திங்கள், 30 செப்டம்பர், 2024

சித்திரபுத்திரன் “ஒரு ஆராய்ச்சி (இராமாயணக் கதை ஆராய்ச்சி)


- தந்தை பெரியார்

(20.9.1947 'குடியரசு' இதழில் சித்திரபுத்திரன் என்ற புனைபெயரில் ஆராய்ச்சி என்ற தலைப்பில் தந்தை பெரியார் எழுதியது)

இராட்சதர்கள் தபசு செய்தார்கள். வரம் பெற்றார்கள். அந்த வரத்தைக் கொண்டு அக்கிரமம் செய்தார்கள் என்பதெல்லாம் இந் நாட்டு பழங்குடி மக்களையும், அவர்கள் தலைவர்களையும் இராட்சதர்கள் என்று சொல்லிக் கொள்வதற்குக் கடவுள்களும், தேவர்க ளும் என்ற பெயர்கொண்ட ஆரியர்கள் வழி தேடித் கொண்ட சரக்கே அல்லாமல், அவர்களது வரம் எதுவும் பயன்பட்டதாகத் தெரியவில்லை.

விஷ்ணு, சிவன் ஆகியவர்கள் யார்? எப்போது உண்டானார்கள்? எப்படி உண்டானார்கள்? எங்கிருந்து வந்தார் கள்? ஏன் வந்தார்கள்? என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடையாது.

அதுபோலே தேவர்கள். எப்படி உண்டானார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? ஏன் வந்தார்கள்?என்பதற்கு ஆதாரம் கிடையாது. 

இவர்கள் எல்லாம் இமய மலைக்கு இப்புறம்தான். அதாவது இந்தியா கண்டம் என்னும் பிரதேசத்தில் இருந் தார்களே ஒழிய மற்ற இந்தியாவுக்கு அப்பாற்பட்ட அய்ந்து கண்டங்களிலும் இருந்ததாகவோ அந்தக் கண்டங்களைப்பற்றி இவர்கள். ஏதாவது தெரிந்திருந்ததாகவோ சரியான தகவல்களைக் காணோம்.

கீழ் ஏழு லோகம், மேல் ஏழு லோகம் கண்டு பிடித்தவர்கள் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, அய்ரோப் பாக்களைப்பற்றி ஒன்றையும் கண்டுபிடித்ததாகவோ அல்லது அங்குள்ளவர்கள் இந்தியாவையும், சிவ, விஷ்ணு, தேவர், அசுரர், ராட்சதர், சூரன் ஆகியவர் களை அறிந்திருந்ததாகவோ தகவல்களையும் காண முடி யலில்லை.

அவதாரங்களில் வரும் அக்கடவுள்களின் ஆட்சியில் அவர்களது பிள்ளை, குட்டி, மனைவி முதலியவர்கள் வாழ்க்கையில் உள்ள இடம், மலை, ஆறு, கடல், ஊர், வீடு, வாசல் எல்லாம் இந்தியாவில் இருப்பவைகளைத் தான் சொல்லப்படுகின்றனவே ஒழிய மற்ற நாட்டு மலை, காடு, வனம், நதி, சமுத்திரம் எதுவும் சொல்லப்படவில்லை. கடவுள்கள், தேவர்கள் வாழ்க்கையில் காணப்படும் "பூலோகமே" இந்தியாவாக தான் கருதப்பட்டிருக்கிறதே தவிர வேறு ஒன்றும் சேர்க்கப்படவில்லை.

இவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்து, இந்தியக் கண்டத்தின் பூர்வ நிலை, அதாவது ஆரியர் வருவதற்கு முன் இருந்த நிலையையும் யோசித்துப் பார்த்தால் சிவன், விஷ்ணு அல்லது சேபோன், மாயோன் மற்றும் திருக்குறன்,தொல்காப்பியம் ஆகியவற்றில் வரும் உலகம் முதலியவை பெரும்பாலும் இந்தியாவுக்குள் ஆரியர் வந்த பிறகு ஏற்பட்டவைகள் தான் என்பதும், அவை இந்தியாவைப் பொறுத்தவைகள் தான் என்பதும் சாதாரணமாய் விளங்கும். அவைகளைப்பற்றித்தான் மற்ற வேறு ஆதாரங்களும் விளங்குகின்றன.

சிந்து நதிதீரத்தைப் பற்றியும் அங்கு மகஞ்சதாரோ. ஹரப்பா முதலிய கண்டுபிடிக்கப்பட்ட பூர்வ சின்னங்க ளைப்பற்றியும் பேசுவதில் ஆரியர்களுக்கு முன் தமிழர்கள் அங்கிருந்தார்கள் என்றும் தான் சொல்லப்படுகிறது.

ஆனால், மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகம் இன்றைக்கு 6000, 7000 வருஷ காலத்துக்கு முந்தியது என்று சொல்லப்படுகிறது.

ஆரியர்களுக்கு முன்பே இந்த இடங்கள் நாகரீகமாய் இருந்திருந்தால் ஆரியர் இங்கு எப்படி வந்திருக்க முடியும்? இந்தியா கண்டம் முழுவதும், சமயம், சமுதாயம், கலை, பழக்கவழக்கம் முதலிய யாவும் ஆரியமயமாய் - ஆரிய ஆகமும், ஆரிய ஆச்சாரம், தர்மம், ஆரிய கதை ஆகியவைகளே கொண்ட இலக்கண இலக்கியம், சரித்திரம், காவியம் ஆகியவை எப்படி ஏற்பட்டிருக்க முடியும்?

கோவில்கள் எவ்லாம் தமிழர்களுடையதா - ஆசியர்க ளுடையதா என்று பார்த்தாலும் அவற்றிற்குப் பணம் செலவு செய்தவனும், கட்டடம் கட்டியவனும், அதற்கு மான்யம், மடப்பள்ளி விட் டவனும் தமிழனாக இருக்கலாம்; சந்தேகமேயில்லை. ஆனால், சொந்தக்காரனும் கோவில் ஆகமக்காரனும், கடவுள் தன்மைக்காரனும் ஆரியனாகத்தானே இருக்கிறான்?

கோவில்களில் உள்ள உருவங்கள் அதன் தோற்றத்திற்கு ஆன கதைகள், பூசை உற்சவ முறைகள், நைவேத்திய சாதனங்கள் ஆகியவை ஆரியர்க ளுடையதாகத்தானே இருந்து வருகின்றன? அந்தக் கோவில்கள் கட்டப்பட்ட காலத்திலும் அப்போதுள்ள அரசர்கள் ஆட்சியிலும் ஆரிய ஆதிக்கம் தலைசிறந்து உச்சஸ்தானத்தில் இருந்தது என்பதற்கு "முதல், இடை, கடை" சங்கங்களும், அப்போதிருந்த புலவர்களும், அரசர்களும், அரசநீதியும் அவர்கள் கைக்கொண்டிருந்த சமயங்களும் உதாரணமாக இல்லையா?

இந்த நிலையில் அசுரர், இராட்சதர்கள் என்பவர்கள் யாராக இருந்திருக்க முடியும்? அவர்கள் எங்கிருந்து வந்திருக்க முடியும்? அதுவும் இந்தியாவிற்குள் உள்ள அயோத்தி, மதுரை,

டெல்லி, மிதிலை, காந்தாரம்,விராடம், விதர்ப்பம், தண்டகாரண்யம், கோதா வரி, சித்திரகூடம் ஆகிய இடங்களும் அங்கும் சுரன், சூர்ப்பனகை, மாரிசன் முதலியவர்களும் இருந்தார்கள் என்றால் இவர்கள் யாராக இருந்திருக்க யும்? இதைக்கண்டு பிடிக்கப் பெரிய பெரிய புராண, சரித்திர, இலக்கிய, காலிய நூல் ஆராய்ச்சி வேண்டும்?

இவை பொய்க்கதை புனை கதைகளாக இருந்தால் கவலை வேண்டாம். மெய்க் கதை சிறிதாவது நடத்த கதை என்றால் கோதாவரி நதிக்குப் பக்கத்திய தேசத்தில் தான் இராணவன் தங்கை சூர்ப்பனகை, இராவணன் தம்பி கரன் முதலியவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து, "உங்களைக் கொல்லவே நான் வந்தேன்" என்று இராமன் சொல்லுகிறான். முனிவர்களும் "பக்கத்தில் ஜனஸ்தானம் இருக்கிறது. அங்கு இராக்ஷதர்கள் இருக்கிறார்கள்" என்கிறார்கள்.

இந்தியா கண்டத்தின் பாகத்தைக் கடல் கொண்ட காலம் பதினாயிரம் வருஷத்துக்கு மேற்பட்டது. என்கிறார்கள். ஆரியர்கள் இந்தியா வுக்கு வந்தது 6000 வருஷத்துக்கு உட்பட்டது என்கிறார்கள். அதற்கு முன்பே தமிழர்கள் இந்தியா கண்டம் பூராவும் பரவி இருந்ததோடு தமிழர் ஆட்சியும் அங்கெல்லாம் பரவி இருந்தது என்றும் சொல்லி அஸ்ஸாம் கண்டுபி டிப்புகளையும், சிந்து கண்டு பிடிப்புகளையும் உதாரணம் காட்டுகிறார்கள்.

மீனக் கொடியோனாகிய தெற்கத்திய சம்பாரன் என்னும் 'அசுர' அரசனுடன் தசரதன் சண்டை போட்டதாகவும் வால்மீகி இராமாயணத்தில் இருக்கிறது. சம்பாரன் என்று ஒரு பாண்டிய மன்னன் இருந்ததாகவும் இலக்கியம் கூறுகிறது.

கதையை வளர்த்துவதற்காக இராமன் சீதையை அங்கு போய் தேடினான் என்று சொல்லப்பட்டிருக்கிறதே அல்லாமல் சீதை காணாமல் போன சிறிது காலத்துக்குள்ளாகவே இராவணன் தான் தூக்கிக் கொண்டு போனான் என்பதும், அவன் தெற்கே போனான் என்பதும் தெரிந்துபோய் விட்டதாகக் காணப்படுகிறது.

அன்றியும் இராவணன் சீதையின் பக்கத்திலேயே இருந்து லக்ஷ்மணன் வெளியில் சென்றவுடன் தூக்கிவந்து இருக்கிறான், மாரீசன், தாடகையின் மகன் பக்கத்தி லேயே வசித்திருக்கிறான். சூர்ப்பனகை தனது மூக்கறு பட்ட உடனே இராவணனி டம் சென்று இரந்த ஒழுக்கலோடு முறைவிட்டிருக்கிறாள். இராவணன் உடனே மாரீசனோடு அதைப்பற்றி பேசுகிறான். விஸ்வாமித்திரன் யாகம் செய்ததும் தாடகை கொடுத்ததும் இந்தியாவில் இன்னும் வடக்கில் என்றாலும் சமீபமாகத் தான் காணப்படுகிறது. . சுக்ரீவன், அனுமார் முதலியவர்க ளையும் பர்னசாலைக்கு  சமீபத்திலேயே சந்திக்கிறான்.

ஜடாயு இரத்தம் காயாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போதே இராம லக்ஷ்மணர்கள் காண்கிறார்கள். இராமன் "நான் புத்தியில்லாமல் ராட்ஷதர்களை விரோதித்துக் கொண்டேன்" என்று வருத்துகிறான்.

ஆகையால் வால்மீகி கதைப்படி இராஷதர்கள் இராஷத அரசர்கள் என்று சொல்லப்பட்டவர்கள். பெரும்பாலும் திராவிட நாட்டிற்குள் அல்லது நமக்கு சமீபத்திற்குள்தான் இருந்திருக்க வேண்டுமே ஒழிய அவர்கள் வெளிநாட்டார் என்றோ, வேறு இனத்தார் என்றோ சொல்வதற்கு தக்க ஆதாரம் எதுவும் அதில் காணப்படவில்லை.

வால்மீகி இராமாணத்தை வால்மீகி கதை முகமாய் எழுதியதால் வர்ண னைக்கு ஆகவும் கவர்ச்சிக்கு ஆகவும் சில கற்பனைகளைச் சேர்க்க வேண்டியதாக ஆகி அவை ஒன்றுக்கொன்று முரண்படத் தக்கதாகவும் ஆகிவிட்டதால் பண்டிதர்கள் வக்கீல்களைப்போல் உண் மையைப்பற்றிய லக்ஷியமில்லாமல் தங்கள் வெற்றியையே குறி வைத்தும் சில

அற்ப குறிப்புகளை எடுத்துக் கொண்டும் மனச்சாட்சிக்கு விரோதமாய் கூச்சல்போட்டு தேவ - அசுரர்களை உறுதிப்படுத்துகிறார்கள் என் பதல்லாமல் வேறு உண்மை என்ன இருக்கிறது. புராணங்கள், இதிகாசங்கள், வேத சாஸ்திரங்கள், ஸ்மிருதிகள் என்பவைகளுள்பட ஆரியர் கள் தங்கள் உயர்வுக்கும் திராவிடர்களை இழிவுப்படுத்தவும் செய்து கொண்டவைகளே தவிர வேறில்லை. அக் காலத் தமிழர்கள் ஒரு சமயம் பாமர மக்களாக இருந்திருக்கலாம். ஆதலால் சமய, சரித்திர ஆதாரங்களைக்கொண்டு நாம் தம்மைக் கவனிக்காமல் தற்கால அறிவைக் கொண்டு, நிலையைக் கொண்டு பார்ப்பதுதான் பயன் தரக்கூடியதாகும்.

- விடுதலை ஞாயிறு மலர்,19.07.1998




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக