ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

காதலோ காதல்!


-சித்திர புத்திரன்

காதலில்' இரண்டுவித'மாம். ஒன்று உண்மை காதலாம். மற்றொன்று வெறும் காதலாம். இல்லாத வஸ்துவுக்கு இரண்டு பெயர்கள் இருந்தாலென்ன 100 பெயர்கள் இருந்தாலென்ன? பெயரைக் கொண்டு ஆவதொன்றுமில்லை. வஸ்து உண்டா இல்லையா என்பதுதான் கேள்வி.

கடவுளுக்குக்கூட ஆயிரம் பெயர்கள். ஏன் ஆயிரம் ஆயிரம் பெயர்களும் உண்டு. கண்ட பலன் என்ன? காணவாவது முடிந்ததா? இப்படிப்பட்டவர் என்று கருதவாவது முடிந்ததா? அதனால்தான் "கடவுளுக்கும், காதலுக்கும் வித்தியாசமில்லை" என்று கூத்தாடிகள் சொல்லுகிறார்கள் போலும்.

ஆசை காதலானது

காதல் என்றால் சாதாரணத் தமிழ் மொழியில் அவா அல்லது 'ஆசை' என்று பொருள் கொள்வது நியாயமாகும். அன்பு என்று வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். "அவனிடம் உனக்கு அன்பு", "அவளிடம் எனக்கு அன்பு" இது ஒருவரை ஒருவர் விரும்பாமல் (பற்றை) காட்டும் குணம். அவா அல்லது ஆசை என்பது விருப்பத்தைக் கொண்டதற்குச்சொல்லும் மொழி. இவற்றை வடமொழியில் கூறுவதுதான் காதலாகிவிடுகிறது.

இந்தக் காதலைப் பண்டிதர்கள் பெரிய தொல்லையாக ஆக்கிவிட்டார்கள். கூத்தாடிகள் இன்னும் கெடுத்துவிட்டார்கள். அதுவும் ஆண் பெண் புணையலுக்கே சம்பந்தப்படுத்திவிட்டார்கள். இதனால் மனிதரின் அறிவையும் பாழாக்கிவிட்டார்கள். காதல் சம்பந்தமாகப் பல கதைகளைக் கட்டிவைத்து ஆண் - பெண் வாழ்க்கையையும் கெடுத்துவிட்டார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஒருவித பலவீனத்தைத் (Weak- ness) தவிர காதலுக்கு வேறு குணமோ, சக்தியோ இருப்பதாகத் தெரிவில்லை.

உதாரணம், "சகுந்தலா துஷ்யந்தன் திருமணத்தையே" எடுத்துக்கொள்ளலாம். 

ஏனெனில், காதல் மணத்துக்கு அதையே பெரிதும் எடுத்துக்காட்டுகிறார்கள். இந்தக் கதையை எடுத்துக்கொண்டால் இதில் காதலின் இழிவு நன்றாய் விளங்கும். சகுந்தலையின் தகப்பன் விஸ்வாமித்திரன் அவன் மேனகைமீது காதல் கொண்டான்; இந்தக் காதல் சாதாரணமான காதல் அல்ல. விஸ்வாமித்திரன் ஒரு ரிஷி அல்லது முனிவர்.

அப்படியென்றால் சிரேஷ்டமான மனிதர் என்பது பொருள். அவர் காதல் கொண்ட பெண் மேன்கை. இவளோ தெய்வ கன்னிகை. தேவர்களின் விலை மாது; ரிஷியை ஏமாற்ற வந்தவள். ஆகவே கெட்ட எண்ணமுடைய விலை மாதுப் பெண்ணிடத்தில் சிரேஷ்டமான மனிதத் தன்மைக்கு மீறின மனிதருக்கு காதல் ஏற்பட்டது என்றால் அந்தக் காதலின் இழிதன்மைக்கு வேறு என்ன உதாரணம் வேண்டும். 

தற்காலக் காதல்

சகுந்தலை சங்கதியைப் பார்ப்போம் அவன் ஒரு ரிஷியால் வளர்க்கப்பட்டவள். இவன்மீது ராஜகுமாரனாகிய துஷ்யந்தன் என்பலன் காதல் கொண்டான். உடனே காதல் (கந்தர்வ) மணம் செய்து கொண்டான். அந்த மணம் என்ன ஆயிற்று; துஷ்யந்தனுடைய பலவீனமான புணர்ச்சி (தற்கால காதல்) இச்சைநீர்ந்த உடன் அவனுக்கு அவளே மறக்கப்பட்டு போய்விட்டாள். அவன் வெகுநாள் பொறுத்து பலவீனக் காதலால் ஏற்பட்ட பிள்ளையைத் தூக்கிக் கொண்டு துஷ்யந்தனைத் தேடிப் போய் அங்கு பிள்ளையையும் தன்னையும் அவனுக்குக் காட்டியும் அவனுக்கு ஞாபகம் கூட வரவில்லை.

கடைசியாக ஒரு மோதிரத்தால் (அதாவது சட்ட நிபந்தனையால்) ஞாபகம் வருகிறது. இந்த காதல் மணத்தில் என்ன சக்தி இருக்கிறது. என்ன நீண்ட சுகம் இருக்கிறது. காட்டில் திரியும் மிருகங்கள் அல்லது வீட்டில் திரியும் சுணக்கங்களின் காதலுக்கும் இதற்கும் அதாவது இந்த "தெய்வீக"க் காதலுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது என்பது நமக்கு விளங்கவில்லை. தெய்வீகக் காதல் தெய்வீகத் தன்மை படைத்தவர்களின் காதல் என்று சொல்லும்படியான இந்தக் காதலே, இந்தக் சதியானால், மனுஷீகக் காதல் சந்திலும். பொந்திலும், காணுவதாலும் தெருவில் போகிறவர், வருகிறவர் பேச்சைக் கேட்டு நாக்கில் தண்ணீர் சொட்ட விடுவதாலும், கூட்டிவைப்போரின் அளப்பினாலும் ஏற்படும் காதல் என்ன தன்மையுடைத்ததாய் இருக்கும் என்பதை அறிஞர்கள் சிந்தித்துப் பார்ப்பார்களாக.

- விடுதலை நாளேடு, 14.02.2005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக