வெள்ளி, 30 ஜூன், 2017

பொறுக்கு மணிகள் (சித்திரபுத்திரன்)

23.10.1943  - குடிஅரசிலிருந்து...

 

மனிதன் யார் என்றால் நன்றி விசுவாச முடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப்பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும் துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ்சியும் வாழும் ஜீவப் பிராணிகளேயாகும்.

தன் வாழ்க்கை ஜீவியத்துக்கு உலக வழக்கில் யோக்கியமான மார்க்கமில்லாதவன் எவனும் யோக்கியனாக இருக்கமுடியாது ? இருந்தால் அது மிக மிக அதிசயம்தான். இதற்கு உதாரணம் கோர்ட்களில் ஜட்ஜும் வக்கீலும் வாதி, பிரதிவாதி, சாட்சி ஆகியவர்களை உனக்கு என்ன ஜீவனம் என்று ஒருகேள்வி கேட்பதும்; மக்கள் அதிகப் படுத்திச் சொல்லுவதுமே போதுமானது.

பக்தி எதிலிருந்து வளருகின்றது? ஆசையில் இருந்தும், அன்னியர் பார்த்து மதிப்பதிலிருந்தும் வளருகிறது.

உண்மையான விபசாரித்தனம் எதிலிருந்து வளருகிறது? இயற்கை உணர்ச்சியில் இருந்தும், ஆண், பெண்கள் தங்களை அலங்கரித்துக் காட்டிக் கொள்ளுவதிலிருந்தும் வளருகிறது.

சமுதாய சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொதுஉடைமை என்பதைப் போலவே நாஸ்திகமும் அறிவின் உண்மையான கடைசி எல்லையாகும். ஆனால் அறிவும்,துணிவும், தனக்கென வாழாது தன்னல மறுப்பும் கொண்டவனே, பொது உடமையையும் நாஸ்திகத்தையும் பயன்படும்படி எடுத்துச் சொல்ல முடியும். இவை இல்லாதவர்கள அவற்றின் பேரால் பிழைக்கத்தான் முடியும்.

தலைவிதியும், மோட்ச நரகமும் ஒன்றுக் கொன்று முரண்பட்டதாயினும், மக்களின் பேரா சையும் மடமையும் இரண்டையும் நம்பச்செய்கிறது. மனி தர்கள், எப்படி உண்மையான மக்களை மதிக்கா மலும் நம்பாமலும், அயோக்கியர்களையும் வேஷக் காரர்களையும் நம்புகிறார்களோ, அதுபோல் தான் உண்மையான மதத்தை (கொள்கைளை) நம்பாமல், புரட்டும் பித்தலாட்டமும் உள்ள மதங்களையே நம்புகிறார்கள். ஏனெனில் மக்கள் சுபாவம் ஆசை யும் சுயாநலமுமே ஆனதால், புரட்டும் பித்த லாட்டமும் தான் ஆசையையும், சுயநலத்தையும் திருப்தி செய்வதாக வாக்களிக்கிறது.

ஆசையும் சுயநலமுமற்றவனுக்கு கடவுளும் மோட்சமும் தேவையே இல்லை என்பதோடு அயோக்கியர்களையும், பித்தலாட்டக்காரர்களையும் மதிக்கவேண்டிய அவசியமே இல்லை.

ஒரு நல்ல தகப்பன், தன் வீட்டுப் புறவடையில் ஒரு கிணற்றை வெட்டி, அதற்குச் சுற்றிலும் கைபிடிச் சுவர் கட்டாமல் தன் குழந்தை புத்தி இருந்தால் ஜாக்கிரதையாய் நடக்கட்டும் இல்லாவிட்டால் விழுந்து சாகட்டும் என்று சொல்லுவானா? அது போலவே, ஒரு நல்ல கடவுள், சாத்தானை (தீமை களை) உண்டாக்கி விட்டுத் தனது பிள்ளைகளான குழந்தைகளை புத்தி இருந்தால் சாத்தானுக்குத் தப்பிப் பிழைக்கட்டும் இல்லாவிட்டால் சாத்தானால் நரகத்தில் வீழட்டும் என்று சொல்லுவானா?
-விடுதலை,30.6.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக