சனி, 23 நவம்பர், 2019

சொர்க்கம் - சித்திரபுத்திரன்

12.05.1935  - குடிஅரசிலிருந்து... -

கேள்வி :  சொர்க்க லோகத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை ஒப்புக் கொள்ளுகின்றாயா? இல்லையா? இரண்டில் ஒன்று சொல்லு.

பதில் : இவ்வளவு அவசரப்பட்டால் நம்மால் பதில் சொல்ல முடியாது. பந்தியில் உட்காரவே அனுமதி இல்லை என்றால் ஓட்டை இலை என்று சொல்லுவதில் பயன் என்ன?

சொர்க்க லோகம் என்பது எந்தப் பூகோளத்தில் இருக்கிறது? கீழே ஆயிரக்கணக்கான மைல்களுக்கும் மேலே பதினாயிரக்கணக்கான லட்சக்கணக்கான மைல்களுக்கும் வான சாஸ்திரிகள் விவரம் கண்டுபிடித்து விட்டார்கள். எங்கும் சொர்க்க லோகம் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்படவில்லை. ஆகவே, சொர்க்கலோகமே சந்தேகத்தில் இருக்கும்போது சொர்க்க லோகத்தில் கடவுள் இருக்கிறாரா என்றால் என்ன பதில் சொல்லுவது?

கே: அப்படியானால் மேல் லோகம், வைகுந்தம், கைலாயம், பரமண்டலம் முதலிய எதுவுமே இல்லை என்கின்றாயா?

பதில் : நான் இவைகளையெல்லாம் தேடித் தேடிப் பார்த்து இல்லை என்று சொல்ல வரவில்லை. பூகோள சாஸ்திரம், வான சாஸ்திரம், விஞ்ஞான சாஸ்திரம் ஆகிய எதற்கும் இந்த லோகங்களில் எதுவுமே தென்படவில்லையே என்றுதான் மயங்குகிறேன்.

கே.: அப்படியானால் அண்ட, பிண்ட, சராசரம் அதள, சுதள, பாதாளம் முதலிய கீழேழுலோகம், மேலேழுலோகம் என்பவைகளைக்கூட நீ ஒப்புக் கொள்ளவில்லை என்று தானே அர்த்தம்.

பதில்: இதுவும் முன்னைய கேள்வி போல் தானிருக்கிறது. மேலே ஒரு லோகத்தைப் பற்றியே சந்தேகத்தில் இருக்கும்போது மேலும், கீழும் பதினாலு லோகத்தை ஒப்புக் கொள்ளுகின்றாயா? இல்லையா? என்றால் இதற்கு என்ன பதில் சொல்லுவது?

கேள்வி: மேலோகங்களை நம்பாத நீ கடவுளை நம்புகின்றது என்பது முடியாத காரியம் தான். ஆகவே நீ நாஸ்திகன் தானே?

பதில்: என்னமோ சொல்லிக் கொள்ளப்பா, நமக்குத் தெரியாத சங்கதியைப் பற்றி தெரியும் என்று சொல்லிவிட்டு அப்புறம் உன்னிடம் விழிக்க நம்மால் ஆகாது.

கே.: விழிக்கிறதென்ன இருக்கிறது?

பதில்: சொர்க்கலோகம் ஒன்று இருக்கிறது, என்றே சொல்லி விட்டேன் என்று வைத்துக் கொள். அப்புறம், அது எப்படி இருக்கிறது அது உனக்கு எப்படித் தெரியும் நீ பார்த்தாயா? அங்கு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்பாய். அப்புறம் அங்கு கடவுள் இருக்கிறாரா என்பாய் - இருக்கிறார் என்று சொன்னால் அது உனக்கு எப்படித் தெரியும், அவர் எப்படி இருக்கிறார். உட்கார்ந்து கொண்டா, படுத்துக் கொண்டா, நின்று கொண்டா இருக்கிறார்? என்பாய். அவருக்கு கைகால் உண்டா, கண் மூக்கு உண்டா, ஜல உபாதை, மல உபாதை உண்டா என்பாய். இன்னும் என்னென்னவோ கேட்பாய். இந்த எழவுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. நீ நாஸ்திகன் என்றாலும் சரி, வேறென்ன சொன்னாலும் சரி. அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. நமக்குத் தெரியாததைச் சொல்லிவிட்டு உம்மிடம் சிக்கிக் கொண்டு விழிப்பதை விட நாஸ்திகன் என்கின்ற பெயரே மிகவும் யோக்கியமானதும், நாணயமானதும் ஆகும் என்று கருதுகிறேன்.

கே.: நாஸ்திகனைக் கடவுள் எப்படித் தண்டிப்பார் தெரியுமா?

பதில்: தெரியும் தெரியும். அப்புறம் நான் அந்தக் கடவுளை சும்மா விட்டுவிடுவேனாக்கும்.

கே.: என்ன செய்வாய்?

பதில்: அந்தக் கடவுளுடைய சிண்டைப் பிடித்துக் கொண்டு நன்றாய் கேட்பேன். அதாவது நீ இருப்பதை என் கண்ணுக்கும் தெரிவிக்கவில்லை. மனதுக்கும் தெரிவிக்கவில்லை. உன்னுடைய லோகத்தையும் நமக்குக் காட்டவில்லை. பூகோள படத்திலுமில்லை. எந்த சர்வேயிலும், எந்த ஆராய்ச்சியிலும் கிடைக்கவும் இல்லை. இந்த மாதிரி நான் அறிய முடியாத காரியத்தை நீயே செய்துவிட்டு என்னைத் தண்டிப்பது என்றால் அப்புறம் தெரியுமா என்று கேட்டுவிடுவேன்.

கே.: இப்படியெல்லாம் பேசாதே மகாதோஷ மாக்கும். கடவுள் எதை மன்னித்தாலும் மன்னிப்பார். திருடினாலும், கொலை செய்தாலும், நம்பிக்கைத் துரோகம் செய்தாலும், ஊரான் உழைப்பில் சோம்பேறியாய் இருந்து தொப்பைப் போட்டாலும் சரி, இன்னமும் பண்ணாத காரியம் எது செய்தாலும் சரி கடவுள் மன்னித்து விடுவார். ஆனாலும் அவர் விஷயத்தில் கொஞ்சமாவது நம்பிக்கைக் குறைவோ சந்தேகமோ அடைந்தால் அதற்கு மன்னிப்பே கிடையாது. நன்றாய் ஞாபகத்தில் வைத்துக் கொள். பதில்: சரி சரி. ரொம்ப யோக்கியம்தான். கடவுள் ஒரு யோக்கியன். நீ ஒரு மகா யோக்கியன் நான் நாஸ் திகன்தான். உங்களாலானதைப் பாருங்கள்.

கடவுள் கருணை

30.06.1935 - குடிஅரசிலிருந்து...

1934இல் பீகார் பூகம்பத்தால் ஏற்பட்ட சொத்து நஷ்டமும், உயிர் நஷ்டமும் ஒருபுறமிருக்க, இவ்வருஷம் குவெட்டா பூகம்பத்தால் அதைவிடப் பல மடங்கு அதிகமான அய்ம்பது அறுபது ஆயிரம் மக்கள் உயிர் நஷ்டமும், பலகோடி ரூ. பொருள் நஷ்டமும் நடந்தது.

மற்றொருபுறமிருக்க, இம்மாதத்தில் பெஷா வரில் தீ விபத்து ஏற்பட்டு 2500 வீடுகளும், கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறும்படியான பொருள்களும் சாம்பலாயினவாம். உயிர்ச் சேதமும் தாராளமாய் இருக்கலாம்.

எனவே, கடவுள் நன்மையையே குணமாய்க் கொண்டு அன்பையும், ஜீவகாருண்யத்தையும், கருணை யையுமே ஆபரணமாய்க் கொண்டவர் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதார ணத்தை ஆஸ் திகர்கள் காட்டுவார்களோ தெரியவில்லை.

யார் கெட்டிக்காரர்கள்?

30.06.1935 - குடிஅரசிலிருந்து....

சந்திரலோகத்தைக் கண்டுவிட முடியும்

இந்தப் பூலோகத்துக்கும், சந்திரலோகத்துக்கும் 2,50,000 இரண்டு லட்சத்து அய்ம்பது ஆயிரம் மைல் தூரம் இருக்கிறது.

இதை மணி ஒன்றுக்கு 2500 இரண்டாயிரத்து அய்ந்நூறு மைல் வேகம் போகக் கூடிய ஒரு பறக்கும் யந்திரத்தின் மூலம் 100 நிமிஷ நேரத்தில் பூலோகத்தில் இருந்து சந்திர மண்டலத்துக்குப் போய் விடலாம் என்று அமெரிக்க சங்கத்தார் உத்தேச திட்டம் போட்டிருக் கிறார்கள்.

இந்தத் திட்டத்தை நமது இந்திய மகாத்மாக்களும், சங்கராச் சாரிகளும், பண்டார சன்னதிகளும் ஆகிய ஞானிகள் ஆகாயக் கோட்டையென்றோ, வீண் கனவென்றோ தான் சொல்லுவார்கள்.

ஆனால், மணி ஒன்றுக்கு 700 மைல் வேகம் போகக் கூடிய ஆகாய விமானம் செய்து பார்த்தாய் விட்டது.

இனியும் இதிலிருந்து பல அபிவிர்த்திகள் நடந்து வேகத்தைப் பெருக்க வசதி இருக்கிறது என்பதைக் கண்டு வருகிறார்கள். ஆகவே மேல்நாட்டு மக்களுடைய ஆசையும், முயற்சியும் இந்த மாதிரியான துறைகளில் சென்று கொண்டிருக்கின்றன.

நம்முடைய முயற்சிகள் கிருஷ்ணன் மனிதனா - கடவுளா?

ராமாவதாரம் முந்தியா - கிருஷ்ணாவதாரம் முந்தியா?

பூமியை ஆதிசேஷன் தாங்கினால் ஆதிசேஷனை யார் தாங்குகிறார்?

உலகத்தை இரணியாட்சதன் பாயாய்ச் சுருட்டிக் கொண்டு சமுத்திரத்துக்குள் புகுந்து கொண்டான் என்றால், அப்போது சமுத்திரம் எங்கு? எதன் மேல் இருந்தது?

மகாவிஷ்ணு பன்றி அவதாரமெடுத்தபோது என்ன ஆகாரம் சாப்பிட்டார்?

சிவனும் விஷ்ணுவும் (ஆணும் ஆணும்) சேர்ந்தால் பிள்ளை எப்படிப் பிறந்திருக்கும். இந்திரியத்தை வாய் வழி உட்கொண்டால் பிள்ளை பிறக்குமா?

அப்படியானால், இப்போது ஏன் அப்படிப்பட்ட எவருக்கும் பிள்ளை பிறப்பதில்லை?  என்பது போன்ற முட்டாள்தனமானதும், போக்கிரித்தன மானது மானப் பிரச்சினையில் நமது சாஸ்திரிகளுடைய ஆராய்ச்சிகள் சென்று கொண்டிருக்கின்றன.

இவ்வளவோடு நின்று விடுகின்றோமா?

சந்திர லோகத்தைப் பார்க்க இப்போதுதான் நமது வெள்ளைக்காரர்கள் நினைத்து இருக் கிறார்கள். நம்முடைய பெரியவர்கள் எத்தனையோ காலத்துக்கு முன் சந்திரனைப் பார்த்தாகி விட்டதென்றும், நம்முடைய குருவின்மார் மனைவிகள் சந்திரனைப் புணர்ந்து புதனைப் பெற்று இருக்கிறார்கள் என்றும், அதற்காகப் புருஷர்கள் அந்தச் சந்திரன் மீது கோபித்து அவனை மாதத்திற்கு ஒரு முறை தேயவும், வளரவும் செய்து விட்டார்கள் என்றும், அது மாத்திரமல்லாமல் சந்திரனையும் அவனுக்கு வெகுதூரத்தில் இருக்கும் சூரியனையும், சராசரி வருஷத்துக்கு ஒரு முறையாவது (ராகு) கடிக்கச் செய்து அந்த விஷமிறங்க நமது சாஸ்திரிகள் ஜபம் செய்கிறார்கள் என்றும் சொல்லி விடுகிறோம்.

ஆகவே வெள்ளைக்காரர்களுடைய அறிவிற்கும், நம் சாஸ்திரிகளுடைய அறிவுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதையும், யார் கெட்டிக்காரர்கள், புத்திசாலிகள் என்பதையும் நீங்களே கண்டுபிடியுங்கள்.

 - விடுதலை நாளேடு 15 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக