ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

ஈரோட்டு மண்ணில் தந்தை பெரியார் நூற்றாண்டு விழா!’’

“தந்தை பிறந்த ஈரோட்டு மண்ணில் கழகம் எடுத்த நூற்றாண்டு விழா!’’
ஈரோடு வரலாற்றில் இப்படி ஒரு ஊர்வலம், இப்படி ஒரு பொதுக்கூட்டம் இதற்கு முன் நடக்கவில்லை; இனி அப்படி ஒன்று நடக்குமோ என்ற வினாக்குறியை எழுப்பும் வரலாற்றைப் படைத்த கருஞ்சட்டை ஊர்வலம் 17, 18.03.1979 அன்று தந்தை பிறந்த மண்ணில் தனி வரலாற்றை படைத்தது.
மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கருஞ்சட்டை சமுத்திரம், ஈரோட்டு நகரின் ஒவ்வொரு துளி மண்ணையும் எழுச்சிப் புயலாக்கியது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்வலம் துவங்கும் முன்னே என்னுடைய தலைமையில், டாக்டர் கலைஞர், ஈழத்தமிழர் தலைவர் அமிர்தலிங்கம், திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் உள்ளிட்ட கழகத் தோழர்கள் புடைசூழ தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் சிலைகளுக்கு மலர்மாலை சூட்டி ஊர்வலத்தில் பங்குகொள்ள டாக்டர் கலைஞர் அவர்கள் கருஞ்சட்டை அணிந்து சங்கமித்த அந்த காட்சி மறக்க-முடியாத உணர்ச்சிக் காவியமாக அமைந்தது.
ஊர்வலம் கழகத் தோழர் பெருமாள் தலைமையில் தொடங்கியது. கழகப் பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்கள் தலைமையில் மாநாடு தொடங்கியது. விழாவில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம்.கல்ணயாணசுந்தரம் எம்.பி. ஆகியோரும் கலந்துகொண்டனர்.
விழாவில் நான் உரையாற்றும்போது, “தந்தை பிறந்த மண்ணிலே இன்றைய தினம் மாபெரும் விழா நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. சரித்திரச் சிறப்பு வாய்ந்த விழாவாக அமைந்திருக்கிறது. அதேநேரத்தில், சிறப்பான கொள்கை விழாவாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இனவிழாவாக அமைந்திருக்கிறது’’.
அதைப்போல் அய்யாவின் கொள்கைகளுள் முக்கியமான கம்யூனல் ஜி.ஓ. சட்டத்தில் இந்த அரசுக்குத் தடுமாற்றமும்  சரியான குழப்பமும் ஏற்பட்டுள்ளது. தந்தை பெரியார் அவர்கள் போராடிப் பெற்ற வகுப்புவாரி பிரதிநித்துவ உரிமையை இந்த அரசு முடமாக்கிட முனையுமானால், திராவிடர் கழகம் எந்த விலையையும் கொடுத்து அதனை தடுத்து நிறுத்தும். இயக்கத்தின் இளைஞர் பட்டாளம் இப்போரில் முன்னணியில் நிற்பார்கள்.
“தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக்கு ஆபத்து என்றால், அதனைத் தடுத்துக் காக்கத் தூக்கு மேடையும் ஏறத் தயார்’’ என்று முழக்கத்தை முன்வைத்தேன்.
நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட கலைஞர் அவர்கள் கறுப்புச் சட்டையுடன் காட்சியளித்தார். அப்போது விழாவில் பேசும்பொழுது, “தந்தை பெரியார் அவர்கள் இந்தச் சமுதாயச் சீர்திருத்த இயக்கத்தை _ சமுதாயப் புரட்சி இயக்கத்தை இன்றைக்கு கட்டுக்கோப்போடு நடத்திச் செல்கின்ற பெரும்பொறுப்பை, அருமைச் சகோதரர் உரிமையோடு நான் தம்பி என்றுகூட அழைக்கலாம், அப்படிப்பட்டவர் இந்த இயக்கத்தை கட்டுக்கோப்பாக நடத்திச் செல்கிறார் என்றால் தந்தை பெரியார் சார்பாக _ அன்னை மணியம்மையார் சார்பாக இந்த அரிய முயற்சியில் ஈடுபட்டிருக்கின்ற அருமைத் தம்பி வீரமணி அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வது என்னுடைய பெரும் கடமையாகும்’’ என்று குறிப்பிட்டார்.
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த எம்.கல்யாணசுந்தரம் அவர்கள் பேசும்பொழுது, “பெரியார் அவர்களோடு 1952க்குப் பிறகு தனிப்பட்ட தொடர்பு கொண்டிருந்தவன் நான். ஆனால் அதற்கு முன்பே, தமிழ்நாட்டில் கம்யுனிசம் பரவுதற்குக் காரணமாக இருந்ததற்கு முக்கியமானவராக இருந்த அவரை நான் நன்கு அறிந்திருந்தேன். சிங்காரவேலனாரும், அவரும் பொதுவுடமைக் கருத்துக்களைத் தமிழ் மண்ணிலே தூவினார்கள்.
ஜாதியின் பெயரால் நிலவும் ஏற்றத்தாழ்வு ஒழிய வேண்டும்; சமத்துவம் மலர வேண்டும் என்று பெரியார் கூறியதிலே எங்களுக்கு உடன்பாடு உண்டு. மூடநம்பிக்கை முற்றிலும் ஒழிய வேண்டும். பகுத்தறிவு மலர வேண்டும் என்பதற்காக பெரியார் உழைத்த உழைப்பு சாதாரணமானதல்ல.
பெரியாருக்கு விழா யார் எடுத்தாலும் கலந்துகொள்ள வேண்டியது நமது கடமை என்ற முறையில் கலந்துகொண்டேன். நம் நாட்டில் கம்யூனிஸ்ட் என்றால் என்ன? பூர்ஷ்வா என்றால் என்ன? என்பதற்கு எல்லாம் விளக்கம் முதன்முதலில் எழுதியது பெரியார் அவர்களின் ‘குடிஅரசு ஏடு’தான்.
வடநாட்டில் ஒரு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிற்படுத்தப்-பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டுப் பிரச்சினை. தமிழ்நாட்டிலே எப்படி 50 சதவீதம் தாழ்த்தப்-பட்ட, பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இடம் ஒதுக்கினார்கள் என்று என்னைக் கேட்கிறார்கள். பெரியார் அவர்கள் பாடுபட்டு இருப்பதை அவர்களுக்கு நான் சுட்டிக்-காட்டினேன்.
பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டியது அவர்களின் ஜனநாயக உரிமை என்று பிற்படுத்தப்பட்டோர் கமிஷனுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் சார்பில் கருத்தைத் தெரிவித்துள்ளேன்.
இந்தியா பல மொழிகள் பல கலாசாரங்கள் பல இனங்கள் கொண்டநாடு. இத்தகைய நாட்டில் ஒரு குறிப்பிட்ட மொழியின் ஆதிக்கமோ, குறிப்பிட்ட கலாச்சாரத்தின் ஆதிக்கமோ, குறிப்பிட்ட இனத்தின் ஆதிக்கமோ நடைபெறாத காரியமாகும்.
தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கம் மொழிப் பிரச்சினைக்காகப் பாடுபட்டு இருக்கிறது. மொழி ஆதிக்கத்தை எதிர்த்துக் குரல் கொடுத்து இருக்கிறது.
சுரண்டல் அற்ற ஒரு சமுதாயத்தை நாம் அமைத்தாக வேண்டும். அப்படி அமைக்கப்-படும்போது சமுதாயத்தில் மொழி பிரச்சினை மட்டுமல்ல, அதனைப் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் நிச்சயம் தீர்வு கிடைக்கும்’’ என்று அவர் குறிப்பிட்டார்.
நூற்றாண்டு விழாவில், முதல்நாள் இரவில் நடை-பெற்ற கருத்தரங்கில் தலைமை வகித்து பேசிய பெரியார் பேருரையாளர் பேராசிரியர் மா.நன்னன் அவர்கள் உரை-யாற்றுகையில்,
இந்த கருத்தரங்கிற்கு நான் தலைமையேற்பது என் வாழ்வில் நான் பெற்ற சிறந்த பேறாகும்.
கடவுளை மறக்கச் சொன்னால், மற்றொன்றை நினைக்கச் சொல்ல வேண்டு-மல்லவா?  “அதுதான்  மனிதனை நினை’’ என்று பெரியார் சொன்னார். புரட்சி என்றால் புரட்டித் தள்ளுவதாகும். இரத்த ஆற்றை ஓடவிட்டு உருவாக்குவது ஒருவகை; மக்கள் மனதிலே புரட்சித் தாகத்தை உண்டாக்கி புரட்சியை விளைவிப்பது  இரண்டாவது வகை.
தந்தை பெரியார் இரண்டாவது வகையானப் புரட்சி உண்டாக்கப் பாடுபட்டார். அதனால்தான் மனிதனுடைய சிந்தனையிலேயே புரட்சியை உண்டாக்கி, அதன் அடிப்படையிலே புரட்சியை உண்டாக்கிவிட்டால், அதை யாரும் மாற்றி அமைத்து விடமுடியாது என்பது அய்யாவின் கணிப்பாகும்’’ என்று குறிப்பிட்டார்கள்.
கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய பெரியார் பேரூரையாளர் பேராசிரியர் ந.இராமநாதன் அவர்கள் பெரியார் ‘ஒரு புரட்சிவாதி’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையில், “தந்தை பெரியார் அவர்கள் இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன கருத்துக்களையும் மாநாடுகளில் போட்ட தீர்மானங்களையும் தான், இன்றைய தினம் பொதுவாக ஆட்சிகள் நடை-முறைப்-படுத்தி வருவதை நாம் பார்க்கின்றோம். மனித வாழ்வில் அவர் சொல்லாத கருத்துக்களே இல்லை எனலாம்.
தமிழகத்தில் ஒரு சரியான ஆட்சி வந்து, இப்பொழுதுள்ள சட்டங்கள் அனைத்தையும் அழித்து அய்யாவின் கருத்துக்களை சட்டமாக ஆக்குமேயானால் அதைவிட ஒரு சிறந்த மனித வாழ்வுக்கு வாய்ப்பே இல்லை.
அய்யாவை  யுனெஸ்கோ பாராட்டுகிறது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் எல்லாம் அய்யாவின் கருத்துக்களை ஆராய்ச்சி செய்கின்றன. அந்தக் கருத்துகளிலே டாக்டர் பட்டங்கள் பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். புரட்சிக்கவிஞர் மிக அழகாகச் சொன்னார்,
தொண்டு செய்து பழுத்தபழம்
துயதாடி மார்பில் விழும்
மண்டைச்சுரப்பை உலகுதொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர் தாம் பெரியார்! என்று மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டினார்.
மற்றவர்கள் எல்லாம் புரட்சியைப் புத்தகங்களில் படித்தவர்கள்; பெரியார் அப்படி அல்ல!
எல்லாம் சுயசிந்தனைகள் அத்தகைய சிந்தனைகள் அவருக்கு இளமை முதற்-கொண்டே இருந்து வந்தன.
அந்தச் சிந்தனைகள் தான் வளர்ச்சித் திசையில் அவருடைய கருத்துக்களாக உயர்ந்து மலர்ந்தன.
விருதுநகரிலே ஒரு பொதுக்கூட்டம். ஆரியத்தையும், அதன் அடிவருடிகளையும் தாக்கு தாக்கென்று தாக்கினார். ஒருவர் கோபம் அடைந்து கத்தியைத் தூக்கிக் கொண்டு மேடையை நோக்கி ஓடி வந்தார்.
ஓடிவந்தவரின் கையைப் பிடித்துத் தடுத்து பெரியார் தன் பக்கத்திலேயே உட்கார வைத்துக் கொண்டார்.
கூட்டத்தார்களும் ஆதரவாளர்களும் அந்தப் பேர் வழியைத் தாக்கப் பாய்ந்து வருகிறார்கள். அவர்களைத் தடுத்து அந்தப் பேர்வழியை அமைதியாக வீட்டில் கொண்டு போய்விடச் சொன்னார். அப்பொழுது அஞ்சாநெஞ்சன் அழகிரியும் அய்யாவுடன் இருந்தார்.
இதைச் சுட்டிக்காட்டி அழகிரி சொன்னார், “இவர் தான் பெரியாருள் பெரியார்’’ என்றார்.
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? அவனை ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என நினைப்பார்கள், அய்யாவோ அதற்கு மாறாக நினைக்கிறார். அவன் அறியாமையில் நடந்து கொண்டான்; அவனைத் திருத்தினால் நமக்கே தொண்டனாவான் என்றார்.
பல்லாயிரம் ஆண்டுகாலமாக கடவுள், மதம், ஜாதி, சாத்திரம், சம்பிரதாயம் இவற்றால் பாழ்பட்ட மக்களைத் திருத்த பெரியார் எந்தப் படை கொண்டு வந்தார்?
தன்னந்தனி மனிதனாக நின்று, தனது சொந்தக் கருத்துக்களால் திருத்தினார். அதனால்தான் அய்யா அவர்கள் மறைந்த பின்பு அவருடைய கருத்துக்கள் நிலைப் பெற்று வாழ்கின்றன, வளர்கின்றன!’’ என்று பல்வேறு சம்பவங்களை விளக்கியுள்ளார்.
விழாவில் ஜனசக்தி ஆசிரியர் தா.பாண்டியன் எம்.ஏ.பி.எல் அவர்கள் ஆற்றிய சிறப்புரையில்,
“50 ஆண்டுகளுக்கு முன்பு நாம் சொன்னால் யார் கேட்டார் என்று பெரியார் அவர்கள் ஒதுங்கி நின்று இருந்தால் இன்று பேசப் பலருக்கு நா எழுந்து இருக்காது, எழுதுவதற்குப் பலருக்கு பேனா துணிந்து இருக்காது.
ஒருவர் எங்காவது தொடங்கி அடித்தால் தான், ஒருவர் கோடு கிழிக்கத் தொடங்கினால்-தான் நியாயம் பிறக்கும். எனவே, அவர் மனித குலம் முழுவதுமே அடக்கிக் கொண்டு இருந்த அறியாமை இருட்டுக்குத் தீ கொளுத்தி ஒரு புதிய சமுதாயத்தைத் தொடங்க வேண்டும் என்பதற்காகத் தான் தடம் போட்ட மாமனிதர்.
எனவே ஒரு தனி மனிதர் என்ற முறையிலேயே அவர் ஓர் சக்தியாகத் திகழ்ந்தார் அவர் வாழும் காலம் முழுமையும் அவரோடு மோதிக் கொண்டவர்கள் பட்டியலையும் அருகாமையில் நின்றவர்கள் பட்டியலையும் பார்த்தால் மோதி நின்ற மாமலைகள் மிகப் பெரிது என்று குறிப்பார்கள்.
எழுதவும் படிக்கவும் தெரியாது, காசு கொடுத்து வாங்கவும் மாட்டான். இதற்காக நாம் சும்மா இருந்தால் கெடுதல் என்று தான் வாயாலேயே கருத்துப் பிரச்சாரம் செய்து மக்களது அறியாமையினை நீக்குவதற்கு என்று மேடை கலைக்கே முதல் மேடை போட்டுத் தந்தவர் தமிழகத்தில் பெரியார்  ஆவார்.
இந்தப் பெரியாரால் உருவாக்கப்பட்ட பெரிய பேச்சாளர்கள் தான் தமிழகத்தை அநேகமாக கடந்த நாற்பது ஆண்டுகாலமாக நாவால் ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், அத்தனைப் பேரையும் பேசவைத்தப் பெரியார் தமக்கென மேடைக்கென்றே ஒரு பாணியை அமைத்துக் கொண்டு பேசியதே இல்லை.
வீட்டிலும், வெளியிலும் இயற்கையாகவே என்ன பேசுவாரோ அவையேதான் மேடை பேச்சிலும் அமைந்திருந்தன’’ என்று குறிப்பிட்டார்கள்.
கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி, குடந்தை ஏ.எம்.ஜோசப், உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும், கழகத் தோழர்களும், தோழியர்களும் கருஞ்சட்டை பட்டாளங்களாக பெருந்தீவிரமாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-உண்மை,1-15.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக