செவ்வாய், 27 ஜூன், 2017

தீண்டாதார் துன்பம்

21.02.1932  - குடிஅரசிலிருந்து...



வெள்ளைக்காரர்களைப் பார்த்து நீங்கள் எங்களைக் கொடுமைப்படுத்துகிறீர்கள்! ஆகையால், உங்களுடைய அரசாட்சி எங்களுக்குப் பிடிக்கவில்லை; ராஜ்யத்தை எங் களிடம் விட்டு விட்டு நீங்கள் உங்கள் தேசத்திற்குப் போய் விடுங்கள்; நாங்கள் ஒற்றுமையாயிருந்து எங்கள் தேசத்தை ஆண்டு கொள்வோம் என்று சுயராஜ்யவாதிகள் கூச்சலிடு கின்றனர்; இதற்காகச் சட்டமறுப்பு செய்கின்றனர்; சிறைக்குச் செல்லுகின்றனர்; இன்னும் சத்தியாக்கிரகத்தின் பெயரால் என்னென்ன காரியங்களையோ செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால், வடநாட்டில் இந்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள கலகமும் வெறுப்பும், இன்னும் ஓய்ந்த பாடில்லை. இவர்கள் ஒற்றுமையாய் வாழ்வதற்குரிய காரியங்களைச் செய்யவும் இல்லை.

இது ஒருபுறமிருக்க மிகவும் பரிதாபகரமான வாழ்வில் இருந்து துன்பப்படும் ஆதிதிராவிடர் போன்ற தீண்டாத மக் களின் கதி இன்னும் மோசமானதாகவே இருந்து கொண்டிருக்கின்றது. தீண்டாதவர்கள் கோயில் பிரவேசத்தின் பொருட்டு நாசிக்கிலும், குருவாயூரிலும் சத்தியாக்கிரகம் புரிந்து கொண்டு துன்பப்படுதலும், அவர்களை வைதிக இந்துக்கள் எதிர்த்து துன்பப்படுத்துதலும் ஒருபுறமிருக்க, அவர்கள் தங்கள் மட்டிலாவது சுத்தமாகவும், நாகரிகமாகவும், சௌகரியமாகவும் வாழக்கூட மனஞ்சகிக்காத இந்துக்கள் அவர்களுக்குப் பண்ணும் கொடுமை மிகவும் அதீதமாக இருக்கின்றது என்ற விஷயம் நமது நாட்டு மக்களுக்குச் தெரியாததல்ல. சென்ற ஆண்டில் ராமநாதபுரம் ஜில்லாவில் ஜாதி இந்துக்கள் தீண்டாத வர்களுக்குச் செய்த கொடுமையும், திருச்சி ஜில்லாவில் ஜாதி இந்துக்கள் தீண்டாதவர்களுக்குச் செய்த கொடுமையும் இன்னும் மறக்கப்படவில்லை. இதுபோலவே ஒவ்வொரு கிராமத்திலும் தீண்டாதவர்களுக்குப் பல கஷ்டங்களிலிருந்து வருகின்றன. ஆனால், அத்தீண்டாத மக்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு உயர்ஜாதி இந்துக்களின் கையையே எதிர்பார்த் திருப்பதாலும், பெரும்பாலானவர்கள் கல்வி அறிவும் உலக நாகரிக உணர்ச்சியும் இல்லாமையால் தங்களை ஆண்டவன் என்பவன் தீண்டதகாதவராகவே கஷ்டப்படும்படி படைத்தான் எல்லாம் தமது தலை விதியின்படி நடக்கும் என்ற நம்பிக்கை யுடையவர் களாயிருப்பதனாலும் தங்கள் துன்பத்தைச் சகித்துக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.

இப்படி இல்லாமல் தீண்டாத மக்கள் கொஞ்சம் சுயமரியாதை உணர்ச்சி பெற்று தங்களைச் சீர்திருத்தம் செய்துகொள்ள முந்துவார்களானால், அப்பொழுதே அவர்களை முன்னேற ஒட்டாமல் நசுக்கி பழைய சாக்கடையிலேயே அமிழ்த்தி வைக்க ஜாதி இந்துக்கள் தயாராகிவிடுகிறார்கள். இதற்கு உதாரணமாக இப்பொழுது சேலம் ஜில்லா, ராசிபுரம் தாலுகா, தாத்தையங்கார் பட்டிகிராமத்திலிருக் கும் தீண்டத்தகாத மக்களை, அவர்கள் முன்னேற்ற மடையாதபடி அடக்கி வைக்க உயர்ஜாதி மக்கள் அவர்களுக்கு விதித்திருக் கும் நிபந்தனைகளைப் பார்த்தால் விளங்கும். இதைப் பற்றி அவர்கள் சேலம் ஜில்லா கலெக்ட ருக்கும், போலீஸ் சூப்பரிண்டென்டிற்கும் செய்து கொண்டி ருக்கும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு காட்டியிருக்கின்றனர்.

எங்களூர் குடியானவர்கள், நாங்கள் நாகரிகமாக இருப்ப தற்காகப் பொறாமைப்பட்டு எங்களைக் கண்ட இடங்களில் எல்லாம் அடித்தும், எங்கள் தெருப் பெண்களை வாய்க்கு வந்தபடி திட்டியும் கஷ்டப் படுத்துகிறார்கள். அதோடு அல்லாமல் கீழ்க்கண்ட நிபந்தனைகள் ஏற்படுத்தி அதன்படி நடக்காது போனால் எங்கள் கால்களை ஒடித்து விடுவோம் என்று சொல்லுகிறார்கள்.

நிபந்தனைகள்:

1. பறையர்கள் கிராப்பு வைக்கக் கூடாது

2. பள்ளிக்கூடம் தெருவில் இருக்கவும் கூடாது; படிக்கவும் கூடாது.

3. வெள்ளை வேஷ்டிக் கட்டக்கூடாது; அழுக்கு வேஷ்டியிலிருந்தாலும் முழங்காலுக்கு மேல் கட்டவேண்டும்.

4. பெண்கள் மாராடை போடக்கூடாது; மீறி மாராடைப் போட்டால் மாரை அறுத்துவிடுவது.

5. நாகரிகமான நகைகள் போடக்கூடாது.

6. குடைகள் பிடிக்கவும் கூடாது, குடையிருந்தால் நெருப்பு வைத்து கொளுத்தி விடவேண்டும்.

7. பெட்டிகள் கையில் கொண்டு வரக்கூடாது; புஸ்தகமும் கையில் பிடிக்கக்கூடாது (தமிழ்நாடு)

என்பது தீண்டாதவர்களின் விண்ணப்பம். இந்த கொடுமைகளை யார் பொறுத்துக் கொண்டிருக்க முடியும் என்று கேட்கின்றோம். இந்த நிலைதான் கிராமாந்திரங்களி ளெல்லாம் இருந்து வருகின்றது. இதை மாற்றுவதற்கு இது வரையிலும் என்ன முயற்சியை, எந்த தேசியவாதிகள் செய் தார்கள் என்று கேட்கிறோம். அந்நியர் கையில் அதிகாரமும், தாங்கள் சுதந்திரமின்றி அந்நிய நாட்டினருக்கு அடிமையாக இருக்கும் இக்காலத் திலேயே இந்த உயர்ஜாதி இந்துக்கள் தீண்டாதவர்களுக்கு இக்கொடுமையைச் செய்வார் காளாயின் இவர்கள் கையில் ஆட்சியும் அதிகாரமும் கிடைத்துவிட்டால் அவர்களைச் சித்திரவதை செய்யமாட்டார்களா? என்று யோசித்துப்பாருங்கள்.

இந்த மாதிரி வலுத்தவர்கள் இளைத்தவர்களுக்குக் கொடுமை செய்வதைப் பொருட்டுபடுத்தாத ஒரு தேசியம், அல்லது ராஜ்ஜியம் எதற்குப் பயன்படும்? இவ்வாறு தீண்டாத வர்களைக் கொடுமைப்படுத்தும் எண்ணத்தை உயர்ஜாதி இந்துக்களின் மனதில் பதிய வைத்திருப்பதற்குக் காரணம், பாழும் மதமும், வைதிகமும், பழக்க வழக்கங்களுமே அன்றோ? ஆகையால் இந்த பாழும் மதமும், வைதிகமும், பழக்க வழக்க மூட நம்பிக்கையும் தொலைந்தாலொழிய உயர்ஜாதி இந்துக்களின் மனத்தில் மாறுதல் ஏற்படுமா? ஒரு காலும் முடியாது.

ஆகவே, இனியும் தீண்டாதவர்கள் கடவுளையோ மதத் தையோ நம்பிக்கொண்டிருந்தால் ஒரு சிறிதும் முன்னேற்ற மடையப் போவதில்லை. தம்மையே நம்பி இடைவிடாது கிளர்ச்சி செய்வதன் மூலமும் வைதிகர்களாகிய அரசியல் கிளர்ச்சிக்காரர்கள் எல்லாம் சுயராஜ்யம் வந்தபிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறும் வார்த்தைக்கு ஏமாறாமல் முயற்சிசெய்வதன் மூலமும்தான், தாங்கள் விடுதலைப் பெற்று மனிதர்களாக வாழமுடியு மென்று எச்சரிக்கின்றோம்.

மனிதனாகப் பிறந்த யாரும் சுதந்திரமாக வாழவும், மனிதத் தன்மையுடன் வாழவும் விரும் புவதுதான் இயற்கை. எவனும் அடிமையாகவும், அறிவற்றவனாகவும், மனிதனாக மதிக்கப்படாமல் வாழவும் விரும்பமாட்டான். ஆகவே, எந்த நாட்டிலும் அந்நாட்டு மக்கள் அந்த நாட்டின் சுதந்திரத்திற்குத் தடையாக நிற்க மாட்டார்கள். 
- தந்தை பெரியார்

-விடுதலை,24.6.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக