செவ்வாய், 12 ஜூன், 2018

"சாதி ஒழிப்பும் ஆச்சாரியார் கல்வித் திட்ட ஒழிப்பும் ஒன்றே!"



**தந்தை பெரியார்**




மனித சமுதாயத்தின்  மக்கள் பிறவியில் உள்ள பேதத்தை  ஒழிப்பதற்காகவும், மற்ற நாட்டு  மக்களைப்போல் நாமும் நம் நாட்டில் பூரண சுயேட்சை, சம அந்தஸ்து, சம உரிமையோடு வாழ்வதற்காகவும் பாடுபடுவதாகும். சமு தாயத்தின் பேரால், சாஸ்திரங்களின் பேரால், மதத்தின் பேரால், சட்டங்களின் பேரால் நம்  மக்களுக்குள்ள இழிவு களைப் போக்கப் பாடுபட்டு வருகிறது. சமுதாயத்துறையிலே, மதத்துறையிலே, கடவுள் துறையிலே,  திராவிட மக்களுக்கு இழைத்த கேடுகளை  ஒழிக்கவே சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்ற புத்தர் கொள்கைப் பிரசார மாநாட்டில் தீர்மானம் போட்டோம்.

அம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர் - உலக புத்த மத அய்க்கிய சங்கத் தலைவர் (ஜி. பி. மல்லலசேகரா). மாநாட்டைத் திறந்து வைத்தவர் எல்லா இந்திய தாழ்த்தப் பட்டவர் சங்கக் காரியதரிசியும், பார்லிமெண்டு மெம் பருமான தோழர் ராஜ்போஜ் அவர்கள் ஆவார்கள். இப்போது இங்கு ஷெட்யூல்வகுப்பு ஸ்தாபன சார்பாக மாலையிட்ட நண்பர். நாங்கள் இம்மாநாடுகளின் தீர்மானங் களைஆதரிக்கின்றோம்; ஆச்சாரியார் கல்வித்திட்ட ஒழிப்புமாத்திரமல்ல, ஜாதி ஒழிப்புக்கும் நீங்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திராவிடர் கழகக் கொள்கை என்ன என்பதை அவர் சரிவர புரிந்துகொள்ள வில்லை என்று கருதுகிறேன்.

ஜாதி ஒழிப்பு என்பதும், ஆச்சாரியார் கல்வித்திட்ட ஒழிப்பு என்பதும்  வேறு அல்ல. ஆச்சாரியார் கல்வித்திட்டம் ஒழியவேண்டும் என்று ஏன் கூறுகிறோம்? அவர் கல்வித்திட்டமே தன் சுயஜாதி பாதுகாப்புத் திட்டமாகும். அதாவது வருணாசிரம பாதுகாப்புத் திட்டம். ஆகையால் அதை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறோம். ஜாதி என்பது வருணாசிரமத்தின்படி ஏற்பட்டதாகும். ஜாதிகளை எடுத்துக் கொண்டால் அவை அத்தனையும் 3 ஜாதிக்குள் அடங்கி விடும். இன்று செட்டியார், நாயுடு, முதலியார், கவுண்டர், ரெட்டியார், படையாச்சி, பறையன், சக்கிலி என்று சொல்லப் படும் அத்தனை ஜாதிகளும் அந்த 3 ஜாதிக்குள்ளேயேதான் அடங்கிவிடுகின்றன. என்ன அந்த 3 ஜாதி? 1. பார்ப்பான் அதாவது பிராமண ஜாதி என்று ஒருவன் சொல்லிக் கொள்வது; 2. சூத்திரஜாதி நம்மவர்களை - திராவிடர்களைக் காட்டுவது 3. அடுத்தாற்போல் ஆதாரம் இல்லாமல் தந்திர மான முறையில் புகுத்திய பஞ்சம ஜாதி அல்லது சண்டாள ஜாதியாகும். இன்றைய தினம் நாட்டிலே வருணாசிரம  முறைப்படிதான் இந்தப் பார்ப்பனனும், நம்மவர்களான சூத்திரர்களும், பஞ்சமர்களும் இருக்கின்றனர்.

நம்மவர்களில் சிலபேர் அவனை பிராமணன்  என்றே கூப்பிடுகிறார்கள்.

சில பார்ப்பன அடிமைகள் "திராவிடர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?" என்று தெரிந்தோ தெரியாமலோ கேட்கிறார்கள். பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்களெல் லாரும் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள் தான். இதை அவர்கள்  பின்பற்றுகிற கலாசாரப் படி கூறுகிறோம். உதாரணமாக, முஸ்லிம் ஒருவரை இரத்தப் பரிட்சை செய்து பார்த்தால், நமக்கும் அவருக்கும் பேதம் இருக்காது. அவன் முன்பு நம்மவனாக இருக்கலாம். ஆனால் கலாசாரப்படி முஸ்லிம் என்கிறான். பார்ப்பானை ஏன் ஆரியன் என்கிறோம்? ஆரிய கலாசாரம் வேறு; அவன் பூணூல் போட்டுக் கொள்கிறான். ஆரியர்கள், மற்றும் ஆரியர் கடவுள்கள், இதிகாசங்கள், சாஸ்திர புராணங்கள் வேறு. ஆனால் இவற்றையெல்லாம் நம் தலைமையில் கட்டினான். அவன் வேறு ஜாதி, பிறப்பு; நாம் வேறு ஜாதி, பிறப்பு என்ற முறையைப் புகுத்தினான்.

ஆச்சாரியார் புதுக் கல்வித்திட்டத்தைக் கொண்டு வந்ததன் நோக்கமென்ன? அந்தக் கல்வித்திட்டத்தின் அடிப்படை என்ன? நீங்கள் கவனிக்க வேண்டும். சூத்தி ரர்கள் படிக்கக்கூடாது. இதுதான் ரகசியம். வேறு ஒன்று மில்லை. பாதிநேரம் படிக்கச்சொல்லுகிறார். அந்தந்த சாதித் தொழில் சரிவர செய்யும் அளவுக்குப் படிக்கவேண்டும். ஆரியரின் ஜாதிமுறை, வருணாசிரம முறை. வருணாசிரம முறைப்படி, நாம் படிக்கவே கூடாது. ஏதோ வெள்ளைக்காரன் காலத்தில் நாம் 100க்கு 10 பேர் படித்துவிட்டோம். அந்தப் படிப்பைப் படித்ததால் இன்று நாம் பார்ப்பனர்களை மதிப்பது கிடையாது. அவர்கள் என்ன உசத்தி, நாம் என்ன தாழ்வு என்கிறோம். இன்று நகரங்களில் யாரும் பார்ப்பானை "சாமி" என்று கூப்பிடுவது கிடையாது. ஏதோ பட்டிக்காட்டில் தெரியாத காரணத்தால் கூப்பிட்டுக் கொண்டிருக் கிறார்கள். சிலர் மான உணர்ச்சி இல்லாமல் "சாமி" என்கிறார்கள். அதுவும் மாறிக்கொண்டுவருகிறது.

திராவிடர்களாகிய நாம் இங்குக் குடி புகுந்த அந்நியனை "பார்ப்பானை ஒழி; அவனை வெளியேற்று" என்று சொல் கிறோம். சர்க்காரால் (அரசால்) ஒன்றும் செய்ய முடியாது. இந்தியப் பிரதமர் நேருவும் சென்னைப் பிரதமர் ஆச்சாரி யாரும், "பார்ப்பனரே வெளியேறு" என்றால் நம்மை ஒன்றும் செய்யமுடியாது. இவர்களின் கூப்பாட்டினால் பெரிய கிளர்ச்சி உண்டாகிவிடுமே என்று பயப்படுகிறார்கள். ஏன்? "பார்ப்பானே வெளியேறு" என்பதற்கும் "வெள்ளை யனே வெளியேறு" என்பதற்கும் சிறிதும் வித்தியாச மில்லை. பார்ப்பான் மேல்ஜாதிக்காரனாம். உழைத்து உண்பவர்க ளாகிய நாம் கீழ்ஜாதிக்காரர்களாம்; இந்த நிலைமையைச் சகிக்க முடியாமல்தான் மேல்ஜாதிக்காரனே வெளியேறு என்கிறோம். இந்தக் கிளர்ச்சி இன்று நேற்றல்ல. 25 வருடங்களாகவே பார்ப்பானை ஒழிப்பது என்ற கருத்தில் நாம் இயக்கம் நடத்திவந்தோம்.

வெள்ளைக்காரனை வெளியேற்ற நாமும் காலித் தனமாக  ரயிலைக் கவிழ்த்துத் தண்ட வாளத்தைப் பிடுங் கினதாலே வெள்ளையன் "இந்தப் பசங்கள் முட்டாள்கள்; ஆகையால் நாம் பார்ப்பானிடமே அதிகாரச் சாவியைக் கொடுத்து விட்டுப் போவோம். அவன் கிட்டேயிருந்தால் தான் இவனுங்களுக்குப் பார்ப்பனர்கள் தக்க புத்தி கற்பிப்பார்கள்" என்று நினைத்துக் கொடுத்து விட்டுப் போயிட்டான். அதுவும் வெள்ளைக் காரன் இவ்வளவு நாளாக நம்மைச் சுரண்டி நம் நாட்டுக்கு அனுப்பிக் கொண்டிருந்தால், இப்பொழுது முடியாமற் போகும் எனப் பயந்து பார்ப்பானிடம் லேவாதேவி, பாங்க், மில்கள் முதலியவற்றின் மூலம் சுரண்டுவதற்குப் பூரண உரிமை ஒப்பந்தம் செய்துகொண்டு சாவி கொடுத்துவிட்டுப் போய் விட்டான்.

அந்தப்படி சாவி வாங்கின பார்ப்பான் அம்பாரம் அம்பாரமாகப் பதவி, உத்தியோகக் கொள்ளை அடிக்கிறான். கூன், குருடு, செவிடு, கைகால் நடுக்கம் உள்ள தன் இனத்தாருக்கு கவர்னர், மந்திரி, எஞ்சினியர், எலக்ட்ரிக் எஞ்சினியர் முதலிய 1000 கணக்கான ரூபாவுக்கு  மேலும் உள்ள பதவிகளில் அமர்த்துகிறான்.  பிரசிடெண்ட் (குடி யரசுத் தலைவர்) இராசேந்திர பிரசாதுக்கு ரூ. 10000 சம்பளம். ஒரு சாதாரண புரோகிதகுடும்பம்; அவர் தகுதியெல்லாம் காந்திக்கு நல்லபிள்ளை. வெள்ளைக்காரனிடம் சாவி வாங்கியதும் சம்பளம்மாதம் 1-க்கு 10000 ரூபாய். வருடம் ரூ. 400000 படி, இவர்கள்தான் மாதம் 1-க்கு  500க்கு மேல் சம்பளம் வாங்கமாட்டோம் என்ற தீர்மானம் போட்டவர்கள். இன்னும் அந்தத் தீர்மானம் அப்படியே இருக்கிறது. பிரசிடெண்ட் தங்கியிருப்பதற்கு வைசிராய் பங்களா. இவர்கள்தான் தியாகிகளாம்! ஏழை பங்காளர் இவர்கள்! இப்படிக் கொள்ளையடிக்கிறார்கள். சுகவாழ்வு வாழ் கிறார்கள். நம்மவர்கள் பார்ப்பான் காலைக் கழுவிக் கும்பிட்டு மானம் கெடுகிறார்கள். வெள்ளைக்காரன் போனதும் அரையணா கார்டை (அஞ்சல் அட்டையை) முக்காலணா ஆக்கினார்கள். ஓரணா கவரை (அஞ்சல் உறையை) இரண்டணா ஆக்கினார்கள். நாலணா தந்தியைப்  பனிரெண்டணா ஆக்கினார்கள். மைலுக்கு 3 காசு; 4காசு ரயில் சார்ஜ்  (கட்டணம்) 5-6 பைசாவாக ஆக்கினார்கள். ஒன்றையும் குறைக்கவில்லை. எங்களுக்கு இவர்கள் என்ன பண்ணினார்கள்? மாறாக, நம்மை அப்பன் தொழில்செய்யணும்; உத்தியோக வேலை செய்யக்கூடாது; ஜாதிக் தொழில்தான் செய்ய வேண்டும். லு நாள் தான் படிக்கவேண்டுமாம். இதுதான் ஆச்சாரியார் கல்வித்திட்டம். வெள்ளையன் போன பின்பு அவர்கள் எல்லாத்துறையிலும் ஆக்கிரமித்து நம்மைப் பாழாக்கிவிட்டார்கள். ஆகையால் தான் நாம் வருணாசிரம கல்வித்திட்டத்தை எதிர்க்கிறோம். சாதியை மேலும் வளர்க்கின்ற காரணத்தினால் தான் இத்திட்டத்தை எதிர்க்கின்றோம். உண்மையிலேயே இந்த நாட்டில் மாத்திரமல்ல; இந்தியா முழுமைக்குமே சாதி ஒழிய வேண்டும் - அது அழிந்து பட வேண்டும், என்று சொல்லு கின்ற ஒரு ஆள்-ஒரு கழகம் இருக்கிறதென்றால் திராவிடர் கழகமும் நாங்களும்தான். இப்படிப் பேசுவது சும்மா சவடால், புளுகு சொல்லிப் போவதற்காக அல்ல. யாராவது சொல்லட்டுமே என்னைத் தவிர, திராவிடர் கழகத்தைத் தவிர ஜாதி ஒழிய வேண்டும். என்று சொல்பவர்களைக் காட்டுங்கள் பார்க்கலாம் - இந்த 2000 வருடங்களாய் எங்களைத் தவிர? காந்தியாராவது ஜாதி ஒழிய வேண்டும் என்று சொன்னதுண்டா? இன்று தானாகட்டும் யாராவது சொல்லட்டுமே! காந்தியார் "சாதியைக் காப்பாற்ற வேண் டும். அது நீடித்திருக்க வேண் டும். என் மூச்சே வருணாசிரமம் காப்பற்றப் படத்தான்" என்று தானே சொன்னார். தீண்டாமை ஒரு வழக்கம் தீண்டாமை ஒழிந்த தினமே பறையன் மாறிப் போவானா? தீண்டாமை ஒழிந்து விட்டதால் சக்கிலி வேறாய் விட் டானா? நமக்குத் தீண்டாமை இல்லையென்பதாலேயே நமக்குச் சூத்திரப்பட்டம் போய் விட்டதா?

டெல்லி ஆட்சியின் அரச மைப்புச் சட்டத்திலே ஒரு வார்த்தை  "ஜாதி  ஒழிக" என்று இருக்கிறதா? இந்தியாவைத் தவிர, தமிழ் நாட்டைத் தவிர, வேறு எங்காவது ஜாதி இருக் கிறதா? இந்த அரசமைப்புச் சட்டத்தை எழுதியவர் டாக்டர் அம்பேத்கர்தானே, ஜாதி ஒழிக்க வேண்டுமென்று அவர் கூட ஒரு வரி எழுதவில்லையே! டாக்டர் அம்பேத்கர் தான் அரச மைப்புச் சட்ட கர்த்தா; கீழ்ஜாதி, தீண்டாதார்களுக்குத் தலைவர். அவர் எழுதின சட்டத்தில் அவர்களுக்குச் "சலுகைகொடு" என்றுதான் கேட்டார். உடனே  பார்ப்பான் சலுகை கொடுத்து விட்டான். அவர்களின் 'விகிதா சாரப் படி 100க்கு 15 பேருக்குப் பதவி கொடுக்கிறேன்' என்று சொன்னான். 2000 மைசூர் ஆனைக்குட்டிகளைக் கொண்டு வந்து பஞ்சமர் கிட்டே உங்கள் விகிதாசாரம் 100க்கு 15 வீதம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றால் அவன் எடுத்துக் கொள்வானா? அவனால் முடியுமா அதைக் காப்பாற்ற? அனுபவிக்க? அவ்வளவு காசுக்கு எங்கே போவான்? அதுபோல் அவர்களில், 15 முனிசீஃபு உத்யோகம் கொடுக்கிறேன் என்றால் ஒரு ஆள்தான்தேருவான். இரண்டொரு ஆண்டுகளுக்கு முன் 72 முன்சீஃப் பதவிகளுக்கு ஷெட்யூல் வகுப்பாருக்கு 12 பேருக்கு ஒரு ஆள்தானே விண்ணப்பம் போட்டார். பாக்கி ஆட்கள் வரவேண்டுமென்றால் 18 வருடம் படித்து பாஸ்செய்து, (தேர்ச்சிசெய்து) 3 வருடம் பிராக்டிஸ் செய்தல்லவா வரவேண்டும்? ஆதலால் அந்த 12-ல் ஒன்று தாழ்த்தப்பட்டவனுக்கு. பாக்கியெல்லாம் அவன் சாக்கில்  பார்ப்பானுக்குத்தானே போயிற்று? இது எவ்வளவு பெரிய சூழ்ச்சி? நாங்கள் படித்துவிட்டு தகுதியோடு தயாராய்  இருக்கிறோம். எங்கள் விகிதாசாரப்படி எங்களுக்குப் பதவிகொடு என்றால் அதைப்பார்ப்பான் இது வகுப்புவாதம்; திறமை கெட்டுவிடும்; கொடுக்கமாட்டேன் என்கிறானே? படிக்க முடியாத, படிக்காத, தயாராக வேண்டிய அளவுபடி இல்லாத மக்களுக்கு வகுப்பு நீதி வழங்கி இருப்பதாகப் பித்தலாட்டம் செய்கிறான்.

தோழர் ராஜ்போஜ் தெளிவாக திருப்பத்தூரில் இதை சொல்லிவிட்டாரே! "அரசாங்கத்தார் எங்களை ஏமாற்றி விட்டார்கள். நாங்களும் தெரிந்துதான் ஏமாந்தோம். அதை ஒப்புக்கொள்ளாதிருந்தால் இந்நேரம் எங்கள் அம்பேத் கரைக் கொன்றிருப்பார்கள். அம்பேத்கருக்கு உயிர் மேல் கவலையில்லை யென்றாலும், கொன்று விடுவதாக வந்த கடிதங்களைக் கண்டு பயந்து, ஏதோ நாம் இன்னும் சில காலம் உயிருடன்  இருந்தாலும் ஒன்றிரண்டு நன்மை களாவது செய்யமுடியுமே என்ற எண்ணத்தில், அவர்கள் காட்டின இடத்தில் கையெழுத்துப்போட்டார்" என்பதாக. அதாவது காந்தியார் உண்ணாவிரதம் இருந்தார். டாக்டர் அம்பேத்கர் அவர்கள்  ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். மறுத்ததன்  காரணமாக அவரைக் கொல்ல முயற்சிசெய்தார்கள். அதிலிருந்து தப்பி மறுநாள் கையொப்பம் போட்டதனால்தான் அவர் உயிர் தப்பியது என்றார்.

ஆச்சாரியார் கல்வித்திட்டம் சாதியை வளர்க்கும் கல்வித்திட்டம், ஆகையால்தான் சாதி ஒழிக்கும் பணியில் முன்நின்று இக்கல்வித் திட்டத்தை எதிர்க்கிறோம். சாதி ஒழிய  வேண்டுமாயின்  சாதிக் குறைபாட்டை எடுத்துச் சொன்னால் மட்டும் போதாது.  நீங்கள்  நன்றாக  ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். சாதியை ஒழிக்க வேண்டுமானால் சாதி அடிப்படையை ஒழித்தாக வேண்டும். பணக்காரர் களெல்லாரும் 'சூத்திரர்கள்'தானே, ராஜாக்கள் எல்லாரும் 'சூத்திரர்கள்' தானே? பணம் மட்டும் சேர்ந்து விட்டால் 'சூத்திர'ப் பட்டம் போய் விடுமா? தஞ்சாவூர் புதுக்கோட்டை திருவாங்கூர்- கொச்சி ராஜாக்களெல்லாரும் 'சூத்திரர்'கள் தானே. பணம் இருக்கிறதாலேயே பதவி இருக்கிறதாலேயே, மடாதிபதியாக இருப்பதாலேயே 'சூத்திரப்'பட்டம்  போய் விடுகிறதா? கவர்னராக (ஆளுநராக) இருந்த சர். கே.வி.ரெட்டி, மந்திரியாக இருந்த பி.டி. ராஜன், இவர் களெல்லரும் சூத்திரர்கள் தானே? ஜாதி ஒழிய சூத் திரப்பட்டம் போக நாங்கள் தானே பாடு படுகிறோம்? ஜாதி எதனால் ஏற்பட்டது? சாஸ்திரங்களினால், மதங்களினால், புராணத்தினால், கடவுளால் ஏற்பட்டது. பார்ப்பான் ஆட்சியில் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், பார்ப்பான், இவைகளை ஒழித்தால்தான் ஜாதி ஒழிய முடியும்.

தாழ்த்தப்பட்டவர்கள் மந்திரி ஜோதி அம்மையார் உட்பட நான் சொல்லுகிறேன். இவர்கள்  கடவுள், மதத்தை ஒழித்தால்தான், அதிலிருந்து விடுபட்டால்தான் அவர்கள் மனிதர்கள் ஆவார்கள். என்னுடைய  சிநேகிதர்கள்தான் சிவராஜும் அவரது மனைவியாரும். அவர்கள் வீட்டில் இந்துமதம் இருக்கிறது! சாமிபடம் இருக்கிறது. செட்யூல்ட் (ஆதிதிராவிட) வகுப்புத் தோழர்கள் சொல்லட்டுமே, சாமி, சாஸ்திரம், மதத்தில் கைவைத்தால் சர்க்கார் (அரசு) ஒழித்துக் கட்டிவிடுவோம் என்று! யாரோ சிலர் தைரியசாலிகள், சட்ட சபைக்குப் போகாதவர்கள் தான் அவற்றை ஒதுக்கி விடுகிறார்கள். நாங்கள் கடவுளை உடைத்து ரோடுக்கு (சாலைக்கு) ஜல்லி போட்டால்தான்  இவைகளை ஒழிக்க முடியும் என்று கூறுகிறோம்.  தலையில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறப்பித்த சாமி இருந்தால் எப்படி நமக்கு 'சூத்திரன்' என்ற பட்டத்தைத்  தோளில் போட்டுக்கொண்டு  நம்மக்கள், மந்திரிகள், மடாதிபதிகள் மகான் மற்றும் கடவுள், மதப்பிரச்சாரம் செய்கிறார்களே! ஆகையால் கடவுள், மதம், சாஸ்திரம் இவைகளை ஒழித்தால்தான் சாதி ஒழிய முடியும்.

24-2-1954ஆம் தேதியன்று  சேலம் மாவட்ட பள்ளிப்பட்டியை

அடுத்த அதிகாரப்பட்டியில் தந்தை பெரியார் சொற்பொழிவு

('விடுதலை' 27-2-1954

- விடுதலை நாளேடு, 10.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக