வெள்ளி, 15 டிசம்பர், 2017

விரதப் புரட்டு - சித்திரபுத்திரன் -

06.04.1930- குடிஅரசிலிருந்து 
உமாமகேசுவர பூஜை விரதம்

 



நைமி சாரண்யவாசிகளுக்கு சூத புராணிகர் சொன்னது

ஆனந்ததேசத்தில் வேதவிரதன் என்னும் பிராம ணனுக்கு சாரதை என்று ஒரு பெண் இருந்தாள். அந்த ஊரில் மனைவியை இழந்த பத்மநாபன் என்னும் கிழப்பார்ப்பான் அந்த பெண்ணின் தகப்பனுக்கு நிறைய பணம் கொடுத்து தனக்கு அந்தப் பெண்ணை இரண்டாவது பெண்ஜாதியாக விவாகம் செய்துகொண்டான். அந்தக் கிழப்பார்ப்பான் மணக்கோலம் முடியும் முன்பே விஷம் தீண்டி இறந்துபோனான். பிறகு அந்தப் பெண் தகப்பன் வீட்டிலேயே இருந்தாள். சிலநாள் பொறுத்து ஒரு முனிவர் சாரதையின் வீட்டிற்கு வந்தார். சாரதை அவருக்கு மரியாதை செய்தாள்.

உடனே, அந்த முனிவர் சாரதையை நீ புருஷனுடன் இன்பமாய் வாழ்ந்து நல்ல பிள்ளைகளை பெறக்கடவாய் என்று ஆசீர்வாதம் செய்தார். அதற்கு சாரதை பூர்வஜன்ம கருமத்தின் பலனாய் நான் விதவை யாகி விட்டதால், தங்களின் ஆசீர்வாதம் பலியாமல் வீணாய்ப் போய் விட்டதே என்றாள்.

அதற்கு அந்த ரிஷி நான் கண் தெரியாத குருடனா னதால் அறியாமல் அந்தப் படி ஆசீர்வாதம் செய்ய நேரிட்டு விட்டது. ஆனாலும் அது பலிக்கும்படி செய்கிறேன் பார் என்று சொன்னார். என் புருஷன் இறந்து வெகுநாளாய் விட்டதே. இனி அது எப்படிப் பலிக்கும் என்று சாரதை கேட்க அதற்கு அவர் நீ உமாமகேவர விரதம் அனுஷ்டித்து வந்தால் கண்டிப்பாய் நீ உத்தேசித்த காரியம் கைகூடுமென்று கூறினார்.

அவ்விரதம் அனுஷ்டிப்பதெப்படி? என்று சாரதை கேட்டாள். அதற்கு  முனி சொல்வதாவது:

சித்திரை அல்லது மார்கழி மாதத்தில் ஒரு பிராமணனை அவன் மனைவியுடன் நல்ல பீடத்தில் உட்காரவைத்து அவர்களைப் பார்வதி பரமசிவனாகப் பாவித்து மலர் களால் அர்ச்சித்து தினமும் அன்ன ஆகாரமிட்டு வருஷக் கணக்காய் பூசைசெய்து பார்வதி பரமசிவ உருவத்தை மனதில் நினைத்து அதற்கு விரத அபிஷேகம் செய்து ஆராதித்து பஞ்சாஷரத்தை தியானித்துக் கொண்டிருந்தால் நினைத்த காரியமெல்லாம் கைகூடும் என்றார்.

அதுகேட்ட சாரதையானவள் அந்தப்படியே அது முதல் தனக்கு முனிவரின் ஆசீர்வாதம் பலிக்க வேண்டுமென்று கருத்தில் கொண்டு முனிவர் சொன்னபடி உமாமகேசுவர விரதத்தை கிரமமாய் அனுஷ்டித்து வந்தாள். உடனே பார்வதிதேவி சாரதைக்கு பிரத்தியட்ச மாகி உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டாள்.

சாரதை, எனக்கு புருஷன் வேண்டும் என்றாள். பார்வதி அப்படியே உன்னை ஒரு புருஷன் தினமும் வந்து சொப்பனத்தில் புணருவான். அதனால் நல்ல ஒரு குழந்தை பிறக்கும் என்று வரம் கொடுத்தாள். அதுமுதல் சாரதையின் சொப்பனத்தில் தினமும் ஒரு புருஷன் வந்து புணர்ந்து கொண்டே இருந்தான். அதனால் சாரதைக்கு கர்ப்பமும் உண்டாயிற்று. அதைக்கண்ட அவ்வூரார் எல்லோரும் சாரதை சோரம்போய் கர்ப்பம் ஆகிவிட்டாள் என்று பழித்தார்கள். இதைக் கண்டு சாரதை துக்கப்பட்டாள். பிறகு பழித்தவர்கள் வாய் அழுகி அதில் புழுவுதிரும்படி பார்வதி செய்துவிட்டாள். 10 மாதம் பொறுத்து சாரதை ஒரு புத்திரனைப் பெற்றாள். அதற்கு சாரதேயன் என்று பெயர் சூட்டி மகாமகிமை பொருந்திய சிவராத்திரியன்று தாயும் பிள்ளையும் கோகர்ணத்திற்கு யாத்திரை சென் றார்கள். செல்லும் வழியில் சொப்பனத்தில் வந்த புருஷன் நேரில் வந்து சாரதையுடன் கலந்துகொண்டான்.

பிறகு கொஞ்சகாலம் சாரதையும் புருஷனும் சந்தோஷமாய் வாழ்ந்து இன்பமனுபவித்து புருஷன் இறந்துபோனான். புருஷன் இறந்ததும் உடனே சாரதை உடன்கட்டையேறி இருவரும் சிவபதமடைந்தார்கள் என்று நைமி சாரண்ய வாசிகளுக்கு சூதக முனிவர் வியாசரிடம் கேட்டுத் தெரிந்ததை சொல்லுகிறேன், என்று சொன்னார்.

இந்த சரிதை பிரமோத்திர புராணத்தில் உமாமகேசுவர விரத மகிமையும் விரதத்தின் பலனும் என்கின்ற தலைப் பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதைக் கவனிப்போம்.

இந்தக் கதையின் ஆபாசம் எவ்வளவு மோசமாயிருக்கிறது என்பதை வாசகர்களே யோசித்துப் பாருங்கள். ஒரு சிறு பெண்ணை ஒரு கிழவன் அந்தக் காலத்திலும் கட்டிக் கொள்ளுகின்ற வழக்கமும், தகப்பன் பணம் வாங்கிக் கொண்டு சாகப் போகும் கிழவனுக்கு தனது சிறு பெண்ணை கட்டிக் கொடுக்கும் வழக்கமும், பார்ப்பனர் களுக்குள் இருந்ததாக வைத்துக் கொண்டாலும் புருஷன் இறந்தவுடன் உடன்கட்டையேறாமல் பெண்ஜாதியான (சாரதை) சிறு பெண் இருந்திருக்க முடியுமா? என்பதை நினைத்துப் பாருங்கள். ஒரு சமயம் உடன் கட்டை ஏறாமல் இருந்திருந்தாலும், ஒரு ரிஷிக்கு இந்தப்பெண் விதவை என்ற சங்கதி தெரியாமல் போகுமா? ரிஷிக்கு ஒரு சமயம் அந்தப்படி தெரியாமல் போயிருந்தாலும் ஒரு குருட்டு ரிஷி தெரியாமல் சொல்லிவிட்ட காரியம்  ஒரு விரதம் அனுஷ்டிப்பதால் கைகூடிவிடுமா? அந்தப் படி கூடுமா னால் பார்ப்பனனையும் அவன் பெண்ஜாதியையும் பார்வதி பரமசிவன்போல் எண்ணி பூசை செய்தால் பார்வதி வந்து விடுவாளா? அப்படி வருவதாயிருந்தாலும் பார்வதி நேரில் புருஷனை கொடுக்காமல் தூக்கத்தின் போது கனவில் வந்து புணர்ந்து விட்டு போகும்படி கட்டளையிடு வாளா? அப்படி கட்டளையிடுவதானாலும் கனவில் புணர்ந்ததற்கு கனவில் கர்ப்பமுண்டு பண்ணாமல் விழித்த பிறகுங்கூட அக்கர்ப்பம் இருக்கும் படி செய்வாளா? அந்தப்படித்தான் செய்தாலும் அதன் காரணத்தை பொதுஜனங்களுக்கு தெரியப்படுத்தாமல் இரகசியமாய் இருக்கச் செய்து இந்த இரகசியம் தெரியாத பொதுஜனங்கள் சாரதையின் கர்ப்பத்தைப் பற்றி சந்தேகப் பட்டால் அதற்கு பார்வதி திருப்தி அடையும் படி சமாதானம் சொல்லாமல் சந்தேகப் பட்டவர்கள் வாய் அழுகி புழுக்கள் தள்ளும்படி செய்வது யோக்கியமாகுமா? அன்றியும் கோகர்ணத்திற்கு போகும் வழியில் அந்த சொப்பனப் புருஷனை வரும்படி செய்த பார்வதியும் பரமசிவனும் பொதுஜனங்கள் சந்தேகப் படும் போது வரும்படி செய்திருக்கப்படாதா? அன்றியும் அந்தப் புருஷனும் சாவானேன்? அப்படியே காலம் வந்து செத்து இருந்தாலும் முன்னைய கிழப்புருஷனுக்கு உடன் கட்டை ஏறாத குமரி சாரதி இந்தப் புருஷனுக்கு ஏன் கிழவி ஆனபின் உடன்கட்டை ஏறினாள்?

வாசகர்களே! வேதப்புரட்டு, இதிகாசப் புரட்டு, புராணப் புரட்டு என்பதுபோல் இந்த விரதப் புரட்டும் எவ்வளவு முட்டாள்தனமானதும் அயோக்கியத்தன மானதும் சுயநல சூழ்ச்சி கொண்டதுமாய் இருக்கின்றது என்பதை நன்றாய் கவனித்துப் பாருங்கள். விரதம் என்றால் ஒரு பார்ப்பன னையும், பார்ப்பனத்தியையும் பார்வதி பரமசிவன்போல் பாவித்து, அபிஷேகம், பூஜை ஆராதனை செய்தால் விதவைகளுக்கு புருஷன் சொப்பனத்தில் வருவான் என்பது எவ்வளவு அயோக்கியத்தனமான கதை?

இப்படித்தானே இப்போதுள்ள விதவைகள் புருஷ ஆசைக்கு விரதமிருந்து சொப்பனத்தில் புருஷருடன் புணர்ந்து கொண்டிருப்பார்கள். சாரதையைப்போல் அனேக விதவைகள் இப்போதும் கர்ப்பமானாலும் பழி சொல்லுகின்றவர்கள் வாயில் பார்வதி புழுக்கள் தள்ளச் செய்யாததால்தான் அந்த விரதமிருக்கும் விதவைகளெல் லாம் கர்ப்பங்களை தாங்களாகவே அழித்து விடுகின் றார்கள் போலும். பார்ப்பன சூழ்ச்சி எவ்வளவு மோசமானது என்பதை இதிலிருந்து விரதமிருக்கும் வைதிகர்களும் விரதமிருக்கும் பெண்களும் புருஷர்களும் அறிந்து கொள்ளுங்கள். மற்ற விரதங்களைப் பற்றி பின்னால் சமயம் நேர்ந்தபோது எழுதுகிறேன்.

உதிர்ந்த மலர்கள் 
13.04.1930- குடிஅரசிலிருந்து... 

4 மனிதன் ஒரு நாளைக்கு இரண்டு தடவை மலத்தைத் தொடுகின்றான் - அதற்காக உடனே குளிப்பதில்லை - சதா ரோட்டில் மலம் எச்சில் மூத்திரம் ஆகியவைகளை மிதித்துக் கொண்டு நடக்கிறான். அதற்காகவும் உடனே குளிப்பதில்லை. நதிக்கும் குளத்திற்கும் குளிக்கப் போய் குளித்து விட்டு தண்ணீர் கொண்டுவரும் சிறீகள் ரோட்டில் மலம் எச்சில் மூத்திரம் முதலியவைகளை மிதித்துக் கொண்டு வருகிறார்கள். அதற்காகவும் குளிப்பதில்லை. ஆனால் ஒரு பறையரையோ ஒரு சூத்திரனையோ தொட்டு விட்டால் - அவன் வேஷ்டி மேலே பட்டு விட்டால் - அவன் தண்ணீர் குழாய்க்கு பக்கத்தில் நின்று தண்ணீர் பிடித்த ஈரத்தை மிதித்து விட்டால், உடனே குளிக்க வேண்டுமென்கிறான். இவனுக்கு சுயராஜியம் வேண்டுமாம்.

4வீதியில் மல, மூத்திரம், எச்சில் மிதித்துக்கொண்டு நடந்து, நமது வீட்டுக்கு பிச்சைக்கு வந்த பார்ப்பான், நமது பட்டுப்பாயைக் கண்டால் தாண்டிக் குதிக்கிறான் - அதைத் தொட்டால் தீட்டு என்கின்றான்.

4 பூணூல் போட்டதின் கருத்து இன்ன இன்னார்தான் படிக்கத் தகுந்தவர்கள் என்பதை காட்டுவதற்காகவும் சூத்திரன் இன்னான் என்று கண்டுபிடிப்பதற்கு ஆகவும்தான். அதனால்தான் மேலே வேஷ்டி போடுவதுகூட மரியாதைக் குறைவென்று செய்யப்பட்டி ருக்கிறது.

4புராணக் கதைகளை பார்ப்பன சூழ்ச்சியென்று அறிந்து கொள்ளாமல் அவைகளையெல்லாம் உண்மையென்று கருதுகின்ற வர்கள் பக்கா மடையர்களாவார்கள்.

4 வயிறுவளர்க்க வேறு மார்க்கமில்லாத தமிழ்ப் பண்டிதர்கள் என்றைக்கு இருந்தாலும் தங்கள் புத்தியைக் காட்டித்தான் தீருவார்கள். ஏனென்றால், அவர்கள் படித்ததெல்லாம் மதஆபாசமும் புராணக் குப்பையுமேயாகும். ஆகவே, பார்ப்பனர்களைவிட பண்டிதர்கள் நமது இயக்கத்திற்கு பெரும் விரோதிகளாவார்கள்.

மூட நம்பிக்கை
15.06.1930- குடிஅரசிலிருந்து...

எப்படி பஞ்சாட்சரம் ஜெபித்தால், விபூதி பூசினால் மோட்சம் வருமென்று மூடநம்பிக்கையால் கருதிக் கொண்டு துன்பப் படுகிறோமா அதுபோலவேதான் தக்ளி சுற்றினால், உப்புக் காய்ச்சினால் விடுதலை வருமென்று மூட நம்பிக்கையால் கஷ்டப்படுகின்றோம்.

பஞ்சாட்சரத்திலும், விபூதியிலும் நமக்குள்ள மூட நம்பிக்கைதான் தக்ளியிலும், உப்புக் காய்ச்சுவதிலும் திருப்பி விட்டுவிட்டதே தவிர வேறில்லை. அதில் நமது கடுகளவு ஆராய்ச்சியாவது செய்திருப் போமானால், இதிலும் அணுவளவாவது ஆராய்ச்சி செய்யப் புத்தி புகுந்திருக்கும். பரம்பரையாய் நமக்குள்ளிருந்த மூட நம்பிக்கையே நம்மை ஆட்சி செய்து கொண்டு சிறிதும் முன்னேறவொட்டாமல் தடுக்கின்றது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
-- விடுதலை நாளேடு, 24.11.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக