வியாழன், 12 டிசம்பர், 2019

பெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி

தந்தை பெரியார்

ஜாதி முறைகள் எல்லாம் ஆரிய மதமாகிய இந்து மதத்தின் சிருஷ்டியேயாகும் _ இந்து மதத்துக்கு ஆதாரம் ஜாதிதான். அது புராணங்களில் தேவர் _ அசுரர்களாகவும், சாஸ்திரங்களில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்களென்று  ஆரியர்களைக் குறிப்பிடுவதும், சூத்திரர்கள், சண்டாளர்கள் என்று திராவிடர்களைக் குறிப்பிடுவதாகவும் அமைக்கப்பட்டிருப்பவைகளே யாகும்.

தேவாசுரர்களும் பிராமணாதி சூத்திரர்களும் இல்லாவிட்டால் புராணங்களுக்கும் சாஸ்திரங்களுக்கும் வேலை இல்லை என்பதோடு, இந்து மதத்திற்கும் இடம் இல்லை.

ஜாதிப் பாகுபாடுகளுக்கு ஒரு காரணமுமே சொல்லாமல் கடவுள் அந்தப்படி தனது 4 அவயங்களிலிருந்து 4 ஜாதிகளை உண்டாக்கினார் என்பதோடு முடிந்து விடுகிறது.

ஜாதிகளை உற்பத்தி செய்த பிறகுதான் ஜாதிகளுக்குக் கர்மங்கள் (கடமைகள்) வேலைகள் பகிர்ந்து கொடுக்கப் பட்டிருக்கின்றன. இதை மனுதர்மம், பாராசர ஸ்மிருதி முதலியவைகளைக் கொண்டு அறியலாம்.

ஜாதிகள் பிரிந்தாலும் _ ஜாதிகளுக்கு வேலை பிரித்துக் கொடுத்திருப்பதிலும் மேல் ஜாதி கீழ் ஜாதி  என்கின்ற  உயர்வு _ தாழ்வு பேதமும் , மேன்மையான சுகமான வேலை, இழிவான வேலை என்பதாகவும், பாடு படாமல்  சுகமடையும் வேலை _ பாடுபட்டு கஷ்டமும், இழிவும் அடையும்படியான  வேலை என்றும் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

அதிலும் ஜாதிப் பாகுபாடு பற்றிய சாஸ்திர கருத்துகளைப் பார்த்தால் மேல் ஜாதியாருக்கே கல்வியும், செல்வமும் அடையும் உரிமையும், கீழ் ஜாதியாருக்கு, அடியோடு கல்வியும், செல்வமும்  இல்லாமையும்,  கீழ் ஜாதியார் கல்வி கற்றால் தண்டிக்கும்படியும் கீழ் ஜாதியார் செல்வம் வைத்திருந்தால் பலாத்காரமாகப் பிடுங்கிக் கொள்ள வேண்டுமென்பதாகவும் திட்டம். வகுத்திருப்பதோடு இந்தத் திட்டங்கள்  கட்டாயமாக அனுஷ்டிக்கப்பட வேண்டியவைகள் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த சாஸ்திர விதிகளுக்கு ஏற்பவேதான் இன்றும்  கீழ் ஜாதியார் இழி தொழில் புரிவோராயிருப்பதும், கீழ் ஜாதியார்  கல்வி அற்றவர்களாயிருப்பதும், மேல் ஜாதியார் மேன்மையான சுக தொழில் புரிவோராயிருப்பதும் யாவருமே கல்வி கற்றிருப்பதுமேயாகும். ஒரு சிலர் நம்மில் இதற்கு மாற்றமாய்  இருக்கிறோம். என்றால் அது புராண காலத்திலும் அப்படிச் சிலர் இருப்பதை அனுசரித்து அதாவது விபீஷணன், பிரகலாதன், அனுமார், சுக்ரீவன், அங்கதன் போன்ற கற்பனைகளை எடுத்துக்காட்டாகக் கொண்டு அவசியமும் முடியாமையும் ஆன காரணத்தால் அனுமதிக்கப்பட்டவையே யாகும்.

இன்று இந்த நாட்டில் நடந்து வரும் பார்ப்பனர் _ பார்ப்பனரல்லாதார் என்னும், பிராமண _ சூத்திரப் போராட்டமும், அந்நியர் _ இந்நாட்டவர் என்னும் ஆரிய திராவிடர் என்னும் ஆரிய திராவிடப் போராட்டமும் இதையே காரணமாகக் கொண்டதே தவிர வேறு காரணம் எதுவுமே கிடையாது.

ஜாதிமுறை காரணமாகவேதான் நம் நாட்டில் தொழில் பேதமும், கல்வி பேதமும், பொருளாதார பேதமும், உத்தியோக பேதமும் இருந்து வருகின்றன.

ஜாதி முறையை அழிப்பதென்றால் அதற்கு இருக்கும் அஸ்திவார பலமும், ஆதரவு தாங்கிகளும் அதாவது சாயாமல் முட்டுக் கொடுத்து வைத்திருக்கும் உதவித் தூண்களும் மிக மிக பலமானவைகள். ஆதலால், அவைகளைப் புரட்சி என்னும் டைனமேட் வெடி வைத்து உடைக்க வேண்டியதாக இருந்து வருகிறது. அந்த வேலையைத்தான் திராவிடர்கழகம் அதுவும் திராவிடர் கழகமே தான் செய்து வருகிறது.

இந்த வேலையில் ஈடுபட்டு அனுபவம் பெற்ற எவருக்குமே எதிரிகளிடம் இருந்து நல்ல அழைப்புகளும் நல்ல ஆதரவுகளும் தாராளமாகக் கிடைக்கும். அதன் காரணமாகவே திராவிடர் கழகத்தில் அதாவது ஜஸ்டிஸ் - சுயமரியாதை இயக்கப் பணியில் அனுபவமும் செல்வாக்கும் பெற்ற எவரும் இக்கழகத்தில் நிரந்தரமாக இருக்க முடியாது.

முதலாவதாக இந்த ஜாதி முறை ஒழிப்புக் கருத்துக்கு மாறாக அல்லது ஜாதி முறை ஒழிப்புக்கு எதிரிகளாய்  இருக்கிறவர்களுக்கு அனுகூலமாக இருக்கிற பண்டிதர், கலைவாணர், புலவர், ஆசிரியர், செல்வர், உத்தியோகஸ்தர்கள் முதலியவர்கள் எவ்வளவு அயோக்கியர்களாக, நாணயக் குறைவு உள்ளவர்களாக, இனத் துரோகிகளாக இருந்தாலும் அவர்களுக்குப் பார்ப்பனர் ஆதரவு, விளம்பரம், உதவி, உத்தியோகம், பெருமை முதலியவைகள் தாராளமாகக் கிடைக்கும்.

உதாரணமாக, இன்று பார்ப்பன உலகில் பாராட்டுதலும் புகழும் பெற்ற திராவிட  இனத்துக்காரர்களும், புலவர்களும், வித்துவான்களும், மற்றும் அதிகாரிகளும், செல்வர்களும் ஆகியவர்களைப் பார்த்தால் அந்த பட்டியிலில் உள்ள 100-க்கு 99.3/4 பேர்கள் நம் திராவிட இனத்துக்குத் துரோகிகளாகவே, நம்மைக் காட்டிக் கொடுத்து பிழைப்பவர்களாகவே தான் இருப்பார்கள்.

ஒன்று சொல்லமுடியும். அநேகமாக சூத்திரனுக்கு பஞ்சமனுக்கு இன உணர்ச்சி இருக்க முடியாது. இருக்க வேண்டுமானால் அவனுக்கு இனம் இன்னது என்ற தெளிவு ஏற்படாமல் இருக்கும்படி பல ஜாதியாய்ப் பிரிக்கப்பட்டு, பல கலைகள் புகுத்தப்பட்டு, சுயமரியாதை உணர்ச்சி ஏற்படுவதற்கு இல்லாமலும், சுயநலமே ஜீவனாக, அதாவது ஜீவப் பிராணி போன்ற  உணர்ச்சியையே வாழ்க்கை வழியாகச் செய்யப்பட்டிருக்கிறது.

- ‘விடுதலை’ - 7.8.1950

- உண்மை இதழ், 16- 31. 8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக