திங்கள், 2 டிசம்பர், 2019

பெரியார் பேசுகிறார்... : பெண்ணுரிமைப் பற்றி பெரியாரின் சிந்தனைகள்

உலக மகளிர் நாள் மார்ச் 8

தந்தை பெரியார்

மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயொழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை.

(‘குடிஅரசு’ - 3.11.1929)

பெண்களைப் படிக்கக்கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்? அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்கா.

(‘குடிஅரசு’ - 16.11.1930)

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல்ஜாதிக்காரன் கீழ்ஜாதிக்காரனை நடத்துவதைவிட, ஆண்டான் அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும்.

அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகிறார்கள். ஆனால் ஆண்களோ பெண்களைப் பிறவிமுதல் சாவு வரை அடிமையாகவும் கொடுமையாகவும் நடத்துகிறார்கள்.

(‘குடிஅரசு’ - 8.2.1931)

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சிபெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகின்றது.

(‘குடிஅரசு’ - 16.6.1935)

ஒவ்வொரு பெண்ணும் தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால் எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான்.

(‘விடுதலை’ - 24.6.1940)

ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி-ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி-ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை-ஓர் ஆணின் கண் அழகிற்கு ஓர் அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள், பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

(‘குடிஅரசு’ - 21.7.1946)

சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரையே யாருக்கு உபயோகப்படுத்தலா மென்றால் முதலில் நமது பெண் மக்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில், நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களே. அக் குழந்தைகளுக்கு 6. 7 வயதுவரையில் தாய்மார்களேதான் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.

                                (‘குடிஅரசு’ - 1.5.1927)

பெண்களுக்குப் பகுத்தறிவுக் கல்வியும், உலக நடப்புக் கல்வியும், தாராளமாகக் கொடுத்து, மூடநம்பிக்கை, பயம் ஆகியவற்றை ஊட்டக்கூடிய கதைகளையோ, சாத்திரங்களையோ, இலக்கியங்களையோ, காணவும் கேட்கவும் சிறிதும் இடமில்லாமல் செய்யவேண்டும்.              

                                (‘விடுதலை’ - 22.3.1943)

பெண்ணடிமை என்பதற்குள்ள காரணங்கள் பலவற்றுள்ளும் சொத்துரிமை இல்லாதது ஒன்றே மிகவும் முக்கியமானதாகும்.

(பெரியார் சிந்தனை மி: 170)

பெண்களுக்குத்தான் கற்பு; ஆண்களுக்கு வலியுறுத்தக் கூடாது என்கின்ற தத்துவமே தனிஉடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது. ஏன் என்றால், பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவளின் நிலைமை.

                                (‘குடிஅரசு’ - 1.3.1936)

-  உண்மை இதழ், 1-15.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக