சனி, 23 நவம்பர், 2024

சுயமரியாதை இயக்கம் ஒரு வீர காவியம்! வெற்றி வரலாறு!! -11

 தந்தை பெரியார் அறிவுரை

ஊன்றிப்படித்து உண்மையினை வாழ்வு நெறியாக ஆக்குவோம்! சுயமரியாதை இயக்கம் ஒரு வீர காவியம்! வெற்றி வரலாறு!!

விடுதலை நாளேடு



சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கட்டுரைத் தொடர் (11)

– கி.வீரமணி –

1925 இல் ஈரோட்டில் ‘குடிஅரசு‘ ஏட்டின்மூலம் சுயமரியாதை இயக்க கரு உருவாகி, வளர்ந்தது – காஞ்சி புரத்தில் அது பிறந்தது!
சுகப் பிரசவம் என்று கூற முடியாதபடி, இருந்தாலும், ஆயுதம் எடுக்காமலேயே பிரசவம் பார்த்து அழகிய குழந்தையை அந்தத் தாயே பெற்றெடுக்க, பெரியார் பெரும்படையான மருத்துவர்களும் உதவினார்கள்.
பிறந்த குழந்தை வளராது என்று ஜோஸ்யம் கூறிய வர்களும், ‘‘பிறந்த நேரம், சகுனம் சரியில்லை, அப்படியே வளர்ந்தாலும் பெற்றவர்கள் நீண்ட நாள் வாழமாட்டார்கள்; அவர்கள் உயிருக்கு ஆபத்து.
அதன் பிறகு அது பெற்றோர், வளர்ப்போர் இல்லாத ஆதரவற்ற அனாதையாகித் திரிந்து, தானே தன் முடிவைத் தேடிக் கொள்ளும் அற்பாயுசுக் குழந்தையாகவே இருக்கும் என்பது அதன் தலைவிதி’’ என்றார்கள்!
‘‘பிறந்தபோதே ‘பேய்’ பிடித்துக் கொண்ட இந்தக் குழந்தை சிறிது காலம் பேயாட்டம் ஆடி, சில ஆண்டுகளில் கேசம்முதல் பாதம்வரை எல்லாமே சபிக்கப்பட்டு, தானே தன் முடிவைத் தேடிக்கொள்ளும் – அதுவும் அது ‘ராட்சப் பேய்’’’ என்றனர்.
ஆனால், அந்தத் தாயும், குழந்தையும் கிடைத்ததை உண்டன, பகுத்தறிவு, பட்டறிவுப் பாலைப் பரிவுடன் ஊட்டிய அந்தத் தாயின் மடியில் வளர்ந்து, அனைவரின் பார்வையையும் ஈர்த்த குழந்தையாய் வளர்ந்தது.

சுவாசித்த காற்றோ சுதந்திர, சமத்துவ, சகோதரத்துவக் காற்று; அருந்திய சுயமரியாதைப் பாலோ பகுத்தறிவுப் பால்; பிறகு கண்டது கற்றுப் பண்டிதக் குழந்தையாக 4, 5 ஆண்டுகளிலேயே, விஞ்ஞான விசித்திரமாய் விய னுறு உலக அதிசயமாக வளர்ந்தோங்கியது. அற்பாயுசு என்றவர்கள், ‘‘அதன் ஆயுள் மட்டும் வளரவில்லை; அறிவும், பலமும், ஆதரவும் நாளும் வளர்ந்து நானிலத்தையும் வயப்படுத்தி வருகிறதே’’ என்று கவலையுற்றார்கள்!
அதன் கொள்கை எதிரிகள், தமக்குள்ளே ஓர் அச்சம் எ்னறாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், ‘‘எல்லா ஆட்டமும் சில காலம்; அப்புறம் அதற்கு முடிவு தானாகவே ஏற்படும்’’ என்று தமக்குத்தாமே சமாதானம் கூறி, அதனை அழிக்க,
கூலி பெறவேண்டி கூலிகள் சிலரும்
காலித்தனம் செய்து ‘சடகோபம்’ பெற்றவர்கள் சிலரும்
பாதிக்கப்பட்ட ஆரிய – பார்ப்பன – வைதீக ஏடு களும், அமைப்புகளும் கச்சையை வரிந்து கட்டி, சவால்களுக்குமேல் சவால்களை விட்டனர்.

அச்சுயமரியாதை இயக்க வீரனோ புறநானூற்றுக் கள வீரனைப் போல, லட்சிய வீரனாகக் களம் காண ஆயத்தமானார்!
செங்கற்பட்டு நகரத்தில் ஒரு திருப்புமுனை மாநாடு. அதுதான் சுயமரியாதை இயக்கம் என்ற வீரச் சிறுவனின் முதல் மாநாடு – 1929 இல், 5 ஆண்டுகளில்!
பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம் அந்த ஈரோட்டு பூகம்பத்தால் அதிர்ச்சி கண்டு நிலை குலைந்தா லும், நிம்மதி இழந்தாலும், நீண்டதோர் திட்டம் தீட்டி, இந்த இயக்கத்தை ஒழிக்க, புதுப்புது ஆயுதங்களைத் தேடினர்; தேடியும் வருகின்றனர்.
சுயமரியாதை இயக்க அடிநாள் வீரரும், பிரச்சாரப் பீரங்கியும் ஆன தளபதி பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்களின் கம்பீர மொழியில் சொல்வதானால், வைதிகம் அதன் ‘ரத, கஜ, துரக, பதாதி சேனை’களை அழைத்துத் தன் புறத்தே வைத்து அவதூறு அம்புகளை, அழிபழி ஈட்டிகளை அந்த சுயமரியாதைச் சூரர்கள்மீது ஏவிப் பார்த்தது.

ஏமாற்றம்தான் கிடைத்தது, வைதிகபுரிக்கு! மிஞ்சியது கடும் கோபமும், கொடும் ஆத்திரமும்தான் வருணாஸ்ரமக் கோட்டையாருக்கு!
சுயமரியாதை இயக்கத்தை நாஸ்திக இயக்கம் என்று அந்நாள் ஆஸ்திக சிரோன்மணிகள் அடையாளப்படுத்தி அவ்வியக்கத்தினரைத் தம் பக்கம் ஈர்க்கப் பிரச்சாரங்கள் மூலமும், தங்களது பத்திரிகை அஸ்திரங்களாலும் அவ்வியக்கத்தின்மீதும், அதன் சாதனைமீதும் ஏவிப் பார்த்தனர். அவை எஃகுக் கோட்டைக்கு முன், விழுந்தொடிந்து, வீணானதுதான் மிச்சம்.
அப்படி என்ன பெரிய ‘ஈரோட்டு பூகம்பம்’, அந்த செங்கற்பட்டு முதலாம் சுயமரியாதை மாகாண மாநாடு என்ற பகுத்தறிவுப் பொங்குமாங்கடலில் என்கிறீர்களா?
இதோ தந்தை பெரியார் அவர்களே அவரது நடை (எழுதுத்துகள்) மூலமே விளக்குகிறார் கேளுங்கள்.
நடந்த தடை ஓட்டங்களும், சந்தித்த எதிர்ப்பு, அவதூறு, பழிதூற்றல் முதலியனபற்றி (25.8.1929, ‘குடிஅரசு‘ தலையங்கத்தின் ஒரு முக்கிய பகுதி) தந்தை பெரியாரது கருத்துரைகள்!

‘‘சுயமரியாதை இயக்கமானது அரசியல்களின் பேரால் நமது நாட்டிலுள்ள பல கட்சிகளைப் போலல்லாமல் அன்னியர்களிடம் இருந்து யாதொருவிதமான சிறு விஷயத்தையும் எதிர்பாராமல் மக்களின் அறிவை விளக்கி அவரவர்களின் மனப்பான்மையை மாற்றுவதன் மூலமே உண்மையான விடுதலையையும், சமத்துவத்தையும் தன் மதிப்பையும் உண்டாக்கக் கூடியதான ஒரு இயக்கமாகும்.
இவ்வியக்கத்தின் முக்கிய கொள்கையெல்லாம் கட்டுப்பட்டு அடைப்பட்டிருக்கும் அறிவுக்கு விடுத லையை உண்டாக்குவதேயாகும். ஆதலால் சுயமரியாதை இயக்கம் என்பதை அறிவு விடுதலை இயக்கம் என்றே சொல்லலாம்.
இதன் உண்மை விளங்க வேண்டுமானால், ஒரு நேர்மையான மனிதன் தனது அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் உள்ள கட்டுப்பாட்டையும் நிர்ப்பந்தத்தையும் நினைத்துப் பார்ப்பானேயானால் இவ்வியக்கத்தின் பெருமை தானாக விளங்கும்.
சாதாரணமாக இவ்வியக்கம் தோன்றி மூன்று நான்கு வருடங்களுக்குள்ளாக மக்களுக்கு அது உண்டாக்கி இருக்கும் உணர்ச்சியைப் பார்த்தாலும் கூட, இவ்வியக்கம் அறிவு விடுதலை இயக்கமா அல்லவா என்பது நன்றாய் விளங்கும்.

நிற்க, தங்களுடைய சொந்த அறிவினாலும் ஆற்ற லினாலும் பிழைக்க முடியாமல் அன்னியர்களின் முட்டாள் தனத்திலேயே பிழைத்துக் கொண்டிருந்தவர்களான அரசியல் தேசீயக் கூட்டத்தார்கள் என்பவர்களும் சமய இயல்பில் வைதீகப் பண்டிதக் கூட்டத்தார்கள் என்பவர்களும், இவ்வியக்கத்தால் தங்களுடைய வாழ்விற்கும் பெருமைக்கும் ஆபத்து வந்துவிட்டதாய்க் கருதி இவ்வியக்கத்தைப் பாமர மக்களுக்குத் திரித்துக் கூறி, அதாவது சுயமரியாதை இயக்கம் தேசத்துரோக இயக்கம் என்றும், சமயத் துரோக இயக்கம் என்றும், நாத்திக இயக்கமென்றும், சொல்லிக் கொண்டு, எவ்வ ளவோ முயற்சியும் கட்டுப்பாடுமான சூழ்ச்சிகள் செய்துங்கூட, இவ்வளவுக் கும் சுயமரியாதை இயக்கம் ஒரு சிறிதும் பின்னடையாமல் அடிக்க அடிக்கப் பந்து எழும்புவதுபோல், விஷமப் பிரசாரம் செய்யச் செய்ய இப்போது இந்தியா தேச முழுவதும் பஞ்சில் நெருப்பு பிடிப்பது போல் மக்களிடம் பரவிக் கொண்டே போகின்றது.

இவ்வியக்கம் ஆரம்பித்த காலம் முதல் இதற்கு எதிரிடையாக நமது நாட்டில் வேலை செய்த பத்திரிகைகள் எவ்வளவு என்பது யாவருக்கும் தெரியும். அதாவது அந்தக் காலத்தில் நாட்டில் செல்வாக்காயிருந்த ‘சுதேச மித்திரன்’, ‘இந்து’, ‘சுயராஜ்யா’, ‘தமிழ்நாடு’, ‘நவ சக்தி’, ‘லோகோபகாரி’, ‘ஊழியன்’ முதலிய தேசீயப் பத்திரிகைகள் என்பவைகளும், மற்றும் பல குட்டிப் பத்திரிகைகளும், கூலிப் பத்திரிகைகளும் மனதார நடந்தவைகளைத் திரித்துக் கூறுவதும், கருத்துக்களை மாற்றிக் கூறுவதும், பொதுமக்களுக்குத் துவேஷமும் வெறுப்பும் உண்டாகும்படி எழுதுவதுமான காரியங்களில் வெகு மும்முரமாக ஈடுபட்டிருந்தன.
மற்றும் பிரசாரம் செய்வதிலும், தேசீயத் தலைவர்கள், பிரசாரகர்கள் என்பவர்கள் எல்லோரும் ஒரே முகமாய் திருவாளர்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரியார், கலியாணசுந்தர முதலியார், வரதராஜுலு, குழந்தை, ஷாபி முகம்மது, அண்ணாமலை, குப்புசாமி, பாவலர் என்பவர்களும் மற்றும் தேசீயம் என்பதன் பேரால் நாட்டில் பாமர மக்களிடம் செல்வாக்குள்ள அனைவரும் அடியோடு பார்ப்பனக் கூட்டமும், காப்பிக்கடை தாசி வீடு வரையில், சட்ட சபை முதல் சந்து பொந்துகள் எல்லாம் சென்று சுயமரியாதை இயக்கம் தேசத் துரோக இயக்கமென்றும், நாத்திக இயக்கமென்றும் இதைக் கொல்வதற்கு “ஆண்டவன் அருள் கொண்டு துணிந்து விட்டோம்” என்றும், “கடவுள் துணை கொண்டு இறங்கிவிட்டோம்” என்றும், “கிருஷ்ண பகவானே துணை” என்றும் கர்சித்துக்கொண்டு தொண்டை கிழியப் பேசியும், பார்த்தார்கள்.

அவர்களுக்குள் வர்ணாசிரம மகாநாடு, சைவ மகாநாடு முதலிய மகா நாடுகள் கூட்டி தீர்மானித்தும் பார்த்தார்கள். மற்றும் புராணப் பண்டிதர்கள், புத்தகக் கடைக்காரர்கள், பூசாரிகள், குருக்கள், மடாதிபதிகள் முதலிய கூட்டத்தார்களும் தேசீய மேடையிலும், சமய மேடையிலும் “சுயமரியாதை இயக்கம் சமயத்தைப் பாழ்பண்ணி வருகின்றது, இதை ஒழிக்க வேண்டும்” என்று கூட்டங்கள் போட்டுக் கூவிப்பார்த்தார்கள்.
இவ்வளவும் போதாமல் வெளிநாடுகளிலிருந்து திருவாளர்கள் காந்தி, மாளவியா, மூஞ்சே ஆகியவர்களைக் கொண்டுவந்து இதற்கு எதிரிடையாகப் பிரசாரம் செய்தும் பார்த்தார்கள். இனியும் இரகசியமாகச் செய்த இழிதகைப் பிரசாரத்திற்கு அளவே இல்லை.
என்னவெனில், நம்முடைய தனிப்பட்ட நாணயத்தைப் பற்றியும், நடவடிக்கைகளைப் பற்றியும், ஒழுக்கங்களைப் பற்றியும், எவ்வளவோ கேவலமாகப் பேசியும் கூலி கொடுத்து காலிகளை ஏவிவிட்டு பேசச் செய்தும், செய்யப்பட்ட இழி பிரசாரத்திற்கும் அளவே இல்லை. இவ்வளவும் போதாமல் நம்மைக் கொன்று விடுவதாகவும், குத்தி விடுவதாகவும், சுட்டு விடுவதாகவும், மற்றும் பலவிதமாய் அவமானப் படுத்துவதாகவும், கண்டு எழுதிய அநாமதேயக் கடிதங்களுக்கும், பொய்க் கையெ ழுத்திட்ட கடிதங்களுக்கும் கணக்கே இல்லை. மற்றும் நமக்குள் இருந்த தொண்டர்களைக் கொண்டு செய்வித்த குறும்புகளுக்கும் அளவே இல்லை.
இவ்வளவு தொல்லைகளையும் சங்கடங்களையும் தாண்டி இவ்வியக்கம் இன்றைய தினம் ஒருவாறு தமிழ் நாட்டில் உள்ள பொது மேடைகளை எல்லாம் கைப்பற்றி, தேசீயத் தலைவர்கள் என்பவர்களை எல்லாம் முக்காடிட்டு மூலையில் உட்கார வைத்தும், பெரிய பெரிய பண்டிதர்கள், சாஸ்திரிகள், சமயவாதிகள், சமயத் தலைவர்கள், சண்டப் பிரசண்டவாதிகள் என்பவர்களை எல்லாம் வெளியில் தலைகாட்டுவதற்கில்லாமல் செய்தும் விட்டதுடன், ஜாதி இறுமாப்பையும், சமய இறுமாப்பையும், பண்டித இறுமாப்பையும் கசகசவென்று நசுக்கிக் கொண்டு வருகின்றது.

இன்றைய தினம் தமிழ்நாட்டில் நமது இயக்கத்திற்கு விரோதமாக ஏதா வது ஒரு அரசியல் கட்சி என்பதற்குச் செல்வாக்கு கடுகளவாவது இருக்கின்றதா என்று யாராவது பரீட்சை பார்க்க விரும்பினால் இப்போது நாட்டில் நடந்து வரும் தேர்தல்களையும், அவற்றின் முடிவுகளையும் கவனித்துப் பார்த்தாலே போதுமானதாக இருக்கும்.
உதாரணமாக, சமீபத்தில் சென்னையில் நடந்த தேர்தல்கள் பெரிதும் “தேசீயத்திற்கும்” “ஆஸ்தி கத்திற்கும்” நல்ல தோல்வியைக் கொடுத்து, “தேசத்துரோகத்திற்கும்” “நாஸ்திகத்திற்கும்” நல்ல வெற்றி யைக் கொடுத்திருப்பதானது யாவரும் அறிந்ததாகும்.
அது மாத்திரமல்லாமல், தேசீயத்தின் பேராலும் ஆஸ்திகத்தின் பேராலும் தேர்தல்களுக்கு நிற்க ஆள்களே கிடைக்காமற் போனது. “நாஸ்திகத்தின்” செல்வாக்குக்கும் வெற்றிக்கும் ஒரு பரீட்சையாகும். “காங்கிரசே பெரிது” என்ற காங்கிரஸ் தலைவர் திரு. அய்யங்கார் தேர்தலைப் பற்றித் தான் ஒன்றுமே கவனிக்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டார். “தேசமே பெரிது” என்ற கட்சித் தலைவர், வேலை போன திரு.வெங்கிட்டராம சாஸ்திரியார், வேலை போன மந்திரிகள் ஆகியவர்கள் இருக்குமிடமே தெரியவில்லை.

உத்தியோகமே பெரிது என்று பின்பற்றுவோர் இல்லாத குட்டி தேசீயக் கட்சி ஸ்தாபகரும் தானே தலை வருமான திரு.வரதராஜுலு, காங்கிரஸ் தோல்வியுற்ற சந்தோஷத்திலும் அய்யங்கார் மூலையில் அடங்கிய சந்தோஷத்திலும் மூழ்கிக் கிடக்கின்றாரே அல்லாமல், தன்னைப் பற்றி நினைக்கவோ, உலகம் என்ன பேசிக் கொள்ளுகின்றது என்பதைக் கேட்கவோ, நாட்டில் தனது நிலைமை என்ன என்பதை பார்க்கவோ, தனது கட்சியின் யோக்கியதை என்ன என்பதைப் பற்றி கவனிக்கவோ, சிறிதும் நேரமில்லாமல் இருக்கின்றார்.
மற்றும் “சைவ சமயமே பிரதானம், சமய ஆச்சாரிகளே தனது உயிர்’’ என்ற திரு.கல்யாண சுந்தர முதலியார் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களிடம் சென்று சுயமரியாதைக் கட்சியில் சேர்ந்தால் உங்களுக்கு ஓட்டு கிடைக்காது என்று மிரட்டுவதும், ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாய் ஓட்டர்கள் வீட்டுக்கு இரகசியமாய் நடந்து “நாஸ்திகக் கட்சிக்கு ஓட்டுச் செய்யாதீர்கள்” என்று சொல்லி பார்ப்பனர்களுக்கு சில ஓட்டுகளை வாங்கிக் கொடுத்துவிட்டதுடன் அவர் வேலை முடிந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்.

மற்றபடி ஆஸ்திகக் கூலிகளோ வாங்கின பணம் சரிவர ஜீரணமாயிற்றா இல்லையா என்பதைக் கூட கவனிக்காமல் இனியும், பணம் பணம் என்று கூவிக்கொண்டு, கொடுக்கின்றாயா அல்லது எதிர்க்கட்சியில் சேர்ந்து கொள்ளட்டுமா என்று திரு.அய்யங்காரை மிரட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
செங்கற்பட்டு தீர்மானங்கள் என்னவென்று பார்ப்போமானால் அவைகளில்
1. மக்கள் பிறவியில் சாதிபேதம் கிடையாது என்பது.
2. சாதி பேதம் கற்பிக்கும் மதம், வேதம், சாத்திரம், புராணம் முதலியவைகளைப் பின்பற்றக் கூடாது என்பது.
3. வருணாச்சிரமப் பிரிவுப்படி பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் என்கின்ற பிரிவுகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது.
4. மக்களுக்குள் தீண்டாமை என்பதை ஒழித்து பொதுக்குளம், கிணறு, பாடசாலை, சத்திரம், தெரு, கோயில் முதலியவைகளில் பொது ஜனங்களுக்குச் சம உரிமை இருக்க வேண்டும் என்பது.
5. இவை பிரசாரத்தால் நிறைவேற்றிவைக்க முடியாத படி சில சுயநலக் கூட்டத்தார் தடை செய்வதால் சர்க்கார் மூலம் சட்டம் செய்து, அச்சட்டத்தின் மூலம் அமுலில் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும் என்பது.
6.ஜாதிமத வித்தியாசங்களால் மக்களின் ஒற்றுமையும் பொது நன்மை உணர்ச்சியும் பாதிக்கப்படுவதால் அதை உத்தேசித்து சாதிமத வித்தியாசத்தைக் காட்டும் பட்டம், குறி முதலியவைகளை உபயோகிக் காமலிருக்க மக்களைக் கேட்டுக் கொள்ளுகின்றது என்பது.
7. பெண்கள் விஷயத்தில் பெண்கள் கலியாண வயது 16-க்கு மேல் இருக்க வேண்டும்; மனைவிக்கும் புருடனுக்கும் ஒற்றுமையின்றேல் பிரிந்து கொள்ள உரிமை வேண்டும்; விதவைகள் மறுவிவாகம் செய்து கொள்ள வேண்டும்; கலப்பு மணம் செய்து கொள்ளலாம்; ஆண் பெண் தாங்களே ஒருவரை ஒருவர் தெரிந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது.
8. சடங்குகள் விஷயத்தில் கலியாணம் முதலிய சடங்குகள் சுருக்கமாகவும், அதிக செலவில்லாமலும், ஒரே நாள் சாவகாசத்திற்கு மேற்படாமலும், ஒரு விருந்துக்கு மேற்படாமலும் செய்ய வேண்டும் என்பது.
9. கோயில் பூசை விஷயத்தில் கோவில்களின் சாமிக்கென்றும் பூசைக்கென்றும் வீணாகக் காசைச் செலவழிக்கக் கூடாது. சாமிக்கும் மனிதனுக்கும் மத்தியில் தரகனாவது மொழி பெயர்ப்பாளனாவது கூடாது.
புதிதாகக் கோவில் கட்டுவதில் பணத்தைச் செல வழிக்கக் கூடாது. கோவிலுக்கும் சத்திரத்திற்கும் வேதம் படிப்பதற்கு என்று விட்டிருக்கும் ஏராளமான சொத்துக்களை கல்வி ஆராய்ச்சி கைத் தொழில் கற்றுக் கொடுத்தல் முதலாகிய காரியங்களுக்கு செலவழிக்க முயற்சி செய்யும்படி கேட்டுக் கொள்ளுவது.
உற்சவங்களில் செலவழிக்கப்படும் பணத்தையும், நேரத்தை யும் அறிவு வளர்ச்சி, சுகாதார உணர்ச்சி, பொருளாதார உணர்ச்சி ஆகியவைகளுக்கு உபயோகமாகும்படியான காட்சி, பொருட்காட்சி ஆகியவைகளில் செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவது என்பது.
10. மூடப் பழக்கவழக்கங்களை ஒழிப்பது; அதற்கு விரோத மான புத்தகம், உபாத்தியாயர் ஆகியவர்களை பஹிஷ்கரிப்பது என்பது.
11. பெண் உரிமை விஷயத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை அளிப்பது; உத்தியோக உரிமை அளிப்பது; உபாத்தியாயர் வேலை முழுதும் அவர்களுக்கே கிடைக்கும்படி பார்ப்பது என்பது.
12.“தீண்டப்படாதார்” விஷயத்தில், “தீண்டப்படாத வர்”களுக்கு உண்டி, உடை, புத்தகம் ஆகியவைகளைக் கொடுத்து கல்வி கற்பிப்பது; தர்க்காஸ்து நிலங்களை அவர்களுக்கே கொடுப்பது என்பது.
13. பார்ப்பனரல்லாத இளைஞர்களுக்கு கல்வி விஷயத்தில் இருக்கும் கஷ்டங்களையும், தடைகளையும் நீக்க ஏற்பாடு செய்வது என்பது.
14. கல்வி விஷயத்தில் தாய் பாஷை, அரசாங்க பாஷை ஆகிய இரண்டைத் தவிர மற்ற கல்விக்குப் பொதுப் பணத்தை செலவிடக் கூடாது. அதுவும், ஆரம்பக் கல்விக்கு மாத்திரம் பொது நிதியை செலவழித்து கட்டாயமாய் கற்பிக்க வேண்டும். உயர்தரக் கல்விக்கு பொது நிதி சிறிதும் செலவழிக்கக் கூடாது. சர்க்கார் காரியத்திற்கு தேவை இருந்தால் வகுப்புப் பிரிவுப்படி மாணாக்கர்களை தெரிந்தெடுத்து படிப்பிக்க வேண்டுமென்பது.
15. சிற்றுண்டி, ஓட்டல் முதலிய இடங்களில் வித்தியாசம் கூடாது என்பவைகளாகும்.
மேலும் இவைகளும் அநேகமாக ‘சிபார்சு செய்வது’, ‘கேட்டுக் கொள்ளுவது’, ‘முயற்சிக்க வேண்டியது’ என்கின்ற அளவில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றதே அல்லாமல் திடீரென்று நிர்ப்பந்தமாய் தீர்மானிக்கப்படவில்லை. எனவே, இவற்றுள் எவை எவை நாத்திகம் என்றும், எவை எவை அந்நிய சர்க்காரை ஆதரிப்பது என்றும் எவை எவை தேசீயத்திற்கும், காங்கிரசிற்கும் விரோதமானவை என்றும், எந்த யோக்கியமான தேசீயவாதியோ, அல்லது ஆத்திகவாதியோ, வீரத்துடன் வெளிவரட்டும் என்றுதான் அறைகூவி அழைக்கின்றோம்.
உண்மை விஷயங்களைச் சொல்லாமல் பொதுப்பட சுயநலப்பார்ப்பனர்கள் சொல்லிக் கொடுத்தபடி கிளிப்பிள்ளையைப் போலும் பிறவி அடிமையைப் போலும்,

கூப்பாடு போடுவதனாலேயே சுயமரியாதை இயக்கத்தின் எதிர்ப்பு கோழைத் தன்மை உடையது என்றும், சுயநலமும் கூலித் தன்மையும் கொண்ட இழிதகைமையது என்றும் அறிவினர்க்கு தெற்றென விளங்கவில்லையா என்று கேட்கின்றோம்.
எது எப்படி இருந்த போதிலும் விதவை மணம், கலப்பு மணம், கல்யாண ரத்து, தக்கவயது மணம், பட்டம் குறிவிடுதல், பெண் கல்வி, தீண்டாமை விலக்கல், சுருக்கக் கல்யாணம், வகுப்பு உரிமை, மூடப்பழக்கங்கள் ஒழிதல், கோவில் கட்டுவதையும் உற்சவங்கள் செய்வதையும் நிறுத்தி அந்தப் பணத்தை கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் செலவிடுதல் முதலாகிய காரியங்கள் சுயமரியாதை இயக்கத்தின் பலனாய் சமீப காலத்திற்குள் எவ்வளவு தூரம் காரியத்தில் பரவி வந்திருக்கின்றது, வருகின்றது என்பதும், இவ்விஷயங்களில் பொதுமக்களுக்கு எவ்வளவு தூரம் மனம் மாறுதல் சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கின்றது என்பதும்; இவைகளுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் எவ்வளவு தூரம் தானாகவே அழிந்துபட்டு வருகின்றது என்பதும் பொது வாழ்க்கையைக் கவனித்து வருபவர்களுக்கு நாம் எடுத்துச் சொல்லாமலே விளங்கிவருகின்றது.

அன்றியும் இவ்வியக்கத்திற்கும் கொள்கைகளுக்கும் நாட்டில் இருக்கும் ஆதரவை பரீட்சிப்பதற்கும் இவ்வி யக்க சம்பந்தமான பத்திரிகைகள் வளர்ச்சியையும், ஜில்லாக்கள் தோறும் தாலுக்காக்கள் தோறும் நடை பெறும் மகாநாடுகளும், அங்கு கூடும் கூட்டங்களும், அக்கூட்டங்களுக்கு வரும் மக்களின் யோக்கியதைகளும், அவற்றில் ஏகமனதாய் நிறைவேறும் தீர்மானங்களும் ஆகியவற்றையும் இவைகளுக்கு எதிரிடையாய் இருக்கும் கட்சிகளுடைய, கூட்டங்களுடைய, தீர்மானங்களுடைய, அதிலிருக்கும் மக்கள்களுடைய யோக்கியதைகளையும், நிலைமைகளையும் கவனித்து நடுநிலையிலிருந்து சீர்தூக்கிப் பார்த்தால் எது மதிக்கப்படுகின்ற தென்பதைச் சிறு குழந்தையும் அறிய முடியும்.

நிற்க, தற்போது உலகத்தில் முன்னேறிவரும் எந்த தேசத்திலாவது மேலே குறிப்பிட்ட கொள்கைகள் இல்லாமல் இருக்கின்றதா? யாராவது சொல்ல முடியுமா? அன்றியும் மேற்கண்ட கொள்கைகள் நமது நாட்டில் இதற்கு முன் பல பெரியார்களாலும் சீர்திருத்தக்காரர்களாலும் சொல்லப்பட்டும், உபதேசம் செய்யப்பட்டும் வந்தது தானா, அல்லது நம்மால் மாத்திரம் இப்போது புதிதாய் சொல்லப்படுவதா என்றும் கேட்கின்றோம்.
பொதுவாக இப்போது புதிதாக உள்ள வித்தியாச மெல்லாம் முன்னுள்ளவர்கள் வாயினால் சொன்னார்கள்; புத்தகங்களில் எழுதினார்கள். ஆனால், நாம் இப்போது அவைகளைக் காரியத்தில் கொண்டு வர முயற்சிக்கின்றோம். நம்முடைய ஆயுளிலேயே இவைகள் முழுவதும் அமுலில் நடைபெற வேண்டுமென்று உழைக்கின்றோம்.
அவற்றுள் சிறிது பாகமாவது நடைமுறையில் காணப்படுகின்றது. இவைகளைத் தவிர வேறு எவ்வித வித்தியாசங்கள் சொல்லக் கூடும் என்று கேட்கின்றோம்.

(‘குடி அரசு’ – தலையங்கம் – 25.08.1929)

சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி நடத்துவதற்கான தந்தை பெரியாரின் முன்னோக்கும் காலவெள்ளத்தைக் கடந்து வலிமை வாய்ந்ததாக, அந்த இயக்கம் உலக இயக்கமாக நிலைப் பெற்றிருப்பதும்பற்றி அடுத்தடுத்த கட்டுரைகளில் காண்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக