திங்கள், 19 ஜூலை, 2021

"ஒரு பார்ப்பான்கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக்கூடாது!"

தந்தை பெரியாரிடம் உரையாடிக் கொண்டிருந்த கோவை அதிசய விஞ்ஞானி ஜி.டி.நாயுடு அவர்கள் தந்தை பெரியாரை நோக்கி ஒரு கேள்விகேட்டார்.

நீங்கள் பார்ப்பனர்களை அரசு உத்தியோகங்களிலிருந்து விரட்டிவிட்டீர்கள். அதனால் அவர்கள் பலர் வைதிக காரியங்களில் சம்பாத்யம் செய்யாமல், வேறு இந்திய முதலாளிகளாக்கி பெரும் பணக்காரர்கள் ஆக்கிவிட்டீர்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? அவர்களுக்கு நீங்கள் நன்மைதான் செய்திருக்கிறீர்கள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார். 

அதற்கு அங்கேயே பதில் அளித்த தந்தை பெரியார், அடுத்த வாரமே 09.11.1946 'குடிஅரசு' வார ஏட்டில் ஓர் அற்புதமான விளக்கத்தையும் அளித்தார்கள்.

அதை அப்படியே தருவது. இன்றும் நாளையும்கூட தங்களைக் கொள்கைக் குழப்பத்திற்கு ஆளாக்கும் பிரச்சினை பற்றி விளங்கிக் கொள்ளப் பெரிதும் துணைநிற்கும்

"இந்த நாட்டில் பார்ப்பனர் மீது பாமர மக்களுக்கு வெறுப்பு உண்டாகும்படி செய்து வரும் என்னால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றின் பிரச்சாரத்தால் பார்ப்பனர்கள் தங்களுக்கு உரிய வைதிக சம்பந்தமான ஏழ்மை வாழ்க்கையை விட்டுவிட்டுப் பாங்கி, வியாபாரம்,  இயந்திர முதலாளி முதலிய தொழில்களில் ஈடுபட்டு ஏராளமான பணம் சம்பாதித்து அவர்களில் அநேகர் செல்வவான்களாகவும். லட்சாதிபதிகளாகவும் ஆகிவிட்டார்கள். இதுதான் துவேஷப் பிரச்சாரத்தால், ஏற்பட்ட பயன் என்று பார்ப்பனர்கள் மீது வெறுப்புக் கொண்ட பலர் என்னைக் குற்றம் சொல்லுகின்றார்கள்.

*இது உண்மையானால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியேயாகும்.*

திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து - ஒரு பார்ப்பான்கூட "மேல் ஜாதியான் என்பதாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தானே தவிர. பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது. அவன் நல்வாழ்வு வாழக்கூடாது, அவன் ஏழையாகவே இருக்கவேண்டும் என்பது அல்ல. 

ஒவ்வொரு பார்ப்பானும் ராஜா சர். அண்ணாமலை செட்டியார். பொப்பிலி ராஜா. சர்.சண்முகம் செட்டியார். சர்.ராமசாமி முதலியார் போன்றவர்களாக, கோடீஸ்வரனாகவும், லட்சாதிபதியாகவும் ஆகிவிட்டாலும் சரியே. எனக்கு ஆட்சேபனை இல்லை. 

ஆனால். எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உள்பட எவரும்,  சிறிது கூட நமக்கு மேல்ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான். 

பணக்காரத்தன்மை ஒரு சமூகத்துக்குக் கேடானதல்ல; அந்த முறை தொல்லையானது. சாந்தியற்றது என்று சொல்லலாம். என்றாலும் அது பணக்காரனுக்கும் தொல்லையைக் கொடுக்கக் கூடியதும், மனக்குறை உடையதும். இயற்கையில் மாறக்கூடியதும். எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றக்கூடியதுமாகும். 

ஆனால், இந்த மேல் ஜாதித் தன்மை என்பது இந்த நாட்டுக்குப் பெரும்பாலான மனிதச் சமுதாயத்துக்கு மிகமிகக் கேடானதும், மகா குற்றமுடையதுமாகும். அது முன்னேற்றத்தையும், மனிதத் தன்மையையும் சமஉரிமையையும் தடுப்பதுமாகும். ஒரு பெரிய மோசடியும், கிரிமினலுமாகும். 

*ஆதலால், என்ன விலை கொடுத்தாவது மேல் ஜாதித் தன்மையை ஒழித்தாக வேண்டும் என்பது எனது பதிலாகும்.
-' ‘குடிஅரசு' கட்டுரை - 09,11.1946.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக