திங்கள், 11 நவம்பர், 2019

மக்களினம் மாண்புற வள்ளுவர் தந்த குறள்!

தந்தை பெரியார்

உணர்ச்சியுடன் திறப்பபெதன்றால்...

உண்மையாகவே உணர்ச்சியுடன் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைப்பதாயிருந்தால், முதலில் கம்பனு டைய படம் ஒன்றைக் கொளுத்திச் சாம்பலாக்கிவிட்டு, பிறகுதான் திருவள்ளுவரைப் பற்றிப் பேசத் துவங்க வேண்டும். திருவள்ளுவருடைய கொள்கைகளையும், அவருடைய பாட்டின் அருமையையும், அவற்றால் திராவிட நாடு பெற்றிருக்க வேண்டிய பலனையும் கம்பனது ராமாயணம் அடியோடு கெடுத்துவிட்டது. பார்ப்பன சூழ்ச்சிக்குப் பலியான கம்பனால், இந்நாட்டில் நிலவியிருந்த திராவிடக் கலாச்சாரமே பாழாக்கப்பட்டுப் போய்விட்டது. ஆரியப் பண்புகளையும், ஆரிய நடை முறைகளையும் போற்றிப் புகழ்ந்து, அவற்றை திராவிட மக்கள் ஏற்கும்படி அழகுறத் தமிழில் பாடி மக்களை ஏய்த்து விட்டான் கம்பன்.

ஏன் திருக்குறள் தோன்றியது?

ராமாயணம், பாரதம், கீதை இன்னோரன்ன ஆரிய நூல்கள் யாவும் திராவிடப் பண்புகளை மறுக்க இயற்றப் பட்ட நூல்கள்தான் என்பதை ஆராய்ச்சி அறிவுள்ள எவரும் ஒப்புக் கொள்வார்கள். இவ்வாரிய நூல்களில் வலியுறுத்தப்பட்டுள்ள ஆரியப் பண்புகளுக்கு திராவிட நாடு ஆட்பட்டிருந்த சமயத்தில், திராவிடர்களை அதனின்று விடுவிக்கத் திராவிடப் பெரியார் ஒருவரால் தோற்றுவிக்கப்பட்ட நூல்தான் திருக்குறள் ஆகும்.

வள்ளுவர் குறளும் ஆரிய நூல்களும்

மக்கள் யாவரும் ஒரே ஜாதி என்கிறது குறள். மக்கள் 4 ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று பாகுபடுத்திக் கூறு கின்றன இராமாயணமும் கீதையும். அறிவுக்கு மாறான, இயற்கைக்கு மாறான, பல காட்டுமிராண்டித்தனமான கருத் துக்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கு கின்றன ஆரிய நூல்கள். அறிவினால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும், இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துக்களையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள்.

ஆரிய நூல்களில் காணப்படும் நிகழ்ச்சிகள் பெரும் பாலும் நடந்திருக்கக் கூடாததாகவும், இன்று நடத்திக் காட்ட முடியாதனவாகவும், சாத்தியமற்றதாகவும் இருக் கின்றன. திருக்குறளில் காணப்படும் நீதிகள் அறிவுரைகள் யாவும் நடந்தால் உற்ற பலன் தரக் கூடியதும், ஏற்கக் கூடியதாகவும், இன்றும் நம்மால் நடத்திக் காட்டக் கூடியவையாகவும் இருக்கின்றன.

நாட்டையாளும் மந்திரிகளுக்கு

ராமாயணக் காலட்சேபமா?

நாம் ராமாயணத்தைக் கொளுத்த வேண்டுமென்று திட்டம் போட்டால், அத்திட்டத்தை இன்றும் நம்மவரைக் கொண்டுதான் எதிர்க்கிறது ஆரியப் பார்ப்பனியம். நம்மவர்கள் ஆரியத்தின் கையாட்களாகத்தான் நமக்குத் தொல்லை கொடுக்க முன்வருவார்களே ஒழிய, தாமாக ராமாயணம் கொளுத்தப்படுவது பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ராமாயணப் பிரசாரமும் கம்பர் விழாவும் முதலில் துவக்கப்பட்டதே நம்மிடமிருந்து. சுயநலத்துக்காக ஆரியருக்கு அடிமையான திரு.டி.எம் நாரா யணசாமி பிள்ளையால் ராமாயணப் பிரசாரம் செய்யப் பார்ப் பனர்கள் முன்வந்தார்கள்.

பிறகு இப்போது மந்திரிகளே முன் வந்து விட்டார்கள். இதில் ரெட்டியார் முதன்மை யானவர். ரெட்டியார் ராமாயணத்தைப் பற்றி பிரசாரம் செய்யட்டும், மற்றொரு ஆழ்வாராக ஆக இஷ்டமிருந்தால். ஆனால், மந்திரியாக இருந்து கொண்டு அவ்வேலையைச் செய்வது தவறு என்றுதான் நான் சொல்கிறேன். நீங்களும் சிந்தித்துப் பாருங்கள், இது தவறல்லவா என்று.

என்னே ஆரிய சூழ்ச்சி!

கலியாணங்களில் காலட்சேபங்களின் மூலமும், நாடக மேடைகளில் நாடகங்களின் வாயிலாக சினிமாக்களில் படக்காட்சிகளின், பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகத்தின் மூலமும் இந்த ராமாயண, பாரதக் கருத்துக்கள் வலியுறுத் தப்பட்டுவிட்டதன் பயனாய், இன்றும் வலியுறுத்தப்பட்டு வருவதன் பயனாய், நாடாளும் அரசன் முதற்கொண்டு, காட்டிலேயே இருந்து மாடு மேய்த்துப் பிழைக்கும் மாட் டுக்காரப் பையன் வரையும், எல்லோருக்கும் ராமனையும் சீதையையும் தெரிந்திருக்கக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது.

காலஞ்சென்ற ராஜா சர். அண்ணாமலைச் செட்டி யாருக்குக்கூட குறள் தெரிந்திருக்குமோ தெரியாதோ என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. இப்படியாக உயர் தத்துவங்களும் அறிஞர்க்கான அறிவுரை களும் அடங்கிய நூல் பொது மக்களுக்குள் பரவவிடாமல் மறைக்கப்பட்டு, ராமாயணமும் பாரதமும் எல்லோருக்கும், கக்கூஸ்காரி வரைக்கும் கூடத் தெரியும்படி விளம்பரப்படுத்தப்பட்டு விட் டது. திராவிடர்களை இழிமக்களென்று வலி யுறுத்தும் நூல்கள் போற்றத்தக்க தன்மையைப் பெற்றுவிட்டன. திராவிடர்களைப் பற்றிப் புகழ்ந்து கூறும் நூல்கள் மறைந்திருக்கும்படி செய்யப்பட்டு விட்டன. என்னே ஆரிய சூழ்ச்சி! என்னே நம்மவர் விபீஷணத் தன்மை!

ஆரியத்தின் முதல் நூல்

ராமாயணத்தையும் பாரதத்தையும் எடுத்துக் கொண்டால் இவற்றுள் பாரதந்தான் முந்திய நூலாக இருக்க வேண்டும் என்று நான் கருது கிறேன். சிலர் ராமாயணந்தான் முந்தியது என்று கருதுகிறார்கள். அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். பாரதத்திற்கு முந்திய நூல் தான் கந்தபுராணம். கந்தபுராணத்தையொட்டிச் சற்று சிறியதாக தொகுக்கப்பட்டதுதான் பாரதம் என்று நான் நினைக்கிறேன்.

கந்த புராணந்தான் ஆரியத்திற்கு ஏற்பட்ட முதல் நூல். கந்தபுராணத்தில் காணப்படும் இழிதன்மைகளை சற்று அதிகப்படுத்தியும், மனித வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைச் சற்று அதிகமாகச் சேர்த்தும் எழுதப்பட்டது தான் பாரதம். கந்தபுராணம் சைவ முறையின்பாற்பட்டது. பாரதம் வைணவ முறையின்பாற்பட்டது. கந்தபுராணத்தில் பாரதத்திலுள்ளதைக் காட்டிலும் அதிகமாக இயற்கைக்கு மாறான பிறவிகள் காணப்படுகின்றன. அநாகரிகமும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இவையிரண்டிற்கும் பிறகு சில காலம் பொறுத்து எழுதப்பட்ட நூல்தான் ராமாயணம். எனவே, தான் மேல் இரண்டு நூல்களில் காணப்படும் அநாகரிகமும், அமானுஷ்யமும் (மனித வல்லமையைக் கடந்த), இயற்கைக்கு மாறான பிறவிகளும் சற்று குறைவாகக் காணப்படுகின்றன. அடிப்படையில், கதைப்போக்கில் கந்தபுராணமும் ராமாயணமும் ஒன்றாகத்தான் காணப்படுகின்றன.

இப்படியா கடவுள் பேரால்?

கந்தபுராணத்தில் கந்தனும், ராமாயணத்தில் ராமனும் ஆரியத் தலைவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். இரண்டும் தேவர்கள், அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் எழுதப்பட் டுள்ளன. ஆனால், கந்தபுராணத்தில் காட்டுமிராண்டித் தனம் மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும் பெரும் புளுகுகளும் அதில்தான் அதிகம் காணப்படு கின்றன. அதில்தான் வைக்கப் புல்லிலிருந்து பட்டாளங்கள் தோன்றியதாகவும், நெற்றியிலிருந்து மனித உருவம் பெற்ற குழந்தை தோன்றியதாகவும் பகிரண்டப் புளுகுகள் எழுதப்பட்டிருக்கின்றன. கடவுள் பேரால் எதை வேண்டு மானாலும் எழுதலாம் என்று தம் இஷ்டம் போல் எதை எதையோ புளுகிவைத்து விட்டார்கள்.

பாரதமோ இன்னும் மோசம், ஒருத்திக்கு 5 புருஷர்கள் இருந்ததாக எழுதிவிட்டு, அவளையே பதிவிரதையாகவும் கற்பித்துவிட்டார்கள். அந்த புருஷர்களும் அதாவது பஞ்ச பாண்டவர்களும் யார் யாருக்கோ எந்தெந்தவிதமாகவோ பிறந்ததாகத்தான் கதை எழுதப்பட்டிருக்கிறது. அக்கதை யில் காணப்படும் குழந்தைகளில் பெரும்பாலான வற் றிற்குத் தகப்பன்மாரைக் கண்டறிவது கஷ்டமாகவே இருக்கிறது. அக்காலத்திய ஆரிய நாகரிகம் அப்படித்தான் இருந்தது போலும்.

கந்தபுராணமும் ராமாயணமும்

கந்தபுராணமும் ராமாயணமும் எப்படி ஒரே அடிப் படைக் கதையை வைத்துக் கொண்டு எழுதப்பட்டவை என்று விளக்கிக் காட்டுகிறேன் பாருங்கள். கந்த புராணத் தில் சுப்பிரமணியன் கடவுளாகவும், ராமாயணத்தில் ராமன் கடவுளின் அம்சமாகவும் குறிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் பெண்டாட்டிமார் இருவருமே காட்டில் கண் டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். பெற்றோர்கள் யாரென்று தெரிவிக்கப்படாதவர்கள். அனுபவத்திற்கு ஒட்டிப் பார்த்தால் யாரோ திருட்டுத்தனமாகப் பெற்றுப் போட்டுவிட்டுப் போன குழந்தைகள் என்றே கொள்ளத் தக்கவைகள். ராமனும், கந்தனும் இருவருமே தேவர்களின் முறையீட்டால் அவர்களை அசுரர் ராட்சதர்களிடமிருந்து காப்பாற்றுவதற்குத் தோற்றுவிக்கப்பட்டவர்கள். இருவருக் கும் விரோதிகள் சூரனும், ராவணனும் ஆகிய அசுரர் கள்தான். (அசுரர்கள் என்றால் மது அருந்தாதவர்கள், ராவணன் என்றால் கருத்தவன்) இருவருடைய தங்கைமார் இருவருமே மேலே கூறப்பட்டவர்களின் தம்பிமாரால் மூக்கும், முலையும் அறுபடுகிறார்கள். ராமனுக்கு அனு மார் கிடைத்தது போல், கந்தனுக்கும் ஒரு வீரபாகு என்கிறவன் கிடைக்கிறான். இலங்கை எரிக்கப்பட்டது போல், சூரனுடைய நகரமும் எரிக்கப்பட்டிருக்கிறது. சூரன் தேவேந்திரன் மனைவியைச் சிறைபிடிக்க ஆசைப்பட்டு அவன் மகனைச் சிறையில் வைத்தான். ராவணன் ராமன் மனைவியைச் சிறை பிடித்தான். இன்னும் பல நடப்புகள் ஒன்று போலவே பேர்தான் மாறியிருக்கின்றனவே ஒழிய, கதைப்போக்கில் எவ்வித முக்கிய மாறுதலும் காணப் படவில்லை. கந்தபுராணத்தில் கந்தனை தெய்வமய மாகவே காட்டப்பட்டிருக்கிறது. ராமாயணத்தில் கொஞ்சம் அது குறைவாக்கப்பட்டு, அதாவது ராமன் கடவுள் அவதாரமாக மட்டுமே காட்டப்படுகிறான். சில இழி தன்மையையும் சுமத்தப்படுகிறான்.

ஆண்டவனைப் படைத்ததில்

ஆரியரும் வள்ளுவரும்

திருவள்ளுவர் குறளோ ஆரியத்தை, ஆரிய தர்மத்தை அப்படியே மறுக்க எழுதப்பட்ட நூலாகக் காணப்படுகிறது. கடவுள் வாழ்த்தில்கூட வள்ளுவர் ஒழுக்கத்தையும், அறிவையும், பற்றற்ற தன்மையையும் தான் கடவுளாகக் காட்டியுள்ளார். கடவுளை அறிஞன் என்றார். பிறப்பு, இறப்பு அறுத்தோன் என்கிறார். ஆசை அறுத்தோன் என்கிறார். அவர் ஒரு இடத்திலாவது கடவுளை அயோக்கியனாகவோ, ஒழுக்க ஈனம் உடையவனாகவோ, வஞ்சகனாகவோ, விபசாரியாகவோ சிருஷ்டித்திருக்கவில்லை. ஆரிய நூல்களில் சிருஷ்டிக் கப்பட்டுள்ள கடவுள் தன்மையிலுள்ள ஆபாசக் கேட் டிற்கோ அளவு சொல்ல வேண்டியதில்லை. கீதை போற்றும் கிருஷ்ணனைப் போன்ற விபசாரக்காரனை வஞ்சகனை, கீழ்மகன் தன்மையை ஆரியர்கள் தவிர்த்த வேறு யாரும் கடவுளாக, நீதியாக சிருஷ்டித்திருக்க மாட்டார்கள். அவன் ஒரு விபசாரிக்கல்ல, லட்சக் கணக்கான பெண்களைக் கெடுத்து விபசாரிகளுக்கும், குடிப்பெண்களுக்கும் காமுகனாய், காதகனாய் சிருஷ்டிக் கப்பட்டிருக்கிறான். பிறந்தது முதற்கொண்டு சாகும் வரையில் அவன் ஒரு சந்தர்ப்பத்திலாவது ஒழுக்கமாக நடந்து கொண்டிருப்பதாக யாராலும் காட்ட முடியாது. அவன் நடத்தைகள் லீலைகளாக்கப் பட்டிருக்கின்றன.

விஷ்ணுவின் விரக வெறி!

ராமனை எடுத்துக் கொண்டால் அவன் யாருக்கோ பிறந்ததாகத்தான் காட்டப்பட்டிருக்கிறதே ஒழிய, தசர தனுக்கே பிறந்ததாக இல்லை. அவன் பெண்டாட்டியை இழந்து அலைவதற்குக் கூறப்படும் காரணமோ, அதை விடப் படுமோசம். மகாவிஷ்ணு எந்தப் பெண் மீதோ மோகங்கொண்டாராம்; மோகத்தைத் திருப்தி செய்ய அவள் இடம் கொடுக்கவில்லையாம்.

எனவே, அம்மகாவிஷ்ணு அவளுடைய புருஷன் இறக்கும் தருவாயைப் பார்த்துக் கொண்டேயிருந்து இறந்ததும் அவனுடலில், தான் புகுந்துகொண்டு அப் பெண்டை அடைந்து கூடி இன்புற்றுக் கொண்டிருந்தாராம். அந்தப் பெண் எப்படியோ தன் புருஷனுடைய உயிரல்ல அவ்வுடலில் வேலை செய்வது என்று அறிந்த உடனே உண்மையைக் கேட்டுணர்ந்து, "மறு ஜென்மமெடுத்து மகாவிஷ்ணு தன் மனைவியை பிற கையில் விட்டுத் தன்னைப் போல் கற்பும் கெட்டவளாக வேண்டுமென்று சாபம் கொடுத்தாளாம்." அதையொட்டித்தான் ராமன் அவதாரம் ஏற்பட்டுச் சீதையை ராவணனுக்குப் பறி கொடுக்க வேண்டி ஏற்பட்டதாம். என்னே தெய்வத் தன்மை! பிறன் மனைவி மீது மோகிப்பதும், வஞ்சகமாக அவளை அனுபவிப்பதும் இவைதான் ஆரிய முறைப் பட்ட தெய்வத்தன்மைகள். ஆண்கள் தன்மை இப்படி என்றால், ஆரியப் பதிவிரதைகளைப் பற்றிப் பேசினால் நமது பெண்கள் சகிக்க மாட்டார்கள்.

மற்றொரு கதை!

ராமாயணத்துக்கு கூறப்படும் மற்றொரு கதையைப் படித்தால் இன்னும் அசிங்கமாயிருக்கும். ஒரு நாள் நண்பகலில் மகாவிஷ்ணு தன் மனைவியான லட்சுமியிடம் கூடிக் கலவி செய்து கொண்டிருந்தாராம். அதைத் துரதிர்ஷ்டவசமாக துவாரபாலகர்கள் பார்க்க நேர்ந்து விட்டதாம். உடனே மகாவிஷ்ணு கோபம் கொண்டு அவர்களை அசுரர்களாகப் பிறக்க வேண்டுமென்று அவர்களுக்குச் சாபம் கொடுத்து விட்டாராம். இவர்கள் பகலில் படுத்து இன்புற்றதற்காக துவாரபாலகர்களா தண்டனை அடைவது? அப்படித்தான் பகலில் கூடுவதா யிருந்தாலும் காவல்காரர்கள் வெளியில் இருக்கிறார்களே ஏதாவது அசந்தர்ப்பத்தில் வந்துவிடப் போகிறார்கள் என்று கதவையாவது மூடிக்கொண்டு இருக்க வேண் டாமா? அவ்வளவு அறிவு கூடவா இல்லை அந்த ஆரியக் கடவுள்களுக்கு? இவ்வளவு முட்டாளையா தெய்வ மென்று கூறுவது, என்னே மடத்தனம்.

தசரத மகாராஜாவின் தர்பார்!

ஒரு தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகளா? கிட்ட தட்ட ஒரு முனிசிபாலிட்டியே அவனுடைய மனைவி களுக்கு மட்டும் வேண்டியிருக்குமே? அவர்களுக்கு ஆள் அம்பு வேறு என்றால் ஒரு கோயம்புத்தூர் முனிசிபாலிட்டியே போதாதே மற்றும் குழந்தை குட்டி என்றால் ஒரு பெரிய சென்னை கார்ப்பரேஷனே, மக்களே தேவை ஆகிவிடும். ஒரு பெண்டாட்டியிடம் ஒரு நாள் இருப்பதாக வைத்துக் கொண்டால் கூட மறுபடி அதே பெண்டாட்டியைச் சந்திக்க, ஒரு ரவுண்ட் வர 165 வருடமாகி விடுமே. இத்தனை பேரையும் யார் பணத்தைக் கொண்டு காப்பாற்றியிருப்பான் அந்த அரசன்? இந்த தர்பார் இந்துதான் ஆரிய தர் பாரைவிட மீறிவிட்டதே. குடிமக்கள் வரிப் பணத்தைக் கொண்டுதானே இந்த போக போக் கியம். எந்த யோக்கியனாவது குடிமக்களின் வரிப் பணத்தை இப்படி வீணாக்குவானா? அப்படி வீணாக்கு பவனிடத்து குடிமக்களுக்குத்தான் பற்றுதல் இருக்குமா?

எவ்வளவு அயோக்கியத்தனம் செய்கிறான் இந்த தரசதன். 60,000 போதாது, பட்டமகிஷிகளோடு (60,002ம்) போதாது என்று 60,003வதாக ஒரு இளம் மங்கையைக் கலியாணம் செய்துகொடுக்கும் படி கேகய மன்னனைக் கேட்கிறானே, அவன் கிழவனாகிவிட்டான் என்கிற காரணத்திற்காக மறுத்தும், அதற்கு ஒப்புக் கொள்ளாமல் தன்னுடைய பட்டணத்தையே அப்பெண்ணுக்கு (கைகேயிக்கு) தாரை வார்த்துக் கொடுத்து அவளை மணந்து கொண்டு, அவளுடைய பிரதிநிதியாக இருந்து ஆட்சிபுரிகிறானே.

இவ்வளவு நடந்திருந்தும் பின்னர் கைகேயியையும் பரதனையும் வஞ்சித்து ராமனுக்கு பட்டம் சூட்ட வேண் டுமென்று குருவோடு, புரோகிதரோடு, மந்திரிமார்களோடு சதிசெய்து சகல ஏற்பாடுகளையும் செய்கிறானே. எங்கு கேகய மன்னனுக்குத் தெரிந்தால் சண்டைக்கு வந்து விடுவானோ என்று அவனுக்குச் சொல்லாமல், தன் மகனும், உரிமையாளனுமான பரதன் இல்லாத சமயம் பார்த்து கைகேயிக்கும் தெரியாமல், பட்டத்தைக் கோச லையின் மகனான ராமனுக்கு கொடுக்கச் சூழ்ச்சி செய் கிறானே. கடவுள் அவதாரமாகக் கருதப்படும் ராமனும் இவ்வளவு சங்கதி தெரிந்திருந்தும் தகப்பனுடன் சேர்ந்து கொண்டு சூழ்ச்சி செய்கிறானே, பரதனுக்குச் சொந்தமான பட்டத்தை அடைய இந்த நடத்தையை ராமனே ஒப்புக் கொள்கிறானே, தான் காட்டில் இருக்கும் போது.

கம்பனின் கடைகெட்ட போக்கு!

இவ்வளவு வஞ்சக நெஞ்சம் படைத்த ராமனைக் கடவுள் அவதாரமென்று புகழ்கிறானே கம்பன், சற்றும் மானம் வெட்கமின்றி, பரதனின் வேலைக்காரி இதில் தடையிடாதிருந்தால் பட்டம் சூட்டிக் கொண்டிருப்பானே ராமன். பட்டாபிஷேகம் நடக்க வேண்டிய தினத்தன்று காலை தனக்குப் பட்டமில்லை என்று ராமன் அறிந்ததும், தலையில் அடித்துக் கொண்டு அழுகிறானே, இது வேண்டாம், அது வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளு கிறானே, விதி தவறுமா என்று அழுகிறானே, காட்டுக்கு விரைந்து சென்றுவிட்டால் பரதன் அழைத்ததும், பிறகு தந்திரமாகத் திரும்பி வந்துவிடலாம் என்று தாயாருடன் மறுபடியும் சூழ்ச்சி செய்கிறானே, இவ்வளவையும், கூலிக்காசுக்காகப் பாடிய கம்பன் மறைத்து விட்டானே. அரசு கிடையாது என்று கேட்டதும் "அன்றலர்ந்த செந் தாமரையை வென்றதம்மா அவன் முகம்" என்று பாடி விட்டானே; கூலிக்காரக் கம்பன்; இனத்துரோகி கம்பன்.

மறுக்க முன்வரட்டுமே!

பார்ப்பனரின் பிச்சைக் காசுக்காக ராமாயணப் பிரசாரம் செய்யத் துவங்கிய தோழர்கள் துணிவிருந்தால் இவற்றை மறுக்கட்டுமே, பார்ப்போம். எதையாவது தவறு என்று காட்டட்டுமே நாங்கள் புத்தகங்களில் எழுதி யிருக்கிறோமே, இவ்வுண்மைகளை விளக்கமாக ஏதோ ஒரு கம்ப பக்தன் கூட முன்வரக் காணோமே எங்கள் கூற்றை மறுக்க. மற்றொரு ஆரிய இதிகாசங்களாகிய பாரதத்தில் ஒருத்திக்கு அய்ந்து கணவன்மார் இருக்க, ராமாயணத்தில் ஒருத்திக்கு ஒரே கணவன் என்ற நியதி காணப்படுவானேன். இடையில் குறள் வந்து குறுக்கிட்டது தானே குறளுக்குச் செல்வாக்கு ஏற்பட்ட காலத்தில் தான் கம்பனுக்குக் கூலி கொடுத்து கவிபாடும்படி செய்து விட்டனர் ஆரியப் பார்ப்பனர்கள். வால்மீகி ராமா யணத்தைத் தன் இஷ்டம்போல் மாற்றி விட்டான் கம்பன். எனவேதான், அவனைச் சாட வேண்டியிருக்கிறது.

வால்மீகியின் ராமாயணம்!

வால்மீகி ஒரு "அரேபியன் நைட்" கதையைப் போல்தான் ராமனுடைய கதையையும் பாடி இருக்கிறார். தசரதனுடைய குடும்பத்தை ஒரு சாதாரணமான குடும்பமாகத்தான் குறிப்பிட்டுள்ளார். அவன் வீட்டுப் பெண்டிர்களை மீன்கண்டம் விற்கும் பெண்டிர்களை போன்றுதான் வர்ணித்துள்ளார். மேலும் சீதையின் கற்பில் சந்தேகம் கொள்வதற்கான பல கருத்துக்களை, அவள் ஒரு கீழ்த்தர பெண், சாஸ்திரப்படியான கற்பு அற்றவள், என்று கொள்வதற்கான பல கருத்துக்களை அவர் ராமாயணத்தில் இடை இடையே கொடுத்துள்ளார். தன் மனைவி மீது சந்தேகம் கொண்டு கர்ப்ப காலத்தில் அவளைக் காட்டிற்குக் கொண்டு போய் விட்டு வருவது போன்ற, அதாவது சாதாரண மனிதன் கூட வெட்கங் கொள்ளக் கூடியதான பல சேதிகளை அவர் கொடுத் துள்ளார்.

திருக்குறள் சுயமரியாதையின் ஊற்று!

திருவள்ளுவர் கூறிய கருத்துக்களுள் ஒன்றேனும் ஒழுக்கக் குறைபாடுள்ளதாகக் காணப்படாது. அறிவுள் ளவர் யாரும் மறுக்க முடியாத, வெறுக்க முடியாத கருத் துக்களை அமைத்துத்தான் அவர் குறளை இயற்றியுள்ளார். குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள். அரசியல் ஞானம், சமூக ஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் அதில் அடங்கியிருக்கிறது.

(24.10.1948 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக 19ஆவது மாகாண (ஸ்பெஷல்) மாநாட்டில் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்து பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு.)

'குடி அரசு' - சொற்பொழிவு - 13.11.1948

- விடுதலை நாளேடு, 10.11 .19

வெள்ளி, 8 நவம்பர், 2019

யார் கெட்டிக்காரர்கள்?

30.06.1935, குடிஅரசிலிருந்து

சந்திரலோகத்தைக்

கண்டுவிட முடியும்

இந்தப் பூலோகத்துக்கும், சந்திர லோகத்துக்கும் (2,50,000) இரண்டு லட் சத்து அய்ம்பது ஆயிரம் மைல் தூரம் இருக்கிறது.

இதை மணி ஒன்றுக்கு (2500)இரண் டாயிரத்து அய்ந்நூறு மைல் வேகம் போகக் கூடிய ஒரு பறக்கும் யந்திரத்தின் மூலம் 100 நிமிஷ நேரத்தில் பூலோகத்தில் இருந்து சந்திர மண்டலத்துக்குப் போய் விடலாம் என்று அமெரிக்க சங்கத்தார் உத்தேச திட்டம் போட்டிருக் கிறார்கள்.

இந்தத் திட்டத்தை நமது இந்திய மகாத்மாக்களும், சங்கராச்சாரிகளும், பண்டார சன்னதிகளும் ஆகிய ஞானிகள் ஆகாயக் கோட்டையென்றோ, வீண் கனவென்றோ தான் சொல்லுவார்கள்.

ஆனால், மணி ஒன்றுக்கு 700 மைல் வேகம் போகக் கூடிய ஆகாய விமானம் செய்து பார்த்தாய் விட்டது.

இனியும் இதிலிருந்து பல அபி விர்த்திகள் நடந்து வேகத்தைப் பெருக்க வசதி இருக்கிறது என்பதைக் கண்டு வருகிறார்கள். ஆகவே மேல்நாட்டு மக்களுடைய ஆசையும், முயற்சியும் இந்த மாதிரியான துறைகளில் சென்று கொண்டிருக்கின்றன.

நம்முடைய முயற்சிகள் கிருஷ்ணன் மனிதனா - கடவுளா?

ராமாவதாரம் முந்தியா - கிருஷ்ணா வதாரம் முந்தியா?

பூமியை ஆதிசேஷன் தாங்கினால் ஆதிசேஷனை யார் தாங்குகிறார்?

உலகத்தை இரணியாட்சதன் பாயாய்ச் சுருட்டிக் கொண்டு சமுத்திரத்துக்குள் புகுந்து கொண்டான் என்றால், அப் போது சமுத்திரம் எங்கு? எதன் மேல் இருந்தது?

மகாவிஷ்ணு பன்றி அவதாரமெடுத்த போது என்ன ஆகாரம் சாப்பிட்டார்?

சிவனும் விஷ்ணுவும் (ஆணும் ஆணும்) சேர்ந்தால் பிள்ளை எப்படிப் பிறந் திருக்கும். இந்திரியத்தை வாய் வழி உட்கொண்டால் பிள்ளை பிறக்குமா?

அப்படியானால், இப்போது ஏன் அப்படிப்பட்ட எவருக்கும் பிள்ளை பிறப்பதில்லை?

என்பது போன்ற முட்டாள் தன மானதும், போக்கிரித்தனமானது மானப் பிரச்னையில் நமது சாஸ்திரி களுடைய ஆராய்ச்சிகள் சென்று கொண் டிருக்கின்றன.

இவ்வளவோடு நின்று விடுகின் றோமா?

சந்திர லோகத்தைப் பார்க்க இப்போது தான் நமது வெள்ளைக்காரர்கள் நினைத்து இருக் கிறார்கள். நம்முடைய பெரியவர்கள் எத்தனையோ காலத்துக்கு முன் சந்திரனைப் பார்த்தாகி விட்ட தென்றும், நம்முடைய குருவின்மார் மனைவிகள் சந்திரனைப் புணர்ந்து புதனைப் பெற்று இருக்கிறார்கள் என்றும், அதற்காகப் புருஷர்கள் அந்தச் சந்திரன் மீது கோபித்து அவனை மாதத்திற்கு ஒரு முறை தேயவும், வளரவும் செய்து விட்டார்கள் என்றும், அது மாத் திரமல்லாமல் சந்திரனையும் அவனுக்கு வெகுதூரத்தில் இருக்கும் சூரியனையும், சராசரி வருஷத்துக்கு ஒரு முறையாவது (ராகு) கடிக்கச் செய்து அந்த விஷமிறங்க நமது சாஸ்திரிகள் ஜபம் செய்கிறார்கள் என்றும் சொல்லி விடுகிறோம்.

ஆகவே வெள்ளைக்காரர்களுடைய அறிவிற்கும், நம் சாஸ்திரிகளுடைய அறி வுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதையும், யார் கெட்டிக்காரர்கள், புத்திசாலிகள் என்பதையும் நீங்களே கண்டுபிடியுங்கள்.

 - விடுதலை நாளேடு 2 11 19

கடவுள் (சித்திரபுத்திரன்)

குடிஅரசு, 12.5.1935லிருந்து....

கேள்வி : கடவுள் நன்மையே உருவாய்க் கொண்டவர் என்பதற்கு உதாரணம் சொல்லு.

பதில் : நல்ல காற்று, நல்ல தண்ணீர், வாசனையுள்ள புஷ்பம், ருசியுள்ள ஆகாரம், சத்துள்ள பழ வகை, மழை, நதி, நந்தவனம், பால், பசு, நல்ல பெண்கள், சந்திரன், சூரியன் முதலிய அனேக அருமையான வஸ்துக்களை உற்பத்தி செய்து நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆதலால் கடவுள் நன்மையே உருவாகக் கொண்டவர்.

கேள்வி: கடவுள் கெடுதியையே உருவாய்க் கொண்டவர் என்பதற்கு உதாரணம் சொல்லு..

பதில்: கெட்ட காற்று, விஷப் புகை, நோய்க் கிருமிகள் உள்ள தண்ணீர், துர் வாடையுள்ள மலம், கசப்பான ஆகாரம், உபயோகமற்றதும் நோயை உண்டாக்குவதுமாக பழம், துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், கொடிய வியாதி, கடும் வெய்யில், இடி, பூகம்பம், முரட்டு வெள்ளம், இருட்டு, நோய் உள்ள பெண்கள், தரித்திரம், முள்ளுள்ள புதர்க்காடுகள் முதலானவை களையெல்லாம் கடவுள் உற்பத்தி செய்திருக்கிறார். ஆதலால் கடவுள் கெடுதியே உருவாய்க் கொண்டவர்.

கேள்வி: இந்தக் கெடுதிகளையெல்லாம், கடவுள் தான் உற்பத்தி செய்தார் என்பதற்கு என்ன ருஜு?

பதில்: முன் சொல்லப்பட்ட நன்மைகளை எல்லாம் கடவுள் தான் உற்பத்தி செய்தார் என்பதற்கு என்ன ருஜுவோ, அந்த ருஜுவைத்தான் கெடுதிகளையும் கடவுள்தான் உண்டாக்கினார் என்று சொல்வதற்கும் ருஜுவாக ஏற்றுக் கொள்ளக் கோருகிறேன். கடவுள் படைத்த படைப் பெல்லாம் மனிதனுக்காகவே. மனிதனைப் படைத்தான் தன்னை வணங்க என்று ஒரு மதம் சொல்லுகின்றது. ஆகவே, கடவுளை வணங் குவதற்கு என்று கடவுளாலேயே மனிதன் படைக்கப்பட்டிருப்பானே யானால் கடவுளின் இழி தன்மைக்கு வேறு என்ன சாட்சியம் வேண்டும்?

தன்னை வேறு ஒரு மனிதன் வணங்க வேண்டும் என்று ஒரு மனிதன் நினைத்தானேயானால் அவனை நாம் எவ்வளவு அயோக் கியன் என்றும், ஆணவக்காரனென்றும், இழிகுணம் படைத்தவ னென்றும், ஈனன் என்றும் சொல்லுகின்றோமா இல்லையா? அப்படியிருக்க, ஒரு கடவுள் என்று சொல்லப்பட்டவர் தன்னை வணங்குவதற்கு என்று பலகோடி மக்களைப் படைப்பித்து அவர்களை பலவிதமான கஷ்டங்களும், குறைகளும் அனுபவிக்க விட்டு வேடிக்கை பார்த்தால் அப்படிப்பட்ட கடவுள் நல்லவர், பெருந்தன்மை உள்ளவர், தயாபரர், கருணா மூர்த்தி, விருப்பு, வெறுப்பு, தற்பெருமை இல்லாதவர் என்றெல்லாம் அறிவுள்ள மனிதனால் சொல்லமுடியுமா? அன்றியும், கடவுள் மனிதனைப் படைத் தது உண்மையாய் இருக்குமானால் அந்த ஒரு காரியமே பெரியதொரு அயோக்கியத்தனமும், அக்கிரமுமானதென்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில், மனிதனால் மற்ற மனிதர்களுக்கும், மற்ற ஜீவராசி களுக்கும் எவ்வளவு துன்பங்கள் நிகழ்கின்றன?

மனிதன் எவராவது யோக்கியமாய் இருக்க முடிகின்றதா?

இவைகளையெல்லாம் மனிதனைப் படைப்பதற்கு முன் கடவு ளுக்குத் தெரியாதா? மனிதனுக்குக் கொடுத்திருக்கும் புத்தி, அறிவு என்பதை அவன் எப்படி உபயோகிப்பான் என்பதை கடவுளுக்கு ஆரம்பத்தில் அறிய முடியவில்லையா? அல்லது அறியும் சக்தி இருந்தும் கவலையீனமாய் இருந்து விட்டாரா? இவைகளையெல்லாம் பார்த்தால் கடவுளின் யோக்கியதையும் அவர் இருக்கும் லட்சணமும் நன்றாய் விளங்கவில்லையா?

- விடுதலை நாளேடு, 1.11. 19

கிருஷ்ணனும், கீதையும் உள்ளவரை ஜாதி வருணம் ஒழியாது (1)

குடிஅரசு, 2.6.1935லிருந்து...

தோழர்களே! இன்று பொதுவாகவே மனித சமுகத்துக்கு உள்ள கஷ்டங்களையும், குறைபாடு களையும் பற்றி உங்களுக்கு நான் விளக்க வேண்டி யதில்லை.

குறிப்பாக நமது நாட்டு மக்களிடையே உள்ள குறைபாடுகள் மற்ற நாட்டு மக்கள் குறைபாடுகளைவிட அதிகமாகவே இருந்து வருகின்றன. நமது குறைகளுக்கு நிவாரணம் அரசியல் மாறுதலால்தான் முடியும் என்பது சிலருடைய அபிப்பிராயம். ஆனால் சுயமரியாதை இயக்கம் இதை ஒப்புக் கொள்ளு வதில்லை. அரசியலானது சமுதாயக் கொள்கை யையும், மதக் கட்டளைகளையும் ஆதாரமாய் வைத்தே நடைபெற்று வருவதாகும். ஆதலால் எந்த அரசியல் மாற்றத்தாலும் இன்றுள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டுவிடும் என்று நாம் கனவுகூடக் காண முடியாது. அரசியல் கொள்கைகளை, சமுகம் தான் நிர்ணயிக்க வேண்டும். சமுகத்துக்கு ஆதாரம் முன் குறிப்பிட்ட சமுதாய பழக்க வழக்கங்களும், ஜாதி மதக் கட்டளைகளுமே ஆகும்.

எந்த நாட்டிலும் அரசாங்க ஆட்சித் திட்டம் சமுதாய, ஜாதி, மத பழக்க வழக்கங்களின் மீதே இருந்து வருகின்றன. ஏதோ இரண்டொரு அற்ப விஷயங்களே இதிலிருந்து விலக்கு பெற்றதாக இருக்கலாம். நம் நாட்டு அரசியல் சீர்திருத்தம் என்பதில், அரசாங்கத்தாராவது, சமுக மக்களாவது ஜாதி மதப் பழக்க வழக்கங்களில் மாறுதல் செய்யச் சிறிதும் சம்மதிப்பதில்லை.

நமது இன்றைய அரசாங்கமோ, இந்நாட்டு மக்களிடம் ஜாதி மத பழக்க வழக்கங்களைக் காப் பாற்றிக் கொடுப்பதாக உத்திரவாதம் கொடுத்துவிட்டு ஆட்சி புரிகின்றது என்பது நாம் அறியாததா?  இன்றைய நமது அரசியல் கிளர்ச்சியும், சுயராஜ்ஜிய முயற்சியும்கூட ஜாதி மத பழக்க வழக்கங்களுக்கு உத்திர வாதம் கொடுத்துவிட்டே (கிளர்ச்சியும், முயற் சியும்) நடை பெறுகின்றது. இன்றைய தினம் தோழர் ராஜகோபலாச்சாரி யாரால் எடுத்துக் காட்டப்படும் கராச்சித் திட்டத்தில் இந்த ஜவாப்புதாரித்தனமான உத்திரவாதம் கல்லுப்போல் உறுதிப்படுத்தப்பட்டிருக் கிறது. காங்கிரசு முயற்சி செய்யும் சுயராஜ்ஜியத்தில்

1)    The article in the constitution relating to fundamental rights, shall include a guarantee to the communities concerned of protection of their culture, language, scripts, education, profession, practice religion and religious endowments.


2)    Personal Laws shall be protected by specific provision to be embodied in the constitution.

1)            சுயராஜ்ஜிய அரசாங்கத்தில் ஒவ்வொரு வகுப்பாருடையவும் அவர்களது கலைகள், நாகரிகங்கள், பாஷை, கல்வி, தொழில், பழக்க வழக்கம், மதம், மத தர்ம சொத்துக்கள், ஸ்தாபனங்கள் முதலியவைகளைக் காப்பாற்றுதலாகியவைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி கூறி, உத்திரவாத மளிக்கப்படும்.

2)            ஒவ்வொரு சமுக தனிப்பட்ட உரிமை களையும் பற்றிய சட்டங்களும் காப்பாற்றப்படும் படியான திட்டத்தையும் சேர்க்கப்படும் - என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறது. அதுதான் கராச்சித் திட்டம் என்பது.

அந்நிய அரசராகிய பிரிட்டிஷ் ஆட்சியின் வாக்குறுதிகளின் பயனாகவே சமுக வாழ்வில் ஜாதிமதக் கொடுமையில் ஒரு கடுகளவு மாறுதல்கூட செய்வது கஷ்டமாய் இருந்து வருகிறது.

சாரதா சட்டம்கூட அதனாலேயே சுயமரியா தையற்று பிணமாகக் கிடக்கிறது. இப்படியிருக்கும் போது இனி வரப்போகும் சுயராஜ்ஜியத்திலும் சமுகப் பழக்க வழக்கம், ஜாதி ஆகியவைகளுக்கு ஜவாப்புதாரித்தனமும், உத்தரவாதமும், வாக்குறு தியும் கொடுக்கப்பட்டிருக்கும் போது அவைகளில் ஒரு சிறு மாறுதலாவது செய்யப்படக்கூடும் என்று யாராவது எதிர்பார்க்க முடியுமா?

ஆகவே இன்று இந்நாட்டு மக்களுக்கு உள்ள குறைபாடுகள் நீக்கப்படுவதற்கு, இன்றைய அரசியல் மாறுபட்டு விடுவதாலேயே ஏதாவது பலன் ஏற்பட்டுவிடும் என்பது வெறும் கனவாகத்தான் முடியும். இன்றுள்ள குறைபாடுகள் எல்லாம் இந்தியாவில் சுயராஜ்ஜியம் இருந்த காலத்திலும் இருந்து வந்தது தானே ஒழிய முகமதியர் ஆட்சியிலோ, பிரிட்டிஷார் ஆட்சியிலோ ஏற்பட்டு விட்டதாகச் சொல்லிவிட முடியாது.

மனிதனை மனிதன் இழிவுபடுத்தி அடிமைப் படுத்தும் குணமும், மனிதன் உழைப்பை மனிதன் அபகரித்துப் பொருள் சேர்த்து உழைப்பாளியை பட்டினி போட்டு கொடுமைப் படுத்திய குணமும், ராமராஜ்ஜியம் முதல் தர்ம தேவதை ராஜ்ஜியம் இடையாக, பிரிட்டிஷ் ராஜ்ஜியம் வரை ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகின்றது.

உண்மையை யோக்கியமாய் வீரமாய்ப் பேச வேண்டுமானால், முகமதிய ஆட்சியிலும் பிரிட்டிஷ் ஆட்சியிலும் ஓரளவு பழைய கொடுமைகளும், இழிவுகளும், குறைவுகளும் குறைந்திருக்கின்றன என்று புள்ளி விவரங்கள் காட்டலாம்.

இந்த நாட்டில் ஜாதியால் இழிவுபடுத்தப்பட்ட மக்கள் 100-க்கு 97 பேர்களாகும். ஜாதியால் அடிமைப் படுத்தப்பட்ட மக்கள் 100-க்கு 25 பேர்களாகும். மதத் தால் இழிவுபடுத்தப் பட்ட மக்கள் 100-க்கு 100 பேர் என்றுகூட சொல்லலாம். ஒவ்வொரு மதக்காரனும் மற்ற மதக்காரனை இழிவாய்த்தான் கருதுகின்றான். ஒவ்வொரு ஜாதியானும் மற்ற ஜாதியானை இழிவாய்த்தான் கருதுகிறான். பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் கீழ் ஜாதி என்பது இந்து மத சம்பிரதாயம். இப்படிப்பட்ட இந்த இழிவான நிலைமை மாற வேண்டுமானால் இன்றைய பிரிட்டிஷ் அரசியல் மாறுவதால் முடியுமா?

பெரும்பான்மையான மக்களின் பொருளாதாரக் கொடுமைக்கும், அவர்களது வாழ்க்கை நிலை இழி வுக்கும், ஜாதியும் மதமும் காரணமாய் இருக்கின்றதை யாராவது மறுக்க முடியுமா? எங்காவது பார்ப்பனன் பட்டினி கிடக்கின்றானா? எங்காவது பார்ப்பான் சரீரப் பாடுபடுகின்றானா? கூலிக்கு மூட்டை தூக்குகின்றானா? நடவு நட்டுத் தண்ணீர் கட்டுகின்றானா?அது போலவே பறையர் பள்ளர் போன்ற கூட்டத்தினர் வாழ்க்கை எங்கும் எப்படி இருக்கிறது பாருங்கள். பாடுபட்டும் இக் கூட்டத் தாரின் நிலைமை எவ்வளவு பரிதாபகரமானதாய் இருக்கின்றது. இதற்கு ஜாதிமதம் அல்லாமல் வேறு காரணம் என்ன? ஆகவே, ஜாதி மதத்தின் காரணமாய் சிலருக்கு மாத்திரம் உயர்வும், செல்வமும் அநேகர் களுக்கு இழிவும், தரித்திரமும் மக்களிடம் நிலவு கின்றதே தவிர பாடுபடாததாலும், பாடுபடுவதாலும் அந்நிய அரசாலும், சுயராஜ்ஜியத்தாலுமா நிலவு கின்றது என்பதைத் தயவுசெய்து யோக்கியமாய் நடுநிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.

கராச்சித் தீர்மானப்படி ஆட்சிப் புரியப் போகும் சுயராஜ்ஜியம் நமக்குக் கிடைத்தால், இந்தியா இந்த விஷயங்களில் இன்றுள்ள நிலையைவிட, கேடான நிலையையே அடையும் என்பதை உறுதியாய்க் கூறுவேன். மனிதனுடைய அவமானத்தையும், இழி வையும் போக்குவதற்கு ஒப்புக் கொள்ளாத சுயராஜ்ஜியம் பித்தலாட்டச் சூழ்ச்சி ராஜ்ஜியமாகுமே ஒழிய, யோக்கியமான ராஜ்ஜியம் ஆகாது.

******

மனிதன் பகுத்தறிவுவாதி; வளர்ச்சிக்கு உரியவன். அவன், வாழ்க்கையைச் சுமையாக, அமைத்துக் கொள்ளக் கூடாது.

மனிதச் சுதந்திரத்திற்கும் கவலையற்று வாழ்வதற்கும் ஏற்ற முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும்... எனவே, மனித வாழ்வு பெண்டாட்டி கட்டிக் கொண்டு குட்டி போட்டுக் கொண்டு, காப்பாற்ற மட்டும் என்று எண்ணாமல், மனிதச் சமுதாய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பாடுபடுவது தான் என்பதை உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும்.

- தந்தை பெரியார்

 - விடுதலை நாளேடு 1.11. 19

கடவுள் - சித்திரபுத்திரன்

12.05.1935  - குடிஅரசிலிருந்து...

கேள்வி : கடவுள் நன்மையே உருவாய்க் கொண்டவர் என்பதற்கு உதாரணம் சொல்லு.

பதில் : நல்ல காற்று, நல்ல தண்ணீர், வாசனையுள்ள புஷ்பம், ருசியுள்ள ஆகாரம், சத்துள்ள பழ வகை, மழை, நதி, நந்தவனம், பால், பசு, நல்ல பெண்கள், சந்திரன், சூரியன் முதலிய அனேக அருமையான வஸ்துக்களை உற்பத்தி செய்து நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆதலால் கடவுள் நன்மையே உருவாகக் கொண்டவர்.

கேள்வி: கடவுள் கெடுதியையே உருவாய்க் கொண்டவர் என்பதற்கு உதாரணம் சொல்லு..

பதில்: கெட்ட காற்று, விஷப் புகை, நோய்க் கிருமிகள் உள்ள தண்ணீர், துர் வாடையுள்ள மலம், கசப்பான ஆகாரம், உபயோகமற்றதும் நோயை உண்டாக்குவதுமாக பழம், துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், கொடிய வியாதி, கடும் வெய்யில், இடி, பூகம்பம், முரட்டு வெள்ளம், இருட்டு, நோய் உள்ள பெண்கள், தரித்திரம், முள்ளுள்ள புதர்க்காடுகள் முதலானவை களையெல்லாம் கடவுள் உற்பத்தி செய்திருக்கிறார். ஆதலால் கடவுள் கெடுதியே உருவாய்க் கொண்டவர்.

கேள்வி: இந்தக் கெடுதிகளையெல்லாம், கடவுள் தான் உற்பத்தி செய்தார் என்பதற்கு என்ன ருஜு?

பதில்: முன் சொல்லப்பட்ட நன்மைகளை எல்லாம் கடவுள் தான் உற்பத்தி செய்தார் என்பதற்கு என்ன ருஜுவோ, அந்த ருஜுவைத்தான் கெடுதிகளையும் கடவுள்தான் உண்டாக்கினார் என்று சொல்வதற்கும் ருஜுவாக ஏற்றுக் கொள்ளக் கோருகிறேன். கடவுள் படைத்த படைப்பெல்லாம் மனிதனுக்காகவே.

மனிதனைப் படைத்தான் தன்னை வணங்க என்று ஒரு மதம் சொல்லுகின்றது. ஆகவே, கடவுளை வணங்குவதற்கு என்று கடவுளாலேயே மனிதன் படைக்கப்பட்டிருப்பானேயானால் கடவுளின் இழி தன்மைக்கு வேறு என்ன சாட்சியம் வேண்டும்?

தன்னை வேறு ஒரு மனிதன் வணங்க வேண்டும் என்று ஒரு மனிதன் நினைத்தானேயானால் அவனை நாம் எவ்வளவு அயோக் கியன் என்றும், ஆணவக்காரனென்றும், இழிகுணம் படைத்தவ னென்றும், ஈனன் என்றும் சொல்லுகின்றோமா இல்லையா? அப்படியிருக்க, ஒரு கடவுள் என்று சொல்லப்பட்டவர் தன்னை வணங்குவதற்கு என்று பலகோடி மக்களைப் படைப்பித்து அவர்களை பலவிதமான கஷ்டங்களும், குறைகளும் அனுபவிக்க விட்டு வேடிக்கை பார்த்தால் அப்படிப்பட்ட கடவுள் நல்லவர், பெருந்தன்மை உள்ளவர், தயாபரர், கருணா மூர்த்தி, விருப்பு, வெறுப்பு, தற்பெருமை இல்லாதவர் என்றெல்லாம் அறிவுள்ள மனிதனால் சொல்லமுடியுமா?

அன்றியும், கடவுள் மனிதனைப் படைத்தது உண்மையாய் இருக்குமானால் அந்த ஒரு காரியமே பெரியதொரு அயோக்கியத் தனமும், அக்கிரமுமானதென்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில், மனிதனால் மற்ற மனிதர்களுக்கும், மற்ற ஜீவராசி களுக்கும் எவ்வளவு துன்பங்கள் நிகழ்கின்றன?

மனிதன் எவராவது யோக்கியமாய் இருக்க முடிகின்றதா?

இவைகளையெல்லாம் மனிதனைப் படைப்பதற்கு முன் கடவுளுக்குத் தெரியாதா? மனிதனுக்குக் கொடுத்திருக்கும் புத்தி, அறிவு என்பதை அவன் எப்படி உபயோகிப்பான் என்பதை கடவுளுக்கு ஆரம்பத்தில் அறிய முடியவில்லையா? அல்லது அறியும் சக்தி இருந்தும் கவலையீனமாய் இருந்து விட்டாரா? இவைகளையெல்லாம் பார்த்தால் கடவுளின் யோக்கியதையும் அவர் இருக்கும் லட்சணமும் நன்றாய் விளங்கவில்லையா?

 - விடுதலை நாளேடு 8 11 19

ஞாயிறு, 3 நவம்பர், 2019

சுயமரியாதைத் திருமணமும் புராண மரியாதைத் திருமணமும்

* தந்தை பெரியார்
தோழர்களே! இன்று இங்கு நடக்கும் இத் திருமணத் திற்கு சுயமரியாதைத் திருமணமென்றும் சீர்திருத்தத் திருமணமென்றும் சொல்லப்படுகிறது. சுய மரியாதைத் திருமணம் என்றால் சிலருக்குப் பிடித்த மில்லாமல் இருக்கலாம் என்று சீர்திருத்த திருமணம் எனச் சொல்லப்படுகிறது.
சீர்திருத்தம்
எப்படியிருந்தாலும் ஒன்றுதான். சீர்திருத்தம் என்றால் என்ன?  இருக்கின்ற நிலைமையில் இருந்து மாற்றம் செய்வதையே சீர்திருத்தம் என்றும், நாகரிகமென்றும் சொல்லுகிறோம் என்றாலும், இந்தச் சீர்திருத்தமும் நாகரிகமும் வெறும் மாறுதலுக்காகவே ஏற்படுவதும் உண்டு. மற்றும் பல விஷயங்களில் சவுகரியத்தையும், நன்மையையும், அவசியத்தையும், பகுத்தறிவையும் உத்தேசித்து மாற்றப்படுவதும் உண்டு. மாறுதலும் சீர்திருத்தலும் மக்களுக்கும் உலகத்திற்கும் புதிதல்ல. உலகம் தோன்றிய நாள்முதல் ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு மாறுதல் அடைந்து வந்திருக்கின்றது என்பதைச் சரித்திரங்களையும், பழைய சின்னங்களையும் பார்த்து வந்தால் நன்றாய் விளங்கும். அதுபோலவே மனித சமூகம் சகல துறைகளிலும் எவ்வளவு மாறுதல்கள் அடைந்து வந்திருக்கிறது என்பதும் வாழ்க்கையில் எவ்வளவு மாறுதல்கள் அடைந்து வந்திருக்கின்றது என்பதும் நம் குறைந்தகால ஆயுளின் அனுபவத்தைப் பார்த்தாலே தெரியவரும்.
மாறுதல்
மாறுதல் என்பது இயற்கையே ஆகும். மாறுதல் இல்லாமல் எந்தநாடும், எந்தச் சமூகமும், எந்த வஸ்துவும் இருக்கமுடியாது. இந்தக் கலியாணம் சுயமரியாதைக் கலியாணம் என்றும், இதில் பழக்கவழக்கங்கள், சாஸ் திரங்கள், சம்பிரதாயங்கள் ஒன்றும் கவனிக்கப்படுவ தில்லை என்றும், இதை புராண மரியாதைக்காரர்களும், வைதிகர்கள் என்பவர்களும் குற்றம் சொல்லலாம்.
வைதிகம்
சாதாரணமாக இந்நாட்டில் நடைபெறும் வைதிக கலியாணம் புராண முறைப்படி நடக்கும் கலியாணம் ஆகியவைகளைப் பற்றியே சிந்தித்துப் பாருங்கள். வைதிக பிரச்சாரத்துக்கும், வைதிகத்துக்குமாகவே உயிர் வாழ்வதாய் சொல்லிக் கொள்ளும் பார்ப்பன சமுகத் தையே எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுடைய கலி யாணங்களில் இப்போது எவ்வளவு சீர்திருத்தம், எவ் வளவு மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள். காலை 7 மணிக்கு வீட்டைவிட்டு புறப்பட்டு தூரத்தில் உள்ள கோவில்களுக்குப் போய் அங்கு கலியாணம் செய்துகொண்டு பகல் சாப்பாடு சாப் பிட்டுவிட்டு மாலை 6 மணிக்கு புறப்பட்டு வீடுவந்து சேர்ந்து விடுகிறார்கள். 3 - நாள், 5 - நாள், 7 - நாள், அவ் பாசனங்கள், சடங்குகள் என்பவைகள் எல்லாம் எங்கே போய்விட்டன? பெரும்செலவுகள், ஆடம்பரங்கள், பலவகைப் பட்ட விருந்துகள் எல்லாம் எங்கே போய் விட்டன?
சென்னை
மற்றும் குருட்டு நம்பிக்கையும் மூடபக்தியும் பிறந்த ஊராகிய சென்னை முதலிய இடங்களில் நாயுடு, முதலியார், செட்டியார் என்று சொல்லப்படும் ஜாதி களும், வைதிக சிகாமணிகளும் சடங்குகளினாலும், வேஷங்களினாலும் தங்களைப் பெரிய ஜாதியார் என்று சொல்லிக்கொள்ளுகிறவர்களுமான மக்கள் இன்று தங்கள் தங்கள் வீட்டிலேயே, ஒரே நாளில், ஒரு பகலில் ஒரு விருந்தில் கலியாணங்களை முடித்து விடுகின்றனர். இவைகள் எல்லாம் மனிதனில் எவனும் மாறுதலுக்கு ஆளாகாமல் இருக்கமுடியாது. காசிக்கும் ராமேஸ்வரத் துக்கும் நடந்து போனால்தான் புண்ணியம், குதிரை வண்டியில் போய், ரயிலில் போய், மோட்டாரில் போய், ஆகாயக்கப்பலில் மணிக்கு 300 மைல் வேகம் போகக் கூடிய நிலைமையை அடைந்துவிட்டான். இவனிடம் புராணத்தையும், வைதிகத்தையும் பேசினால் செல்லுமா என்றும் யோசித்துப் பாருங்கள். அதுபோலவே சிக்கிமுக்கிக் கல்லின் மூலம் விளக்கு வெளிச்சத்தை உண்டாக்கிக் கொண்டிருந்த மனிதன் விளக்காகி, பந்தமாகி, பவர் லைட்டாகி, கியாஸ் லைட்டாகி, இன்று எலக்டிரிக் லைட் அதாவது ஒரு பொத்தானை அமுக்கினால் லட்சம் விளக்கின் வெளிச்சம் போன்ற பிரகாசத்தைக் கண்டுபிடித்து அனுபவித்து வருகிறான். இந்தக் காரியங்களையெல்லாம் புராணமும், வைதிகமும் தடுத்துவிடக் கூடுமா என்று பாருங்கள்.
திருமணம்
அதுபோலவே இந்தத் திருமணம் என்னும் விஷயத் திலும் முற்போக்கு ஏற்பட்டுத்தான் தீரும். அதை நீங்கள் தடுத்துவிட முடியாது. திருமணத்துக்கு 1000 சாத்திரமும், புராணமும் இருந்தாலும் அதை இனி மக்கள் நம்பிக் கொண்டும், ஏற்றுக் கொண்டும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. காலதேச வர்த்தமானத்துக்குத் தகுந்தபடி மாறிக்கொண்டு தான் வரும். அநேக தேசங்களில் கலியாணம் என்ற பேச்சே இப்போது அமலில் இல்லை. ஆணும், பெண்ணும் ஒன்றாகக் கூடித்தான் வாழ வேண்டும் அல்லது வாழ்க்கை நடத்தவேண்டும் என்கின்ற முறையும் இல்லை. இஷ்டப் பட்டால் இரண்டு பேர் கூட்டு வியாபாரம் செய்வதுபோல சேர்ந்து ஒரு குடும்பத்தை நடத்துகிறார்கள். இஷ்டம் இல்லா விட்டால் தனித்தனியாக குடும்பத்தை நடத்து கிறார்கள். மேலும் குடும்பம் என்கின்ற தொல்லையே இல்லாமல் சுதந்திர மக்களாகவே இருக்கிறார்கள்.
ஓர் ஆணும், பெண்ணும் சேர்ந்து அனுபவிக்கும் இன் பத்தையும், உணர்ச்சி பரிகாரத்தையும், இரு சினேகிதர்கள் அனுபவிக்கும் சிநேக இன்பத்தைப் போலவும் இயற்கைக் கூட்டுப் போலவும் கருதி வாழுகின்றார்கள். இவை எல்லாம் மனிதன் அனுபவத்தினாலும், நாளுக்கு நாள் மனித னுடைய கஷ்டமும், கவலையும், தொல்லையும் குறைக்கப்பட்டு வர வேண்டும் என்கின்ற முயற்சியினாலும் தத்துவ விசாரத்தினாலும் ஏற்படும் காரியங்களேயாகும்.
சுயமரியாதை
ஆதலால் சுயமரியாதை என்கின்ற வார்த்தையைக் கண்டு யாரும் பயப்பட வேண்டியதில்லை. மனிதனுடைய பகுத்தறிவுக்கு மரியாதை கொடுப்பது தான் சுயமரி யாதையின் முக்கிய தத்துவம் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். உங்கள் பகுத்தறிவினாலும் உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு ஒன்று தோன்றி உலகப் பழக்க வழக்கத் துக்கு - சாஸ்த்திரத்துக்கு - மதக்கட்டுப் பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின்மீது அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால் அதைத்தான் சுயமரியாதைக்கு விரோதம் என்று சொல்லு கிறோம். அதைத்தான் அடிமைத் தனம், சுதந்திரமற்றதனம் என்று சொல்லுகின்றோம்.
ஆதலால் எந்தக் காரியத்தையும் உங்கள் பகுத்தறி வையும் அனுபவப் பலனையும் அனுசரித்துப் பார்த்து நடக்க வேண்டும் என்கின்ற முறையிலேதான் இந்தச் சுயமரியாதைக் கலியாணம் என்பதும் ஆங் காங்கு செய்யப்பட்டும், பிரச்சாரம் செய்யப்பட்டும் வருகின்றதே ஒழிய வெறும் மாறுதலுக்காக என்று செய்யப்படவில்லை.
புராண மரியாதை
உங்களுடைய புராண மரியாதைக் கலியாணத்தைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். பு. ம. கலியாணத்தின் முதல் தத்துவமே பெண்கள் ஆண்களுக்கு அடிமைகள் - சுதந்திர மற்றவர்கள் - மனிதத் தன்மைக்கு அருகதை யற்றவர்கள் என்பவற்றை நிலை நிறுத்துவதற்காகச் செய்யப்படும் சடங்குகள் அல்லது காரியம் என்பது எனது அபிப்பிராயம். உதா ரணமாக கன்னிகாதானம், பெண் கொடுத்தல், பெண் வாங்குதல், தாலி கட்டுதல் முதலிய வார்த்தைகளாலும் புருஷனுக்குக் கொண்ட வன், கொண்டான் என்று சொல்லப்படுகின்ற வார்த் தைகளாலும் பெண் அடிமையாகப் பாவிக்கப் படுகிறது என்பதை உணர லாம்.
இந்தச் சுயமரியாதைக் கலியாணம் என்பதன் முக்கிய தத்துவம் கூட்டு வாழ்க்கையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமோ, உயர்வோ, தாழ்வோ இல்லையென் பதும் சகல துறைகளிலும் சம சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்பதுமே யாகும்.
மற்றும் வைதிகப் புராண முறைக் கலியா ணத்தில் மதம், ஜாதி, வகுப்பு, குலம், கோத்திரம் முதலியவற்றைக் கவனிப் பதே முக்கியமாய் இருப்ப தால் ஆண், பெண் பொருத்தம் சரியாய் ஏற்படுவதில்லை. குலத்தில் ஒரு குரங்கை கொள், பாத்திரமறிந்து பிச்சை கொடு, கோத்திர மறிந்து பெண் ணைக் கொடு என்றும் பழமொழிகளைப் பார்த்தாலே குலம், கோத்திரம், ஜாதி, வகுப்பு முதலியவைகளுக்குள்ள நிர்ப்பந்தங்கள் நன்றாய்த் தெரியும். இதன் பயனாய் அநேகக் கலியாணங் களில் பெண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளை இல்லாமலும், மாப்பிள்ளைகளுக்கு ஏற்ற பெண் இல்லாமலும், நாயும், பூனையும் போல் ஜோடிகள் சேர்ந்து விடுகின்றன.
சுயமரியாதைக் கலியாணத்தில் ஜாதி, வகுப்பு, குலம், கோத்திரம் என்பனவை கவனிக்கப்படாமல் மணமக்களு டைய யோக்கியதாம்சங்களையே கவனித்துப் பார்க்கப்படு கின்றன.
வைதிகக் கலியாணத்தில் வயதுக்கிரமங்களை தக்க பருவங்களை முக்கியமாய் கவனிப்பதில்லை. தக்க பருவம் வருவதற்கு முன்பு பெண்களுக்குக் கலியாணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்து வருகின்றது. உதா ரணமாக 10 வயது வந்தால் ஒரு பறையனுக்கு பிடித்துக் கொடு என்று சொல்லும் பழமொழியைப் பார்த்தால் விளங்கும். 50, 60 வயதான ஆண் கிழத்துக்கு 10, 12 வயது பெண் குழந் தையைப் பிடித்து தாலிகட்டி விடுகிறார்கள். கலியாண விஷயத்தில் ஆண்களுக்கு கிழம் என்பதே இல்லையாம்.
இந்த விஷயத்திலும் சுயமரியாதைக் கலியாணம் தக்க சரிசமமான வயதுப் பொருத்தம் பார்த்தே செய்யப்படும்.
மற்றபடி புராணக் கலியாணங்களில் நாள் பார்ப்பது, கோள் பார்ப்பது, சடங்குகள் செய்வது, அதிகச் செலவுகள் செய்வது முதலிய காரியங்களால் கலியாணக்காரர்களுக் குத் தாங்க முடியாததும், விலக்க முடியாததுமான பல அசவுகரியங்கள், செலவுகள் ஏற்படுகின்றன.
உதாரணமாகப் புரோகிதன் அதிகாலையில் நாலரை மணி 5 மணி, 6 மணிக்கு முகூர்த்தம் வைத்துக் கொடுத்து விடுகிறான், இதனால் இரவெல்லாம் தூக்கமில்லாமல் கலியாணத்துக்கு வந்த ஜனங்கள் அவஸ்தைப்படுகிறார்கள். பல்லு விளக்காமல், கால், கை கழுவாமல், வெளிக்கும் போகாமல் நித்தியக் கடன்களைக் காலா காலத்தில் கழிக்க முடியாமல் மக்கள் அவஸ்தைப்படுவதும் மற்றும் மக்கள் பழக்கவழக்கமெனும், சடங்கு, ஆடம்பரம் முதலியவை களால் கலியாணக்காரர்களுக்குச் சகிக்க முடியாத தொல்லைகளும், தாங்க முடியாத கடன்களும் ஏற்பட்டு அக்குடும்பங்கள் ஒன்று, இரண்டு வருஷங்களுக்கும் சில சமயங்களில் வாழ்நாள் முழுவதும் கடனில் மூழ்கி வேதனைப்படுவதுமாக இருந்து வருகின்றது.
சுயமரியாதைக் கலியாணத்தில் எல்லோருக்கும் சவுகரியமான நேரமும், மிகவும் சுருக்கமான செலவும் கொண்டு நடத்தப்படுவதோடு அனாவசியமான அர்த்த மற்ற சடங்குகளையும் ஒழித்து நடத்தப்பட வேண்டு மென்று கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் எல்லாம் கலியாணத்திற்கு ஏதாவது பலக்குறைவோ, கெடுதலோ ஏற்பட்டுவிடும் என்று யாரும் பயப்பட வேண்டிய தில்லை. கலியாணத்துக்கும், ஜாதி, மதம், சடங்கு, நேரம், காலம், குலம், கோத்திரம் ஆகியவைகளுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.
புராண மரியாதையால் என்ன பயன்?
நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம், சடங்குக்கிரமம் முதலியவற்றைக் கவனித்தே 100க்கு 99 கலியாணங்கள் செய்யப்படுகின்றன. இப்படி யெல்லாம் செய்தும் இன்று அவற்றின் பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர்களே யானால் ஒட்டு மொத்தம் பெண் சமுகத்தில் 100க்கு 20 பெண்கள் விதவைகளாய் இருக்கிறார்கள். இந்த விதவைகளுள் 100க்கு 25 பேர்கள் 20 வயதிற்குக் கீழ்ப்பட்ட விதவைகள் என்றால் அவர் களின் கஷ்டத்தையும், அனுபவிக்கும் வேதனைகளையும் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. நாள், கோள் பார்த்து சாஸ்திரப்படி சடங்குகள் செய்யப் பெற்ற தெய்வீகக் கலியாணங்களில் பெண்கள் 100க்கு 20 பேர் ஏன் விதவைகளாய் இருக்க வேண்டும். அவர்களில் 100க்கு 25 பெண்கள். 20 வயதுக்குட்பட்டவர்கள் விரக வேதனையில் ஏன் அழுந்திக் கொண்டிருக்க வேண்டும் இது தெய்வீக மதத்தின் பலனா?  அல்லது அசுர மனத்தின் பிசாச மனத்தின் பலனா என்று யோசித்துப் பாருங்கள். தெய்வீகம், பழக்கம், வழக்கம், சாஸ்திரம் என்கின்ற வார்த்தைகள் முன்னேற்றத்துக்கும், பகுத்தறிவுக்கும், சுதந்திரத்துக்கும், ஜென்ம விரோதியான வார்த்தை களாகும்.  ஆதலால் சுயமரியாதைக் கலியாணம் என்பதில் மேற்படி முன்னேற்ற விரோதிகளுக்கும், சுதந்திர விரோதிகளுக்கும் இடமில்லை. இந்தக் காரணங்களால்தான். பழமை விரும்பிகள், வைதிகர்கள் பகுத்தறிவற்ற கோழைகள், சுயமரியாதை இயக்க மென்றாலும், சுயமரியாதைக் கலியாணமென்றாலும் முகத்தைச் சுழித்து கண்களை மூடி விழிப்பார்கள். இவர்களைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தக் கூட்டங்களுக்கு மரியாதைக் கொடுத்த எந்த தேசமோ, சமுகமோ விடுதலை பெற்றதாக யாரும் சொல்ல முடியாது.
ஆகையால்தான் இந்தப் பிரச்சாரம் செய்து வரு கின்றோம். மற்றபடி இந்தக் கலியாணத்தில் என் போன் றோருக்கு யாதொரு வேலையும் இல்லை. புரோகிதத்துக் காக எவரும் இங்கு வரவும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் எல்லோரும் இதனை, கவனித்து நன்றாய் சிந்தித்துப் பாருங்கள், நன்மையைக் கைக்கொண்டு பகுத் தறிவு வளர்ச்சிக்கும் விடுதலைக்கும் உதவி புரியுங்கள் என்ற கேட்டுக் கொண்டு, உங்கள் சார்பாக மணமக்கள் தங்கள் ஒப்பந்தங்களைக் கூறி ஒருவரையொருவர் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள வேண்டிக் கொள்ளுகிறேன்.
(22.09.1934 கோவை சுயமரியாதை சங்கத்தின்
ஆதரவினால் தோழர் என். கிருஷ்ணசாமிக்கும் -
வி. லட்சுமிக்கும் நடைபெற்ற சுயமரியாதை
திருமண சொற்பொழிவு)
- பகுத்தறிவு - சொற்பொழிவு - 07.10.1934
- விடுதலை நாளேடு, 3.11.19

வெள்ளி, 1 நவம்பர், 2019

கடவுள், மதம், கோயில்களை இன்னமும் கட்டிக் கொண்டு அழுதால் தீண்டாமை எப்படி ஒழியும்?

* தந்தை பெரியார்

இன்றைய தினம் எனக்குச் சிலை திறப்பு என்னும் பெயராலே, இந்தத் தர்மபுரியில் என்றும் காணாத அளவிற்குப் பெரும் விழாவாகக் கொண்டாடுகின்றனர். இங்குக் கூடி இருக்கின்ற இலட்சக்கணக்கான மக்கள் என்னைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று கூடியிருக்கின்றீர்கள். அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் புகழ்ந்து மிகப் பெருமைப் படுத்தி- பாராட்டிப் பலர் இங்கு பேசினார்கள். வைதால் கூடப் பொறுத்துக் கொள்ளலாம்; மனதறிந்து, நமக்குப் பொருத்தமில்லாத புகழ் வார்த்தைகளைக் கேட்கும் போது மனம் சங்கடப்படுகின்றது. என்றாலும், அவர்கள் மனம் நிறையும்படி என்னால் இயன்ற அளவுக்கு நடந்து கொள்கிறேன், என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நம் இயக்கத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும்;  நம் இயக்கம்  நாச இயக்கம்- ஆக்க இயக்கமல்ல, அழிவு இயக்கமாகும். நாசமான காரியங்களை ஆக்கவேலை யாகக் கொண்டிருக்கிற இயக்கமாகும். இந்த மாதிரி நாசவேலை செய்தவர்கள் எல்லாம் புராணங்களில், சரித்திரங்களில் பார்த்தால் அவர்கள் எல்லாம் அழிக்கப் பட்டு இருக்கின்றார்கள். நம் புலவர்கள் எல்லாம் நம்மை மூடநம்பிக்கைக் காரர்கள் ஆக்கிவிட்டார்கள். அவ்வளவு பெரும் எதிர்ப்புகளுக்கு இடையே நாம் தொண்டு செய்து நமக்கு முன்னோர்கள் அடைந்த கதியை அடையாமல் எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கின்றோம் என்றால், நாசவேலை செய்பவர்கள் கையில் ஆட்சியை ஒப்படைத்து இருக் கின்றோம். நாச வேலை செய்பவர்கள் என்றால் பகுத்தறிவுவாதிகள் - அறிவைக் கொண்டு சிந்திப்பவர்கள் - அறிவின் படி நடப்பவர்கள் ஆவார்கள்.

மூடநம்பிக்கை மக்கள் நிறைந்த இந்த நாட்டில் பகுத்தறிவாளர்கள் ஆட்சி என் றால் பலாத்காரத்தால் ஆட்சிக்கு வர வில்லை; மக்களை ஏமாற்றி வரவில்லை; எங்கள் கொள்கை கடவுள் இல்லை, மதம் இல்லை, சாஸ்திரம், சம்பிரதாயம் இல்லை,  சாதி இல்லை. இவை யாவும் ஒழிக்கப்பட வேண்டும் என்று மக்களிடையே எடுத்துச் சொல்லி, அதன் மூலம் அவர்கள் ஓட்டு களைப் பெற்று அமைந்த ஆட்சியாகும்.

நமக்கு முதலமைச்சராக இருந்த அண்ணா அவர்கள்,  இராமாயணத்தைக் கொளுத்தியவர்; புராணம், இதிகாசம் ஆகியவற்றை எல்லாம் கண்டித்துப் புத்தகம் எழுதிய வராவார். பத்திரிகைக்காரன் எல்லாம் நமக்கு எதிரிகள் என்பதால், நம் கொள்கைகளை - செயல்களை வெளி யிடாமல் அதற்கு மாறானவற்றை விளம்பரம் செய்கின்றார்கள். என்றாலும், அப் படிப்பட்ட அண்ணா மறைவு எய்தியதற்கு 30 லட்சம் மக்கள் வந்தார்கள் என்பதை அவர்களால் மறைக்க முடியவில்லை- வெளியிடாமல் இருக்க முடியவில்லை.  இந்த 30 இலட்சம் மக்களும் அண்ணா யார்? என்று தெரியாமல் வந்தவர்கள் அல்லவே!  அவர் நாத்திகர் என்பதைத் தெரிந்து வந்தவர்கள் தானே?

அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்ட பூர்வமாக்கினார்கள் என்றால், கல்யாணத்திற்குக் கடவுள், மதம், சாதி, பழைமை, தேவையில்லை; ஓர் ஆணும், பெண்ணும் நாங்கள் சேர்ந்து வாழ்கின்றோம் என்று சொன்னால் போதும் என்று சொல்லிவிட்டாரே! இது இந்த ஆட்சிக்குக் கடவுள்-மதம்-சாஸ்திரங்களில், சாதி, பழமைகளில் நம்பிக்கைக் கிடையாது என்பதைக் காட்டிக் கொள்வது தானே! இது அண்ணாவின் பெருமையா அல்லது வேறு யாரின் பெருமையா என்று கேட்கின்றேன்? அதோடு மட்டுமில்லையே, அரசாங்க அலுவலகங்களிலிருந்த சாமி படங்களை எல்லாம் நீக்க வேண்டும் என்று உத்தரவுப் போட்டாரே- இதை வேறு எந்த ஆட்சியிலும் செய்ய முடியாதே!

இந்த ஊரில் எனக்குச் சிலை வைத்தார்கள் என்றால், இந்தச் சிலை என்ன மணியடிக்கிற சிலை இல்லை; பூசை செய்கிற சிலை இல்லை, கடவுள் இல்லை, என்று சொல்கின்றவன் சிலை. இந்தச் சிலை ராமசாமியின் சிலையில்லை - கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைத் தொழுகிறவன் காட்டுமிராண்டி என்று சொல்பவனுடைய சிலையாகும். கடவுள் உண்டு என்பவர்களுக்கு இல்லை என்பதைக் காட்டுவதற்காக இது அமைக்கப்பட்டதாகும். இந்த ஆட்சி இன்னும் 10 வருஷம் இருந் தால் கோயில்களை எல்லாம் அவர்களா கவே இடித்து விடுவார்கள்.

நாம் இந்த ஒரு துறையில் மட்டுமல்ல, பல துறைகளில் மாற்றமடைந்து இருக்கின் றோம். ஆட்சி என்று உலகத்தில் எப்போது ஏற்பட்டதோ அன்று முதல், மூடநம்பிக் கைக்காரன் ஆட்சிதான்- பார்ப்பான் ஆட்சிதான் நடை பெற்றிருக்கிறது. பார்ப்பானை மந்திரியாகக் கொண்டு பார்ப்பான் சொல்கிறபடி கேட்கிற ஆட்சிதான் நடை பெற்றிருக்கிறது.

பார்ப்பானுக்கு ஆட்சியில்- இயக்கத்தில் இடமில்லை என்ற நிலை இப்போது தானே, அதுவும் நம்முயற்சியால் ஏற்பட்டிருக்கிறது! இல்லை என்றால் இன்றும் பார்ப்பான் அல்லது பார்ப்பானின் அடிமைதான் ஆட்சியிலிருப் பார்கள். நம்முடைய தொண்டின் காரணமாக, பிரச் சாரத்தின் காரணமாகத்தான் பார்ப்பான் அரசியலை விட்டு வெளியேறும்படி ஆயிற்று. நமக்கு மேலே உயர்ந்தவன் எவனுமில்லை; அவன் மட்டும் என்ன உயர்ந்தவன்? நீ மட்டும் ஏன் தாழ்ந்தவன்? எதற்காக ஒருவன் பார்ப்பானாக இருப்பது? இன்னொருவன் பஞ்சமன், பறையன், தீண்டப்படாதவனாக இருப்பது? என்கின்ற இது மாதிரிப் பிரசாரம் செய்ததாலே தான் இன்றைக்குப் பஞ்சமனை, நாவிதனை, பள்ளன், பறை யனை எல்லாம் மந்திரியாக்கி இருக்கின்றோம்.  பல பெரும் உத்தியோகங்களில் நம்மவர் இருக்கும் படியாயிற்று. இந்த நாட்டில் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று உண்மையில் பாடுபட்டவர்கள்- தொண்டாற்றிய வர்கள் எங்களைத் தவிர வேறு யாருமில்லை.

காங்கிரசாரும், காந்தியும் இந்தத் தீண்டாமையைக் காப்பாற்றும் வகையில்  தான் நடந்து கொண்டனரே தவிர, தீண்டாமை ஒழிய வேண்டும் என்று கருதியது கூடக்  கிடையாது. நம் நாட்டில் தீண்டாமை இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

கடவுள், மதம், கோயில் இவற்றை எல் லாம் இன்னமும் கட்டிக்கொண்டு அழுதால் தீண்டாமை எப்படி ஒழியும்? ஒருவன் தீண்டத்தகாதவனாக இருப்பது அவன் வழி படுகிற கடவுளால், பின்பற்றுகிற மதத்தால், கோயிலுக்குப் போய் வெளியே நின்று கொண்டு கும்பிடுவதால் தானே? எனக்குக் கடவுளும் வேண்டாம்; மதமும் வேண்டாம்; என்னைத் தீண்டத்தகாதவனாக மதிக்கிற கோயிலுக்கு நான் போகமாட்டேன், என் கின்ற துணிவு வருகிறவரைத் தீண்டாமை நம்மை விட்டுப் போகாது.

இன்றைக்குக் காங்கிரஸ்காரன்தான், தீண்டாமையை ஒழித்ததாகப் பேசிக் கொண்டு திரிகிறான்.

நாங்கள் மலையாளத்தில் செய்த போராட்டத்தின் காரணமாக, திருவாங்கூர்காரன் கோயிலைத் திறந்து விட்டு நாயாடிகளை எல்லாம் நுழையவிட்டான்.

நாங்களும் மத மாற்ற மாநாடு கூட்டி, மக்களை எல்லாம் முஸ்லிம்களாக மாற்ற முற்பட்டபோது, பலர் இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு அந்த மாநாட்டிலேயே மாறிவிட்டனர். மாறியவுடன் அதுவரை ஈழவர்கள், கீழ்சாதிக்காரர்கள் நடக்கக் கூடாது என்றிருந்த இடங்களுக்குப் போக ஆரம்பித்ததும், மேல் சாதிக் காரர்கள் அவர்களை நுழையவிடாமல் தடுத்தனர்; கலவரம் ஏற்பட்டது; அதில் முஸ்லிமாக மதம் மாறிய ஒருவன் இறந்து போய்விட்டான். உடனே கலவரம் முற்ற ஆரம்பித்தது; இந்து முஸ்லிம் கலவரமாக ஆக ஆரம் பித்து விட்டது; எங்குப் பார்த்தாலும் கலகம் ஏற்படலாயிற்று. இதைப் பார்த்துப் பயந்து, அப்போது இருந்த சி.பி.ராமசாமி அய்யர் எங்கள் ஆட்சியின் கீழுள்ள பொது  இடங்கள், கோயில், குளம், பள்ளிக்கூடம் எல்லாவற்றிற்கும், எல்லா மக்களும் செல்ல உரிமை உண்டு, என்று திறந்து விட்டார். அதன் பிறகுதான் இங்கு இவர்கள்- தீண்டப் படாதவர்கள் கோயிலுக்குள் செல்ல உரிமை வழங்கினர். அப்போது நான் காந்தியிடம் பறையர்களைக் கோயிலுக்குள் அனும தித்ததன் மூலம் எங்களையும் பறையனாக்கினீர்களே தவிர, பார்ப்பான் போகிற இடம் வரை எங்களை அனுமதிக்கவில்லையே என்று கேட்டேன். உடனே காந்தி சூழ்ச்சியாக இந்துக்கள் போகிற இடம் வரை தான் பார்ப்பனர்களும் போகவேண்டும் என்று சொன்னாரே ஒழிய, பார்ப்பான் போகிற இடத்திற்கு நாம் போகலாம் என்று சொல்லவில்லை என்பதோடு, நடைமுறையில் பார்ப்பான் முன்பு போய்க் கொண்டிருந்த இடம்வரை போய்க் கொண்டுதான் இருக்கின்றான்; அதை ஒன்றும் அவன் மாற்றிக் கொள்ளவில்லை.

நாட்டின் சகல துறைகளிலும் பார்ப்பானின் ஆதிக்கமே இருந்து வந்தது. ஆட்சித்துறை, அரசியல் துறை, மதத்துறை, எல்லாவற்றிலும் அவனே ஆதிக்கத்தி லிருந்து வந்தான்.

எனக்குத் தெரிய முதன் முதல் அய்க்கோர்ட்டில் தமிழர் ஜட்ஜாக வந்தது ராமசாமி ரெட்டியார், முதலமைச்சராக இருந்த போதுதான் ஆகும். அதற்கு பின் ஒன்றிரண்டாக இருந்து இன்று 10 பேர்கள் தமிழர்கள் ஜட்ஜாக இருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இந்த ஆட்சி தான் ஆகும்.  இன்று அய்க்கோர்ட்டில் இருக் கின்ற 14 ஜட்ஜூகளில் 10 பேர்கள் தமிழர்கள். மீதி 4 பேர்கள் தான் பார்ப்பனர்கள், இன்னும் இரண்டு மாதம் போனால் தமிழர்கள் எண்ணிக்கை  12 ஆகிவிடும். பார்ப்பானின் ஆதிக்கம் தொலைந்தது. இதனால் என்ன பயன் என்பீர்கள்? நம் வக்கீல்களுக்கும், நம் மக்களுக்கும் அதனால் நல்ல வாய்ப்புக் கிடைக்கும். இன்னும் ஒரு மாதத்தில் அய்யா அவர்கள் டில்லி ஜட்ஜாக ஆவார் என்று நினைக்கின்றேன். நீதித்துறையில் மட்டும் அல்ல, கல்வி விஷயத்திலும் காமராசரைப் போல, அவரைவிட ஒருபடி அதிகமாகவே நடந்து கொள்கின்றனர். இதுவரை எஸ்.எஸ்.எல்.சி வரை சம்பளம் இல்லாமல் இருந்தது. இப்போது கல்லூரி வகுப்பு (பி.யு.சி) வரை இலவசமாக்கி இருக்கிறார்கள். நம் மக்களுக்கு இருந்த மற்றும் எத்தனையோ கேடுகள் இந்த ஆட்சி வந்தபின் நீங்கி இருக்கின்றன. இந்தக் கட்சியைப் போல இன உணர்ச்சி யுள்ள, அரசியல் கட்சி வேறு எதுவும் கிடையாது. இந்தக் கட்சியைத் தவிர மற்ற கட்சிக்காரன் அனைவரும் பார்ப்பான் கையைப் பார்ப்ப வனாகத்தான் இருப்பான்; பார்ப்பான் சொல் கிறபடி நடப்பவனாகத் தான் இருப்பான்.

நம் பத்திரிகை என்பவை ஆரம்பிக்கும் போது நம் படங்களைப் போட்டு- கொள்கைகளைப் போட்டு மக்களிடையே பரவும். மக்களிடையே பரவிய பின் பார்ப்பானுக்கு வேண்டியவனாகி அவன் பிரசாரத்தை இவன் செய்ய ஆரம்பித்து விடுகின்றான்.

இன்று நம் பிள்ளைகள் அத்தனையும் படிக்கின்றன. இது மாடு மேய்க்கப் போகாது, உத்தியோகம் வேண்டும் என்று தான் கேட்கும்; நம்முடைய கடமை நம் இனத்தை ஆதரிப்பதே ஆகும். இன உணர்ச்சியோடு நம் இனத்திற்குத் தான் முதலிடம் கொடுக்க வேண்டும். மற்ற ஆட்சியிலில்லாத குறைகளோ, அவற்றில் நடக்காத எந்தக் காரியங்களோ இந்த ஆட்சியில் நடைபெற வில்லையே. நம் மக்களுக்கு இன உணர்ச்சி, அறிவுப் புத்தி இருக்க வேண்டும். இந்த ஆட்சி நம் ஆட்சி என்கின்ற எண்ணம் வேண்டும். இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். பார்ப்பானுக்கு இருக்கிற இன உணர்ச்சி நமக்கு வர வேண்டும். இந்த ஆட்சியில் நாம் பல முன்னேற் றங்களை அடைந்து இருக்கின்றோம். அந்த நன்றி நமக்கு இருக்க வேண்டும்.

நாமடைந்திருக்கின்ற நிலை நிரந்தரமான நிலை யில்லை. முட்டுக்கொடுத்துக் கொண்டே இருக்க வேண் டும்.  கையை விட்டால் கீழே விழுந்துவிடும் நிலையில் இருக்கின்றது. அந்த நிலை மாறி, நிரந்தரமாக நிற்கிற வரை, நாம் இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

இந்தச் சிலை வைப்பது, படம் திறப்பது, ஞாபகச்சின்னம் வைப்பது போன்ற இவை எல்லாம் பிரசார காரியமே தவிர இது பெருமையல்ல; ஒருவன் இது யார் சிலை என்றால் இது பெரியார் சிலை என்று ஒருத்தன் பதில் சொல்வான். பெரியார் என்றால் யார் என்று கேட்பான்? உடனே அவன் பெரியாரைத் தெரியாதா? அவர் தான் கடவுள் இல்லை என்று சொன்னவராவார் என்று சொல்லுவான். இப்படி நம் கருத்தானது பரவிக் கொண்டிருக்கும். அதற்கு ஒரு வாய்ப்புத் தான் இந்தச் சிலையாகும். நான் இன்னும் வெகு நாளைக்கு இருக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். அவர்கள் மாப்பிள்ளை மாதிரி இருக்கிறார்கள், அதனால் தான் சொல்கிறார்கள். வெகு நாளைக்கு இருக்கிற எனக்கு அல்லவா அதன் தொல்லை தெரியும்?

நம் கருத்து மக்களிடையே பரவ வேண்டும்; நம் கொள்கை பரவ வேண்டும் என்பது தான் இது போன்ற விழாக்களின் கருத்தாகும்.

24.5.1969 அன்று தர்மபுரியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.

(விடுதலை, 9.6.1969)