திங்கள், 26 ஜூன், 2017

சைனா - சைவம்



09.02.1930 - குடிஅரசிலிருந்து...
சைவன் : - அய்யா தாங்கள் இப்போது மலேயா நாட்டுக்குப் போய் வந்த பிறகு சைவமாய் விட்டீர்களாமே உண்மைதானா?
வைணவன் : - ஆம் அய்யா, நான் நாலுகால் பிராணிகளில் கட்டில், மேஜை, நாற்காலி ஆகியவைகளையும், இரண்டுகால் பிராணிகளில் ஏணி வகையறாவும், ஆகாயத்தில் பறப்பவைகளில் பட்டம், ஏரோபிளேன் வகையறாக்களையும், நீரில் வாழ்பவைகளில் கப்பல், படகு, கட்டுமரம் முதலியவைகளையும், பூமியில் நகருபவைகளில் வண்டி, மோட்டார் கார் முதலியவைகளையும் நான் சாப்பிடுவதில்லை. இவைகளைச் சாப்பிடுவது பாவம் என்று எனக்குப் பட்டதினாலும் சைனாக்காரர்களைப் பின்பற்றுவ தாலும் இம்மாதிரி முடிவு செய்துவிட்டேன்.
சைவன் : - அப்படியா இது நல்ல சைவம்தான். எனக்குச் சற்று வேலை இருக்கின்றது. சீக்கிரம் போகவேண்டும். நான் போய்விட்டு வருகிறேன். (என்று சொல்லிக் கொண்டே தன்னை எங்கு சாப்பிட்டு விடுவானோ? என்று நினைத்து ஓடிவிட்டார்.)

உதிர்ந்த மலர்கள்
16. 02.1930 - குடிஅரசிலிருந்து... 
1.  புராணங்களுக்கு மதிப்பு ஏற்பட்டதற்குக் காரணம் என்ன வென்றால் அவை  எவ்வளவு ஆபாசமாகவும் காட்டு மிராண்டித் தனமாகவும் எழுதி இருந்தாலும் முதலிலும் கடைசியிலும் இப் புராணத்தைப் படித்தோருக்கு மோட்சம், படிக்க வைத்தோருக்கு மோட்சம், கேட்டோருக்கு மோட்சம், கேட்டவரைக் கண்டோருக்கு மோட்சம், கண்டவரைக்  கண்டால் மோட்சம் கிடைப்பதுடன் வாழ்கையில் பணமும் பொருளும் சேருமென்றும் செத்த பிறகு இராஜாவாய் பிரபுவாய் மறுஜென்மம் எடுக்கப்படும் என்னும் எழுதி வைத்ததே காரணமாகும்.
2. எவனொருவன் கடவுளிடத்திலும் அதைப்பற்றிச் சொல்லும் மதக் கொள்கைகளிடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங்களும் அவைகளுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றானோ அவன் பூரண சுயேச்சை என்றும் பதம் வாயினால் உச்சரிக்கக்கூட யோக்கியதை அற்றவனாவான்.
3. புராணங்களின் ஆபாசங்களை நன்றாய் உணர்ந்தவர்கள் எல்லாம் அவற்றை வெளியில் சொல்லுவதற்குப் பயப்பட்டுக் கொண்டிருந்ததற்குக் காரணம் என்னவென்றால் பார்ப்பனர்கள் தனக்கு நாஸ்திகன் என்று பட்டம் கட்டி ஒழித்து விடுவார்கள் என்கின்ற பயம்தான். ஜாதி மத வித்தியாசங்களும், அவற்றின் உயர்வு தாழ்வு நிலைகளும், சிறிதும் அழியாமல் அப்படியே இருக்கவேண்டும் என்று சொல்லுகின்றவர்கள் ஜாதிகளின் பேராலும், மதங்களின் பேராலும் கேட்கப்படும் விகிதாச்சார உரிமைகளை ஏன் ஆட்சேபிக்கின்றார்கள் என்றும் அப்படி ஆட்சேபிப்பதில் ஏதாவது நல்ல எண்ணமோ, நாணயமோ, நியாயமோ இருக்க முடியுமா என்றும்தான் கேட்கின்றேன்.


-விடுதலை,16.6.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக