திங்கள், 15 ஆகஸ்ட், 2016

பெரியார் ஒரு பிசிராந்தையார்

சிகரம்
பெரியார் மீது பற்றுகொண்டு அவரது தொண்டர்களாய், மாணவர்களாய், போராளிகளாய், பரப்புரையாளர்களாய், எழுத்தாளர்களாய் உலகெங்கும் எராளமானவர்கள் நாம் அறிந்தும் அறியாமலும் இருந்தனர்; இருக்கின்றனர்.
இதில் பார்ப்பனர்கள் சிலரும் அடக்கம். தமிழகத்தைப் பொறுத்தவரை சின்னக்குத்தூசி, ஞாநி, கமலகாசன் போன்றவர்களைச் சொல்லலாம்.
என்னுடைய மாணவர் ஒருவர் அய்.ஏ.எஸ். தேர்வில் தேர்வுபெற்று டில்லியில் பயிற்சிபெற்றபோது, அங்கு வகுப்பு நடத்திய பார்ப்பன முதியவர் “இந்தியாவில் தந்தை பெரியாருக்கு இணையான ஒரு சிந்தனையாளர், யதார்த்தவாதி, பகுத்தறிவுவாதி, மனிதநேயப் பற்றாளர் எவரும் இல்லை. அவர் பெருமையை பார்ப்பனர்கள் திட்டமிட்டு மறைக்கின்றனர்; திரிக்கின்றனர். இந்தியா முன்னேற அவரது சிந்தனைகளே உகந்தவை’’ என்று மனம் திறந்து கூறினாராம்.
இந்தியாவின் வடமாநிலங்களில் பலர் பெரியாரின் பற்றாளர்களாய் பரவி வாழ்கின்றனர். அவர்களுள் ஒருவர்தான் “லலாய் சிங் யாதவ்’’. “இந்திய வரலாற்றில் புகழ்பெற்ற நாத்திகர்கள்’’ என்ற நூலின் ஆசிரியர் இவர்.
இவர் தந்தை பெரியாரின் மீது கொண்ட அளப்பரிய பற்றின் காரணமாய் அவருக்கு “பெரியார் லலாய் சிங் யாதவ்’’ என்று பெயர் சூட்டப்பட்டது என்றால் பாருங்களேன்!
1973 டிசம்பர் 24-ஆம் தேதி தந்தை பெரியார் இறந்துவிட்டார் என்ற செய்தி லாலய் சிங்கிற்கு அவரது சென்னை நண்பர் மூலம் கிடைத்தது. பெரியார் இறந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கூடி மரியாதைச் செலுத்தினர். இதற்கு தலைமையேற்ற லலாய் சிங் 3 மணி நேரம் உணர்வுபொங்க உரையாற்றினார். அன்று இரவு முதல் அவரது உடல்நிலை சீர்குலைந்தது, சிலநாட்கள் அய்யா அவர்களின் மறைவு வாட்ட, கவலையில் மூழ்கி உணவு தண்ணீர் சாப்பிடாமல் இருந்த காரணத்தால் அவரது உடல் மிகவும் நலிவுற்றது. அதன் பிறகு அவரது நாத்திக நண்பர்கள் ஒன்று கூடி சீர்திருத்தவாதிகள் மறைந்துவிட்டால் அவர்களின் பணியை நாம்தான் எடுத்துச் செல்லவேண்டும்; நாம் சோர்ந்துவிட்டால் பெரியாரின் பணிகளை யார் எடுத்துச்செல்வது என்று கூறி அவருக்கு தெம்பூட்டினர்.
பெரியாரின் மறைவிற்குப் பிறகு லலாய் சிங் முழுமையான சமூகப் பணியில் இறங்கினார். தனது நிலங்களை விற்று 3 பதிப்பகங்களை கான்பூர் நகரில் வாங்கினார்.  வேதம், ஸ்மிருதி, உபநிடதம், ராமாயணம், மகாபாரதம், கீதை, மற்றும் இந்துமதப் புராணங்களை எதிர்த்து, அவற்றின் தரமற்றத் தன்மையைக் கூறி அதற்கான ஆதாரங்களை எடுத்துக்காட்டி சிறு சிறு நூல்களாக வெளியிட்டார்.
அவரது நூல்கள் தொடர்ந்து உபி அரசால் தடைசெய்யப்பட்டு வந்த நிலையில் அவர், துணிச்சலுடன் எதிர்த்து, உச்சநீதிமன்றம் வரைச் சென்று நூல்களுக்கான தடையை  நீக்கி மீண்டும் விற்பனைக்கு கொண்டுவந்தார். அப்படி அரசால்  தடைவிலக்கப்பட்ட நூல்களை இலவசமாக மக்களுக்கு கொடுத்துவந்தார்.  சமஸ்கிருத நூல்களில் உள்ள புரட்டுக்களை எழுதிப் பரப்பினார்.
இவர் தொடக்க காலத்தில் பல்வேறு சமூக சீர்திருத்த கூட்டங்களை உத்திரப்பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களில் நடத்தியவர். 1968ஆம் ஆண்டுதான் தந்தை பெரியாரின் நட்பு கிடைத்தது. தந்தை பெரியார் லலாய் சிங் அவர்களின் தொண்டினைப் பாராட்டினார். இந்த நிலையில் ராமாயணப் புரட்டு என்ற நூலை இந்தியில் வெளியிட பெரியாரிடம் அனுமதி வேண்டினார். பெரியாரும் அனுமதியளித்தார். உடன் அதை தானே ஹிந்தியில் எழுதி நூலாக வெளியிட்டார். அதை உத்திரபிரதேச அரசு தடை செய்தது. சுதந்திரத்திற்குப் பிறகு உத்திரப்பிரதேச அரசு தடைசெய்த முதல் நூலாகும். இதன் பிறகு உச்சநீதிமன்றம் வரைச் சென்று தடையை நீக்கினார். பிறகு மகாபாரதம், புராணங்கள் போன்றவற்றைப் பற்றியும் விமர்சித்து எழுதினார். இவரது 5 நூல்களை உத்திரப்பிரதேச அரசு தடை செய்தது. ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம் வரைசென்று தடையை நீக்கி வெற்றிபெற்றார்.
தனது 80-ஆவது வயதில் “பெரியார் ஜன் ஜாகிருதி சன்ஸ்தான்’’ (பெரியார் மக்கள் விழிப்புணர்வு அமைப்பு) என்ற ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு கருத்தரங்கங்களை நடத்தி வந்தார். 1993-ஆம் ஆண்டு அவர் மறைந்தார்.
அவர் மறைந்த பின்னும் அந்த அமைப்பினர், தொடர்ந்து பிரச்சாரங்கள் செய்து விழிப்புணர்வு ஊட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் சிறந்த நாத்திகர்கள் பாராட்டப்படுகின்றனர்.
கோப்பெருஞ்சோழனுக்கு பிசிராந்தையார் போல தந்தை பெரியாருக்கு இவர் என்பது முற்றிலும் பொருந்தும். மாநிலம் கடந்து, மொழி கடந்து இப்படி ஒரு பற்றாளர் இருப்பது வியப்பிலும் வியப்பல்லவா?
- ஹிந்தியில் உள்ள தகவல்களைத் தமிழில் பெயர்த்துத் தந்தவர்: சரவணா இராசேந்திரன்.
-உண்மை,16-30.5.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக