வெள்ளி, 26 ஜூன், 2020

உரிமையைத் தர ஒப்புமா?

பெரியார் கேட்கும் கேள்வி-26!
மனுதர்மங்களால் மக்கள் நான்கு வகையாகவும், பல்வேறு ஜாதிகளாகவும் பிரித்து ஒருவனை மற்றொருவன் வேறென மதிக்க வைத்து, ஒருவனைக் கண்டால் மற்றொருவன் துவேஷிக்கும்படியாகவும் ஒரு ஜாதிக்கொரு நீதி வகுத்து ஒருவன் நடக்கும் பாதையில் மற்றவன் நடவாதபடிக்கும் ஒருவன் குளிக்கும் ஓடையில் மற்றவன் குளிக்காதபடிக்கும் நாம் சிதறுண்டு அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். இதை நமக்குத் தந்த அந்த வர்ணாசிரமத்திடம் நம்பிக்கை வைத்து அதில் மாற்றம் ஏற்பட்டால் தமது உயர்வும் உயர்வால் ஏற்படும் உல்லாச வாழ்வும் உருக்குலையும் என்ற அச்சத்தோடு வாழும் கூட்டம் ஒரு போதும் தீண்டாமையைப் போக்க முன்வராது எனத் தைரியமாய் கூறுவோம்.

மாட்டை செக்கில் கட்டி ஓட்டுவோனுக்கு திடீரென ஜீவகாருண்ய உணர்ச்சி தோன்றி மாட்டை அவிழ்த்து விட்டுவிட ஒப்புவானா? அவன் மாடு பூட்டி ஓட்டுவதை விட்டாலன்றி மாட்டின் விடுதலையை அவன் எங்ஙனம் தர முடியும்? வேண்டுமானால் அந்த மாட்டைக் குளிப்பாட்டி, புதிய மூக்கணாங்கயிறு மாட்டி அலங்காரம் செய்வான். அஃதேயன்றி உள்ளபடி அவன் மூலமாக மாடு எங்ஙனம் தனது 'கர்மபலனை' நீக்கிக் கொள்ள முடியும்.

அதனைப்போலவே எந்த நாளும், ஆண்டு வர வேண்டு மெனவும், பிறப்பை மார்க்கமாக வைத்துக்கொண்டே உயர வேண்டுமெனவும் கருதிக் கொண்டிருக்கும் வைதிகக் கும்பல் தமது 'சீட கோடிகளுக்கு' உரிமையைத் தர ஒப்புமா? உரிமை யைத் தந்து விட்டால் இவர்களுடைய குருத்தன்மை ஏது?

- தந்தை பெரியார், ‘குடிஅரசு’, 16.6.1939

- ‘மணியோசை’

வெள்ளி, 12 ஜூன், 2020

அய்யா அரிச்சுவடி

1. அடுத்த ஜென்மம் என்பது - முடிச்சுமாறிகள் பேச்சு .
2. ஆரியர் சூழ்ச்சி - அறிவு வீழ்ச்சி .
3. இதிகாசமென்பது - மதிமோச விளக்கம் .
4. உண்மையைச் சொல்ல - ஒரு போதும் தயங்காதே !
5. ஊழ்வினை எள்பது - ஊக்கத்தைக் கெடுப்பது .
6. கருமாந்திரம் என்பது - காசு பறிக்கும் தந்திரம் .
7. கல்லைத் தெய்வமென்று - கற்பிக்க வேண்டாம் .
8. கோத்திரமென்பது - குலத்தைப் பிரிப்பது .
9. சனாதன தர்மம் என்பது - சண்டாள அதர்மம் .
10. சாமி சாமி என்பது - காமிகளின் உளறல் .
11 சூத்திரன் என்றால் - எட்டி உதை
12. திதி கொடுப்பது - நீதியைக் கெடுப்பது .
13. தெய்வ வழிபாடு - தேச மக்களுக்குக் கேடு ,
14. பல தெய்வ வணக்கம் - பட்டு வீழ்க .
15. பார்ப்பனர்கள் என்பவர்கள் - பகற்கொள்ளைக்காரர்கள்
16. புராணங்கள் - பொய்க்களஞ்சியங்கள் .
17. பேதகமென்பது - வேதியருக்கணிகலம்
18. மகாபாரதம் - பஞ்சமா பாதகம்
19. மடத் தலைவர்கள் - மடைத் தலைவர்கள் .
20. மதக்குறி என்பது - மடையர்க் கறிகுறி .
21 முத்தி முத்தி என்று - புத்தியைக் கெடுக்காதே .
22. விதி விதி என்பது - மதியைக் கெடுப்பது .
23. வேதம் என்பது - சூதாய்ச் சொன்னது .
24. ஜாதி வேறுபாடு -ஜன சமூகத்திற்குக் கேடு
25 ஷேத்திரமென்பது - சாத்திரப் புரட்டு
- விடுதலை நாளேடு, 10. 5. 2003

செவ்வாய், 2 ஜூன், 2020

விடுதலை பற்றி வெண்தாடி வேந்தர்!

June 1, 2020 • Viduthalai • 

"ஜஸ்டிஸ் கட்சி"யின் சார்பாக ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து தமிழ்ப் பத்திரிகை ஒன்று "விடுதலை" என்னும் பேரால், வாரம் இரு முறையாக சென்னையில் இருந்து வெளியாகி இரண்டு இதழ்கள் நமது பார்வைக்கு வந்தன. அதைப்பற்றி ஒரு மதிப்புரை எழுத வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை.
ஏனெனின் 2, 3 வருஷங்களாகவே பரிசுத்த வீர ரத்த ஓட்டமுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும், இரவும் பகலுமாய் தமிழ்ப் பத்திரிகை! தமிழ்ப் பத்திரிகை!! தமிழ்ப் பத்திரிகை!!!  என்கின்ற தாகத்துடன் அலைந்து கொண்டிருந் ததும், அதை எந்தத் தலைவர்களும் கவனியாமல் அலட்சி யமாய் இருந்ததும், அதன் பயன்களைச் சமீப காலத்தில் ஏற்பட்ட பல தேர்தல்களின் மூலம் அனுபவித்ததும், மறு படியும் புதிய முறையில் முன்னிலும் அதிகமாக இரண்டு பங்குச் சப்தத்துடன் தமிழ்ப் பத்திரிகை! தமிழ்ப் பத்திரிகை!! தமிழ்ப் பத்திரிகை!!! என்று மக்கள் கூப்பாடு போட்டதுமான விஷயம் யாரும் அறியாததல்ல.
பாக்கியம் கிடைத்த மகிழ்ச்சி !
அப்படிப்பட்ட நிலையில் 'விடுதலை' என்னும் பேரால் பத்திரிகை வெளியாய்ப் இருப்பதைப் பார்த்து எந்தப் பார்ப்பனரல்லாதாரும் தங்களுக்கு ஏதோ ஒரு "பாக்கியம்" கிடைத்ததாக மகிழ்ச்சியடைவார்களே ஒழிய, இதற்கு மதிப்புரை வருகின்றதா? அது எப்படி வருகின்றது? என்று யாரும் கவனிக்க மாட்டார்கள்.
ஆதலால் நாம் மதிப்புரை எழுதும் வீண் வேலையில் பிரவேசிக்காமல், வந்து விட்டது! தமிழ்ப் பத்திரிகை!! என்று விளம்பரம் செய்யவே ஆசைப்படுகின்றோம்.
"விடுதலை" பத்திரிகை இன்று வாரம் இருமுறையாக வெளிவந்தாலும்; கூடிய சீக்கிரம் தமிழ் மக்கள் ஆதரவுக்கு ஏற்பத் தினசரி ஆகும் என்பதில் நமக்கு அய்யமில்லை.
பத்திரிகையானது நல்ல மாதிரியில் பார்ப்பன விஷமப் பிரச்சாரங்களுக்கு மார்பைக் காட்டும் முறையில் விஷயங் களைக் கொண்டு வெளியாகி வருவதால் அதை ஆதரிக்க வேண்டிய அவசியம் எந்த விதத்திலும் குறைவாகக் காணப் படவில்லை என்றே சொல்லுவோம்.
இப்பத்திரிகைக்கு உள்ள கஷ்டம், எதிர்ப்பு, சூழ்ச்சி, தொல்லை ஆகிய விஷயங்களைப் பற்றி நாம் விவரிக்க வேண்டியதில்லை.
இப்படிப்பட்ட தொல்லைகளுக்கு இடையே ஒரு பத்திரிகை வாழ்வதென்றால் மிகவும் ஆச்சரியமான காரியமாகும்.
பார்ப்பனரை எதிர்த்து வாழ முடியுமா?
இதுவரை பார்ப்பனர்களுக்கு விரோதமானது என்று காணப்பட்ட பத்திரிகைகள் எதுவும் நமது நாட்டில் வாழவே இல்லை.
எவ்வளவோ வீரமாக ஆரம்பித்த பத்திரிகைகள் எல்லாம் வருடாந்திரம் ஆவதற்குள் ஒன்று பார்ப்பனர்களுக்கு அடிமை யாக வேண்டியது அல்லது மறைந்து போக வேண்டியது என்கின்ற நிலையில் இருந்து வந்திருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் "குடிஅரசு" ஏதோ பாஷாணத்தில் புழுத்த புழுப்போல் உயிர் வைத்துக் கொண்டு வருகின்றது என்றாலும் அதுவும் இதுவரை அடையாத கஷ்டமோ, தொல்லையோ இனிப் புதிதாக ஒன்று இருப்பதாகத் தோன்ற வில்லை.
இப்படிப்பட்ட நிலையில் "விடுதலை" தோன்றி இருக் கின்றது என்பது ஒரு விதத்தில் சந்தோஷம் என்றாலும், மற்றொரு விஷயத்தில் எந்த நிமிஷத்திலும் அதற்கு ஆபத்து வரப்போகின்றதோ என்று பயப்பட வேண்டியதாகவே இருக்கிறது.
“விடுதலை"யை ஆதரிப்பது தமிழ் மக்களின் கடமை
எப்படியோ ஒரு விதத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்த்தபடி தமிழ் பத்திரிகை வந்து விட்டது. அதைஆதரித்துத் தினசரி யாக்கி நிலை நிறுத்த வேண்டியது தமிழ் மக்ள் கடமையே ஒழிய, இனித் தலைவர்களைக் குற்றம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
அதன் நோக்கம், அதன் தொண்டு ஆகியவைகளைப் பற்றி யாரும் சந்தேகப்படவேண்டிய காரணமே யாருக்கும் கிடையாது. அகையால் அதைப்பற்றி கவலைப்படாமலும், அதற்கு யாரும் புத்தி புகட்டும் வேலையில் இறங்காமலும் ஒவ்வொருவரும் சந்தாதாரர்களாகச் சேர்ந்துவிட வேண்டும். சந்தாத் தொகை வாரம் இரு முறைக்கு வருஷம் 3-10-0 ஆகும்.
உண்மை "விடுதலை"யைக் கொடுக்கட்டும்
இதைவிடக் குறைந்த தொகைக்கு தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ ஒரு வாரம் இருமுறை 10 பக்கம் விஷயம் கொண்ட பத்திரிகை ஒன்று இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. ஆகையால் ஒவ்வொருவரும் ரூ. 3-10-0 நாளையே மணி ஆர்டர் அனுப்பி விடவேண்டியது அவசியமான காரியம் ஆகும். 3 மாதத்திற்குள் 2000 சந்தாவாவது சேர்ந்தால் "விடுதலை" தினசரி ஆகிவிடலாம் என்பதில் சந்தேகமில்லை.
அதன் பத்திராதிபர் தோழர் டி.ஏ.வி.நாதன் அவர்கள் ஜஸ்டிஸ் பத்திரிகையை நடத்தி வந்தவர். ஆனதால் அப்பேர்ப் பட்ட அறிவாளியால் நடக்கும் பத்திரிகை நீடுழி வாழ்ந்து பாமர மக்களுக்கும் பண்டிதர்களுக்கும் பயன்பட்டு உலக மக்களுக்கு உண்மை விடுதலையைக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
- 'குடிஅரசு', 7.6.1935

திங்கள், 25 மே, 2020

விகடன்" விஷமம் - பார்ப்பனர்கள் தமிழர்களுக்கு இழைக்கும் கொடுமை

"விகடன்" விஷமம்

       தந்தை பெரியார்

17.10.37ந் தேதி "விகட"னின் தலையங்கத்தில் "வாழிய செந்தமிழ்" என்னும் தலைப்பில் ஒரு வியாசம் காணப்படுகிறது. 
அதில் ஹிந்தியை முதல், இரண்டாவது, மூன்றாவது பாரம் வரைக்கும் வைக்கப் போகிறபடியால் அதற்கு மேல் சமஸ்கிருதம் இஷ்டபாடமாக வைக்கலாம் என்றும்,
இங்கிலீஷைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றும்,
சீநிவாச சாஸ்திரியார் ஒருவரேதான் இங்கிலீஷ்காரரைப் போல பேசத் தெரிந்தவர் என்றும்,
ஆதலால் இங்கிலீஷ் அப்படி பேசத்தெரிய முயற்சி செய்வது பயன்படாது என்றும்,
இங்கிலீஷையும் தமிழிலேயே சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றும்,
தமிழ் கற்றுக்கொடுக்க தோழர் உ.வே. சாமிநாதய்யர்தான் தகுதியானவரென்றும் அவர்தான் தற்கால கொள்கையை தமிழில் புகுத்தாமல் நூலிலுள்ள இன்பத்தை மாத்திரம் நுகரும்படி செய்வார் என்றும்,
சமஸ்கிருதமே உலகத்து நாகரீகத்துக்கு எல்லாம் அடிப்படையான பாஷை என்றும், அதை படிக்க பள்ளிக்கூடங்களில் வசதியும் தூண்டுதலும் வேண்டுமென்றும்,
டாக்டர் சுப்பராயன் கல்வி மந்திரியாய் இருந்து இதை உணர்ந்து இருப்பது பாக்கியம் என்றும் மற்றும் பல விஷயங்களும் "வாழிய செந்தமிழ்" என்னும் தலைப்பில் இருக்கின்றன.

இந்த தலையங்கத்தை கசக்கிப்பிழிந்தால் இங்கிலீசுக்கு சாஸ்திரியாரே கெட்டிக்காரர், தமிழுக்கு சாமிநாதய்யரே கெட்டிக்காரர், பாஷைகளில் சமஸ்கிருதமே சிறந்தது என்பதும் ஹிந்தி கட்டாயம் 3-ம் பாரம் வரை படித்தாக வேண்டும்; பிறகு சமஸ்கிருதம் சுலபமாய் வந்து விடும்; தமிழ் கற்றுக்கொடுக்கும் போது தமிழர்களின் நிலை, கொள்கை ஆகியவைகளைப் புகுத்தக்கூடாது; இங்கிலீஷ் பிரதானமல்ல; அது படித்ததால் பல கேடுகள் வந்து விட்டன என்பதும் இந்த அபிப்பிராயத்துக்கு மரியாதை கொடுத்து தக்கது செய்ய டாக்டர் சுப்பராயன் கல்வி மந்திரியாய் இருக்க ஒப்புக்கொண்டது தமிழ் நாட்டின் பாக்கியம் என்பதுந்தான் சாரமாகும்.

இதற்கு பெயர்தான் வாழிய செந்தமிழாம். இந்த விஷயங்களை எழுதுகிறவர்கள் புத்திசாலிகளா அல்லது இதையும் படிக்க இருக்கும் மக்கள் மடையர்களா என்பதுதான் தமிழர்கள் கவனிக்க வேண்டிய பிரச்சினையாகும்.

டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கு மந்திரி வேலை கொடுத்து விட்டு அவரிடம் என்ன வேலை வேண்டுமானாலும் வாங்கலாம், அவர் எதற்கும் தமது கையெழுத்தைக்கூட யார் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளவும் அனுமதித்துவிடுவார்.

சாஸ்திரியாருக்கு இவ்வளவு விளம்பரம் கொடுத்திருப்பது எதற்கு? பத்திரிக்கைகள் தோழர் சாஸ்திரியார் பிரிட்டிஷாரின் கூலிப் பிரசாரகராய் உலகம் சுற்றி பிரிட்டிஷை புகழ்ந்து  
பிரசாரம் செய்து பட்டம் பணம் சம்பாதித்துக் கொண்டதல்லாமல் இதுவரை இந்தியாவுக்கு அவரால் ஏற்பட்ட நன்மை இன்னது என்று யாராவது சொல்லமுடியுமா? அல்லது எந்த பார்ப்பனப் பத்திரிகையாவது உறுதி செய்ய முடியுமா?

தோழர் உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் தமிழ் பழைய ஏட்டுப் பிரதிகளைக் கைப்பற்றி தமிழ் உணர்ச்சி இல்லாமல் வடமொழி கருத்துக் களையும் ஆரியர் கொள்கைகளையும் உட்புகுத்தி புத்தக ரூபமாக்கி புத்தகம் அச்சுப்போட தமிழர்களிடம் பணம் பெற்று புத்தகம் விற்ற பணத்தை தனது முதலாக்கி பணக்காரராகி பட்டம் பரிவட்டம் பெற்றதல்லாமல் தமிழுக்கு அவரால் ஏற்படுத்தப்பட்ட இலக்கியம் இன்னது, இலக்கணம் இன்னது அல்லது வெளிப்படையாய்க் கட்டிய சொந்த கருத்து அமைந்த நூல் இன்னது என்று ஏதாவது எடுத்துக் காட்ட முடியுமா?

மற்றும் சமஸ்கிருதம் இவ்வளவு உயர்ந்தது என்று சொல்லுகிற இப்பார்ப்பனர்கள் அப்பாஷை இலக்கிய இலக்கணங்களால் காட்டு மிராண்டித்தன காலத்திய  கற்பனைக் கதைகளும் பார்ப்பனர்களே கடவுள் - கடவுளே பார்ப்பனர்கள் என்கின்ற வஞ்சக விஷம உணர்ச்சிகளும் மக்கள் அறிவை அடக்கி காட்டு மிராண்டித்தனத்துக்கு கொண்டு போகும் அடிமைப் புத்தி கற்பிப்பும் அல்லாமல், சமஸ்கிருதத்தில் அரசியல், சமூக இயல், பொருளியல், கல்வி இயல், அறிவியல், ஒழுக்க இயல் ஆகியவற்றிற்கு யோக்கியமான - நாகரிகமான கருத்துக்களோ பயன்படக்கூடிய பொருள்களோ ஏதாவது இருக்கிறது என்பதாக யாராவது சொல்ல முடியுமா?

ஆகவே இவ்வளவு மோசமாயும் நம் சமூகத்துக்கே கேடாகவும் இருக்கும் விஷயத்தை எடுத்துக் கொண்டு "விகடன்" கையாளும் மாதிரியைப் பார்த்தால் பார்ப்பன பிரசார சூழ்ச்சி அதில் எவ்வளவு இருக்கிறது என்பது நன்றாய் மக்களுக்கு விளங்கிடும்.

கடைசியாக பார்ப்பனரின் கருத்து மக்கள் இங்கிலீஷ் படித்தே சுதந்தரமும் பகுத்தறிவும் சுயமரியாதையும் பெறும் உணர்ச்சி பெற்று விடுவதால், அதை ஒழித்துவிட்டு ஹிந்தியையும் சமஸ்கிருதத்தையும் புகுத்தி தமிழுக்கும் தாங்களே வாத்தியார்களாகி விட்டால் தமிழர்களை பழையபடி சூத்திரர்களாக்கி தாசி மக்களாக்கி விடலாம் என்கின்ற எண்ணமும் சூழ்ச்சியும் அல்லாமல் வேறு இல்லை என்பதும் விளங்கிவிடும்.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.10.1937

பார்ப்பனரல்லாத மாணவர் படிப்பின் கஷ்டமும் பார்ப்பன உபாத்தியாயர்களின் கொடுமையும்


May 24, 2020 • Viduthalai • 
* தந்தை பெரியார்

எங்கு பார்த்தபோதிலும் பார்ப்பன உபாத்தி யாயர்களின் கொடுமையானது சகிக்க முடியாத அளவில் பெருகிக் கொண்டே வருவதாக தினமும் நமக்குச் சங்கதிகள் எட்டிக் கொண்டே வருகின்றன. அவற்றுள் அநேகம் வெளியிடவே மனம் கூசுகின்றது. அரசாங்கக் கல்வி இலாகா மந்திரி ஒரு பார்ப்ப னரல்லாதாராயிருந்தும் ஸ்தல ஸ்தாபனங்களின் தலைவர்களும், மற்றும் தனிப்பட்ட பள்ளிக் கூடங் களின் நிர்வாகஸ்தர்களும் பார்ப்பனரல்லாதாரராகவே இருந்தும் பார்ப்பனரல்லாத பிள்ளைகளின் கஷ்டம் சற்றாவது நிவர்த்தியானதாகக் காண்பதற்கில்லை. இனி சீக்கிரத்தில் நிவர்த்தியாவதற்கு மார்க்கம் ஏற்படும் என்றும் கருதுவதற்கில்லை. இதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்ப்போமானால் அநேக மாய் கல்வி இலாகா உத்தியோகங்களில் பெரிதும் பார்ப்பனர்களே அதிகாரிகளாய் இருந்து வருவதும், பரீட்சை அதிகாரிகளும் பார்ப்பனர்களாகவே இருந்து வருவதும் அவர்களது சலுகைக்குப் பார்த்திரமான உபாத்தியாயர்களும் தலைமை உபாத்தியாயர்களும் பார்ப்பனர்களாகவே இருந்து வருவதும் தவிர வேறு காரணம் சொல்வதற்கில்லை என்றே சொல்லுவோம். யோக்கியமாகவும், நியாயமாகவும் பேசுவோமானால் கல்வி இலாகாவில் பார்ப்பனர்கள் என்பவர்கள் கண்டிப்பாய், அதிகாரியாகவோ உபாத்தியாயர் களாகவோ இருக்கக் கூடாதென்றே சொல்லுவோம்.
பார்ப்பனர்கள் மூலம் மக்களுக்குக் கல்வி போதிக்க எண்ணுவதை விட கல்விச் சாலைகளை அடைத்து விடுவது, மேலென்று கூடச் சொல்லத் துணிவோம். ஏனெனில், முதலாவதாக இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பார்ப்பனனும் தன்னை உயர்ந்த ஜாதி என்றும், அதாவது வருணாச்சிரமப்படி தாம் 'பிராமண'ரென்றும், மற்றவர் 'சூத்திர'ரென்றும் எண்ணிக் கொண்டி ருப்பவர்கள் எந்தக் கொள்கைப் படி தன்னை 'பிராமண'ரென்றும், மற்றவனை 'சூத்திர'ரென்றும் எண்ணிக்கொண்டிருக்கிறார்களோ, அதே கொள்கையின்படி 'பிராமணன்' 'சூத்திரனை'ப் படிக்க வைக்கக் கூடாதென்றும், 'சூத்திரன்' படித்தால் வருணதர்மம் கெட்டுப் போகுமென்றும், பிராமண னுக்கு ஆபத்தாய் முடியுமென்றும், 'சூத்திரனை'ப் படிக்க வைத்தப் 'பிராமணர்' 'நரகத்தை அடைவார்' என்றும் கருதப்பட ஆதாரங்கள் இருக்கின்றன.
இந்தக் கொள்கையை மனப்பூர்வமாக நம்பின பார்ப்பனர்கள் உபாத்தியாயராயிருந்தால் பார்ப்பன ரல்லாத பிள்ளைகளை அவர்கள் படிக்க விடு வார்களா? படித்தாலும் பாசாக சம்மதிப்பார்களா? என்பதை வாசகர்களே யோசித்து முடிவு கட்டிக் கொள்ள விரும்புகின்றோம்.
கல்வியில் இருக்கும்  சூதுகள் அநேகமாக நம்மவர்களுக்குத் தெரியாதென்றே சொல்லலாம். உதாரணமாக பார்ப்பனரல்லாத பிள்ளைகள் பி.ஏ.பாஸ். செய்வதென்றால் பிள்ளைகளுக்கு 22, 23, 24 வருடங்களாகி விடுகின்றன. ஆனால் பார்ப்பனப் பிள்ளைகள் 18, 19, 20 வயதிற்குள் பி.ஏ.பாசு செய்து விடுகின்றன. இதற்குக் காரணம் என்ன? என்பது நம்மவர்களுக்கு தெரியுமா? யாரையாவது காரணம் கேட்டால், "அது பிராமணப்பிள்ளை. அதற்குப் படிப்பு சீக்கிரம் வருகின்றது. நம்ம பிள்ளை ரொம்பவும் மந்தம். அதனால் சீக்கிரம் வருவதில்லை" என்று ஒரு வார்த்தையால் பதில் சொல்லி விடுவார்கள். ஆனால் நம்பிள்ளைகளும் ஒரு வருடமாவது தவறாமல் ஒவ் வொரு வகுப்பிலும் பாசு ஆகிக்கொண்டே போனா லும் எப்படியும் பி.ஏ.பரீட்சைக்கு போக 22 வயதாய் விடுகின்றது. ஒன்று அல்லது இரண்டு வருடம் தவறி னால் இருபத்து நான்கு வயதாய் விடுகின்றது. மூன்று வருஷம் தவறினால் இருபத்தைந்தாய் விடுகின்றது. பிறகு சர்க்கார் உத்தியோகத்திற்கு லாயக்கில்லாதவர்-களாகி விடுகின்றார்கள். ஆனால் பார்ப்பனர் பிள்ளைகளோ ஒன்று இரண்டு வருஷம் தவறினாலும் கூட 20, 21-ல் பி.ஏ. படித்து முடித்து விடுகின்றார்கள். இதன் ரகசியம் என்னவென்றால் நம் பிள்ளைகளை 7-வது வயதில் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி அரிவரி வகுப்பில் சேர்க்கின்றோம். 7-வது வயதில் அரிவரியில் சேர்ந்தால், அவன் தவறாமல் பாசு செய்தால்கூட 22-ல்தான் பி.ஏ. பரீட்சைக்குப் போக முடியும் ஏனென்றால் அரிவரி வகுப்புக்கும் பி.ஏ.பாசு செய்யும் வகுப்புக்கும் இடையில் 15 வருஷம் வேண்டியிருக்கின்றது. அதாவது அரிவரியில் இருந்து 4-வது வகுப்புக்கு அய்ந்து வருடமும், 4-வதிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி. அல்லது 6-வது பாரத்திற்கும் 6 வருஷம், அதிலிருந்து பி.ஏ.க்கு 4 வருஷம் ஆகவே தவறாமல் பாசு செய் தாலும் 15 வருஷ சாவகாசம் வேண்டியிருக்கின்றன. ஆனால் பார்ப்பனர்களோ தங்கள் குழந்தைகளை 5-வது வயது முதலே வீட்டில் கொஞ்சம் சொல்லிக் கொடுத்து ஆறாவது வயதிலோ அல்லது ஏழாவது வயதிலோ பள்ளிக் கூடத்திற்குக் கொண்டுபோய் முதல் பாரத்தில் சேர்த்து விடுகின்றார்கள். தலைமை உபாத்தியாயர்கள் பார்ப்பனர்களானதால் கணக்கில் சாதாரண 2 கேள்வியும், இங்கிலீஷில் இரண்டு வார்த்தைக்கு அர்த்தத்தையும் கேட்டுவிட்டு "முதல் பாரத்திற்கு லாயக்கு" என்று சொல்லி விடுகின்றார்கள். இதில் அவர்களுக்கு அய்ந்து வருடப் படிப்பும் காலமும் காலச்செலவும் மீதியாகி விடுகின்றன. 14 வயதுக்குக் கீழ்பட்ட பிள்ளைகளை எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்கு எடுப்பதில்லை என்கின்ற நிபந்தனையினால் பார்ப்பனர்கள் தங்கள் பிள்ளைகளை முதல் பாரத்தில் சேர்க்கின்றார்கள்.. அந்த நிபந்தனையும்  இல்லாதிருக்குமானால் மூன்றாவது பாரத்தில்கூட சேர்த்து விடுவார்கள். தவிர 18, 19-ல் அவர்கள் பி.ஏ.பாசு செய்து விடுவதால் 25-வது வயது வரைக்கும் 5 அல்லது 6 வருட காலம் உத்தியோகம் தேட அவர் களுக்குச் சாவகாசம் இருக்கின்றது. ஆகவே அவர்கள் பி.ஏ. படித்து விட்டால் எப்படியும் யாரையாவது பிடித்து என்ன செய்தாவது உத்தியோகம் சம்பாதித்துக் கொள்ள போதிய சௌகரியம் இருக்கின்றது.
நம்முடைய பிள்ளைகளோ சிறு வயதில் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பினால் தலைமை உபாத்தியாயராயிருப்பவர், "இவன் ரொம்பவும் சின்னப் பையன். இன்னும் ஒன்று இரண்டு வருடம் பொறுத்து அப்புறம் கூட்டிக் கொண்டு வாருங்கள்" என்று சொல்லுவதும், "குழந்தைகள் நன்றாய் ஆடிப்பாடி விளையாடட்டுமே, நன்றாய் எட்டு வருடம் ஆன பின்பு பள்ளியில் வைத்தால் போதாதா?" ஏன் இப்படிக் குழந்தைகளை வதைக்கின்றீர்கள் என்று "பரிதாபப்பட்டு" திருப்பி அனுப்பி விடுகின்றார்கள். தவிர, நாம் நிர்ப்பந்தப் படுத்தி சேர்த்தாலும் அவன் தகுதியைவிட ஒரு வகுப்பு கீழாகவே சேர்க்கிறார்கள். அன்றியும் பள்ளிக் கூட பரீட்சைகளில் கூடுமானவரை ஒவ்வொரு வருடமும் அழுத்தி வைக்கவே பார்க்கின்றார்கள்.
பிறகு பல வழிகளிலும் அதாவது 'உனக்குப் படிப்பு வராது' 'வேறு வேலை பார்த்துக் கொள்', 'வீணாய்ப் பணம் செலவழிக்காதே' 'பெஞ்சுக்கு வாடகை கொடுக்காதே' என்று பேசி பிள்ளையின் ஊக் கத்தையும் உற்சாகத்தையும் கெடுப்பதிலேயே கவலை கொள்ளுகின்றார்கள். பையன்களைச் சர்க் கார் பரீட்சைக்கு அனுப்புவதிலும் உபாத்தியாயர் களுக்கே அந்த உரிமை இருப்பதால் சட்டத்தின் மூலம் எவ்வளவோ தகராறு செய்து பார்த்தும் மீறி னால் வேறு வழியில் தகராறும் சொல்லி நிறுத்திவிடவே பார்க்கின்றார்கள். இவ்வளவும் தாண்டிப் பரீட்சைக்குப் போய் எழுதினாலும் பரீட்சை பரிசோதகர், மார்க்கு கொடுப்பவர், முடிவு சொல்வதில் முக்கியமானவர் ஆகியவர்கள் எல்லோரும் பார்ப்பனர்களே. கடைசி யாகப் பாசானாலும் சர்க்கார் உத்தியோகத்திற்குப் போவதற்கு வேண்டிய வயது தாண்டி விடுகின்றது. ஒரு சமயம் மீதி இருந்தாலும் ஒரு வருடம் அல்லது ஆறு மாதமே இருக்குமாதலால். அவசரத்தில் எங்காவது போய் குழியில் விழுவது போல் சிறிய உத்தியோகந்தான் சம்பாதிக்க முடிகின்றன. பரீட்சையில் தவறிப் போனாலோ அதோ கதிதான். வெளிப்படையாக இவ்வளவு கஷ்டம் நமக்கு இருப்பதுடன் மறைமுகமாய் செய்யக் கூடிய கொடுமைகள் எவ்வளவோ இருக்கின்றன. எனவே இந்த நிலையில் நமது கல்வி சாதனம் இருந்து வரு கின்றது. ஆதலால், சட்டசபையில் இந்த விஷயங்களை விளக்கி இதற்காக ஒரு கமிட்டி ஏற்பாடு செய்து இக்கஷ்டங்கள் உண்டா, இல்லையா, என்று விசாரித் துப் பார்த்து உண்மை என்று பட்டால் இதற்கு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஜனப்பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் சட்டசபை அங்கத் தினர்களைக் கேட்டுக் கொள்கின்றோம். பார்ப்பன ரல்லாத மாணவர்களும் நமக்கு எழுதிக் கொண்டிருப் பதைவிட இதற்காக ஒரு மாணவ மாகாநாடு செய்து தங்கள் குறைகளை அதில் விளக்கிக்காட்டிப் பரி காரத்திற்குச் சில தீர்மானங்கள் செய்து அதை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று யோசனை சொல்லுகின்றோம். மற்றபடி பிள்ளை களுக்குத் தனிப்பட்ட முறையில் இருந்துவரும் கொடுமைகளை மற்றொரு சமயம் விளக்குவோம்.
 'குடிஅரசு' - தலையங்கம் 07-07-1929

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

கோடம்பாக்கம் பகுத்தறிவு சங்க ஆண்டுவிழா


தந்தை பெரியார்

தோழர்களே!
இன்று இவ்வாண்டு விழாவில் தோழர்கள் ஊ.பு.அ.செளந்திரபாண்டியன், என்.சிவராஜ், எஸ்.குருசாமி, டி.என்.ராமன், குஞ்சிதம், வித்துவான் முனிசாமி, ஆரோக்கியசாமி, கல்யாணசுந்தரம் ஆகியவர்கள் பேசினார்கள்.

 என்னுடைய முடிவுரையுடன் ஆண்டு விழா நிகழ்ச்சி முடிவு பெற்றதென்றே கருதுகிறேன். 

ஆனால் நான் பேசவேண்டும் என்று கருதி இருந்தவற்றை எல்லாம் உபன்யாசகர்கள் பேசிவிட்டார்கள். ஆதலால் நான் அதிகம் பேசுவேன் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள். நீங்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும்.

 பெண்களை அதிகமாக அங்கத்தினர்கள் ஆக்க வேண்டும்.

பகுத்தறிவு

உண்மையிலேயே எல்லோரும் பகுத்தறிவுக்கு இடம் கொடுக்க வேண்டும். பகுத்தறிவை வளர்க்க வேண்டும். எந்த விஷயத்தையும் ஆராய்ச்சி செய்துபார்க்க வேண்டும். மனதிற்குத் தோன்றியதை எல்லாம் பகுத்தறிவு என்று சொல்லிவிடக்கூடாது.

 புஸ்தகத்தைப் படித்து ஒப்புவிப்பது பகுத்தறிவாகிவிடாது. சாத்தியம் அசாத்தியம் இன்னதென்று அறியவேண்டும். அனுபவ பலன் இன்னதென்று தெரியவேண்டும்.

 நமது சக்தி எப்படிப்பட்டது? அது எவ்வளவு? என்பதை உணரவேண்டும். காலதேச வர்த்தமானங்களைக் கவனிக்க வேண்டும். நமது அறிவுக்கு ஒரு காரியம் சரி என்று பட்டாலும் மேல்கண்ட அனேக விஷயங்களை உணர்ந்தே அதைப் பிரயோகிக்க வேண்டும். 

அதாவது பகுத்தறிவை பிரயோகிக்க பகுத்தறிவு வேண்டும்.

உங்கள் கொள்கை

இங்கு பேசிய பலர் சுயமரியாதையைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் பேசினார்கள். இச்சங்கத்தை சேர்ந்த மக்கள் பெரிதும் தாழ்த்தப்பட்ட மக்களாகக் காணப்படுகிறபடியால் உங்களுக்கு அரசியல் அரசாங்கத்தைத் தழுவிப் போவதுதான் பயன்படத்தக்கதாகும். அரசியலில் உங்கள் வகுப்பைத் தனியாகப் பிரிக்கப்பட்டாய் விட்டது. மற்ற வகுப்புகள் லட்சியத்திற்கும் நிலைக்கும் உங்கள் வகுப்பு லட்சியத்துக்கும் நிலைக்கும் பெரியதொரு வித்தியாசம் இருப்பதாலேயே அரசியலில் நீங்கள் தனி உரிமை கேட்க வேண்டியதாயிற்று.

 அந்தப்படியே அரசாங்கம் உங்களுக்குத் தனி உரிமை அளித்தும் நீங்கள் மற்ற மேல் ஜாதி மக்கள் என்பவர்களால் ஏமாற்றப்பட்டு விட்டீர்கள்.

 அதனால்தான் அவர்கள் மேல் ஜாதிக்காரர்களாய் இருக்கிறார்கள். அதில்லாததினால்தான் நீங்கள் கீழ் சாதி என்பதில் சேர்க்கப்பட்டு அதற்குண்டான பயனை அனுபவித்து வருகிறீர்கள்.

 உங்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டதற்கே தோழர் ஆரோக்கியசாமி கோபித்துக்கொண்டார். 
கோபித்து என்ன செய்வது? பிரத்தியட்சத்தில் நீங்கள் தாழ்த்தப்பட்டு இருக்கிறீர்களா இல்லையா? 
அந்தப்படி இல்லையானால் உங்களுக்குத் தனி உரிமையே வேண்டியதில்லை அல்லவா? 
சமூக வாழ்வில் உங்களுக்கு எவ்வளவு இடையூறு சட்டப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

 உங்களுக்குக் கோவில் பிரவேச உரிமை கிடையாது. தெரு, குளம், பள்ளிக்கூடம் ஆகியவைகளின் பிரவேச உரிமைகூட இப்போது ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்ட பிறகு உங்களுக்கு உண்டாகி இருக்கிறது. 

அதற்கு இன்னும் பல இடங்களில் தடை இருந்து வருகிறது.

கோவில் பிரவேசம்

திருவாங்கூர் கோவில் பிரவேச உரிமையைப் பற்றிப் பாராட்டிப் பேசினார்கள். அதனால் உங்களுக்கு என்ன லாபம்? உங்கள் தாய் நாட்டில் உங்கள் நிலை என்ன?

 உங்களைவிட இன்னும் மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்களுக்கே நமது நாட்டில் பல இடங்களில் கோவிலின் மதில் பிரவேச உரிமை கூட கிடையாது. 

இந்த நிலையில் உள்ள மக்கள் சிலர் சிறிது கூட மானமில்லாமல் அரசியலைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் மனித உரிமைக்கு லாயக்கற்றவர்கள் என்பதற்கு இதுவே போதிய உதாரணமாகும்.

நியாயமாகப் பேசப்போனால் நீங்கள் மாத்திரம் தாழ்த்தப் பட்டவர்கள் அல்ல. சில இடங்களில் கோவில் உரிமை இல்லாதவர்கள் மாத்திரம் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல. சகல கோவில்களிலும் பிரவேசிக்க உரிமை உள்ள நாங்களும் தாழ்த்தப்பட்டவர்களேயாவோம். 

கோவிலில் எங்களுக்கும் உரிமை இல்லாத இடம் பல உண்டு. காப்பிக்கடை, ஓட்டல் முதலிய இடங்களில் நாங்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவும் சில அறைகளுக்குள் செல்லப்படாதவர்களாகவும் தான் இருந்து வருகிறோம். 

உங்கள் இழிவைப்பற்றி பேசுவதால் எங்கள் இழிவும் நீங்கலாம் என்பதே எங்கள் அனுதாபத்தின் கருத்தாகும். 

பந்தியில் சாப்பிடும்போது தனக்கு வேண்டிய பதார்த்தத்தைப் பக்கத்து இலையில் இருக்கிறவர்களுக்கு வேண்டும் என்று சொல்லிப் பரிமாறுகிறவனைக் கூப்பிட்டு பிறகு தனது இலைக்கும் வாங்கிக்கொள்ளுகிற தந்திரத்தை நீங்கள் அறிந்ததில்லையா?

 அது போல்தான் உங்கள் குறையோ இழிவோ நீங்கினால் கூடவே எங்கள் குறையும் இழிவும் தானாகவே நீங்கிவிடும். அதனாலேயே உங்கள் குறைகளைப்பற்றி நாங்கள் சதா பேசிக்கொண்டே வருகிறோம்.

காங்கிரசில் சேருவது

நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு "அரசியல்" கூப்பாடுகளை வெறுக்கிறீர்களோ, எவ்வளவுக்கு எவ்வளவு "அரசியல்" கட்சிகளுடன் சேராமல் இருக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுடைய குறைகள் நிவர்த்திக்கப்படலாம் என்பது எனது அபிப்பிராயம். 

உங்கள் தலைமேல் கால் வைத்து ஏறிப்போகிறவர்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பீர்களானால் உங்கள் கொடுமை சீக்கிரத்தில் கவனிக்கப்படும். இல்லாவிட்டால் நீங்கள் படிக்கல்லாக விழுந்து கிடக்க வேண்டியதுதான்.

காங்கிரஸ் ஏற்பட்டு 50 வருஷகாலம் ஆகியும் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டு பங்கு கேட்க ஆரம்பித்த பிறகே சமுதாயத் துறையில் பெரியதொரு மாறுதல் ஏற்பட முடிந்தது. அதன் பிறகுதான் உங்கள் நிலையும் இந்த 10 வருஷகாலத்தில் எவ்வளவோ மாறுதலை அடைய முடிந்தது.

 அப்படிக்கில்லாமல் காங்கிரசுக்கே கை தூக்கி வந்திருப்பீர்களானால் - மேல் ஜாதிக்காரர்கள் பின்னாலேயே கோவிந்தாப் போட்டிருப்பீர்களேயானால் உங்கள் நிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

திருவாங்கூர் பிரகடனம்

திருவிதாங்கூர் ஆலயப் பிரவேச விளம்பரத்தைக் கவனித்துப் பாருங்கள். அது எப்படி ஏற்பட்டது? தோழர் சர்.சி.பி.ராமசாமி அய்யரைப்பற்றி நமக்குத் தெரியாதா? அவர் சர்க்கார் பராமரிப்பிலுள்ள சகல வீதிகளிலும் சகல பிரஜைகளும் நடக்கலாம் என்று ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் செய்த சட்டத்திற்கு மதிப்புக் கொடுக்காமல் தடுத்தவரல்லவா?

 அதாவது கல்பாத்தி ரோட்டில் ஈழவர்கள் நடக்கக்கூடாது என்று ஒரு பார்ப்பன மேஜிஸ்ரேட் 144 தடை உத்திரவு போட்டு தடுத்ததைப் பற்றி சட்டசபையில் கேள்வி கேட்கப்பட்ட போது சர்.சி.பி. அய்யர் என்ன பதில் சொன்னார்? அந்த தடை உத்திரவு சரியானதுதான் என்று ஆதரித்துப் பதில் சொன்னார். அதாவது அந்த பிரவேச சட்டத்திற்கு ஒரு புது வியாக்கியானம் செய்தார். என்னவென்றால் "ஏதாவது ஒரு வேலையின் பேரில் - அவசியத்தின் பேரில் தெருவில் நடப்பவனுக்குத்தான் அந்தச் சட்டம் இடம் கொடுக்குமே ஒழிய அனாவசியமாய் வேலை இல்லாமல் நடப்பவனுக்கு அச்சட்டம் இடம் கொடுக்காது" என்று சொல்லி குறிப்பிட்ட 144 தடை உத்திரவு வேண்டுமென்றே அவசியம் இல்லாமல் நடந்து மேல் ஜாதிக்காரர்களின் மனத்துக்கு சங்கடமுண்டாக்குவதை தடுப்பதற்கு ஆக போடப்பட்ட உத்திரவு என்றும் அது அவசியம் தான் என்றும் சொன்னார்.

ஆகவே திருவாங்கூர் திவான் சர்.சி.பி. அய்யரின் தாராள நோக்கம் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அப்படி இருக்க திருவாங்கூர் கோவில் கதவு எப்படி உடைக்கப்பட்டது என்று யோசித்துப் பாருங்கள். அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களும், ஈழவர்கள், நாடார்கள் உள்பட உள்ள மற்ற மக்களும், மதத்தையும், கோவிலையும் சாமியையுமே உடைக்கப் பார்த்தார்கள்.

 இந்துமதம் புரட்டு, கோவில் புரட்டு, சாமியே புரட்டு என்று மகாநாடுகள் கூட்டி பதினாயிரக்கணக்கான பேர்கள் சேர்ந்து தீர்மானம் செய்தார்கள். பலர் முஸ்லீமாக துருக்கி தொப்பி போட்டார்கள், பலர் தாடி வளர்த்து தலைமுடி வளர்த்து கிருபான்(கத்தி) கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு சீக்கியர்கள் ஆனார்கள். சிலர் குடும்பத்தோடு கிறிஸ்தவர்கள் ஆனார்கள். அதன் பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. 

தமிழ் நாட்டில் உள்ள சகல மேல் ஜாதிக்காரர்களும் பார்ப்பனர்கள் உள்பட திருவாங்கூர் ராஜாவை வாழ்த்தி விட்டார்கள். வெற்றி பெறும் இரகசியம் எங்கே இருக்கிறது பாருங்கள். அதுபோலவே நீங்கள் காங்கிரஸ், மதம், கோவில், சாமி ஆகியவைகளை யெல்லாம் உடைக்க ஆரம்பித்தீர்களேயானால் உங்களுக்கு யாருடைய தயவும் இல்லாமல் சகல சுதந்திரமும் சகல உரிமையும் தானாக உங்களைத் தேடிக்கொண்டுவரும்.

பட்டம் மாற்றுவதில் பயனில்லை

அப்படிக்கு இல்லாமல் தாழ்த்தப்பட்டவர்கள் என்று உங்களைக் கூப்பிடுவதற்கு ஆக நீங்கள் கோபித்துக்கொள்வதால் ஒரு காரியமும் ஆகிவிடாது. பறையர்கள் என்கின்ற பட்டம் மாறி ஆதிதிராவிடர்கள் ஆகி இப்போது அரிஜனங்கள் என்கின்ற பட்டம் வந்ததுபோல் வேறு ஏதாவது ஒரு பெயர் ஏற்படலாமே ஒழிய குறையும் இழிவும் நீங்கிவிடாது. விவசாரிகளுக்கும், குச்சிக்காரிகளுக்கும் தேவதாசி, தேவ அடியாள் என்கின்ற பெயர்கள் இருப்பதால் அவர்களுக்கு சமூகத்தில் இழிவு இல்லாமல் போய்விடவில்லை.
அதுபோலவே பார்ப்பனரல்லாதார்களுக்கு நாயகர், முதலியார், தேவர், வேள் ஆளர், ராஜர் ராயர் என்கின்றதான பல பெயர் இருந்ததாலேயே சமூக வாழ்வில் சூத்திரன் என்கின்ற பெயர் போய்விடவில்லை. ஆதலால் பெயரைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். இழிவும் குறையும் போக்க வழி பாருங்கள். அதற்கு அம்மாதிரி நம்மை குறைவுபடுத்தும் மக்களுடன் ஒத்துழையாமை செய்வதும் அவர்களுடைய முன்னேற்றத்துக்கு நாம் முட்டுக்கட்டை போடுவதும் தான் சரியான மருந்தாகும்.

கோடரிக் காம்புகள்

சில கோடாலிக் காம்புகள் அவர்களுடன் ஒத்துழைப்பதால் நாம் ஏமாந்துவிடக்கூடாது. அப்படிப்பட்ட இழி மக்கள், மானமற்றவர்கள் நம்மில் பலர் இருப்பதாலேயே நாம் இம்மாதிரி சங்கம் ஸ்தாபனம் பல வைத்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டியிருக்கிறது. எல்லோருக்கும் சுயமரியாதை உணர்ச்சி இருக்குமானால் தாழ்த்தப்பட்டவர்கள் சங்கமோ, பார்ப்பனரல்லாதார் சங்கமோ எதற்கு ஆக இருக்க வேண்டும்?

 நம்மில் எத்தனையோ பேர் உதைத்த காலுக்கு முத்தமிட்டு வாழ வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் இழி தொழிலுக்கெல்லாம் நாம் பரிகாரம் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம். அந்தப் பரிகாரம் நம்முடைய உறுதியும் தைரியமும் கொண்ட ஒத்துழையாமையிலும் முட்டுக்கட்டையிலும்தான் இருக்கிறது.

 சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி சிலர் பேசியதோடு என்னையும் சில கேள்விகள் துண்டுச் சீட்டு மூலம் கேட்டிருக்கிறார்கள்.

கேள்விகள்

1. தோழர் ஜீவானந்தம் முதலியவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று ஒருவர் கேட்கிறார். இப்போது ஒரு வித்தியாசமும் இல்லை. முன்பு அவர்கள் தேர்தல் பிரசாரம் ஊசிப்போனது என்றும், நாற்றமடிக்கிறது என்றும் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது அவர்களும் தேர்தல் பிரசாரத்தில் இறங்கிவிட்டதாகப் பத்திரிகைகளில் பார்க்கிறேன். 

நான் ஜஸ்டிஸ் கட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்கிறேன். அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள். மற்றபடி வித்தியாசம் இல்லை.

2. இரண்டாவதாக ஜஸ்டிஸ் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு தோழர் கேட்டிருக்கிறார். அதற்கும் பதில் ஒரு வித்தியாசமும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இன்றுள்ள ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய கொள்கையாகிய வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவம் உத்தியோக விஷயங்களில் அனுபவத்தில் சிறிதாவது இருக்கிறது என்றால் அது ஜனநாயக கட்சியின் மூல புருஷரான தோழர் எஸ்.முத்தையா முதலியார் அவர்களின் தொண்டினால் என்றுதான் சொல்லுவேன்.

 ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களில் பலரும், பார்ப்பனரல்லாத மக்களில் பலரும் அவருக்கு போதிய நன்றி விசுவாசம் காட்டாவிட்டாலும் நான் என்னைப் பொறுத்தவரை எப்போதும் ஒரு அளவுக்கு நன்றி யுடையவனே ஆவேன். மற்றபடி ஜனநாயகக் கட்சியார் அரசியல் நிபுணத்துவத்தை உத்தேசித்து ஜஸ்டிஸ் கட்சிக்கும் மிதவாத கட்சிக்கும் தங்கள் கட்சிக்கும் ஏதோ வித்தியாசமிருப்பதாக கூறலாம். ஆனால் அது என் சிறிய கண்ணுக்குத் தென்படவில்லை.

இந்தியாவில் ஒரே கட்சிதான்

இன்று இந்தியாவில் அரசியல் கொள்கையில் ஒரே கட்சிதான் உண்டு. அதாவது தேர்தலில் வெற்றி பெற்று மந்திரி பதவியை அடைந்து பணமும் அதிகாரமும் பெறவேண்டும் என்கின்ற கவலை கொண்ட ஒரே கட்சிதான் உண்டு. அதை அடைவதற்கு பல மார்க்கங்கள் பல தந்திரங்கள் கொண்டிருப்பதன் மூலம் பல கட்சிகள் இருப்பதாய்க் காணப்படலாம். அதோடு கூடவே அவை பெரிதும் சமுதாயத்துறையில் ஒன்றுக்கொன்று நேர்மாறான கொள்கை கொண்ட கட்சிகளாய்க் காணப்படலாம். அதன் பயனாய் சில கட்சி உண்மை பேசலாம். சில கட்சி புரியாத மாதிரி பேசலாம். சில கட்சி அடியோடு பொய்யும் புரட்டும் பித்தலாட்டமும் பேசலாம். இதுதான் இன்று அரசியல் கட்சிகளின் நிலைமை.

ஜஸ்டிஸ் கட்சி

ஆனால் ஜஸ்டிஸ் கட்சி தனது கொள்கைகளில் திட்டத்தில் உண்மை பேசுகிறது. அதுவும் சாத்தியமான மட்டும்தான் நடத்திக்கொடுப்பதாய் பச்சையாய்ச் சொல்லுகிறது. அதில் உள்ள தலைவர்களுக்குள்ளோ அங்கத்தினர்களுக்குள்ளோ கட்சி கொள்கை விஷயத்தில் அபிப்பிராய பேதமில்லை. தலைவர்களில் பின் பற்றுபவர்களில் ஒருவருக்கொருவர் ஒற்றுமை இல்லாதவர்களாகவும் பொது நோக்குடையவர்கள் அல்லாதவர் களாகவும் சுயநலத்துக்கு ஆக எதையும் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கலாம். அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. அம்மாதிரி நபர்கள் எல்லாக் கட்சியிலும் உண்டு. அவர்களால் நேரும் கெடுதிக்கு எல்லாக் கட்சியாரும் சிறிது மார்ஜன் (இடம்) விட்டுத்தான் தீரவேண்டும். மற்றபடி இன்று சமுதாயத் துறையில் பிற்பட்டு அடிமைப்பட்டு இழிவுபட்டுக் கிடக்கும் மக்களுக்கு ஜஸ்டிஸ் கட்சிதான் "சஞ்சீவி" மருந்து என்று சொல்லுவேன்.

காங்கிரஸ் கட்சிக்கு உத்தியோகமும் பதவி ஆசையும் இருப்பதாலேயே நான் அதை குறைகூறவில்லை. ஆனால் அது பிற்படுத்தப்பட்டு இழிவுபடுத்தப்பட்டு இருக்கும் மக்களுக்கு சமஉரிமை அளிக்க மறுப்பதையும் மற்றவர்கள் அளிப்பதைக் கெடுப்பதையுமே முக்கியக் கொள்கையாய்க் கொண்டு இருக்கிறபடியால் அதை ஒழித்து ஆக வேண்டும் என்கின்றேன். அதன் தலைவர்கள் பழமை விரும்பிகளாக இருப்பதாலேயே வருணாச்சிரம தர்மிகளாக இருப்பதாலேயே அவர்களிடத்தில் எனக்கு நம்பிக்கையும் மதிப்பும் இல்லை. மற்றபடி கட்சிகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

சுயமரியாதைப் பிரசாரம்

3. சுயமரியாதை இயக்கப் பிரசாரம் ஏன் செய்யவில்லை என்று கேட்கப்பட்டிருக்கிறது.
நானும் எனது தோழர்களும் ஒரு அளவுக்கு செய்து கொண்டுதான் வருகிறோம். ஆனால் முக்கிய கவனம் ஜஸ்டிஸ் பிரசாரத்தில்தான் இருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் நன்மையைக் கோரி அது அவசியம் என்று கருதுகிறேன். எப்படியானாலும் இன்னும் ஒன்றரை மாதங்களில் ஜஸ்டிஸ் தேர்தல் பிரசாரம் தீர்ந்துவிடும். அதற்கப்புறம் அக்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, நானும் எனது தோழர்களும் தனி சுயமரியாதை இயக்கப் பிரசாரம் தான் செய்வோம்.

தோற்குமா? ஜெயிக்குமா?

4. ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெறுமா? என்று கேட்கப் பட்டிருக்கிறது.
ஜஸ்டிஸ் கட்சி தோல்வியடைந்தால், நான் மகிழ்ச்சியடைவதோடு சுயமரியாதை இயக்கப் பிரசாரத்துக்கு பார்ப்பனரல்லாத மக்களால் அதிக ஆதரவு கிடைக்கக்கூடும் என்கிற தன்மையால் இயக்கப் பிரசாரம் வளமாய் நடக்கவும் இடம் ஏற்படும் என்று கருதுகிறேன். ஜஸ்டிஸ் கட்சி ஜெயித்தால் தலைவர்கள், பதவி பெற்றவர்கள் ஆகியவர்களினது அனாதரவு ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஏனெனில், சிதறி கிடக்கும் பார்ப்பனரல்லாத மக்கள் ஒன்று சேர்ந்து பலமாய் வேலை செய்ய தோல்வி ஒரு சாதனமாகும். ஆனால் ஜஸ்டிஸ் கட்சித் தோல்வியடையாது. ஏனெனில் அதற்கு எதிரான கட்சி எதுவும் கொள்கையில் பலம் பொருந்தியதாக இல்லை. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களில் சிலர் இப்போது இருக்கும் அலட்சிய புத்தியும் பொறுப்பற்ற தன்மையும், சுயநல சூழ்ச்சியையும் விட இன்னும் கேவலமாய் நடந்து கொண்டாலும் அக்கட்சிக்கு தோல்வி ஏற்பட்டுவிடும் என்று நான் கருதவில்லை. ஏனெனில், அதற்கு கொள்கை பலம் உண்டு. காங்கிரசுக்கு அது அடியோடு பூஜ்யம். ஆதலால் ஜஸ்டிஸ் கட்சி தோல்வி அடையாது என்று கருதுகிறேன்.

சமதர்மம்

5. சமதர்மத்தைப் பற்றி ஒரு தோழர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜஸ்டிஸ் கட்சி சமதர்மக் கட்சி என்பதை ஞாபகத்தில் வையுங்கள். அது தோன்றிய பிறகுதான் இன்று பறையனும், பார்ப்பானும் ஒரு ஸ்தானத்தில் சரிசமமாய் வீற்றிருக்கிறார்கள். புலியும் பசுவும் ஒரு துறையில் தண்ணீர் குடிப்பதுதான் சமதர்ம ராஜ்யம் என்பது பழங்கால பேச்சு. ஆனால், அது இன்று சர்க்கஸ் கொட்டகைகளில் நடைபெறுகின்றது. அதனாலேயே, நாம் அதை சமதர்ம ராஜ்யம் என்று சொல்லுவதில்லை. ஆனால், இன்று பறையனும், பார்ப்பானும், சாஸ்திரியும், சங்கராச்சாரியும், சக்கிலியும் ஒரு பீடத்தில் அமர்கிறார்கள்; ஒரு பதவியில் இருக்கிறார்கள். எப்படி? சவுக்கினாலா? ரிவால்வர் பயத்தினாலா? இல்லவே இல்லை. தாங்களாகவே ஆசைப்பட்டு அதுவும் பத்தாயிரம், இருபதாயிரம் செலவு செய்து கொண்டு போய் அமர ஆசைப்படுகிறார்கள். பறையனை பார்ப்பான் பிரபுவே எஜமானே என்று நின்று கொண்டு கெஞ்சிப் பேசுகிறான். இதெல்லாம் எப்படி ஏற்பட்டது? ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு முன் தாழ்த்தப்பட்ட வகுப்புகளைப் பற்றிய ஒரு வார்த்தையாவது காங்கிரஸ் கூட்டத்தில், நடவடிக்கையில், ஆதாரத்தில், திட்டத்தில், கொள்கையில் இருந்ததா என்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, ஜஸ்டிஸ் கட்சி சமதர்ம கட்சி என்பதில் உங்களுக்கு இன்னும் சந்தேகம் உண்டா என்று கேட்கின்றேன். ஆகையால் சமுதாய சமதர்ம வேலையே தான் நான் இப்போதும் இன்றும் செய்து வருகிறேன்.
பொருளாதார சமதர்ம வேலை செய்ய எனக்கு ஆசைதான். ஆனால், காங்கிரஸ் அதற்குப் பரமவிரோதி என்பதோடு அது ஒரு காட்டிக்கொடுக்கும் ஸ்தாபனமுமாகும். அது ஒழிந்தால்தான் பொருளாதார சமதர்மம் பேச சவுகரியப்படும் என்றாலும் சட்டத்துக்கு மாறாய் இல்லாமல், அதாவது சர்க்கார் அடக்குமுறைக்கு ஆளாகாமல் எவ்வளவு சமதர்ம பிரசாரம் செய்யலாமோ அவ்வளவையும் செய்துதான் வருகிறேன். செய்யத்தான் போகிறேன். மற்றபடி நீங்கள் எனக்கு இவ்வளவு கெளரவம் செய்து இவ்வளவு தூரம் எனது அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்ல வசதி அளித்ததற்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

குறிப்பு: 27.12.1936 ஆம் நாள் கோடம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தை அடுத்த வரதராஜப் பேட்டையில் நடைபெற்ற கோடம்பாக்கம் பகுத்தறிவு சங்கத்தின் நான்காம் ஆண்டு விழாவில் ஆற்றிய தலைமை உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 10.01.1937

கருப்பு சட்டை ஏன்?


*- தந்தை பெரியார் -*

இனி நான் இறந்தாலும் ஏனையத் திராவிடத் தோழர்கள் ஏமாந்து விட மாட்டார்கள். எனது வேலையை அப்படியே விட்டுவிடமாட்டார்கள். தொடர்ந்து போராடி, வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுவிட்டது. நமது கொள்கைகள் ஒரு அளவுக்குப் பொது மக்களின் செல்வாக்கைப் பெற்றுவிட்டது. இன்னும் கொஞ்ச காலத்திற்குள் நம் இஷ்டம் போல் நடக்காத மந்திரிகளுக்கு மந்திரிசபை நாற்காலி இடம் கொடுக்காது, நம் இஷ்டப்படி நடக்காத அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடைக்காது.
நம் இஷ்டப்படி நடக்காத சட்டசபை மெம்பர்களுக்கு சட்டசபை இடங்கொடுக்காது என்கிற நிலை ஏற்பட்டுவிடும். இந்நிலை வெகு சீக்கிரமே ஏற்பட வேண்டுமானால் நாம் எல்லோரும் கருப்புச் சட்டைக்காரர்களாக வேண்டும்.

நீங்கள் என்ன சட்டைக்காரர்களோ என்று நம்மைச் சிலர் கேட்கக் கூடும். நம் நாட்டில் சட்டைக்காரர்கள் என்றொரு கூட்டம் இருந்து வருவது உண்மைதான். 

அவர்கள் பல ஜாதிக்குப் பிறந்தவர்கள், ஆகவே வெறும் சட்டைக்காரர்கள் என்று மட்டும் அழைக்கப்பட்டு வருகிறார்கள்.
நாம் அப்படிக்கல்ல, நாம் ஒரே ஜாதிக்குப் பிறந்தவர்கள். ஆகவே கருப்புச்சட்டைக்காரர்கள் என்று நம்மை அழைத்துக் கொள்கிறோம்.

கருப்புச் சட்டை ஒரு படையமைப்பின் சின்னமல்ல. அது இழிவின் அறிகுறி, இழிவிற்காக அவமானப்படுகிறோம், துக்கப்படுகிறோம், அதைப் போக்கிக் கொள்ள முடிவு செய்துவிட்டோம் என்பதன் அறிகுறி. பாடுபட்டுப் படி அளந்துவிட்டுப் பட்டினி கிடக்கும் நானா பஞ்சமன்? என் பாட்டின் பலனால் நோகாமல் உண்டு வாழும் நீயா பார்ப்பனன் இது நியாயமா?

கேள்விகளின் அறிகுறி கருப்புச்சட்டை
பாடுபடும் எங்களுக்கெல்லாம் இழிவான வேலைகள், பாடுபடாத உங்களுக்கெல்லாம் மந்திரி வேலையா? இது நியாயமா? பாடுபடாத நீங்கள் எல்லாம் அய்.சி.எஸ். படிப்பதா? கலெக்டர் ஆவதா? இது நியாயமா? நாங்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும், எவ்வளவுதான் உங்களுக்கு வாரிக் கொடுத்தாலும், எவ்வளவுதான் சுத்தமாய் இருந்தாலும், எவ்வளவுதான் ஒழுக்கமாய் நடந்து கொண்டாலும் நாங்கள் சூத்திரர்கள், பஞ்சமர்கள்?
நீங்கள் எவ்வளவுதான் பாடுபடாத சோம்பேறி வாழ்வு நடத்தினாலும், எவ்வளவோ எங்களை மோசம் செய்து எங்களிடம் பிச்சை எடுத்துப் பிழைத்தாலும், நீங்கள் எவ்வளவுதான் அழுக்குப் பிடித்து, சொறி பிடித்துக் குஷ்டரோகியாகக் கிடந்தாலும், எவ்வளவுதான் ஒழுக்க ஈனர்களாக திருடர்களாக, கொலைக்காரர்களாக, கொள்ளைக் காரர்களாக, தூது செல்பவர்களாக இருந்தாலும் நீங்கள் உயர் ஜாதிப் பார்ப்பனர்களா? இது நியாயமா? என்ற கேள்விகளின் அறிகுறிதான் இந்தக் கருப்புச் சட்டை?

தோழர்களே! நீங்கள் விரும்பி அணியுங்கள் இதை! அடுத்த மாநாட்டிற்குள்ளாவது நம் சூத்திரப்பட்டம் ஒழிந்து போகும். அடுத்த மாநாட்டிற்குள் இந்த இழி ஜாதிப் பட்டம் கட்டாயம் ஒழிக்கப்பட்டேயாக வேண்டும். அதற்காக ஒரு 2000, 3000 பேர்களாவது பார்ப்பனர்களின் பலி பீடத்தில் தம் உயிரை இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.

நானா சூத்திரன்? என் தாய்மார்களா சூத்திரச்சிகள்? இனி இந்நிலை ஒரு நிமிட நேரமேனும் இருக்க இடங்கொடேன்? இதோ என் உயிரை இதற்காக அர்ப்பணிக்கவும் துணிந்து விட்டேன் என்கிற உணர்ச்சி ஒவ்வொரு திராவிடனுக்கும் ஏற்படவேண்டும்.
இழிஜாதிபட்டத்தை ஒழிப்பதென்பது சுலபமான காரியமல்ல என்றாலும் உலக அறிவு முன்னேற்றம், ஜாதி உயர்வு தாழ்வுகளே இனி இருக்க கூடாது. ஆகவே உறுதி பெற்றெழுங்கள், செத்தாலும் சரி இழிவு நீக்கம்தான் முக்கியம் என்று. சாகாமலே கூட வெற்றி பெற்று விடலாம்.

*ஆதாரம் : "குடிஅரசு" இதழ் - 05.06.1948*

*நன்றி : "விடுதலை" ஞாயிறு மலர்  06.09.2014*