செவ்வாய், 26 ஜூன், 2018

திருக்குறள் பரப்ப பெரியாரின் தீவிர செயல்பாடுகள்



  பெரியார் அவர்களும் புன்முறுவலோடு கைகூப்பி தமது வணக்கத்தையும் நன்றியறிதலையும் காட்டி விட்டு, தமது சொற்பொழிவைத் தொடங்கினார்கள். அவர்தம் 2 மணி நேர உருக்கமான சொற்பொழிவை மக்கள் யாவரும் மிக மிக அமைதியாகக் கேட்டனர்.


சொற்பொழிவின் துவக்கத்திலேயே தான் எப்போதுமே தன் அறிவு ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு நடந்து வந்தவன் என்பதையும், அது ஒரு வேளை தவறாக முடியுமோ என்ற அச்சம் சில சமயங்கள் ஏற்பட்டபோதிலும், தாம் தொடர்ந்து உறுதியோடு அதையே ஆதாரமாகக் கொண்டு நடந்து வந்தமையையும் எடுத்துக் கூறி, அதையே காலையில் தலைவர் திரு. சக்கரவர்த்தி நயினார் அவர்கள் ஒப்புக்கொண்டமை. தான் நடந்துகொண்ட வகையே சாலச் சிறப்புடைத்து என்பதைத் தெரிந்து கொண்டதாகவும், மனிதன் ஒவ்வொருவனும் தன் வாழ்வுக்குத் தானே எஜமானன் என்பதை உள்ளபடி உணர்ந்து செயலாற்றி வருதலே நன்மை பயக்கத்தக்கது என்றும், தன்னறிவு தனக்கு காட்டிக்கொடுக்கும் வரை சற்று தாமதம் ஏற்படினும், பொறுத்திருந்தே பார்த்து நடத்தலே மேலானது என்றும், அதனால் சற்று சங்கடம் ஏற்படினும், அதனால் கேடொன்றும் நேர்ந்து விடாதென்றும், இன்று திருக்குறளை தாம் புகழ்ந்து கூறுவதற்கும் தம்முடைய கருத்துக்கள் அதில்  காணப்படுவதால்தானே ஒழிய, அது வள்ளுவரால் கூறப்பட்டது என்பதற்காகவோ அல்லது அதில் கூறப்பட்டுள்ளது யாவுமே பகுத்தறிவுக்கு ஏற்றது என்ற கருத்தினாலுமோ அல்ல என்றும், அதில் தம் முன்னேற்றக் கருத்துக்கு ஒவ்வாதன இருப்பின் அவற்றை விலக்க, தாம் எப்போதும் தயங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துக் கொண்டார்.

குறளும் சுயமரியாதையும்

மேலும், அவர் பேசுகையில், திருக்குறளின் மேன்மை தம் அருமை நண்பர் பா.வே.மாணிக்க நாயக்கர் காலத்திலேயே தமக்கு ஓர் அளவுக்குப் புலப்பட்டது என்றாலும், இன்றைய நாள்வரை அதைப்பற்றி அதிகம் பேசாமல் இருந்தமைக்குக் காரணம், நீண்ட நாட்களாகவே நம்மிடையே ஆரியத்தால் புகுத்தப்பட்டு நம் வாழ்வைக் கெடுத்துக் கொண்டு வரும் கடவுள், மதம், இவை சம்பந்தப்பட்ட மூடநம்பிக்கைகள், அறவே ஒழிக்கப்படும் வரை திருக்குறளை மக்களிடையே பரப்புவதால் பயனில்லை என்பதை தெளிவாக உணர்ந்ததன் காரணத்தினால்தான் என்றும், இன்று சுயமரியாதைப் பிரச்சாரத்தால் மூடநம்பிக்கைகளும் ஆரிய மாயையும் பெரும் அளவுக்கு நீங்கி தாம் எடுத்துக் கூறும் சீர்திருத்த கருத்துகளை ஒப்புக்கொள்ளவும், அவற்றை மக்களிடையே பரப்பவும் போதுமான ஆதரவாளர்கள் ஏற்பட்டுவிட்டனர். நமது பிரச்சாரம் வெற்றி பெற்று விட்டது. ஆரியம் அழியும் காலம் மிக நெருக்கத்திற்கு வந்துவிட்டது என்பதை உள்ளபடி அறிந்த பிறகே அதைப் பரப்ப துணிவு கொண்டு மாநாட்டைக் கூட்டும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டார்.

குறளைக் கொண்டு வாழ்க்கையை நிர்ணயிப்போம்

மேலும் பேசுகையில், சமுதாயத்தின் ஒழுக்கமும் நாணயமும் மிகவும் கெட்டுவிட்ட தென்றும், மனிதனை மனிதன் வஞ்சித்து வாழும் கொடுமை மிக மிக மலிந்துவிட்டதென்றும், இத்தகைய ஒழுக்கக் கேட்டிற்குக் காரணமான கடவுளும் மதமும் மாற்றப்பட்டாக வேண்டுமென்றும் தெரிவித்துக்கொண்டதோடு, காந்தியார் வணங்கிய கடவுளும் போற்றிய அகிம்சையும், சத்தியமும், மதமும், அவருக்கே பயன்படாது போய்விட்டமை காரணமாக வேணும் இவ்வுண்மை மக்களுக்குப் புலப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வள்ளுவர் - பொதுவுடைமைக்காரர்

மேலும், அவர் திருவள்ளுவர் காலம் பொது உடைமைக் காலமோ, சமதர்மக் காலமோ அல்ல. ஆனால் வள்ளுவர் சிறந்த பொது உடைமைக்காரராகவே விளங்குகிறார். அதனால்தான் நம் போற்றுதலுக்கு ஆளாகிறார் என்று குறிப்பிட்டுவிட்டு, இத்தகைய புனித சிறப்பு வாய்ந்த திருக்குறளை அனைவரும் போற்றி அதன்படி நடந்து நல்வாழ்வு வாழ வேண்டுமென்றும், நாட்டின் மூலை முடுக்குகள் தோறும்கூட திருவள்ளுவர் கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டு, திருக்குறள் கருத்துக்கள் பரப்பப்படவேண்டுமென்றும், ஆண்டுதோறும் இதுபோன்ற வள்ளுவர் மாகாண மாநாடுகளும், ஒவ்வொரு ஜில்லாவிலும் தனி மாநாடும் கூட்டப்பட வேண்டும் என்றும் கூறி, குறள் ஆரியத்தை ஒழிக்க ஒப்பற்ற நல்லாயுதம் என்றும், திருக்குறள் பிரச்சாரக் குழு ஒன்று அமைக்கப் பட்டு விரைவில் செயலாற்றத் துவங்குமென்றும், அதற்கான ஆதரவைப் பொது மக்கள் தந்துதவ வேண்டும் என்றும் கூறி, மாநாட்டில் கலந்து கொண்ட புலவர்களுக்கும் அறிஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் நம் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டார்.

என்.எஸ்.கிருஷ்ணன்



அடுத்தபடியாகப் பேசிய நகைச்சுவை அரசு என்.எஸ்.கிருஷ்ணன், அவர்கள் குறளுக்கு தற்போது வழங்கிவரும் உரைகள் யாவும் சாதாரண மக்களுக்கு ஒரு சிறிதும் பயன்படாததாக இருக்கிறதென்றும் நல்லதோர் உரையை உண்டாக்கிக் கொடுப்பதற்கான முடிவு இம்மாநாட்டின் கண் ஏற்பட வேண்டுமென்றும் தெரிவித்துக் கொண்டு சில காங்கிரஸ் அறிவாளிகள் பெரியார் அவர்கள் வெறும் பெருமைக்காகவும், பதவிக்காகவும் பாடுபட்டு வருகிறார் என்று கூறி வருவதுபோல், தம்மால் வேறு எந்த அறிவுள்ள மகனாலோ கூற இயலாதென்றும், திராவிடன் தலைநிமிர்ந்து வாழ வேண்டும், மக்கள் யாவரும் மனிதத் தன்மை பெற்று மனிதர்களாக வாழவேண்டும் என்ற ஒரே கருத்தை உட்கொண்டுதான் பெரியார் அவர்கள் பெருந்தொண்டு ஆற்றி வருகிறார் என்றும், அவர் வாழ் நாளிலேயே அவர் அகமகிழ அவர் வழிப்படி நடந்து இன்பத் திராவிடத்தை உண்டாக்கித் தரவேண்டு மென்றும்கூறி இடுக்கண் வருங்கால் நகுக என்று குறளையும் எடுத்தோதி கஷ்ட நஷ்டம் பாராமல் பெரியார் வழி பின்பற்றி நடக்கவேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறினார்.

சி.என்.அண்ணாதுரை



 


பிறகு, அண்ணாதுரை அவர்கள் ஆண்டுக்கொருமுறை குறள் மாநாட்டைக் கூட்டவேண்டுமென்றும், குறளுக்கு நல்லதோர் உரைகாண ஒரு குழுவை நியமித்து இன்றைய நடப்புக்கேற்ப ஓர் நல்லுரை உண்டாக்கித் தர ஒரு செயற்குழு அமைக்கப்பட வேண்டு மென்றும், அச்செயற்குழுவுக்கு திரு.வி.க. அவர்களைத் தலைவராக இருக்கவும், திருக்குறள் முனுசாமி அவர்களைத் செயலாளராக இருக்கவும், தோழர்கள் நெடுஞ்செழியன், கா.அப்பாதுரை, புலவர் இலக்குவனார் ஆகியவர்களை அங்கத்தினர் களாக இருக்குமாறு கேட்டுக்கொண்டும், அவர்களும் மேலும் சிலரையும் சேர்த்துக் கொள்ள அதிகாரம் அளித்தும் மூன்று தீர்மானங்களைப் பிரேரேபிக்குமுகத்தான், மக்கள் வாழ்வு நலிந்திருக்கக் கண்ட பெரியார், அவர்தம் வாழ்வை நலப்படுத்த நூல்கள் பல தேடிப் பார்த்தபோது தான்கண்ட பாரதம், பாகவதம், பகவத்கீதை, இராமாயணங்கள், வேதங்கள், உபநிஷத்துக்கள் இவை யாவும் பல கேடுகளைத் தம்மிடத்தே கொண்டு ஆரிய பிரச்சாரத்தால் புரட்டுகள் வெளித்தோன்றாமல் இருந்து வருபவைகள், திராவிடர் வாழ்வுக்கு உண்மையில் பெரிதும் கேடு செய்து வருபவைகள் இவைகளே என்று கண்டுதான் இதுகாறும் அவற்றிலுள்ள புரட்டுகளை எடுத்தோதி வந்து இன்று மக்களுக்கு அவற்றின் மீதுள்ள பற்றுதல் வெகுவாகக் குறைந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் திருக்குறள் என்ற ஒப்பற்ற நீதி நூலை மாநாடு கூட்டித் திராவிடர்களுக்கும் _- எல்லா தமிழர்களுக்கும் தருகிறார் என்று குறிப்பிட்டார்.  மேலும், இனி திராவிடன் ஒவ்வொருவன் கையிலும் குறள் எப்போதும் இருத்தல் வேண்டுமென்றும், திராவிடன் கையில் குறளிருப்பதை பகவத்கீதை ஏந்தித் திரியும் பார்ப் பனர்கள் காண்பார்களாயின் பார்ப்பனியம் படுகுழியில் புதைக்கப்படப் போவது நிச்சயம் என்பதை உணர்ந்து, நமக்கும் மேலாக திருக்குறளைப் போற்றிப் புகழ முற்படுவதோடு அல்லாமல், தம் அகம்பாவத்தையும் மூட நம்பிக்கைகளையும்  கைவிட்டேயாக வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்து விடுவார்கள் என்று கூறினார்.

நல்லதோர் செயல் திட்டம்

தளபதி அண்ணாதுரை மேலும் பேசுகையில், பெரியார் இம்மாநாட்டின் மூலம் நல்லதோர் செயல் திட்டத்தைத் தருகிறார் என்றும், அவர் கொடுத்த எத்திட்டத்தையும் இதுவரை  கைவிட்டறியாத நாம், பெரியார் ஓர் நல்லுழவர் என்பதை நன்குணர்ந்துள்ள நல்ல பண்ணையாளர்களாகிய நாம், அவர்தம் முயற்சி வெற்றி பெற எல்லாவகையாலும் பாடுபடுவோம் என்றும், திருக்குறளை துணைக்கொண்டு நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், நம் வாழ்வைக் கெடுக்கவேண்டி ஆரியம் நம் பாதையில் வெட்டியுள்ள படுமோசப் படுகுழிகள் யாவும் நம் அறிவுக் கண்களுக்குத் தெற்றெனப் புலப்படும் என்றும், கம்பருக்குத் திருவிழாக் கொண்டாடும் புன்மதியாளர் காது செவிடுபடும்படி திருக்குறள் இனி ஓதப்படும் என்றும், விரைவில் வெற்றிமுரசு கொட்டி நமது பெரும்படைப் போர் பல நடத்தி நற்பயிற்சி பெற்றுள்ள நம் பெரும்படை, ஒவ்வொரு போரிலும் வெற்றியே கண்ட நம் பெரும்படை திக்கெங்கணும் புறப்படும் என்றும், வெற்றி கொண்டு பெரியாரின் பேரிதயம் மகிழ செயலாற்றும் என்றும் சூளுரை கூறி தம் சொற்பொழிவை முடித்தார்.
தீர்மானங்கள் யாவும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு தலைவரின் சுருக்கமான முடிவுரையுடன் கூட்டம் இனிது கலைந்தது.

- உண்மை இதழ், 1-15.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக