புதன், 25 செப்டம்பர், 2024

கொள்கையின் பேரால் பகுத்தறிவாளர் ஆட்சி’’ சாதித்துக் காட்டினார் அறிஞர் அண்ணா தந்தை பெரியார் பெருமிதம்

 

விடுதலை நாளேடு

தந்தை பெரியார்

பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! இந்த பம்பாய் பெருநகரத்தில் அண்ணா அவர்களது பிறந்த நாள், எனது பிறந்த நாள் என்னும் பெயரால் இவ்வளவு ஆடம்பரமாக ஏற்பாடுகள் செய்து எங்களை வரவேற்றுள்ளீர்கள். அண்ணா அவர்கள் வரும்படியான வாய்ப்பு நமக்கு இல்லை

. என்னை அழைத்து எனக்குப் பெரிய மரியாதை ஆடம்பரம், பாராட்டுரைகள் இவைகளைச் செய்துள்ளீர்கள். உங்கள் அன்புக்கும் ஆர்வத்திற்கும் நான் நன்றி செலுத்துவதுடன், இந்தப் பெருமைகளுக்காக என்னையே நான் பாராட்டிக் கொள்கிறேன்.

வேறு எவரையும்விட அண்ணா அவர்களுக்குப் பிறந்த நாள் விழாக் கொண்டாடுவதில், அவரைப் பாராட்டுவதில் ரொம்ப பொருள் உண்டு.

இந்தியாவிலேயே வேறு யாராலும் சாதிக்க முடியாத காரியத்தை அண்ணா அவர்கள் சாதித்துக்காட்டினார். நமக்குத் தெரிந்த வரையில் வேறு யாரும் அந்த அளவுக்கு சாதிக்கவே இல்லை. என்னைப் பொறுத்தவரை நான் காரியம் அதிகம் சாதித்திருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். அதன் பலன் அந்த அளவுக்கு ஏற்படவில்லையே இனி மேல் தான் ஏற்படவேண்டும் ஏற்படும் என்று ஆசைப் படுகிறேன்.

என் முயற்சி எதுவும் வீண் போகவில்லை. தரவேண்டிய அளவுக்கு பலன் தரவில்லையே தவிர வேறு ஒன்றுமில்லை. எனது அருமைத் தோழர்கள் என்னைப் பின்பற்றி முயற்சிக்கிறார்கள். அவர்கள் அதில் வெற்றியும் அடையக்கூடும் என்று நாம் நம்புகிறோம்.

பகுத்தறிவு ஆட்சி – பிரமாண்டமான சாதனை
அண்ணா அவர்கள் செயற்கரிய காரியம் செய்த வராவார். இந்நாட்டில் நமக்கு சரித்திரம் தெரிய எவன் எவனோ ஆண்டிருக்கிறான். சேர, சோழ, பாண்டியன், நாயக்கர், துலுக்கன், வெள்ளைக்காரன், காங்கிரஸ்காரன் வேறு எவன் எவனோ ஆண்டிருக்கிறான் என்றாலும் அண்ணா அவர்கள் சாதித்த காரியம்போல வேறு எவ ருமே சாதித்ததில்லை, இந்தியாவை ஆண்ட எவரும் இது மாதிரி செய்ததில்லை.
ஒரு பகுத்தறிவு அரசாங்கத்தை கடவுள் வேண்டாம், மதம் வேண்டாம், ஜாதி வேண்டாம், சாஸ்திரம் வேண்டாம் என்ற ஒரு கொள்கையுடைய ஒரு பகுத்தறிவு அரசாங் கத்தை அண்ணா அவர்கள் தோற்றுவித்தார் என்றால் அது சாமானிய காரியமல்ல பிரம்மாண்டமான சாதனை யாகும்.நம் மக்களுக்கு இது சரியாகப் புரிகிறதோ இல்லையோ, எதிரிகளுக்கு இது தெளிவாகப் புரியும். அண்ணா செய்த காரியம் இதற்கு முன்னால் ஆண்ட வர்கள் பலரும் செய்ததற்கு மாறான காரியத்தை அல்லவா அண்ணா செய்தார்கள்!
மூவேந்தர்களும் பார்ப்பனர்களும்
சேர, சோழன், பாண்டியன் வெங்காயம் எல்லாம் என்ன செய்தார்கள்? அதற்குப் பிறகு வெள்ளைக்காரர்கள் தான் ஆண்டார்களே அவர்களால் பெரும் மாற்றத்தைச் செய்ய முடிந்ததா என்றால் இல்லையே! அண்ணா நேற்று செய்ததற்கு மாறாகத்தானே அவர்கள் செய்தார்கள்! மக்களிடையே மூடநம்பிக்கைகளைப் புகுத்தி அந்தக் காரியங்களைப் பாதுகாப்பதுதான் அரசியல் ஆட்சியின் லட்சியம் என்று அல்லவா அவர்கள் காலத்தில் கருதப் பட்டது! மூவேந்தர்கள் செய்தது என்ன? கோவில்களைக் கட்டினார்கள். கடவுள்களை உற்பத்தி செய்தார்கள் பார்ப்பானுக்கு அரசர்கள் தன் மனைவிகளை விட்டுக் கொடுத்தாகிலும் புண்ணியம் சம்பாதிக்க வேண்டும் என்று நடந்து கொண்டார்கள். பார்ப்பன நலத்தைத்தான் கொள்கையாக கொண்டு இருந்தனர்.

என்னால்கூட பேசவே முடிந்தது
அண்ணா ஆட்சி வருகிற வரைக்கும் முன்புள்ள ஆட்சிகள் மதத்தை சாஸ்திரத்தைப் பாதுகாக்கவும் மக்களது மூடநம்பிக்கைகளைப் பத்திரமாகப் பாதுகாப் பதையும்தான் தமது தொழிலாகக் கொண்டிருந்தன. மனித சமூகத்தைச் சின்னாபின்னப் படுத்தி அமைப்பு ஜாதி, மூடநம்பிக்கை இவற்றை, அழிக்கவோ, போக்கவோ அவைகள் முன் வரவில்லையே! இந்த நிலையில் இருந்த ஆட்சியை திருப்பி துணிந்து பகுத்தறிவுக் கொள்கையை புகுத்திய ஆட்சியை அண்ணா அவர்கள் உண்டாக்கினார். என்னைப் போன்ற வர்கள் கூட வாயினால்தான் பேச முடிந்தது. புத்தரின் காலத்தில்கூட இப்படி ஒரு ஆட்சியை அவரால் உண்டாக்க முடியவில்லையே. அண்ணா ஒருவர்தான் இதைச் சாதித்தார். கடவுள், மதம், ஜாதி, இவைகளை ஒழித்து அந்தக் கொள்கையின் பேரால் ஒரு ஆட்சியை – பகுத்தறிவாளர் ஆட்சியை உண்டாக்கினார்.

தி.மு.க. என்றால் என்ன? திராவிடர் கழகத்துக் கொள்கைகளை உடைய கட்சி; ஆனால் அதைவிட சற்று வேகமாக தீவிரமாகச் செல்லும் கட்சி என்பதுதானே பொருள்?

தி.க. என்றால் சுயமரியாதை இயக்கம், சுயமரியாதை இயக்கத்தினை நாங்கள் தோற்றுவித்துப் பிரச்சாரங்களும் செய்தோம். கடவுள் ஒழிய வேண்டும்; மதம் ஒழிய வேண்டும்; காங்கிரஸ் ஒழியவேண்டும்; பார்ப்பான் ஒழிய வேண்டும், காந்தி ஒழிய வேண்டும் என்பது தானே அதன் கொள்கைகள். அதே கொள்கை அடிப்படையில் காங்கிரசை ஒழித்து, கடவுள் இல்லாமல் மதம் இல்லாமல், பார்ப்பான் இல் லாமல், ஒரு ஆட்சியை அண்ணா உண் டாக்கி காட்டி விட்டாரே! அண்ணா அவர்கள் மத்தி யில் காலமானார் என்றாலும் இன்னமும் அந்தக் கொள் கையைக் கொண்ட ஆட்சி தானே நிலையாக இருந்து அதற்கான காரியத்தை செய் கிறது? பச்சையாகவே அண்ணா சொன்னாரே, எனக்கு இந்த அமைச்சரவையையே காணிக்கை ஆக்குகிறேன் என்று அதற்குப் பொருள் என்ன?

ஆணும் பெண்ணும் சேர்ந்தால் தீர்ந்தது

கடவுள் பெயரால் பிரமாணம் எடுக்கவில்லை – அதற்கு கடவுள் நம்பிக்கை அற்ற ஆட்சி என்பது தானே! ஆட்சியில் கடவுள் மதத்திற்கு வேலையில்லை என் பதைத்தானே அது காட்டுகிறது. சுயமரியாதைத் திரும ணங்களை செல்லும்படியாக்கும் சட்டம் கொண்டு வந்தார். இது எதைக்காட்டுகிறது கடவுளுக்கோ, மதத்துக்கோ, மதத்தினர் சம்பிரதாயத்துக்கோ சாஸ்திரங்களுக்கோ வேலையில்லை ஒரு ஆணும் பெண்ணும் பார்த்து நாங்கள் இருவரும் சிநேகிதர்கள் என்றால் தீர்ந்தது. அவ்வளவுதானே இதன் தத்துவம் என்ன? கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரம், பார்ப்பான் எதுவும் வேண்டாம் என்று ஆக்கப்பட்டு விட்டது என்பதுதானே!

கல்கத்தாவைச் சார்ந்த ஒரு வங்காளக் கம்யூனிஸ்டு எம்.பி. கேட்கிறார் எங்களால் முடியவில்லை. இவ்வளவு புரட்சி பேசும் என் வீட்டில் அதைச் செய்ய முடியவில்லை. உங்களால் இவ்வளவு சல்லீசாக எப்படிச் செய்ய முடிகிறது என்று?

இம்மாதிரி இந்தியாவில் உள்ள பலரும் ஆச்சரியப் படும்படி அல்லவா அண்ணா அவர்கள் காரியங்களைச் சாதித்துக் காட்டியிருக்கிறார்! அண்ணா ஜெயித்தவுடன் நான் இது பார்ப்பான் ஆட்சியாகத்தான் இருக்கும் முன்னேற்றக் கழக ஆட்சியாக இருக்காது. பார்ப்பான் காலடியில் உள்ள ஆட்சியாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன், எழுதினேன்.

பெருங்காயம் இருந்த காலிடப்பா
இவர்கள் ஆட்சிக்கு வருவதற்காக பார்ப்பனரும் வெகு பாடுபட்டார்கள். பார்ப்பனத் தலைவர் ராஜாஜி அவர்களும் அதற்கு ரொம்ப பாடுபட்டார். தி.மு.க. ராமசாமியிடம் இருந்த கட்சி என்றாலும், பெருங்காயம் இருந்த டப்பா, ஆனால் இப்போது காலி டப்பா, நான் வழித்து எறிந்து விட்டேன் என்று கூறினார். அண்ணா இவற்றை ஏதும் மறுக்கவே இல்லை. இந்த இரண்டையும் பார்த்த நான் இதற்காகவே எதிர்த்தேன்.

அண்ணா வெற்றி பெற்றவுடன் என்னை வந்து பார்த்தார். எனக்கு யோசனை சொல்ல வேண்டும் என்றார்.

நானும் ஆகட்டும் என்றேன். பார்ப்பனரும் ராஜாஜியும் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை சபாநாயகர் தேர்தல் முதற்கொண்டே காட்ட ஆரம் பித்தனர்.

செருப்பாலடிக்கும் பிற ஆட்சிகள்
ஆனாலும் அண்ணா அவர்கள் அவரது கொள் கைகளை அமல்படுத்தும் ஆட்சியாகவே தி.மு.க. ஆட்சியை நடத்த ஆரம்பித்தார். அதன் காரணமாக மக்கள் ஆதரவும் அதற்குப் பெருக ஆரம்பித்ததுடன், இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சிறப்பான ஆட்சி என்று பலரும் அதிசயப்பட்டு பாராட்டத்தக்க ஆட்சியாக அது இன்று வளர்ந்திருக்கிறது. மற்ற ஆட்சிகளைப் பார்க்கிறோமே மரியாதை கெட்டு, மானம் கெட்டு, ஒருவரை ஒருவர் செருப்பால் அடித்துக் கொள்வது கட்சிவிட்டு கட்சிமாறுவது, கொலை, கொள்ளை சர்வசாதாரணம் என்றும் தானே ஆட்சிகள் எல்லாம் நடைபெறுகிறது?

மற்ற ஆட்சிகளை ஒப்பிட்டுப் பார்த்தால் தி.மு.க. ஆட்சி எவ்வளவு சிறப்பானது என்பது எவருக்கும் சுலபமாக விளங்கும்.

என் கஷ்டம் எனக்கல்லவா தெரியும்
மற்றபடி என்னை நீண்ட நாள் வாழவேண்டும் என்று பலர் கூறினீர்கள். சொல்லுகிறபடி நடக்கும் சக்தி அதற்கு இருக்குமானால் இன்னும் அதிக நாள் சொல்லலாமே! வாழும் எனக்குத்தானே அதிலுள்ள கஷ்டம் என்ன வென்று தெரியும். நான் படுகிறபாடு எனக்குத் தானே தெரியும்?

மற்றொரு செருப்பு எங்கே?

என்னுடைய கடமை தொண்டு கொள்கைகளை இறுதிவரை பரப்பி மக்களுக்குப் பயன்படும் வகையில் பாடுபடவேண்டும் என்பதுதான் எனது ஆசையாகும். மற்றவனெல்லாம் சொல்ல பயப்படுகிறானே என்பது தான் எனது கவலை. நாம் சொல்லும் அருமையான கருத் துக்களைக் கேட்டு ஜீரணிக்கும் அளவுக்காவது மக்கள் பக்குவப்பட்டிருக்கிறார்கள் என்பது தான் எனக்குள்ள திருப்தி. அதற்குமுன் எவ்வளவு கடுமையான எதிர்ப்பு நண்பர் வீரமணி அவர்களது ஊரான கடலூரில் சுமார் 25 ஆண்டு களுக்கு முன் என்மீது செருப்பை வீசினார்கள். ஏன் ஒரு செருப்பை மட்டும் வீசுகிறாய் மற்றொன்றும் எங்கே? என்றவுடன் அதையும் வீசினார். எடுத்து என் பெட்டிக்குள் பத்திரமாக வைத்துக் கொண்டேன். பல ஊர்களில் அழுகிய முட்டை, முட்டை கூட்டுக்குள் மலத்தை நிரப்பி வீசியிருக்கிறார்கள். இப்படி பல மாதிரி எதிர்ப்பு, சங்கடங்கள். இவைகளையெல்லாம் தாண்டித் தானே இந்த அளவுக்கு எங்கள் நாடு பக்குவப்பட்டிருக்கிறது.

குட்டிச்சுவர்கூட கோயிலாகி இருக்கும்
கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளை உண்டாக்கியவன் முட்டாள், கடவுளை பரப்பினவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று இப்போது இம்மாதிரி அட்டை களை அச்சிட்டு சிலைகள் அடியில் வைப்பதும் கல் வெட்டுகளை பதிப்பிப்பதுமான அளவுக்கு மக்கள் அங்கு தெளிவுபெற்று சிந்திக்கும் பக்குவத்தைப் பெற்றுள் ளார்கள். மக்கள் இந்த அளவுக்கு பக்குவம் பெற்றிருக்கிறார்களே என்ற திருப்திதான் எனக்கு. இப்படி நாங்கள் பிரச்சாரம் செய்திராவிட்டால் தி.மு.க. ஆட்சி வந்திருக்காவிட்டால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குட்டிச்சுவரையும் ரிப்பேர் செய்து கோயில் ஆக்கியிருப்பார்கள். வயதானவர்கள் கிழடுகள் எப் படியோ தொலையட்டும் இளைஞர்கள் இது குறித்து துணிச்சலாகச் சிந்தித்து மாறவேண்டும். இன்று இளை ஞர்கள் நன்றாக இக்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் நிலையைப் பார்க்கிறோமே!

நான் கடவுளானால்…
கடவுள் இல்லை. கடவுளை கற்பித்தவன் முட்டாள், பரப்பினவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டு மிராண்டி என்றெல்லாம் நாங்கள் பிரச்சாரம் செய்தோம் என்றால் அதற்கு காரணம் என்ன என்பதை நீங்கள் நன்கு சிந்திக்க வேண்டும். எங்களுக்கு அதன் மீது இருக்கிற கோபமா? அல்லது கடவுளுக்குப் பதிலாக கடவுளுடைய இடத்தைப் பிடித்து நாங்கள் கடவுள் ஆக வேண்டும் என்கின்ற ஆசையா?
நான் கடவுள் ஆனேன் ஆனால் என்ன நடக்கும்? என்னால் இப்படி இருக்க முடியுமா? பார்ப்பான் நினைத்த போது பூட்டுவான் நினைத்தபோது திறப்பான், அவன் என்னை வணங்கினாலும் நான் பார்த்துக்கொண்டே தானே இருக்கவேண்டும். அவன் எதைச் செய்தாலும் நான் பார்த்துக் கொண்டுதானே இருக்கவேண்டும். அது என்ன பெருமைக்குரிய பதவியா? பொம்பளை சாமியை ஆம்பிளை அர்ச்சகர் கழுவி குளிப்பாட்டுகிறதை பார்த்து கிட்டு இருக்கிற மாதிரி நானும் பார்த்துக் கொண்டுதானே இருக்க வேண்டும்? கடவுளைக் கண்டுபிடித்து அப்படி ஒன்றை பரப்பின தற்கே காரணம் மக்களை மடையவர்களாக்குவதற்குத் தானே?

சந்திரமண்டல சாதனை எதனால்?

மனிதன்தான் எல்லா ஜீவராசிகளைவிட மேலான பகுத்தறிவு படைத்தவன் மற்ற ஜீவராசிகளுக்கு மாறுதல் கிடையாது. பழக்க வழக்கங்களில் வளர்ச்சி கிடையாது. மற்ற ஜீவன்களுக்குப் பிறக்கும் என்ன அறிவோ அதே அறிவுதான் அவை இறக்கும்போதும் கூட. மனிதன் ஒருவன் தான் சிந்தித்து வளரக்கூடியவன். மனிதனின் தனித்தன்மையே இதில்தான் இருக்கிறது. அதிசயம் அற்புதம் ஆகியவைகளை கண்டுபிடிக்கும் வாய்ப் புள்ளவன் மனிதன் தான்.

சந்திர மண்டலத்துக்குப் போய் திரும்பி வந்து விட்டானே! இங்கிருந்து ஏறத்தாழ 4 லட்சத்து அறுபதாயிரம் மைல் போக வர உள்ள தூரத்தை மணிக்குப் பல்லாயிரம் மைல் வேகத்தில் பறந்து சென்று இறங்கி, அப்பாலோவில் திரும்பிவிட்டது மட்டுமல்ல, அங்குள்ள கல்லையும் மண்ணையும் எடுத்துக் கொண்டு வந்து நமக்குக் காட்டுகிறானே? மனுஷன் பிறந்து எத்தனையோ நாளாகியும் இன்று எப்படி அவனால் அதைச் சாதிக்க முடிந்தது? பகுத்தறிவும் சுயசிந்தனையும்தானே!

எல்லாம் கடவுள் செயல் என்றும், பகவான் செயல் என்றும் சொல்பவன் எந்த வேலையைக் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு இவன் சும்மா இருக்கிறான்? கடவுள் இல்லாமல் ஒரு மயிர் கூட அசையாது என்று கூறுபவன் இவன் தானே சீப்பை எடுத்து தலையை வாரிக் கொள் கிறான்? இப்படியே நாம் நம்பி நம்பி அசல் காட்டுமிராண் டிகளானோமே தவிர கண்ட பலன்தான் என்ன? நாம் அனுபவிக்கிற அத்தனை விஞ்ஞான வசதிகளும் கண்டுபிடித்தது யார்? நம்ம கடவுளுக்கும் ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் வெங்காயங்களுக்கும் என்ன சம்பந்தம்? சாஸ்திரம் வேதம் புராணம் இவற்றால் ஏதாவது முடிந்ததா?
கெட்டகாரியம் எல்லாம் அவன் செயல்தானே!

கடவுளை நம்புவது என்பது இன்று அவரவர்களுக்கு ஒரு பழக்கம் போல இருக்கிறதே தவிர நம்பிக்கை என்பது ஒரு சடங்கு என்று ஆகிவிட்டதே தவிர வேறு என்ன? உண்மையாகவே கடவுளை நம்புபவர்கள் யாராவது இருந்தால் இங்கு என் முன்னால் வரட்டுமே! சும்மா முட்டாள் தனமாக கடவுள் இல்லாமல் நீ எப்படி என்று சிலர் கேட்பார்களே தவிர அறிவுக்கு வாதத்திற்கு அது நிற்குமா? நிற்காதே! எல்லாம் அவன் செயல் என்றால் நாட்டில் நடக்கும் அவ்வளவு கெட்ட காரியம் விபத்து திருட்டு புரட்டு நாசம் கொலை கொள்ளைக்கு கடவுள்தானே காரணம். இதை எவராவது மறுக்க முடியுமா? எல்லாம் அவன் செயல் என்பவனைப் பார்த்து கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தால் அவன் என்ன செய்வான்? நம்மை அல்லவா திருப்பி அடிக்க வருவான்? நாம் உடனே அவன் செயல் அப்பா என்று சொன்னால் உடனே சரி பகவான் செயல் என்று எவனாவது தன்னைச் சமாதானப்படுத்திக் கொள்ளுவானா?

சும்மா நினைத்தால் மட்டும் போதாது
இன்னமும் சூத்திரன் என்றால் பார்ப்பனனின் வைப்பாட்டி மகன் தாசிபுத்திரன் என்று சாஸ்திரத்தில் இந்து மத சட்டத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது! எத்தனை நாளாக இந்தக் கொடுமை இருக்கிறது. இது பற்றி மான உணர்வோடு எவனும் கவலைப்படுவது இல்லையே! இதை சகித்துக் கொண்டுதானே நாம் இருக்கிறோம்.

நமக்கெல்லாம் மானம் முக்கியமல்லவா? இப்படி ஓர் உணர்ச்சி வந்து நாம் ஏன் கீழ் ஜாதி, பிறவி இழிவு எதற்கு நமக்கு என்றெல்லாம் கேட்டால் உடனே அடுத்த ஜென்மத்தில் ஆண்டவன் மாற்றுவார், போன ஜென் மத்தில் புண்ணியம் செய்தான் அவன் பிராமணனாய்ப் பிறந்தான். நீ போன ஜென்மத்தில் பாவம் செய்தாய். பறையனாய் சூத்திரனாய் பிறந்தாய் என்கிறான், இது என் செயல் அல்ல கடவுள் செயல் பகவான் செய்தது என் கிறான் – ஆதாரத்திற்கு மதத்தை சாஸ்திரத்தைக் காட்டுகிறான்.

கடவுள் – மறுபிறப்பு – போன ஜென்மம் – பாவம் – புண்ணியம் – இதை நம்புகிறவரை நமக்குள்ள இழிவு மாறுமோ? மாற வழி உண்டா? இழிவு இருக்கிறது என்று சும்மா நினைத்தால் போதுமா; அதற்குப் பின் பரிகாரத்தை தேடினால்தானே அந்த இழிவைப் போக்க முடியும்? கடவுள், கடவுள் செயல் என்று நினைத்துக் கொண்டே மூளையெல்லாம் அது நிறைந்துபோய் இருந்தால் நம் ஜாதி இழிவு – பிறவி பேதம் ஒழிய முடியுமோ? அதை ரத்தத்திலே கலந்து அல்லவா அவன் நம்மை கீழ் ஜாதி ஆக்கியிருக்கிறான்?
நான் தோன்றித்தானே கடவுளைப் பழிக்க மதத்தை ஒழிக்க சாஸ்திரம் புராணக் குப்பைகளை யெல்லாம் புரட்டு என்று காட்டியபிறகு அல்லவா இன்று பல பேர் இதனை ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளனர்.

இவ்வளவு பெரிய கூட்டத்தில் நெற்றியில் சாம்பலும் நாமமும் அடித்த முட்டாள்கள் 10 பேர்கள் கூட உங்களில் இல்லையே. இது எதைக் காட்டுகிறது? எங்கள் பிரச்சாரம் வீண் போகவில்லை. தகுந்த பலனை அளித்துக் கொண்டி ருக்கிறது என்பதைத்தானே!

நமது பிரசாரத்தின் வலிமையைக் கண்டு எங்கள் நாட்டில் பார்ப்பானும் அவனுக்கு வால் பிடிக்கும் சிலரும் வைதீகரும் எதிர்ப்பிரச்சாரம் செய்தார்கள், செய்கிறார்கள். அவ்வளவு நெருக்கடி தங்களுக்கு வந்து விட்டதாகக் கருதுகிறார்கள். ஓட்டு வாங்கி வயிறு வளர்க்கும் நிலையில் இல்லாததால் நாங்கள் துணிந்து சொல்ல முடிகிறது! 

(1.11.1970 முதல் 5.11.1970 வரை பம்பாயில் பல்வேறு இடங் களில் நடைபெற்ற தந்தை பெரியார் – அண்ணா பிறந்த நாள் விழாக்களில் கலந்து கொண்டு, பேரறிஞர் அண்ணா படத்தைத் திறந்து வைத்து தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரைகளின் தொகுப்பு)

– விடுதலை, 12.11.1970, 13.11.1970

 

ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

அதிக பலமுடையது ஜாதியே!

 விடுதலை நாளேடு

மாற்றக் கூடியது மதம் மாற்ற முடியாதது ஜாதி

தந்தை பெரியார்

 

நமது நாட்டில் ஒரு மனிதனுக்கு எப்படிப் பிறவியின் காரணமாகவே, ஜாதி கற்பிக்கப்பட்டு, அந்த ஜாதியின் பேரால் அவன் அழைக்கவும்பட்டு அந்த மனிதனும் அதை ஒப்புக் கொண்டு தன்னை இன்ன ஜாதியான் என்று எண்ணிக் கொள்கின்றானோ அதுபோலவே மதமும் ஒரு மனிதனுக்குப் பிறவி காரணமாகவே கற்பிக்கப்பட்டு அவனும் அந்த மதத்தின் பேரால் அழைக்கப்பட்டு தானும் அதை ஒப்புக் கொண்டு தன்னை இன்ன மதத்தான் என்றே எண்ணிக் கொண்டு வருகின்றான். ஆனால், ஜாதியானது பிறவியின் காரணமாக ஏற்படு கின்றதென்று, ஜாதியைக் கற்பிக்கும் சாஸ்திரங்கள் என்பவைகளால் சொல்லப்பட்டு வருவதால், பிறவியின் காரணமாக ஜாதி நிர்ணயிக்கிறவர்களுக்கு மேல்கண்ட ஆதாரங்களைச் சொல்லிக் கொள்ள இடமுண்டு. ஆனால் மதமானது. பிறவி யின் காரணமாக ஏற்படுவதாக இன்றுவரை எந்த மதமும், அது சம்பந்தப்பட்ட சாஸ்திரமும் சொல்லவே இல்லை! மதம் என்பது கொள்கை என்றும், அந்தக் கொள் கையானது எந்த மனிதனாலும், எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளவும், தள்ளவும், உரிமையுடையது என்றுமே தான் சொல்லப்பட்டு வருவதுடன், அந்தப்படியே அநேக மனிதர்கள் அடிக்கடி மதம் மாறிக் கொண்டும் வருகின்றார்கள்.

மதம் மாறலாம்
அதாவது இந்துக்கள் என்பவர்கள் கிறிஸ்தவர்களாகவோ, மகமதியர்களாகவோ, பவுத்தர்களாகவோ, பிரம்ம சமா ஜிகளாகவோ, நாஸ்திகராகவோ மாறுவதும், ஒரு கிறிஸ்தவர் மகமதியராகவோ, இந்துவாகவோ, பவுத்தராகவோ, நாஸ்திக ராகவோ மாறுவதும், ஒரு மகமதியர் கிறிஸ்தவராகவோ, இந்துவாகவோ, புத்தராகவோ, நாஸ்திகராகவோ மாறுவதும், ஒரு பவுத்தர் இந்துவாகவோ, மகமதியராகவோ, கிறிஸ்தவ ராகவோ, நாஸ்திகராகவோ மாறுவதும் ஒரு நாஸ்திகர் இந்துவாகவோ, மகமதியராகவோ, கிறிஸ்துவராகவோ, பவுத்தராகவோ மாறுவதும் இவர்கள் அடிக்கடி உள்பிரிவு மதக்காரர்களாக அதாவது சைவன் வைணவனாகவும், வேளாளன் சைவனாகவும், சைவன் சமணனாகவும், சமணன் சைவனாகவும், மற்றும் இதுபோலவே அடிக்கடி மாறுவதும், சர்வ சாதாரணமாய் பார்த்து வருகின்றோம். இந்த முறையில்தான் இன்றைய தினம், உலகத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டதான, பவுத்தமதத்தில் 55 கோடி மக்களும், 2000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கிறிஸ்தவ மதத்திற்கு 50 கோடி மக்களும், 1300 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மகமதிய மதத்திற்கு 23 கோடி மக்களும் காலமே குறிப்பிட முடியாததான அவ்வளவு பழைய இந்து மதத்திற்கு 20 கோடி மக்களும், பவுத்த, கிறிஸ்தவ, மகமதிய ஆகிய மதங்களுக்கு முன்னால் இருந்து வந்த யூத மதத்திற்கு ஒரே ஒரு கோடி மக்களும், மதம் குறிப்பிட இயலாத மக்கள் 17 கோடியுமாக இருந்து வருகின்றார்கள்.

இவர்கள் இந்தப்படி எப்படி உண்டாயிருக்க முடியும்? அநேகமாக இவ்வளவு ஜனங்களும் ஏதோ ஒரு மதத்திலிருந்தோ, அல்லது மதமே இல்லாதவர்களிடமிருந்தோ தான் புதிதாக ஏற்பட்ட மதப்பிரச்சாரங்களின் மூலமாக, அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இன்றைய தினம் இருக்கவேண்டும். இந்தக் கொள்கைப்படி பார்த்தாலே, மக்களுக்கு மதம் பிறவியின் காரணம் அல்ல வென்றும், அவரவர்கள் மனப்பான்மையும், மற்றவர்கள் பிரச்சாரமும் காரணமென்றும் விளங்கும். அன்றியும் இந்தக் கொள்கைப் படியே இனியும் உலகத்தில் எத்தனை மதம் வேண்டுமானாலும் உற்பத்தியாகலாம் என்பதும் அவைகளுக்கெல்லாம் இப்போதிருக்கும் மக் களே தான் பெரும்பகுதியும் போய் அப் புதுமதங் களில், சேர்ந்தாக வேண்டுமென்பதும் நன்றாய் விளங்கும். எனவே, மதத்தையும் ஜாதியையும் இரண்டையும் பார்க்கும்போது மதத்தைவிட ஜாதியே அதிக பலமுடையதாகும். ஏனெனில் ஜாதி பிறவியில் உண்டாவது, அது மாற்ற முடியாதது என்று சொல்லப்படுவது; ஆனால் மதமோ கொள்கையின் மூலம் ஏற்படுவது; அது மன உணர்ச்சிக்கும்; அறிவு உணர்ச்சிக்கும் தக்கபடி அடிக்கடி மாற்றிக் கொள்ள உரிமை உடையது என்பதாகும்.

பகுத்தறிவுக்கு ஒப்புகின்றதா?
ஆகவே, பிறவியினால் ஏற்படுகின்றது என்று சொல்லும் படியான ஜாதியை அடியோடு அழித்து, எல்லா மக்களையும் ஒன்று சேர்த்து, ஒற்றுமையையும் சகோதரத் தன்மையையும் உண்டாக்கவேண்டுமென்பதாகக் கூறப்படும் மக்களின் முயற்சியை ஒப்புக் கொண்டு ஆதரவளிக்கச் சம்மதிப்பதாகச் சொல்லும் மக்கள் கேவலம் கொள்கையாலும், அறிவு உணர்ச்சியாலும் இருக்கும் மதத்தை அழித்து, மக்களை ஒன்று சேர்க்க முயற்சிப்பதில் என்ன ஆட்சேபனை இருக்கக் கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை. மனிதன் அறிவு வளர்ச்சியின் மூலமும், ஆராய்ச்சித் தெளிவின் மூலமும், அசவுகரியத்தின் மூலமும், சுயநலத்தின் மூலமும் அடிக்கடி மாற்றிக் கொள்ள சுதந்திரம் இருக்கும் மதத்தைப் பற்றிப் பிடிவாதம் காட்டுவதற்கு யாருக்கு உரிமை உண்டு என்பதும் நமக்கு விளங்கவில்லை.

அநேகமாக மதங்களை இன்றைய தினம் வலியுறுத்துபவர்களில் அநேகர் தங்கள் மதத்திற்குச் சொல்லும் ஆதாரங்கள் எல்லாம், மதத்தை உண்டாக்கின மதத் தலைவர் பெரியார் என்றும், அவர்கள் அநேக அற்புதங்கள் செய்த பெரியார்கள் என்றும், தங்கள் தங்கள் மதம் இன்ன இன்ன பரீட்சைக்கு நின்று வெற்றிபெற்றது என்றும் சொல்வதின் மூலம் அவைகளைப் பெருமைப் படுத்திப் பேசுகின்றார்களே அன்றி, அவைகளில் ஏதாவது ஒன்று இன்றைய தினம் நடைபெற முடியுமா? என்பதைப் பற்றி கேட்போமானால் கோபித்துக் கொள்ளுகின்றார்களே ஒழிய வேறு சமாதானம் கிடையாது. அதுதான் போகட்டும் என்றாலோ, அம்மதக் கொள்கைகளைப் பற்றியும் அதே மாதிரி மதத்திற்கான கொள்கைகள் என்று சொல்லப்படுவதல்லாமல் கொள்கைகளுக்காக மதமென்றோ, சவுகரியத்திற்காகக் கொள்கைகள் என்றோ, பகுத்தறிவுக்கு ஒப்புகின்றதா? என்றோ ஒரு காலமும் சொல்ல முடியாதவை களாகவே இருக்கின்றது.

அளவிட முடியாத செலவுகள்
இந்த நிலையில் மதத்திற்காகக் கொலைகளும், கொள் ளைகளும், யுத்தங்களும், உயிர்விடத் தக்க வீரங்களும், நாட்டில் மலிந்து கிடக்கின்றன. அதுதான் போகட்டுமென் றாலோ மதத்திற்காகச் செலவாகும் பணங்களும், நேரங் களும், அறிவுகளும், ஊக்கங்களும், கணக்குக் கடங்காதவை யாகவே இருக்கின்றன.
இந்துமதம் என்பதைப் பொறுத்தவரை ஏற்படும் செலவுகள் சகிக்க முடியாததா யிருப்பதோடு அதனால் நாட்டிற்கு ஏற்படும் தொல்லைகள் அளவிடமுடியாததாய் இருக்கின்றன. மற்ற மதக்காரர்கள் எல்லாம் மதத்தின் பேரால் பணங்களை வசூல் செய்து, மதத்தில் உள்ள மக்களுக்கு ஒற்றுமை, கல்வி, தொழில், ஒழுக்கம், ஆகியவைகளை உண்டாக்குவதற்கும், மேற்கொண்டு அந்நிய மதத்தில் இருக்கும் மக்களை தங்கள் மதத்தில் சேர்ப்பதற்கும் உபயோகப் படுத்துகின்றார்கள். ஆனால் இந்து மதக்காரர்கள் என்பவர் களோ, மற்ற மதக்காரர்கள் எல்லாரையும் விட அதிகமானப் பணம் சம்பாதித்து ஒற்றுமையில்லாமலும், கல்வியில்லா மலும், தொழில் இல்லாமலும், ஒழுக்கமில்லாமலும் செய்து வந்திருப்பதுடன், அந்நிய மதத்தில் போய்ச் சேரவும் தாராளமாய் நிர்ப்பந்தமும் இடமும் தந்துவந்திருக்கின்றார்கள்.

உதாரணமாக இன்றைக்கு 50 ஆண்டு ஜனகணிதப்படி இந்துக்கள் 50 ஆண்டுக்கு முன்னுள்ள ஜனத் தொகைப்படி 100க்கு 10 பேர்கள் வீதம் ஜனத் தொகையில் குறைந்திருக் கிறார்கள். மற்ற மதக்காரர்களோ நூற்றுக்கு 25 முதல் 40 வரை உயர்ந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் யாரென்று பார்த்தால், தெய்வீகத் தன்மை பொருந்தியதும், ஆத்மார்த்தம் நிரம்பியதும், தெய்வத்தன்மை பொருந்திய ரிஷிகளாலும், முனிவர்களாலும், ஆச்சாரியர்களாலும், சமயக் குரவர்களா லும், அவதாரப் புருஷர்களாலும், கடவுள் அவதாரங்களாலும் உண்டாக்கப்பட்ட ஒப்புயர்வற்ற சனாதன வேத இந்து மதத்திலிருந்து, இதர மக்களால் இழைக்கப்பட்ட தங்களுடைய கொடுமைகளிலிருந்து தப்புவிப்பதற்காக என்றே ஓடிப்போனவர் களாவார்கள்.

எந்தமத ஆச்சாரியனும், மதபக்தனும், இது விஷயத்தைப் பற்றி கிஞ்சிற்றாவது ஆலோசித்து கடுகளவு கண்ணீராவது கொட்டினான் இல்லை. இப்படிப்பட்ட தானாகவே தேய்ந்து போய்க் கொண்டிருக்கும் மதத்திற்காக ஏற்படும் செலவுகளும், மெனக்கேட்டையும், அறிவுத் தடையையும் நீக்கவோ, கடுகளவாவது குறைக்கவோ எவனும் வெளி வந்தவனுமல்ல. ஆனால், இப்படிப்பட்ட, இந்து மதத்திலிருந்து இப்படிப்பட்ட இந்துக்களின் கல்நெஞ்சம் படைத்த ஒழுக்க ஈனங்களிலிருந்து விலகிக் கொள்ளக் கருதி, சென்ற காலத்தில் சிலர் மகமதியர் களாகி விட்டதாலும், கிறிஸ்தவர்களாகிவிட்டதாலும் அவற்றை நாம் பாராட்டியதாலும் சில நண்பர்களுக்கு மிக்க மனத்தாங்கல் ஏற்பட்டு நம் மீது காய்ந்து விழுந்து சுமார் 15 கடிதங்கள் வரையில் எழுதியிருக்கின்றார்கள்.

அவைகள் மலேயா நாட்டிலிருந்தும், பர்மா தேசத்திலிருந்தும், கொழும்புச் சீமையிலிருந்தும், இந்திய உள்நாட்டிலிருந்தும் வந்தவைகளாகும். அப்படி எழுதியிருப்பவர்களில் அநேகம் பேர் நீர்தான் மதம் வேண்டியதில்லை என்று பேசவும் எழுதவும் செய்கின்றீரே! அப்படியிருக்க மகமதிய மதத்தை ஏன் ஆதரிக்கிறீர்! அதில் போய்ச் சேர்ந்தவர்களை ஏன் பாராட்டுகிறீர்? என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால் இப்படி எழுதியவர்கள் எல்லாரும் மதமே வேண்டாம் என்கின்ற கொள்கையை ஒப்புக் கொண்டு, நமக்குப் புத்திமதி கூறினவர்களா? அல்லது இந்து மதத்தை விட்டு மக்கள் வேறு மதத்திற்குப் போகின்றார்களே? என்கின்ற மதப்பித்துக் கொண்டு எழுதினார்களா? என்று பார்ப்போமேயானால் ஏறக்குறைய அதிகம் பேர் மதப் பித்துக் கொண்டு இந்துமதம் போய்விடுமே என்றோ அல்லது மகமதிய மதம் மாத்திரம் என்ன உயர்ந்த மதம் என்றோ, கருதித்தான் எழுதியிருக்க வேண்டும் என்பதாகவே நினைக்கின்றோம்.

சூரியனைக் கண்ட இருட்டு மறைவதைப் போல்…
அவர்களுக்கு ஒரு பதில் சொல்ல விரும்பு கின்றோம். அதாவது இந்து மதத்தைவிட மகமதிய மதம் மேலானது! ஏனென்றால் அதில் ஒற்றுமை, சமத்துவம், விக்கிரக ஆராதனை மறுப்பு ஆகிய வைகள் இருக்கின்றது. அந்த மதம் இன்று துருக்கி, ஆப்கானிஸ்தானம், எகிப்து முதலிய நாடுகளில் ஆட்சி செய்துகொண்டு வருகின்றது. துணிகர மான சீர்திருத்தத்திற்கு முனைந்து நின்று வெற்றி கொண்டு வருகின்றது. இவைகளை எல்லாம் ஒரு புறம் ஒதுக்கித் தள்ளுவ தானாலும், இந்துவாக இருக்கும் காரணத்தால் தீண்டப்படாதவராகவும், காணப்படாதவராகவும், தெருவில் நடக்கப்படாதவ ராகவும் கடவுள் சன்னி தானத்தில் நிற்கப் படாத வராகவும் இருக்கின்ற ஆறறிவு படைத்த ஆண்டவனுடைய தூய திருக்கோயிலாக உடைய சரீரத்தைத் தாங்கி நிற்கும் ஒரு மனிதன் இந்து மதத்தைவிட்டு மகமதியமதம் புகுந்தானா னால் அப்போதே சூரியனை கண்ட குமரி இருட்டுப் பறந்தோடுவதைப் போல் மறைந்து போகின்ற தென்பது மட்டும் உறுதி! உறுதி!! உறுதி!!!
இதை யாராவது மறுக்கின்றார்களா? என்று கேட்கின் றோம்.

மற்றபடி, மேல் லோகமும் ஆண்டவன் சன்னி தானமும், பாவமன்னிப்பும் இந்து மதத்தைவிட, மகமதிய மதத்தில் மிக்க சமீபமென்றோ? மிக்க சுலபமென்றோ? நாம் ஒப்புக்கொள்வதில்லை. தவிர இந்து மதத்திலிருக்கின்ற ஒரு சக்கிலியோ பறையனோ, பள்ளனோ, இன்றைய தினம் இந்து மதத்தை விட்டுவிட்டேன் என்று சொல்லு வானானால் அவனை ஒருக்காலமும் தொட்டுக் கொள்ளவோ, தெருவில் நடக்கவிடவோ, பக்கத்தில் வரச் சம்மதிக்கவோ எவரும் ஒப்புக் கொள்ளுவதில்லை. இந்த நிலையில் உள்ள மக்களிடம் தாழ்த்தப்பட்டவர்கள் மதத்தைவிட்டு விடுவதினால் மாத்திரம் எப்படி சுதந்திரமடையக் கூடியவர்களாகி விடுவார்கள்! ஆனால், மகமதியர்களாகவோ, கிறித்தவர் களாகவோ ஆகிவிட்டாமல் கண்டிப்பாக சட்டத்தில் ஆட்சேபனை இல்லை என்பதுடன் சிறப்பாக மகமதியர்களாகிவிட்டால் சட்டத்தில் ஆட்சேபனை இல்லாததோடு, அனுபவத்திலும் ஆட்சேபனை இல்லாமல் போய்விடுகின்றது.

பொதுவாக நமது லட்சியம் ஜாதி, மத வித்தியாசம் ஆகிய இரண்டும் ஒழிந்து அவைகளால் ஏற்படும் மூடநம்பிக்கைகளும் ஒழிய வேண்டுமென்பதாகும். மதவித்தியாசம் ஒழிகின்ற வரையிலும், ஜாதி வித்தியாசம் காத்துக் கொண்டிருக்க முடியாது. ஆதலால், மதவித்தியாசம் ஒழியப் பாடுபட்டுக் கொண்டிருப்பதுடன், ஜாதி வித்தியாசம் ஒழியச் செய்ய வேண்டிய காரியங்களையும் கூடச் செய்து கொண்டு தானிருக்க வேண்டி இருக்கின்றது. ஆகவே அம்முயற் சியிலொன்று தான், நாம் இப்போது மகமதிய மதத்தைத் தழுவியவர்களை ஆதரிப்பதும், பாராட்டு வதுமே ஒழிய வேறில்லை! பார்ப்பனர்கள் சமீப காலமாய்ச் செய்துவரும் சூழ்ச்சிகளை உணர்ந்தவர்கள், இன்று மதத்திற்காகவோ, இந்துக்கள் பிற மதம் புகுவற்காகவோ, சிறிதும் அதிருப்தி அடைய முடியாதென்பதே நமது நம்பிக்கை.

குழந்தை மணங்களைத் தடுக்கும் மசோதாவிற்கு இந்து மதத்தின் பேரால் ஆட்சேபனையும், சாஸ்திரத்தின் பேரால் சத்தியாக்கிரகமும் செய்வதற்கும் புதிய ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டு, பிரச்சாரமும் பத்திரிகையும் நடத்தப் பணமும் சேகரித்து வருகின்றார்கள்.
இதுமாத்திரமல்லாமல், இந்துக்களுக்கு – சிறப்பாக – பார்ப்பனர்களுக்கு (தங்கள் ஆதிக்கத்திற்கு ஆதாரமான (பர்) மதத்தைக் காப்பாற்ற காங்கிரசே நல்ல சாதனம் – திரு.எஸ்.சத்தியமூர்த்தி அய்யரவர்கள், பார்ப்பனர்களுக்குச் செய்திவிடுத்து எல்லாரையும் காங்கிரசில் சேரும்படி அழைக்கிறார். அதாவது, அவர் சர்க்காரை மத சம்பந்தமான காரியங்களில் பிரவேசிக்க ஒட்டாமல், செய்யவேண்டுமானால் காங்கிரசை, கைப்பற்றியாக வேண்டுமென்று வியாக்கி யானமும் செய்திருக்கின்றார். இதிலிருந்து என்ன விளங்கு கின்றது என்று பார்த்தால் மதத்தின் பேரால் உள்ள கொடுமைகளை ஒழிக்க சமூகத் துறையிலும், சம்மதிக்க மாட்டோம்! அரசியல் துறையிலும் சம்மதிக்க மாட்டோம்! என்று பார்ப்பனர்கள் வைதிகக் கோலத்துடனும், தேசியக் கோலத்துடனும், சொல்லுவதாக ஏற்படுகின்றதா? இல்லையா? என்று கேட்கின்றோம்.

தவிரவும், நாமும் இந்த ஜாதி வித்தியாசத்தைப் போக்க பிறமதம் புகுவது என்பதையே பிரதானமாகக் கொண்டிருக்க வில்லை. அப்படிச் செய்பவர்களை ஆதரிப்பது ஒருபக்கமும், கோயில் பிரவேசம் ஒரு பக்கமும், கோர்ட்டுகளில் விவகாரம் இன்னொரு பக்கமும், சமபந்தி ஒருபக்கமும், கலப்பு மணம் மற்றொரு பக்கமும், பிரச்சாரம் இன்னொரு பக்கமும், சட்டம் செய்ய முயற்சி இனி ஒரு பக்கமும், தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சமஉரிமையும் சமசந்தர்ப்பமும் கிடைக்க வேறொரு பக்கமும் இப்படிப் பல வழிகளிலும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றோம். இவைகளுக்கு இடையூறாக ஏற்பட் டுள்ள எதிர்ப்புகள், தொல்லைகள், விஷமப் பிரசாரங்கள், பழிசுமத்தல்கள், மிரட்டல்கள், ஆபத்துக்கள், மொட்டைக் காகிதங்கள், முதலிய தடைகளின் பக்கத்திலிருந்து கவனித் துப் பார்க்கின்றவர்களுக்குத் தெரியுமே ஒழிய தூரத்தி லிருந்து கொண்டு பத்திரிகைகளை மேல் வாரியாகப் பார்த்துக்கொண்டு குற்றம் சொல்லப் புறப்படுகின்றவர்களுக்கு அவ்வளவு நன்றாய் உண்மை விளங்கி விட முடியாதென்றே சொல்லுவோம். தவிர, கடைசியாக ஒன்று சொல்லி இதை முடிக்கின்றோம்.

அந்தக் காலம் வேறு இந்தக் காலம் வேறு
இனி சமீப காலத்திற்குள், அதாவது கால் நூற்றாண்டு களுக்குப் பின், இப்போது இந்துக்களாயிருக்கின்றவர்கள், கண்டிப்பாய் இந்துக்களாக இருக்க முடியவே முடியாதென் பதை ஒவ்வொரு வரும் மனதில் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். வேண்டுமானால் சூழ்ச்சிக்காரர்களும் சோம் பேறிகளும் இதை ஒப்புக் கொள்ளாமல் வெறும் வாய் வேதாந்தம் பேசக் கூடும். அதாவது புத்தரால் அழிக்க முடியாத இந்துமதம், மகமதியரால் அழிக்க முடியாத இந்து மதம், வெள்ளைக்காரர்களால் அழிக்க முடியாத இந்துமதம், எத்தனையோ ஆயிரம் வருடங்களாக எத்தனையோ ஆபத்துகளுக்கு தப்பி வந்த இந்துமதம் இனிதானா அழியப் போகின்றது? என்று பஞ்சகச்சத்தையும், உச்சிக்குடுமியையும், தொந்தி வயிற்றையும் கொண்ட ஊரார் உழைப்பில் வயிறு வளர்க்கும் சோம்பேறிகள், கால் மேல் கால் போட்டுக் கொண்டு வயிற்றைத் தடவிக் கொண்டு, பேசலாம்! ஆனால் அதில் சிறிதும் உண்மை இருக்க முடியாது.

ஏனெனில் அந்தக் காலம் வேறு; இந்தக் காலம் வேறு; என்னவென்றால் அப்போதைய சவுகரியம் வேறு, இப் போதைய சவுகரியம்வேறு என்பதையும், அது மூடநம்பிக் கைக் காலம், இது அறிவு ஆராய்ச்சிக்காலம் என்பதையும் கவனித்தால் விளங்கும். அவ்வளவுக்குக் கூட நாம் போக வேண்டியதில்லை. நம்மில் அநேகர் இன்றைக்கு அய்ந்து ஆண்டுகளுக்கு முன் 70, 50, 20 ஆண்டுகளாக என்ன மனப் பான்மையில் இருந்தோம்! படிப்படியாக 5,6 ஆண்டிற்குள் இன்றைக்கு என்ன மனப்பான்மையில் இருக்கின்றோம்? இந்த விகிதாச்சாரத்தை இன்னும் ஒரு இருபத்தைந்து வயதுக்குப் பின் வட்டியுடன் வட்டிக்கு வட்டியுடன் சேர்த்துப் பங்கிட்டுக் கொடுத்தால் என்ன பலன் ஏற்படும்? என்பதை யோசித்துப் பாருங்கள்! ஆகவே மதத்தை நேர்முகமாகக் கட்டிக் கொண்டழுதாலும், மறைமுகமாகக் கட்டிக் கொண்ட ழுதாலும், விளையும் பலன் ஒன்றேயாகும். இதற்காக யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. இதன் பின்னால் ஏற்படப் போகும் லாபத்தைப் பார்க்கச் சம்பவம் வாய்ந்தவர்கள் தாங்களுமே முயற்சி செய்ததற்கு வருந்துவார்கள் என்றே நம்புகிறோம்!

– ‘குடிஅரசு’ – தலையங்கம் – 03-11-1929

திங்கள், 19 ஆகஸ்ட், 2024

திராவிடர்கள் – தந்தை பெரியார்




Published August 18, 2024, விடுதலை நாளேடு

திராவிடர் கழகமானது இனத்தின் பேரால், பிறவியின் காரணமாய், நாட்டின் உரிமையின் காரணமாய், ஆரியர்களால் இழிவு செய்யப்பட்டு அடக்கி ஒடுக்கி தாழ்த்தி வைத்திருக்கும் மக்களின் விடுதலைக்கும் முன்னேற்றத் திற்கும் பாடுபடும் ஓர் அமைப்பு (ஸ்தாபனம்) ஆகும். விளக்கமாக சொல்ல வேண்டுமானால் இந்து மத (ஆரிய) தர்மப்படி 4ஆம் வர்ணஸ்தர்களாகவும் அல்லது 5ஆம் அவர்ணஸ்தர்களாகவும் ஆக்கப் பட்டிருக்கும் சூத்திரர்கள் எனப்படுபவர்கள் எல்லாருடைய விடுதலைக் கும் முன்னேற் றத் திற்கும் உழைக்கும் கழகமாகும்.
திராவிடர்களைத்தான் சூத்திரர்கள் என்பதாக இந்து மதத்தின் பேரால் ஆரியர்கள் அழைத்து வரு கிறார்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் இருந்து வருகின்றன. உதாரணமாக மனுதர்ம சாஸ்திரத்தில் 10ஆம் அத்தியாயத்தில் சங்கர ஜாதி என்ற தலைப்பின் கீழ் ஜாதி தர்மத்தை அனு சரிக்காதவர்கள், அனுசரிக்காதவர்களுக்குப் பிறந்தவர்கள் திராவிடர் என்ற பெயர் கொண்டவர் என்றும், சூத்திரன் பிராமண ஸ்தீரியைப் புணர்ந்தால் பெறப்படும் குழந்தைகள் பாக்கிய ஜாதியர் என்றும், அதாவது சமீபத்தில் வரக்கூடாத சண்டாள ஜாதி என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மற்றும் பிராமணர்களுக்கு சூத்திர ஸ்தீரிகளிடத்தில் பிறந்த குழந்தைகள் ஆர்யா வர்த்த தேசத்தில் செம்படவன் என்ற ஈன ஜாதியாகச் சொல்லப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மற்றும் ஜாதி தர்மம் தவறிய கலப்பினால் பிறப்பவர்களால்தான் தோல் வேலை செய்யும் (சக்கிலி) ஜாதியும், பிணத்தின் துணியைப் பிடித்துக் கொள்கிறவர்களும், எச்சில் சாப் பிடுகிறவர்களுமான (பறையர்) ஜாதியும் ஏற்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. “திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்களாய் விட்டார்கள்” என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது மனு 10ஆம் அத்தியாயம் 44ஆம் ஸ்லோகம் ஆகும். மற்றும் “மிலேச்ச பாஷை பேசுகிறவர்கள் அனைவரும் தஸ்யூக்கள் என்று சொல்லப்படுவார்கள்” என்று தெளிவாக விளக்கப் பட்டிருக்கிறது. இது 10ஆம் அத்தியாயம் 45ஆம் ஸ்லோகம். தஸ்யூக்கள் என்றால் திருடர்கள் என்ற கருத்தும் அதிலேயே கீழே காட்டப்பட்டிருக்கிறது.

இதில் மற்றொரு விசேஷம் என்ன வென்றால் திராவிடன் என்கிற பெயரைப் போலவே ஆந்திரன் என்ற பெயரும் மனு தர்மத்தில் காணப்படுகிறது. அதாவது காட்டிற்குச் சென்று மிருகங்களைக் கொன்று நாட்டில் கொண்டு வந்து விற்பவன் ஆந்திரன் என்று கூறப்பட்டிருக்கிறது. (அத்தி யாயம் 10 – ஸ்லோகம் 48) எனவே திராவிடர்கள், ஆந்திரர்கள் என்பது மாத்திரமல்லாமல், கீழான, இழிவான, தீண்டப்படாத திருடர்களான ஜாதியார்கள் என்பதை மனுதர்ம சாஸ்திரம் நன்றாக வலியுறுத்துகிறது என்பது 10ஆம் அத்தியாயத்தில் சங்கர ஜாதி என்ற தலைப்பில் நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது.

மற்றும், “இவர்கள் அனைவரும் பட்டணத்துக்கும் ஊருக்கும் வெளியில் மரத்தடி, தோப்பு, மயானத்திற்குச் சமீபமான இடம் ஆகிய இடங்களில் இழி தொழிலைச் செய்யும் மக்கள் என்று யாவருக்கும் தெரியும்படியாக வாசம் செய்ய வேண்டியது” என்று 50ஆம் ஸ்லோகத் தில் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட திராவிடர்களான மக்கள் “நாயும் கழுதைகளும்தான் வளர்க்க வேண்டியது “மாடு முதலியன வைத்துக் கொண்டு ஜீவிக்கக் கூடாது” என்று 51ஆம் ஸ்லோகம் கூறுகிறது.

52- முதல் 57ஆம் ஸ்லோகம் வரையில் என்ன கூறப்படுகிறது தெரியுமா? திராவிடத் தோழர்களே! கவனியுங்கள். “இவர்கள் பிணத்தின் துணியையே உடுக்க வேண்டும். உடைந்த சட்டியில் அன்னம் புசிக்க வேண்டும். உலோகப் பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது. இரும்பு, பித்தளை ஆகியவகைகளால் செய்யப் பட்ட நகைகளையே அணிய வேண்டும். இவர்கள் ஜீவனத்துக்காக எப்போதும் வேலை தேடிக்கொண்டே திரிய வேண்டும். நல்ல காரியம் நடக்கும் போது இவர் களைப் பார்க்கக் கூடாது. இவர்களோடு பேசக்கூடாது. இவர்களைத் தங்கள் ஜாதிக்குள்ளாகவே மணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்த வேண்டும். இவர்களுக்கு நேரே எதுவும் கொடுக்கக் கூடாது. உடைந்த பாத்திரத்தில் அன்னம் போட்டு வைக்க வேண்டியது. ஊருக்குள் இரவில் சஞ்சரிக்க விடக்கூடாது” என்றும் இப்படிப்பட்ட ஈன ஜாதியார்கள் நல்ல வேடம் தரித்திருந்த போதிலும் அவர்களை ஈனர்கள் என்றே கருதவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒரே ஒரு விமோசனம், அதென்ன தெரியுமா? அதுதான் ஏழெட்டு வருஷங்களுக்கு முன்பு காந்தியார் இங்கு வந்தபோது சொன்ன மார்க்கம். அதாவது ஒரு சூத்ர ஸ்த்ரீ வயிற்றில் பிராமணனுக்கு விவாக முறைப்படி பிறந்த பெண் மறுபடியும் பிராமணனையே மணந்ததின் மூலம் அவள் வயிற்றில் பிறந்து இப்படியாக 7 பிறவி பிறந்தால் 7ஆம் தலைமுறையில் பிராமண ஜாதி ஆகலாம் என்பதுதான். இதுதான் காந்தியார் தமிழ்நாட்டிற்கு வந்தபோது திருப்பூரில் சொன்னது. மற்றும் கடைசியாகச் “சூத்திரன் பிராமண னுடைய தொழிலைச் செய்வதாலேயே பிராமணன் ஆக மாட்டான். எப்படி ஒரு பிராமணன் எந்த விதமான இழிவான தொழிலைச் செய்தாலும் அவன் பிராமணனே ஒழிய சூத்திர ஜாதி ஆகமாட்டானோ அதுபோல ஒரு சூத்திரன் எவ்வளவு மேலான பிராமணன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் ஆகமாட்டான். இது பிரம்மாவினால் நிச்சயிக்கப்பட்ட உண்மையாகும், தத்துவமாகும்.” (அத்தியாயம் 10. ஸ்லோகம் 713)

பிராமண தர்மம்
பிராமணன் கீழான தொழிலைச் செய்த போதிலும் பயிரிடும் தொழிலை (உழுவதை) கண்டிப்பாய்ச் செய்யக் கூடாது. அதைச் செய்யாவிட்டால் ஜீவனத்திற்கு மார்க்க மில்லை என்கின்ற காலத்தில் அந்நியனைக் கொண்டு செய்விக்கலாம். (அத்தியாயம் 10. ஸ்லோகம் 83)
ஏனெனில் அந்தப் பிழைப்பு இரும்புக் கலப்பை யையும் மண் வெட்டியையும் கொண்டு பூமியை வெட்ட வேண்டிய தாகும். ஆகையால் பிராமணர் உழுது பயிரிடுதல் கூடாது என்பதாகும். (அத்.10.சு.84)
தாழ்ந்த ஜாதியான் மேலான ஜாதியானின் தொழிலைச் செய்தால் அவனுடைய பொருள் முழுமையும் பிடுங்கிக் கொண்டு அவனையும் நாட்டை விட்டு அரசன் உடனே விரட்டிவிடவேண்டும். (அத்.10.சு.96)
சூத்திரனுக்கு சமஸ்காரங்கள், ஓமம் வளர்த்தல் முதலிய வைகளுக்கு உரிமை கிடையாது. (அத். 10. சு.126)
சூத்திரன் எவ்வளவு தகுதியுடையவனாயினும் தன் ஜீவியத்துக்கு அதிகமாக பொருள் சம்பாதிக்கக்கூடாது. அப்படிச் சம்பாதித்தால் அது பிராமணனுக்கு இம்சையாக நேரும் (அத்.10.சு.129)
சூத்திரனுக்கு யாகாதி கர்மங்கள் சம்பந்தமில்லை. ஆதலால் அவன் வீட்டிலுள்ள செல்வத்தை பிராமணன் தாராளமாக வலுவினாலும் கொள்ளலாம். (அத்.11. சு.13)

அசுரர்கள் என்பது சூத்திரர்களைத்தான் என்பதற்கு ஆதாரம். மனு தர்ம சாஸ்திரத்தில் 11ஆம் அத்தியாயம் 20ஆம் சுலோகத்தில் காணப்படுகிறது. அதாவது யாகம் செய்யாதவர்கள் அசுரர்கள் – அவர்கள் பொருளைக் கவ்வுவது தர்மமாகும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
திராவிடர்கள் சூத்திரர்கள், சூத்திரர்களுக்கு யாகாதி காரியங்களுக்குள் உரிமையில்லை. யாகம் செய்யாதவர்கள் அசுரர்கள். இந்த மாதிரி குறிப்புகள் மனுதர்ம சாஸ்திரத்தில் இருக்குமானால் மனுதர்ம சாஸ்திரமே இந்து மதத்திற் கேற்பட்ட தர்மமானால் திராவிடர்கள் இந்துக்களானால் திராவிடர்களின் நிலை என்ன என்பதைப் பொது மக்கள் உணர்ந்து பார்க்க வேண்டுமாய் விரும்புகிறேன்.

இப்படிப்பட்ட இழிவுகளேற்பட்ட தன்மை திராவிட சமுதாயத்திற்கே இருக்கக் கூடாதென்றும், அவை எப்படி யாவது ஒழிக்கப்பட்டே ஆக வேண்டுமென்றும், அதற்கு முக்கிய எல்லையான திராவிட நாட்டை (சென்னை மாகாணத்தை) பரப்பாக வைத்து அதிலுள்ளவர்களை திரா விடர்களாகக் கருதி நடத்தப்படும் திராவிடர் கழக திராவிட நாடு எழுச்சிக்கு தமிழ்நாடு. ஆந்திரநாடு, கேரள நாடு, கருநாடக நாடு என்பதான கிளர்ச்சிகளை இந்த முக்கியக் குறிப்பில்லாமல் குறுக்கே போட்டு மொழியைப் பிரதானமாக வைத்துக் கொண்டு போராடுவதென்றால் மனுதர்ம சாஸ் திரத்தை மெய்ப்படுத்துகிறோம் என்ப தல்லாமல் அதில் வேறு தன்மை என்ன இருக்கிறதாகக் காணமுடியும்?
‘குடிஅரசு’ – கட்டுரை – 20.09.1947



வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

பொது உடைமை

 

பெரியார் பேசுகிறார்…

ஜனவரி 16-31 2019

பொது உடைமை

தந்தை பெரியார்

பொது உடைமை என்கின்ற வார்த்தையானது மக்களின் காதுகளில் படும்போதே அது ஒரு பயங்கர சப்தம்போல் கருதப்படுகின்றது.

‘பொதுஉடைமை’ என்னும் வார்த்தையானது அது பற்றிய ஆராய்ச்சியே இல்லாத காரணத்தாலும், சுயநலத்தின் காரணமாய் அவ்வார்த்தைக்கு எதிராகவே பிரச்சாரங்கள் நடைபெறுவதாலும், பொதுஜனங்களுக்கு பொது உடைமை என்றால் வெறுப்பாயும், பயமாயும் தப்பிதமாயும் தோன்றலாம். எந்தப் புதிய கொள்கையும், அபிப்பிராயங்களும் ஆரம்பகாலத்தில் பாமர மக்களிடையே வெறுப்பாகவும் கஷ்டமாகவும்தான் தோன்றும். இதற்கு நாம் உதாரணங்கள் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஏனெனில் புதிய அபிப்பிராயங்களையும், கொள்கைகளையும் கொண்டுவந்து புகுத்தியவர்கள் சரித்திரங்கள் என்பவைகளைப் பார்த்தால் இதுதானாகவே விளங்கிவிடும். ஆதலால் பொது உடைமை என்ற வார்த்தையும், கொள்கையும் பொது ஜனங்களால் பாமரமக்களால் சுயநலங்கொண்ட சோம்பேறிக் கூட்டங்களால் ஆதரிக்கப்படுகின்றதா? வரவேற்கப் படுகின்றதா? வெறுக்கப்படாமல் இருக்கின்றதா? என்பவைகளைப் பற்றி கவனிக்காமல் அது விஷயமாய் நமக்குத் தோன்றியதை எழுதலாம் என்றே கருதுகிறோம்.

பொது உடைமை என்பது ஒரு குடும்பத்தில் உள்ள சொத்துக்கள், வரும்படிகள், தொழில்கள், லாப நஷ்டங்கள், இன்ப துன்பங்கள், போகபோக்கியங்கள், பொறுப்பு கவலைகள் முதலாகியவைகள் எல்லாம் எப்படி அக்குடும்ப மக்களுக்கு பொதுவோ அதுபோல்தான் ஒரு கிராமத்திலோ, ஒரு பட்டணத்திலோ, ஒரு மாகாணத்திலோ, ஒரு தேசத்திலோ, ஒரு கண்டத்திலோ, ஒரு உலகத்திலோ உள்ள மேற்கண்டவைகள் எல்லாம் ஆங்காங்குள்ள அவ்வளவு பேருக்கும் பொதுவானது என்பதாகும். சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால் பொதுஉடைமைக் கொள்கையின் கட்சி லட்சியம் உலகம் பூராவும் ஒருகுடும்பம். உலக மக்கள் எல்லோரும் சகோதரர்கள். உலகத்தில் உள்ள செல்வம் இன்பம் போகபோக்கியம் முதலியவை எல்லாம் அக் குடும்ப சொத்து குடும்ப மக்கள் (உலக மக்கள்) எல்லோருக்கும் அக்குடும்ப சொத்தில் (உலக சொத்தில்) சரிபாகம் என்கின்ற கொள்கையேயாகும். ஆகவே பொதுஉடைமை என்பது ஒரு கணக்குப் பிரச்சினை  (Mathemetic Problem) ஆகும். ஆகவே இப்படிப்பட்ட கருத்துக்கொண்ட பொதுஉடைமைக் கொள்கையை வெறுக்கவோ, எதிர்க்கவோ நியாயமான முறையில் யாதொரு காரணமும் இருப்பதாய் நமக்குத் தோன்றவில்லை.

 பொது உடைமை என்பது பொதுமனித தர்மமென்றும் சகோதரத்தன்மையும், சமத்துவத் தன்மையும் கொண்டதென்றும் வேதாந்த தத்துவத்துக்கும், ஆஸ்திகத் தன்மைக்கும் தத்துவத்துக்கும் ஏற்றது என்றும் மதத் தலைவர்களுக்கும் தேசியத்துக்கும், நீதிக்கும், பகுத்தறிவுக்கும் ஒத்ததென்றும் அரசர்களுக்கும் செல்வவான்களுக்கும் பாதிரி, புரோகிதக் கூட்டங்களுக்கும் நன்மை பயக்கக் கூடியதென்றும் பொது உடைமைத் தத்துவமேதான் மோட்ச நிலை என்பதும் முத்திநிலை என்பதுமாகும்

ஆனால் சகோதரனுடைய பங்கை மோசம்செய்து சகோதர துரோகத்தின்மூலம் அதிகப் பங்கை ஆசைப்படுகிற மனப்பான்மை உள்ளவனும் குடும்ப வேலைகளில் தனக்குள்ள சரிபாகப் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்ளாமல் மற்ற சகோதரர்களையே அதிகமாய் உழைக்கச் செய்து தான் சோம்பேறியாய் இருந்து அதிகப்பங்கை அடைந்து மற்றவர்களுக்கு போதுமான அளவுகூலி கொடுக்காமல் வஞ்சித்து ஏமாற்றவேண்டும் என்கின்றதான மனப்பான்மை உள்ளவனும்தான் பொதுவுடைமைக் கொள்கையை வெறுக்கவும், எதிர்க்கவும் கூடும்.

நிற்க, மற்றொரு விதத்திலும் பொதுவுடைமைத் தத்துவம் என்பது எல்லா ஜனங்களாலும் மதிக்கத் தக்கது என்கின்றதான வேதாந்த தத்துவம் என்பதும் ஆகும். எப்படியெனில் எல்லா சரீரத்திலும் வசிக்கும் ஆத்மா ஒன்றே என்றும், எப்படி ஒரே சூரியன் பதினாயிரம் குடம் தண்ணீரில் பதினாயிரம் சூரியனாகக் காணப்படுகின்றதோ அதுபோல் கோடானுகோடி ஜீவராசிகளினுள்ளும் கோடானகோடி ஆத்மாவாகக் காணப்படுகின்றது என்று சொல்லப்படுகின்றது. ஆதலால் ஒவ்வொரு சரீரத்திலும், வெவ்வேறு ஆத்மாவாக இருக்கின்றதென்றோ ஒவ்வொரு ஆத்மாவுக்கும் வெவ்வேறுவித சைதன்னிய அதாவது ஞானமோ, வேற்றுமை உணர்ச்சியோ இல்லை என்கின்ற தத்துவமே வேதாந்தமாகும். ஆதலால் அப்படிப்பட்ட வேதாந்தக் கொள்கைக்கு பொதுவுடைமைத் தத்துவம் எவ்விதத்திலும் விரோத மானதல்ல. மதக்கொள்கைகளுக்கும் பொதுவுடைமைத் தத்துவம் விரோதமானதாக இல்லை. எப்படியெனில் எல்லா மதமும் மக்கள் யாவரும் சகோதரர்களென்றும், ஒருவருக்கொருவர் சகோதர உணர்ச்சியுடனேயே இருக்கவேண்டும் என்றும், எல்லோரையும் எல்லோருமே சகோதரர்களாகப் பாவிக்கவேண்டும் என்றும், எல்லோருமே ஒரேவித இன்பத்தையும், ஒரேவித செல்வத்தையும் அடைய வேண்டுமென்றே கற்பிக்கின்றதாகச் சொல்லப்படுகின்றது.

ஆதலால் பொதுவுடைமைத் தத்துவம் எந்த மதக் கொள்கைக்கும் விரோதமானது என்று சொல்லிவிட முடியாது. மற்றும் பொதுவுடைமைத் தத்துவமானது ஆஸ்திகம் என்பதற்கும் விரோதமானதல்ல. ஏனெனில் ஆஸ்திகமென்பது கடவுள் என்பதாக ஒன்று இருக்கின்ற தென்றும், அது பாரபட்சமற்றது என்றும், சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உடையது என்றும் அதுவே உலகத்தையும், உலகத்திலுள்ள வஸ்த்துக்களையும், ஜீவர்களையும் சிருஷ்டித்தாரென்றும், உலகமும் உலக வஸ்த்துக்களும் அந்த ஜீவர்களுக்காகவே சிருஷ்டிக்கப்பட்டவை என்றும், கருதுவதேயாகும். ஆகவே அப்படிப்பட்ட கருத்துக்கு எல்லா  மக்களும் சகோதரர் என்கின்ற கொள்கையும், எல்லாப் பொருள்களும் இன்பதுன்பங்களும், எல்லா மக்களுக்கும் சரிசமமான பொது என்பதையும் எந்த ஆஸ்திகர்களும் ஆட்சேபிக்கவோ, எதிர்க்கவோ முடியாது என்பது விளங்கும்.

மேலும் மகாத்மாக்கள் என்பவர்களுக்கும், பொதுவுடைமைத் தத்துவம் வெறுப்பாகவோ, விரோதமாகவோ இருக்க நியாயமில்லை. ஏனெனில் மகாத்மா தத்துவம் என்பது எல்லா ஜீவன்களையும் சரிசமமாய்ப் பார்ப்பதும், எல்லா ஜீவர்களிடத்திலேயும், ஒரே ஆத்மா பரிணமிக்கின்றது என்பதை உணருகின்ற வர்க்கமாகும் ஆதலால் அப்படிப்பட்ட தத்துவமுடையவர்களுக்கு பொதுவுடைமைத் தத்துவம் என்பது ஆட்சேபிக்கத்தக்கதாவதற்கு இடமில்லை. இவை தவிர கிருஷ்ணன், புத்தர், ஏசு, மகம்மது, குருநானக், ராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி என்று சொல்லப்படுபவர்களான அங்கீகரிக்கப்பட்ட மதத்தலைவர்கள், சீர்திருத்தவாதிகள் என்பவர்களுடைய கொள்கைகளுக்கும், லட்சியங்களுக்கும், எல்லா மக்களும், சகோதரர்கள், எல்லா சொத்தும் பொதுவானது என்னும் படியான கொள்கை கொண்ட பொதுவுடைமைத் தத்துவம் விரோதமாகவோ ஆட்சேபிக்கதக்கதாகவோ இருக்கும் என்று சொல்லுவதற்கில்லை.

மற்றும் தேசியம் என்பதற்கோ, தேசியவாதிகள் என்பவர்களுக்கோ, பொதுவுடைமைத் தத்துவம் விரோதமானது என்று சொல்லுவதற்கும் இடமிருக்கக் காரணமில்லை. ஏனெனில் தேசியவாதிகளுடைய கொள்கையெல்லாம் தங்கள் தேசத்து செல்வத்தை மற்றொரு தேசத்தார் கொள்ளை கொள்ளக்கூடாது என்பதும் தங்கள் தேச ஆட்சியை மற்றொரு தேசத்தார் ஆளக்கூடாது என்பதுமே முக்கியமானதாகும். ஆதலால் இதே கொள்கை கொண்டதான அதாவது ஒருவருடைய உழைப்பின்பயனை மற்றவர்கள் கொள்ளை கொள்ளக் கூடாது என்பதும், ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் கொள்ளக்கூடாது என்பதும் எல்லோரும் சமமாய் உழைக்கவேண்டும், எல்லோரும் சமமாய் அடையவேண்டும், எல்லோருக்காக எல்லோரும் ஆட்சி செலுத்த வேண்டும் என்னும் கொள்கைகொண்ட பொதுவுடமை தத்துவத்தை ஆட்சேபிக்க நியாயமே இல்லை. மற்றபடி சமுக சேவைக்காரருக்கோ, பொது நல சேவைக்காரருக்கோ, நீதிக்கோ, பகுத்தறிவுக்கோ, பொதுவுடமைத் தத்துவம் மாறானதென்றொ, ஆட்சேபிக்கத் தக்கதென்றோ, சொல்வதற்கு எந்தவிதத்திலும் ஆதாரம் இருப்பதாய் தெரியவில்லை.

ஆனால் யாருக்கு விரோதமாகவும், ஆட்சேபிக்கத்தக்கதாகவும் கெடுதி தரத்தக்க தாகவும் இருக்கும் என்று பார்ப்போமேயானால் சுயநலம்கொண்ட மக்களாகிய சக்கரவர்த்தி, அரசர், பாதிரி, குரு, முதலாளி, ஜமீன்தாரன், மிராசுதாரன், மேல் ஜாதிக்காரன் (பார்ப்பான்) என்று சொல்லப்படுபவர்களுக்கும் இவர்களுக்கு கூலிகளாய் இருப்பதினாலேயே உயர்வான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக் கின்றவர்களுமான மக்களுக்கும் ஆட்சேபனையாய் இருக்கலாம். இவர்களுடைய ஆட்சேபனைகளை நாம் லட்சியம் செய்ய வேண்டியதில்லை.

ஏனெனில் இவர்கள் யோக்கியதைகளை நன்றாய் உணர்ந்து இவர்களால் மக்களுக்கு ஏற்படும் கஷ்ட நஷ்டங்களையும், இழிவுகளையும் அறிந்து இவர்கள் தன்மைகளை ஒழிக்கவேண்டும் என்றும் மாற்றவாவது வேண்டுமென்றும் மக்கள் வெகு நாளாகவே பாடுபட்டு வருகிறார்கள்.

உதாரணமாக ஏகாதிபத்தியத் தன்மை கூடாதென்றும், தனிப்பட்ட நபர்களான அரசர்களுடைய ஆட்சிகள் கூடாதென்றும் கிளர்ச்சிகள் வெகுகாலமாகவே நடந்து வருகின்றன. இதன் பயனாகவே சில ஏகாதிபத்தியங்கள் ஒழிந்து சில அரச ஆட்சிகளும் வீழ்ந்து, பொதுஜன ஆட்சி என்றும், குடிகளுடைய ஆட்சி என்றும், சொல்லும்படியான ஆட்சிகள் ஏற்பட்டும் இருக்கின்றன. இனியும் ஏற்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. ஆதலால்தான் அவற்றைப்பற்றி நாம் கவனிக்க வேண்டியதில்லை என்றோம். மற்றபடி மேல் ஜாதிக் கொடுமையையும், நன்றாய் உணர்ந்து அதை ஒழிக்க வேண்டும் என்றும் முயற்சி செய்ததோடு சில ஒழித்தும் வருகிறோம். மற்றபடி ஜமீன்முதலாளி முதலியவர்களுடைய கொடுமைகளையும் அநீதியான வழியில் அவர்கள் செல்வம் பெருக்குவதையும் நன்றாய் உணர்ந்து அவர்களது கொடுமைகளை ஒழிக்கவும், அவர்களது அநீதிகளில் இருந்து மீளவும் முயற்சிகள் செய்து கொண்டுதான் வருகிறோம். கடைசியாக குருமார்கள், பாதிரிமார்கள் என்று சொல்லுகின்ற கூட்டத்தார்களின் யோக்கியதைகளும் அறிஞர்கள் உணர்ந்ததேயாகும். எப்படியெனில் குரு, பாதிரி, முல்லா, புரோகிதர்கள் என்கின்ற கூட்டத்தார்கள் அரசர்கள், செல்வவான்கள், சோம்பேறிகள் ஆகியவர்களுடைய லைசென்சுபெற்ற கூலிகளேயாவார்கள். இவர்களுடைய உழைப்பின் பயன் எல்லாம் அரசர்களுக்கும், செல்வவான்களுக்கும், சோம்பேறி கூட்டத்தார்களான மதப் பாஷாண்டிகளுக்குமே பயன்படத்தக்கதாதலால் இவர்களது அதிருப்தியைப் பற்றியோ, அழுகையைப் பற்றியோ, நாம் சிறிதும் கவலைப்படவேண்டியதில்லை. இருந்தபோதிலும் இந்த கூட்டத்தாரும் சாவதானமாய் இருந்து நல்லறிவைக் கொண்டு யோசித்துப் பார்ப்பார்களானால் பொதுவுடைமைத் தத்துவம் என்பது தங்கள் கூட்டத்தாருக்கும் கெடுதி இல்லை என்பது விளங்கும். எப்படியெனில் பொதுவுடைமைத் தத்துவத்தினால் மனித ஜீவனுக்கு ஏற்படப்போகும் முக்கியமான மாறுதலும், அனுகூலமும் என்னவென்றால் மனிதனுக்குக் கவலை என்பது 100க்கு 90 பாகத்துக்கு மேலாகவே குறைந்துபோகும். இதுதவிர அதிருப்தி, பொறாமை என்று சொல்லும்படியான இயற்கை குணங்கள் என்பவைகள் எல்லாம் குறைந்துவிடும். இவைகளில் ஏதாவது ஒரு அளவும், பொதுவுடைமை தத்துவத்திலும் இருக்கும் என்று தர்க்கத்துக்காக சொல்லவந்தாலும் அதுவும் பொது நலத்தை உத்தேசித்து இருக்குமே ஒழிய சுயநலத்தை உத்தேசித்து இருக்க முடியவே முடியாது. அதுபோலவே மனிதனுக்கு துக்கம் என்பதும் பெரும்பாகமும் மறைந்து போகும். இப்போது மேற்குறிப்பிட்டதான கவலை. அதிர்ப்தி, ஆசை, பொறாமை, துக்கம் முதலிய குணங்கள் தனிமனிதனில் ஆகட்டும், மனித சமுகத்தில் ஆகட்டும் எந்த நிலைமையில் இருக்கின்றவர் களுக்கும் இருந்துதான் வருகின்றது.

அரசனுக்கோ, செல்வவானுக்கோ, குருவுக்கோ, பார்ப்பானுக்கோ, மற்றும் பெரும்பதவியில் இருக்கின்றவன் என்பவனுக்கோ இல்லை என்று சொல்லிவிட முடியாது. இவர்களுக்கு உள்ள பெருமையெல்லாம் அன்னியர்கள் இவர்களைப் பெருமையாய் நினைக்கிறார்கள் என்பதைத் தவிர தங்கள் தங்களுக்கு சொந்தத்தில் துக்கமும், கவலையும் இல்லாதவர்கள் இல்லவே இல்லை.

மத சம்பந்தமான ஆதாரங்களில் காணப்படும், மோட்சத்திற்கும், முத்திக்கும் சொல்லப்படும் கருத்தெல்லாம் கவலையும், துக்கமும் அற்றதன்மை என்றுதான் சொல்லப்படுகின்றதே ஒழிய மற்றபடி வேறு ஒரு லோகத்தில் போய் வெல்வெட் மெத்தையில் சதாதூங்கிக் கொண்டிருப்பது என்று சொல்லப்படவில்லை. ஆனால் இப்படி எங்காவது ஒன்று இரண்டு இடத்தில் சொல்லப்படுவதாய் சொல்லப் பட்டாலும் அது புரோகிதர்களுடையவும், முல்லாக்களுடையவும், பாதிரிகளுடையவும் கூட்டத்தாரின் வயிற்றுப் பிழைப்புக்காகக் கற்பித்துக் கொண்ட புராணப்பிடுங்கல் கற்பனை என்பதை எல்லா தத்துவ ஜன அறிஞர்களும் ஒப்புக் கொள்ளுகின்றார்கள். ஆகையால் பகுத்தறிவுள்ள மனித ஜீவர்கள் வாழ்க்கையில் கவலையும் துக்கமும் இல்லாத ஒரு நிலையை ஒருநாளும் வெறுக்கவோ, மறுக்கவோ முடியவே முடியாது.

ஆகவே பொது உடைமை என்பது பொதுமனித தர்மமென்றும் சகோதரத்தன்மையும், சமத்துவத் தன்மையும் கொண்டதென்றும் வேதாந்த தத்துவத்துக்கும், ஆஸ்திகத் தன்மைக்கும் தத்துவத்துக்கும் ஏற்றது என்றும் மதத் தலைவர்களுக்கும் தேசியத்துக்கும், நீதிக்கும், பகுத்தறிவுக்கும் ஒத்ததென்றும் அரசர்களுக்கும் செல்வவான்களுக்கும் பாதிரி, புரோகிதக் கூட்டங்களுக்கும் நன்மை பயக்கக் கூடியதென்றும் பொது உடைமைத் தத்துவமேதான் மோட்ச நிலை என்பதும் முத்திநிலை என்பதுமாகும் என்றும் ஒருவாறு சுருக்கமாய் விளக்கிக் காட்டியிருக்கிறோம், இனி பொது உடைமை தத்துவம் சாத்தியமா? என்பதும், எப்படி ஏற்படுத்துவது என்பதும் எந்த எந்த அளவில் இன்று நமது நாட்டிலும் இருந்துவருகின்றது என்பதும் முதலாகிய விஷயங்களைப் பற்றி மற்றொரு சமயம் சாவகாசமாய் எழுத எண்ணியுள்ளோம். அல்லது யாராவது இவ்விஷயத்தில் ஆராய்ச்சியுள்ள தோழர்கள் வியாசரூபமாக எழுதினாலும் பொருத்தமானதை மகிழச்சியுடன் பிரசுரிக்கக் காத்திருக்கிறோம்.

– ‘குடிஅரசு’ – தலையங்கம் – 10.09.1933

 

பொங்கல் தமிழர் விழா!

 


ஜனவரி 16-31 2019

தந்தை பெரியார்

பொங்கல் விழா எதற்குக் கொண்டாடப்படுகிறது என்பது இன்னமும் பலருக்கு தெரியாது. உண்மையில் தமிழர்களுக்கு என்று தமிழர்களின் நாகரிகம் பண்பு இவைகளுக்குப் பொருத்தமான பண்டிகை ஒன்று கூடக் கிடையாது.

அப்படி இருந்தும் நம் மக்களுக்கு பண்டிகைகளுக்கு அளவே இல்லாது பல பண்டிகைகள் இருந்து வருகின்றன.

முதலில் அப்பண்டிகைகளின் பெயர்களைப் பார்த்தால் அவை அத்தனையும் சமஸ்கிருத பெயராகவே இருக்கும். தமிழர்களுக்கென்றும் தமிழர்களின் பண்பு நாகரீகம் கலாச்சார பழக்கவழக்கம் இவைகளைக் கொண்டதாகவும் ஒரு பண்டிகை இருக்குமானால் அதற்கு தமிழிலேயே பெயர் இருக்கவேண்டும். ஆனால், வட மொழியில் இருக்குமானால் எப்படி தமிழர்களுக்குண்டான பண்டிகையென்று கூறமுடியும்?

பொங்கல் பண்டிகை

ஏதோ ‘பொங்கல் பண்டிகை’ என்று கூறும் முறையில் தமிழ்ப் பெயராக இருப்பதும் அன்றி நம் மக்களுக்கு ஏற்ற பண்டிகையாகவும் இருக்கிறது. மேலும் இதற்கு கூட பார்ப்பனர்கள் சங்கராந்தி என்று பெயர் கொடுத்து அப்பண்டிகைக்காக கட்டுக்கதைகளை இயற்றிவிட்டு அது இந்திரனுக்குக் கொண்டாடப்படும் பண்டிகை என்பதாக மாற்றிவிட்டார்கள். பண்டிகைகள் ஒவ்வொன்றையும் எடுத்து ஆராய்ந்து பார்த்ததில் இப்பண்டிகையை மட்டும்தான் பார்ப்பனப் பண்டிகையிலிருந்து தமிழர் பண்டிகையாக மாற்றம் செய்ய முடிந்தது. தமிழர்களின் பண்புக்கேற்றவண்ணம் அதன் அவசியத்தையும், கொண்டாடும் முறையையும் விளக்கி வருகிறோம்.

உழவர் திருநாள்

இப்பண்டிகை நம் மக்களில் பெரும்பான்மையானவர்களாகிய விவசாயி களுக்குண்டான பண்டிகையாகும். அவர்கள் இந்த ஆண்டு முழுதும் விவசாயம் செய்து தானியங்களைத் தங்கள் இல்லத்தில் கொண்டு வந்து அத்தானியத்தை முதன்முதலாக சமைத்து உண்ணும்பொழுது தாங்கள் சந்தோஷமாக இருக்கும் அறிகுறியைக் காட்டும் முறையில் இப்படிக் கொண்டாடுகிறோம். இதுவரைப் பார்ப்பனர்களின் முறைப்படி கொண்டாடப்பட்ட முறைகள் அறிவுக்கும் பண்புக்கும் பொருத்தமற்றதாகும் என்பதை விளக்கி நம்முடைய பழக்க வழக்கங்களுக்கு ஏற்றவண்ணம் கொண்டாடும் முறையை பின்பற்றுகிறோம்.

உறவைக் கூட்டும் விழா

இந்நன்னாளில் ஒருவருக்கொருவர் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்ள தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்துக் கடிதங்கள் அனுப்புகிறார்கள். இப்பண்டிகை மட்டும்தான் தமிழர்களுக்கென்று உள்ள பண்டிகை.

இதைத் தவிர மற்றவை யாவும் பார்ப்பனப்பண்டிகைகள். அப்பண்டிகைகள் அத்தனைக்கும் கூறப்படும் கதைகள் அறிவுக்குப் பொருத்தமற்றவைகள். நாகரீக காலத்திற்கு ஏற்றவை அல்ல. அப்போது காட்டுமிராண்டித்தனம் மலிந்த காலத்தில் அதற்கேற்றவண்ணம் பார்ப்பனர்கள் கதைகளைக் கட்டிவிட்டார்கள்.

அறிவுக்கு அளவுகோல்

இப்போது விஞ்ஞானம் மலிந்த காலம்; ஆராய்ச்சியாளர்கள் மிகுந்து அதிசய _- அற்புதங்கள் பலவற்றை சாதித்துக்காட்டும் காலம். இப்படிப்பட்ட ஆராய்ச்சிக் காலத்தில் புராணக்கதைகள் இருப்பது சிறிதும் அறிவுக்குப் பொருத்தமற்றதாகும்.

அவைகள் இன்னமும் நிலைத்து நிற்பதன் காரணம் நம்முடைய முட்டாள்தனம் எத்தனை டிகிரி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறதே அன்றி அறிவின் தரத்தைக் காட்டுவதில்லை…

(சேலம் நகராண்மைக் கழகக் கல்லூரி விழாவில் ஆற்றிய உரையிலிருந்து)

– ‘விடுதலை’, 26.01.1954

கடவுள் உணர்ச்சி நம்மைவிட்டு நீங்க வேண்டுமானால் பூரணஅறிவும், ஆராய்ச்சி முடிவுகளும் வேண்டும்

 



தந்தை பெரியார்

இவ்வாரத்திய தலையங்கம் கடவுளும் மதமும் என்று தலைப் பெயர் கொடுத்து எழுதப் புகுந்ததன் முக்கிய நோக்கம் என்னவெனில், சுயமரியாதை இயக்கம் நாட்டில் பரவ ஆரம்பித்தபிறகு அதிலும் அவ்வியக்கம் நாட்டில் சற்றுச் சொல்வாக்குப் பெறத் தொடங்கிய பின்பு மக்களுக்குத் தானாகவே ஒருவித குழப்ப உணர்ச்சி தோன்றியிருப்பதை உணர்கின்றோ மாதலினாலேயாம். அதோடுகூட பார்ப் பனர்களும் பார்ப்பனரல்லாதார்களில் அரசியல், தேசியம் ஆகி யவைகளின் பேரால் பிழைக்கும் பிழைப்புக்காரர் களும், சமயம் புராணப் பிரசங்கம் ஆகியவைகளின் பேரால் பிழைக்கும் பிழைப் புக்காரர்களும், இவ்வி யக்கத்தை எதிர்க்கக் கடவுளையும் மதத்தையும் பற்றிய பொதுமக்களின் குழப்பத்தைத் தங்களுக்கு ஆதாரமாய் வைத்துக் கொண்டும், மற்றும் திரித்துக் கூறிக் கொண்டும் விஷமப் பிரச்சாரம் செய்து வருவதானாலும், நமது இயக்கத்தில் உண்மையான பற்றுக் கொண்ட உண்மை நண்பர்களில் சிலர் இவ்விஷமப் பிரச்சாரத்தைக் கண்டு பயப்படுவதாகத் தெரிவதாலும், மற்றும் சிலர் பெரியோர்களும், சமய சம்பந்தமாக மனத் துடிப்புக் கொள்வதாலும் நமது நிலையையும், கடவுள் மதம் என்பது பற்றி நாம் கொண்டுள்ள கருத்தின் நிலையையும் சற்று விளக்கி விட வேண்டுமென்பதாகக் கருதி இத்தலைப்புக் கொடுத்து எழுதப் புகுந்தோம். இவைகளைப் பற்றி இதற்கு முன்னும் பலதடவை எழுதியுள்ளோம் ஆயினும் அவை களையும்விட இது சற்றுத் தெளிவாக இருக்கலாம் என்கின்ற எண்ணத்தின் மீதே இதை எழுதுகின்றோம். வாசகர்கள் தயவு செய்து இதைச் சற்று நிதானமாகவும் கவனமாகவும் படித்துப்பார்க்கும் படி வேண்டுகின்றோம். இக் கட்டுரை யானது இதே தலைப்பின் கீழ் திருநெல்வேலி ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மகாநாட்டின் முடிவுரை யின்போது நம்மால் எடுத்துச் சொல்லப் பட்டதை அனு சரித்தும் சில நண்பர்கள் அதை விளக்கித் தலையங்கமாக எழுதும் படி சொன்னதை அனுசரித்தும் எழுதப்பட்டதாகும்.

கவலை இல்லை

முதலாவதாக, நமக்குக் கடவுளைப் பற்றியாவது மதத்தைப் பற்றியாவது சிறிதும் கவலை இல்லை என்பதாகவும், கஷ்டப்படும் மக்களின் துன்பம் நீங்க அவர்களுக்கு அறிவு, ஆற்றல் இன்பம் ஆகியவைகளில் உள்ள கட்டுப்பாட்டை உடைத்து, விடுதலையை உண்டாக்க வேண்டும் என்பதே முக்கிய கவலை என்பதாகவும் அநேக தடவைகளில் வெளியிட்டிருக்கின்றோம். அதுவும் பலர் நம்முடைய இம்முயற்சியில் கடவுளையும் மதத்தையும் கொண்டுவந்து குறுக்கே போட்டுவிட்டதால் தான் நாம் அதைப் பற்றி கவலையில்லை என்று சொல்ல வேண்டிய தாயிற்றே யொழிய உண்மையில் கடவுளை யும் மதத்தையும் பற்றி பேச வேண்டும் என்கின்ற அவசியத்தையோ ஆசையையோ கொண்டு நாம் அதில் பிரவேசிக்கவில்லை. அதுபோலவேதான் சைவ சமயத்தைப் பற்றியும் நாம் பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டதும் என்போம். எப்படி எனில், திரு.வி. கலியாணசுந்தர முதலியார் நமக்கு எதிராக தம்மால் கூடிய சூழ்ச்சிகள் எல்லாம் செய்து பார்த்தும் ஒன்றிலும் பயன் பெறாததால் கடைசியாகச் சமயமென்றும், சமயப் பெரியார் என்றும் கூறிக் கொண்டு அவ்வார்த் தைகளையே தமது ஆயுதமாகவும், சமய சம்பந்தமான சில பைத்தியக்காரர்களைத் தமக்குப் படையாகவும் வைத்துக் கொண்டு அவர்களைத் தெருவில் இழுத்து நம்மீது உசுப்படுத்திவிட்டுச் சூழ்ச்சிப் போர் தொடுக்க ஆரம்பித்ததன் பலனாய் சைவசமயம் என்பதும் சமயாச்சாரியார்கள் என்பவர்களும் சந்திக்கு வரவேண்டியவர்களானதோடு சைவப் பெரியார்கள் என்பவர்களின் சாயமும் வெளுக்க வேண்டியதாய் விட்டது. எனவே இன்றைய தினம் பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், ராமாயணம், பாரதம் ஆகியவைகளிலுள்ள கதைகளை நம்பி முக்கிய கதாநாயகர்களைக் கடவுள்களாக மதித்து வணக்கம், பூஜை, உற்சவம் செய்ய எவனெவன் சம்மதிக்கின்றானோ அவன் மாத்திரமே கடவுள் நம்பிக்கையும் சமயப் பற்றும் கொண்டவன் என்றும் மற்றவர்கள் நாத்திகர்கள், சமயத் துரோகிகளெனவும் தீர்மானிக்கப்பட்டு அதுவே முடிந்த முடிவாகவும் சொல்லப்பட்டுவிட்டது. இது எப்படி இருந்தபோதிலும், கடவுள் மதம் என்பது என்னவென்பது பற்றியும், இவை எப்படி உண்டாயிற்று என்பது பற்றியும் இவற்றை உண்டாக்கியவர்கள் கெட்ட எண்ணத்தோடு உண்டாக்கினார்களா? அல்லது நல்ல எண்ணத்தோடு உண்டாக்கினார்களா? அல்லது அறியாமையினா லுண்டாக்கினார்களா? என்பவைகளைப் பற்றியும் இவற்றில் நமது அதாவது மக்கள் கடமை என்ன என்பது பற்றியும் சற்று ஆலோசித்து பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

நிலை நிறுத்தவில்லை

முதலாவதாக, இங்கு, குணம், உருவம் பெயரற்ற தன்மையுடைய கடவுள் என்பதைப் பற்றியும் மக்களின் வாழ்க்கை நலத்திற்காக ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள்தான் மதம் என்று சொல்லப்படும் மதத்தைப் பற்றியுமே, இங்கு விவரிக்கக் கருதியுள்ளோமே தவிர மற்றப்படி பல கடவுள்களின் தன்மையையும், மதப்பிரிவுகளான கிறிஸ்து, மகமதியம், ஜைனம், பௌத்த சீக்கிய, சைவ, வைணவ, நிரீச் சுரவாத, உலகாயுத, சாக்கிய, வாம முதலிய பல உள் மதங் களைப் பற்றியும் நாம் இங்கு தனித்தனியாக பிரஸ்தாபிக்க உத்தேசமில்லை ஏனெனில் அவற்றிற்கு ஏற்கனவே மறுப்புகள் தாராளமாய் வெளிப்பட்டு ஒருவருக் கொருவர் பதில் சொல்ல முடியாமல் தத்துவார்த்தம் என்கின்றதற்குள் அடைக்கலம் புகுந்ததும் நம்பித்தான் ஆகவேண்டும் என்கின்ற நிர்பந்தத்திற்குள் புகுந்துமே தான் ஒவ்வொரு வர்களும் அவரவர்கள் கடவுளையோ, கடவுள் தூதர் களையோ, அவதாரங் களையோ, சமயங்களையோ சமயாச் சாரியார்களையோ காப்பாற்றிக் கொள்ள முடிந்ததே ஒழிய அறிவின் மீதோ ஆராய்ச்சியின் மீதோ, நியாயத்தின் மீதோ, நிலை நிறுத்த முடியாமல் போய்விட்ட விஷயம் உலக மறிந்ததாகும். ஆதலால் இத்தலையங்கத்தில் நாம் அவற்றில் பிரவேசிக்கவில்லை.

கடவுள் நினைப்பு

முதலாவது மக்களுக்குக் கடவுள் எப்பொழுது எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றி ஆராய்வோம். மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கப்பட்ட பிறகுதான் கடவுள் என்கின்ற ஒரு வஸ்து நிச்சயம் ஏற்பட்டு இருக்க வேண்டும். இதை யாரும் மறுக்கமுடியாது. ஏனெனில் இப்போது கூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும் நினைப்பும் ஏற்படுகின்றதே தவிர தானாக ஏற்படுவ தில்லை. எப்படி எனில் சிறு குழந்தைகளை நாம் கட்கத்தில் இறுக்கிக் கொண்டு ஒரு உருவத்தையோ வஸ்துவையோ காட்டி, சாமி! என்றும் அதைக் கைக்கூப்பி கும்பிடு என்றும் சொல்லிக் கொடுத்த பிறகே குழந்தை சாமியையும் கும்பிடவும் அறிகின்றது. அதுபோல ஆதியிலும் மனிதன் பிறந்த பிறகுதான் அவன் மனத்திற்குக் கடவுள் நினைப்பு தோன்றியிருக்கவேண்டும். அது எப்படி என்றும் எப்போ தென்றும் பார்ப்போமானால் சாதாரணமாக மனிதனுக்கு அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சி வளர்ச்சியும் இல்லாதக் காலத்தில் தான் கடவுள் நினைப்பு தோன்றி இருக்கவேண்டும். கடவுள் என்பது கடவுள், தெய்வம், அல்லா, காட், என்ற தமிழ் சமஸ்கிருதம், துலுக்கு, ஆங்கிலம் முதலிய பல பாஷைகளில் பல சொற்களாக இருந்தாலும் குறியில் அர்த்தத்தில் உலகத் தோற்றத்திற்கும் நடப்பிற்கும் அழிவிற்கும் காரணமாகிய ஒரு சக்தியையே குறிப்பிடுவதாகவும் அதாவது சிலரால் இயற்கை என்று சொல்லப்படுமானால் அவ்வியற்கையின் இயங்குதலுக்கும், பஞ்சபூதக் கூட்டு என்று சொல்லப்படுமானால் அக்கூட்டின் சேர்க்கைக்கும் ஏதாவது ஒரு சக்தி இருந்து தானே ஆக வேண்டும் என்பதுவும், அந்த சக்திதான் கடவுள், எல்லாம் வல்ல ஆண்டவன் – அல்லா, காட் என்று சொல்லப்படு கின்றதென்று சொல்வதானாலும் அந்த சக்தி என்னும் கடவுளே எப்படி மக்கள் மனத்திற்கு வந்தார் என்பதுதான் இங்கு விசாரிக்கத்தக்கதாயிருக் கின்றது.

இப்போதும் மனிதன் தன்னால் முடிந்தவைகள் போக முடியாதவைகளுக்கே கடவுள் சக்தி என்று சொல்லிவிடுகின்றான். உதாரணமாக சிறு குழந்தைகள் ஒரு ஜால வேடிக்கைக் காரனுடைய செய்கையை மந்திர சக்தி என்றும், தெய்வசக்தி என்றும், உபாசனாச் சக்தி என்றும் குட்டிச் சாத்தான் சக்தி என்றும் கருதுகிறார்கள். அப்பையனாயிருந்து அப்படியே கருதியிருந்த நாம் இப்போது அறிவு வளர்ச்சி பெற்றபின் அந்த ஜால வேடிக்கைகளை மந்திர சக்தி என்று எண்ணாமல் தந்திரம், கைத்திறம் என்றும் சொல்லுகின்றோம் மற்றும் அந்த ஜாலவேடிக்கைக்காரன் செய்யும் ஜாலத்தின் வழி இன்னதென்று நமக்குத் தெரியாவிட்டாலும் கூட நாம் அவற்றை ஒரு காலமும் மந்திர சக்தி என்றோ தெய்வ சக்தி என்றோ சொல்லாமல் இது ஏதோ தந்திரம் தானே ஒழிய வேறில்லை. ஆனால் அது இன்னது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி விடுகின்றோம்.

அறிவு வளர்ச்சி

எனவே ஒரே காரியம் நமக்கே ஒரு காலத்தில் மந்திரமாகவும் தெய்வ சக்தியாகவும் தோன்றியது. பிறகு அது தந்திரம் என்று தோன்றக் காரணம் என்னவென்றால் அது அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சிப் பலனுமேயாகும். அதுபோலவே நமக்கு இப்போது தெய்வசக்தி கடவுள் சக்தி என்று தோன்றுகின்ற காரியமெல்லாம் மேல் நாட்டாருக்குக் கடவுள் சக்தியாகத் தோன்றுவதில்லை. இப்போது வானசாஸ்திரம் தெரிந்தவர்கள் பூமி, சூரியன் இவற்றின் இயங்குதல் அதன் கால அளவு ஆகியவைகளைக் கண்டு பிடித்த பின் சூரியனைப் பாம்பு கடிப்பதில்லை என்பதையும் ஒருவாறு நன்றாய் உணருகின்றோம்; அது போலவே எங் கிருந்து எப்படி தண்ணீர் வருகின்ற தென்பது தெரிந்தவுடன் நதிக் கடவுளும் மேகக் கடவுளும் வர்ண பகவானும் சிறிது சிறிதாக நம்மனதில் மறையத் தொடங்கி விட்டன. அது போலவே வியாதிகள் எப்படி வருகின்றன என்கின்றதான சுகாதார, உடற்கூறு ஆராய்ச்சியும் நமக்கு தெரியப் புறப்பட்ட பின்பு பேதி, மாரி அம்மை முதலிய தெய்வங்களின் உணர்ச்சியும் மதிப்பும் சிறிது சிறிதாக மறையத் தலைப்பட்டன. இதுபோலவே காற்று, கருப்பு, பேய் முதலியவைகளும் மறைந்து வருகின்றன. இந்த முறையில் இனியும் நமக்குள் மீதி இருக்கும் கடவுள் உணர்ச்சிகள் எவை என்று பார்ப்போமானால் காரண காரியம் முதலிய விவரங்களை கண்டு பிடிக்க முடியாதவைகளையே கடவுள் செயலென் றும், கடவுள் சக்தி என்றும் சொல்லி வருகின்றோம்.

பக்குவம் தேவை

இப்போது நம் மனத்திற்கு எட்டாத, காரியங்களை மேனாட்டார் செய்யும் போது நாம் அதிசயப்பட்டாலும் அதை மந்திர சக்தி என்று நாம் சொல்லத் துணிவதில்லை. இந்த அளவுக்கு நாம் தைரியமாக வந்து விட்டோமென்றாலும் நமக்குப் பூரண அறிவும் ஆராய்ச்சி முடிவும் ஏற்படும் வரை கடவுள் உணர்ச்சி நம்மை விட்டு விலக முடியாது. அன்றியும், வாழ்க்கையின் பக்குவமடையாதவர்களுக்குக் கடவுள் உணர்ச்சி இருந்தே தீர வேண்டியதாயுமிருக்கின்றது. அதாவது கஷ்டப்பட்டு ஏமாற்றமடைந்தவனுக்கும் ஈடு செய்ய முடியாத நஷ்டமடைந்தவனுக்கும், கடவுள் செயல் என்பதைச் சொல்லித்தான். ஆறுதலையும் திருப்தியையும் அடையச் செய்ய வேண்டியிருக்கின்றது. நல்ல அறிவும் ஆராய்ச்சியும் உடையவர்களும் தங்களுக்கு காரண காரியம் எட்டாத இடத்திலும், ஈடு செய்ய முடியாத இடத் திலும் கடவுள் செயல் என்பதைக் கொண்டு, தான் திருப்தி அடைகின்றார்கள். அப்போது தங்கள் அறிவுக்கு மேல் ஒன்று இருப்பதை எண்ணித் தீர வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் உறுதியான பக்குவமடைந்தவர்கள் எந்த விஷயத்திற்கும் தங்களுக்குத் தெரிந்த காரணத்தைக் கொண்டு சமாதானமடைவதும் தெரியாததாயிருந்தால் நமக்கு எட்டவில்லை என்றோ, அல்லது இதுதான் இயற்கை என்றோ கருதி திருப்தியடைவதுமாய் இருக்கின்றார்கள். எனவே சாதாரண மக்கள் கடவுளுக்கும் சற்று அறிவுடைய மக்கள் கடவுளுக்கும் ஆராய்ச்சிக்காரர்கள் கடவுளுக்கும் பக்குவமடைந்தவர்கள் எண்ணத்திற்கும் அநேக வித்தியாசமுண்டு. ஒருவொருக்கொருவர் கடவுள் வணக்கத்திலும், கடவுள்மீது சுமத்தும் பொறுப்பிலும் அநேக வித்தியாச முண்டு.

– ‘குடிஅரசு’ – தலையங்கம் – 28.07.1929