்டும். 10 தலைமுறைகளாக தமிழ் நாட்டிலேயே எங்கள் குடும்பத்தினர் வாழநேரிட்ட காரணத்தால், எங்கள் சொந்தமொழி எங்களுக்குச் சரியாகத் தெரியாது போய்விட்டது. நான் பேசும் கன்னடமும், ரெட்டியார் பேசும் தெலுங்கும் ஒரு தமிழனுக்குத்தான் புரியுமே யல்லாது ஒரு கன்னடியனுக்கோ, ஒரு தெலுங்கனுக்கோ சரியாகப் புரியாது. காரணம் தமிழ்நாட்டிலேயே பலகாலம் இருந்து தமிழர்களிடையே பழகித் தமிழே பேசிவந்ததுதான். தமிழ் திரிந்த தெலுங்கே, பழக்கத்தால் ரெட்டியாருக்கு, மறந்து போய்விட்டதென்றால், சரிவர கற்க, சரிவரப் பேசமுடியாது போய்விட்டது என்றால், தமிழ் மாணவர்களால் எப்படி இந்தி படிக்கமுடியும் என்று நண்பர் ரெட்டியார் சிந்திக்க வேண்டாமா?

(09.08.1948 அன்று பெத்துநாயக்கன்பேட்டை சிவஞானம் பார்க்கில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு)

'குடிஅரசு' - சொற்பொழிவு - 14.08.1948

-  விடுதலை நாளேடு, 9.6.19

வெள்ளி, 7 ஜூன், 2019

சுயராஜ்யம் (முதல் அத்தியாயம்) - சித்திரபுத்திரன்

3.4.1948  - குடிஅரசிலிருந்து
கத்தி இன்றி இரத்தமின்றி இந்திய சுதந் திரம் பெற நடத்திய அகிம்சைப் போ ராட்டத்தில் 945 தபால் ஆபீசுகள், 332 ரயில்வே ஸ்டேஷன்கள் கொளுத்தப்பட்டன, இடிக்கப்பட்டன. 60 இடங்களில் ரயில் கவிழ்க்கப்பட்டன.
இவை தவிர, கொளுத்தப்பட்ட சர்க்கார் கச்சேரிகள் பல. கொளுத்தப்பட்ட கோர்ட்டு ரிகார்டுகள் ஏராளம். கத்தரித்த தந்திக் கம்பிகள் பல மைல் நீளம்.
பெயர்த்த தண்டவாளங்கள் பல மைல்கள் தூரம், கொல்லப்பட்ட அதிகாரிகள் பலர் ஆகிய இவை யாவும் உங்களுக்குத் தெரிந்தது தானே.
சுதந்திரம் கிடைத்த பின்பு
இவைதாம் போகட்டும் என்றால் சுதந் திரம் கிடைத்த பின்பும் அகிம்சா, சுயராஜ்யத்தில் இடிக்கப்பட்ட வீடுகள் பல, கொளுத்தப்பட்ட கட்டடங்கள், கடைகள் பல, கொல்லப்பட்ட மக்களோ பலப்பல. கற்பழிக்கப்பட்ட பெண்கள் இன்னும் பலபல என்பதும் உங்களுக்குத் தெரிந்ததுதானே.
இந்து முஸ்லிம் ஒற்றுமை
சுயராஜ்யம் கிடைத்து விட்டால் இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்பட்டு விடும் என்றார் காந்தியார். ஆனால் சுயராஜ்யம் கிடைத்த பிறகு நூற்றுக்கணக்கான ஊர்களில் முஸ்லிம்களின் வீடுகள் கொள்ளை இடப்பட்டன. முஸ்லிம் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. முஸ்லிம் தொழில் ஸ்தாபனங்கள் கொளுத்தப் பட்டன. இவையும் உங்களுக்குத் தெரிந் ததுதான்.
இவ்வளவு தானா?
இவ்வளவும் தவிர இன்னமும் என்ன நடந்தது என்று பாருங்கள். ஏராளமான எதிர்க்கட்சியார் கூட்டங்கள் குழப்பத்தால், காலித்தனத்தால் கலைக்கப்பட்டன. அவர் களது மகாநாட்டுக் கொட்டகைகள் கொளுத்தப்பட்டன. மகாநாட்டு மக்களை அடித்துக் கண், கால் ஊனமாக்கி அவர்களது சாமான்கள், பணங்கள் வழிப்பறி செய்யப்பட்டன.
என்ன நடந்தது?
இவ்வளவு காரியம் சுயராஜ்யம் கிடைத்த பிறகு செய்வதற்கு அகிம்சா ஆட்சிக்கு உரிமை ஏற்பட்டும், இவ்வளவும் போதாமல் இந்தத் தர்மராஜ்யத்தில் அடக்குமுறைச் சட்டங்கள் ஏராளமாக ஒவ்வொரு மாகாணத்திலும் செய்யப்பட்டன.
இவ்வளவோடு நிற்கவில்லை
எங்கு பார்த்தாலும் ஸ்ட்ரைக்கு, ஸ்ட் ரைக்கு! வேலை நிறுத்தம், வேலை நிறுத்தம்! என்பதாகவே கக்கூசு எடுப்பவர்கள் முதல் செக்ரட்டெரியேட் அதிகாரிகள் வரை நடந்தவண்ணமாயிருக்கின்றன.
பஞ்ச தேவதை திருவிளையாடல்
சோத்துப் பஞ்சம், துணிப் பஞ்சம் தாண்ட வமாடின.
வியாபாரிகள் கள்ள மார்க்கெட்டும், சட்டசபை மெம்பர்கள் கொள்ளையும், அதி காரிகள் லஞ்சமும், மந்திரிகளின் பாரபட்ச அநீதியும் ஆனந்தக் கூத்தாடின.
சந்தடி சாக்கில் கந்தப்பொடிக்கு கால் பணம் என்பதுபோல் வருணாசிரமம் வரம்பு கடந்து ஆட்சி புரிந்தது.
ஆண்டவனிடம் பிராது
இவ்வளவு நடந்தால் பிறகு மக்கள் என்ன செய்வார்கள். அழுதார்கள், ஆத்திரப்பட் டார்கள்,  ஆண்டவனிடம் முறையிட்டார்கள். ஆண்டவன்தான் என்ன செய்வான்? ஆண் டவனும் பார்ப்பன ரூபமாக இருந்துதானே உலகை நடத்துகிறார்.
இவை எல்லாம் ஆண்டவன் செயல்தானே?
ஆண்டவன் காரணம் என்றால் என்ன? பார்ப்பனர் காரணமென்றால் என்ன? இரண்டும் ஒன்றுதானே?
எனவே, ஆண்டவன் பிராதை வாங்கிக் கொண்டு யோசித்தார் யோசித்தார், வெகுதூரம் யோசித்தார். எவ்வளவு தூரம்? யோசனை தூரம் யோசித்தார்.
யோசித்து என்ன முடிவுக்கு வந்தார்? வந்தார் ஒரு முடிவுக்கு. கண்டுபிடித்தார் ஒரு சங்கதியை, அதாவது கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்ததுபோல் கண்டுபிடித்தார்!
தொடரும்
 -விடுதலை நாளேடு, 7.6.19