வெள்ளி, 27 மே, 2016

என் கருத்தும் அம்பேத்கர் கருத்தும் ஒரே மாதிரியாகவே இருக்கும்!



- தந்தை பெரியார்


தந்தை பெரியார் அவர்களுக்கு 15-2-1959 ஞாயிறு காலை சுமார்
10-30 மணியளவில் டெல்லி பகார்கஞ்சில் எம்.எம்.ரோட்டில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பவன் சார்பாக சிறப்பானதொரு வரவேற்பு வழங்கப்பட்டது.
பேரன்புமிக்கத் தாய்மார்களே! அம்பேத்கர் பவன உறுப்பினர்களே! நண்பர்களே!
உங்கள் அனைவரையும் காணுவதிலும், உங்களது பேரன்பை பெறுவதிலும் நான் உள்ளபடியே பெருமகிழ்ச்சியடைகின்றேன். சுமார் 1500 மைல்களுக்கு அப்பால் இருந்து வந்திருக்கிற என்னைப் பாராட்டு முகத்தான் நீங்கள் அன்புடன் அளித்த நல்வரவேற்பிற்காக எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
மறைந்த பாபாசாகிப் டாக்டர் அம் பேத்கர் அவர்களும் நானும் நெடு நாட் களாக நண்பர்கள் என்பது மாத்திரமல்ல. பலவிஷயங்களில் எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஜாதி ஒழிப்பு என்ற விஷயத்தில் மாத்திரமே நாங்கள் ஒத்தக் கருத்துடையவர்கள் என்பது அல்ல. இந்து மதம், இந்து சாஸ்திரங்கள், இந்துக் கடவுள்கள், தேவர்கள் என்பவர்கள் பற்றிய இந்துமதப் புராணங்கள் இவைகளைக் குறித்தும்கூட எங்கள் இரண்டு பேர் கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அது மட்டுமல்ல. அவைகளைப்பற்றி நான் எவ்வளவு உறுதியாகவும் பலமாகவும் எனது அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கிறேனோ அவ்வாறுதான் அவரும் மிகவும் உறுதி யாகவும் பலமாகவும் லட்சியங்களைக் கடைப்பிடித்தார். உதாரணமாக பார்ப்பனர் போற்றி பிரச்சாரம் செய்யும் கீதை என்பதை முட்டாளின் உளறல் என்று சொன்னவர்!
இப்படி சில விஷயங்களில் மாத்திரமல்ல. பலவிஷயங்களில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எந்த அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தாரோ அதே அபிப்பிராயம்தான் எனக்கும் இருந்து வந்தது. பல விஷயங்களில் நாங்கள் ஒருவருக்கொருவர் கலந்து கொள்ளாமலேயே அந்தப்படி அபிப் பிராயம் கொண்டவர்களாக இருந்து வந்தோம். சந்தர்ப்பம் கிடைத்தபோது நானும் அவரும் எங்கள் இருவருடைய எண்ணங்களையும் கருத்துக்களையும் பரிமாறிக் கொள்ளுவதும் உண்டு.
உதாரணமாக, பர்மாவில் நடந்த உலக புத்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள நாங்கள் போயிருந்தபோது அம்பேத்கர் அவர்கள் என்னைப் பார்த்து என்ன இராமசாமி! இப்படி நாம் பேசிக்கொண்டே இருப்பதால்  என்ன பலன் ஏற்பட முடியும் வா நாம் இரண்டுபேரும் புத்தமார்க்கத்தில் சேர்ந்துவிடுவோம்என்றார். நான் சொன்னேன் ரொம்ப சரி. இப்போது முதலில் நீங்கள் சேருங்கள். நான் இப்போது சேருவது என்பது அவ்வளவு ஏற்றதல்ல. ஏனென்றால் தமிழ்நாட்டில் நான் இப்போது ஜாதி ஒழிப்பைப்பற்றித் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றேன். இந்து கடவுள்கள் எனப்படும் விநாயகர், இராமன் சிலைகளை உடைத்தும் எரித்தும் இந்து மதத்திலுள்ள பல விஷயங்களைப் பற்றியும் இப்போது எடுத்துச் சொல்லி மக்களிடையே எடுத்துசொல்லி பிரசாரம் செய்வதுபோல் அப்புறம் செய்ய முடியாது. ஒரு இந்துவாக இருந்து கொண்டு இப்படிப் பேசுவதனால் என்னை யாரும் நீ அதைச் சொல்லக்கூடாது என்று தடுக்க உரிமை கிடையாது. ஆனால் நான் இன்னொரு மதக்காரனாக இருந்தால் அப்படிப்பட்ட வசதி எனக்கு இருக்க முடியாது. ஆகவே நான் வெளியில் இருந்துகொண்டே புத்த மார்க்கத்தை பிரசாரம் செய்து வருகிறேன் என்பதாகச் சொன்னேன்.
என் பிரசாரத்தில் ஜாதி ஒழிய வேண்டு மென்று மாத்திரம் நான் சொல்லிவரவில்லை. அதற்கு முக்கிய அடிப்படை ஜாதி, மதம் ஆதாரம் ஒழியவேண்டும் என்றுதான் நானும் சொல்லி வருகிறேன். அவரும் அப்படித்தான் சொன்னார்.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் புத்த மார்க்கத்தில் சேரும்போது என்னென்ன பிரமாணம் எடுத்துப் படித்தாரோ (இராமனையும், கிருஷ்ணனையும் கடவுள்களாக வணங்கமாட்டேன் என்பன போன்றவை) அவைகளைத்தான் நான் எங்கள் நாட்டில் சுமார் 20, 25 வருடகாலமாகச் சொல்லிவருகிறேன். அதனால்தான் எங்கள் நாட்டில் பத்தாயிரக்கணக்கான மக்கள் ராமனையும் பிள்ளையாரையும் கொளுத்தியும் உடைத்தார்கள். இந்த பிரமாணத்தில் உள்ள பல விஷயங்கள் எனக்கு பல வருஷங்களுக்கு முன்பே தோன்றியதுதான் அவைகளை எங்கள் பிரச்சாரமாகவே செய்து வருகிறோம். இதைப் படித்துவிட்டு நான் சொல்லவில்லை. எப்படியோ எங்களுக்கு அப்படித்தான் அபிப்பிராயம் தோன்றுகிறது.
புத்தர் கொள்கை கடவுளை ஏற்றுக் கொள்வது கிடையாது. ஆத்மா என்ற ஒன்றையும் ஏற்றுக்கொள்வது கிடையாது. அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் படி நட என்று சொல்லுகிற ஒரு மார்க்கமாகும்.
நேற்று நான் தங்கியிருந்த இடத்தில் ஒரு பார்ப்பன நிருபர் என்னை வந்து சந்தித்தார். அவர் கேட்டார் நீ மதங்களைப் பற்றிக் கண்டித்துப் பேசுகிறாயே புத்த மார்க்கத்தில் சேரச் சொல்லி மக்களைப் பார்த்துச் சொல் லுகிறாயே அதுவும் ஒரு மதம்தானே  என்று கேட்டார். அதற்கு நான் சொன்னேன் அப்படி பித்தலாட்டமாக மக்களிடம் நீங்கள் பார்ப்பனர்கள் சொல்லி வைத்திருக்கிறீர்கள் என்பதாகச் சொன்னேன்! அதற்கு அவர் சொன்னார். ஏன் அதில் புத்தர் சரணம் கச்சாமி; தம்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி என்று சொல்லுகிறார்களே என்றார். அதற்கு நான் சொன்ன பதிலை எடுத்து விளக்கினால் அது ஓரளவு பயன்படும் என்று நினைக்கிறேன்.
புத்தம் சரணம் கச்சாமி என்பது ஒன்று மூடநம்பிக்கைத் தத்துவம் அடங்கி யதல்ல. நீ யாரைத் தலைவனாக ஏற்றுக் கொண் டிருக்கிறாயோ அவனிடத்தில் உண்மையாக நடந்து உறுதியோடு பின்பற்று என்பதாகும்.
தலைவனைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் நன்றாக துருவித்துருவிப் பார்த்து ஆராய்ந்து தேர்ந்தெடுக்கலாம். ஆனால் தேர்ந்தெடுத்துவிட்ட பிறகு அவனது கட்டுப்பாட்டுக்கு அடங்கி அவனைப் பின்பற்ற வேண்டும் என்ற நல்லொழுக்கந்தான் அது போதிக்கிறது. தலைவன் என்று நீ ஒருவனை ஏற்றுக் கொண்டால் அவனுக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும என்பதுதானே ஒழிய வேறில்லை மற்றும் புத்தம் என்பது உன் புத்தியைக் குறிப்பதேயாகும்.
அது போலவே தம்மம் சரணம் கச்சாமி என்பதற்குப் பொருள் நீ ஏற்றுக்கொண்டுள்ள தர்மங்களை கொள்கைகளை உண்மையான முறையில் பக்தி செலுத்திக் கடைப்பிடித்து வரவேண்டும். அந்தக் கொள்கைகளுக்கு மாறாக நடக்கக்கூடாது.  உறுதியோடு அவைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான்.
மூன்றாவதாக சங்கம் சரணம் கச்சாமி என்பது நீ நல்லபடி யோசித்து சேர்ந்திருக்கிற ஸ்தாபனத்தை மரியாதை பண்ணிப் பாதுகாக்க வேண்டும். அதற்கு எந்தவித இழுக்கும் வராத வண்ணம் நீ நடந்து கொள்ள வேண்டும். ஸ்தாபனத்தின் பெருமையை நீ கருதவேண்டும் என்பதுதானே ஒழிய வேறில்லை.
ஆகவே இந்த மூன்றுக்கும் அர்த்தம்.
நீ உன் தலைவனை மதி!
உனது கொள்கைகளை உறுதியாகப் பின்பற்று!
உன் ஸ்தாபனத்திற்கு மரியாதை செய்து பாதுகாத்து வா! என்பதாகும்.
நீங்களெல்லாம் உங்கள் புத்திக்கு மரியாதை கொடுத்து அது கூறும் கொள்கைகளை ஏற்று புத்தி மார்க்கத்தைக் கடைப்பிடித்து ஒழுகுவது என்பது அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மற்றக் கொள்கைகளுக்கு நீங்கள் இடங் கொடுக்கக்கூடாது. பார்ப்பன இந்துமதக் கொள்கைகளை மறந்தும் உங்களை அறியாமல் உள்ளே புகவிடக் கூடாது.
எல்லோரும் டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பின்பற்றுகிறீர்கள் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். மற்றெல்லா பிற்பட்ட மக்களும் இந்த மாதிரியான நிலைக்க வருவதற்காக மிகவும் பாடுபட வேண்டும்.
நீங்கள் இந்த மாதிரி இருப்பதற்காக பார்ப்பாறும் இந்த அரசாங்கமும் உங்களுக்கு மிகவும் தொந்தரவு, தொல்லைகள் தரக்கூடும். அதெல்லாவற்றையும் நீங்கள் மிகவும் பொறுமையோடு சகித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இன்றைய அரசாங்கம் இந்துமத பார்ப்பன ஆட்சியாகும்.
உங்கள் வசதி வாய்ப்புகளை ஓரளவு அரசாங்கம் கொடுமைக்கு தியாகம் செய்தாவது இந்தக் கொள்கைகளைப் பரப்ப நாம் உறுதியோடு பாடுபட முன்வரவேண்டும்.
நம்மிடையே பல ஜாதிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் உண்மையில் பல ஜாதிகள் கிடையாது: நாம் இரண்டே ஜாதிகள். ஒன்று பார்ப்பனர்கள் இன்னொன்று சூத்திரர்கள். அவ்வளவுதான் மதப்படியும் சாஸ்திரங்கள்படியும். நாம் இரண்டு பிரிவினர் கள்தான். அவைகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள், பஞ்சமார்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்ற பிரிவெல்லாம் இல்லை. இவை பார்ப்பனர் நலனுக்கு ஆக தொழில் காரணமாக என்று பிரித்த பிரிவுகளேயாகும். இவை பிறவி ஜாதிகள் அல்ல. இதை நீங்கள் நன்றாக, உணரவேண்டும். நீங்களும் நாங்களும் சூத்திரர் என்ற ஒரே ஜாதிதான்.
இப்படிப்பட்ட நாம் இப்படி நமது இழி வைப்பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம் நம்மில் அநேகர் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையினால் துணிவுடன் இதை எடுத்துச் சொல்லாமல் பயந்து தங்கள் சுயநலத்திற்கு எதையும் விட்டுக்கொடுத்து விடுகிறார்கள்.
ஆசையால் பார்ப்பனர்களுக்கு பதவி அதிகாரத்திற்கு அடிமையாகிவிடுகிறார்கள். அப்பப் போகிறவர்களைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் அதன் மூலம் நமது கொள்கைகளை விட்டுக்கொடுத்துவிட்டு வருகிறார்களே என்பது குறித்துத்தான் எனது கவலை எல்லாம்.
எனக்கு இப்போது 80 வயது ஆகிறது. நான் இன்னும் எத்தனை நாளைக்கு இருக்க முடியும்? ஆச்சு முதல்மணி (திவீக்ஷீst ஙிமீறீறீ) அடித்தாகிவிட்டது. இன்னும் எத்தனை நாளைக்கு நான் இருக்க முடியும்? எனக்கு இனி வாழ்க்கையில் இதைவிட வேறு இலட்சியம் இருக்க முடியாது!
எங்கள் நாட்டைப் பொறுத்த வரை பார்ப்பனர்கள் பொதுவாழ்க்கையில் வெளிப்படையாக எந்தவித செல்வாக்கும் பெறமுடியாத அளவுக்கு நாங்கள் அங்கே ஆக்கிவைத்துவிட்டோம். இங்கே அவர்கள் தன்மைபற்றி தக்க ஆதாரம் இல்லாததால் லக்னோவில் பார்ப்பனர்கள் கலவரம் செய்யக் கொஞ்சம் தைரியம் வந்தது. ஆனால் எங்கள் பக்கத்தில் அவர்கள் எங்களைக் கண்டு நடுங்குகிற நிலையில் இருக்கிறார்கள். பல இடங்களில் பார்ப்பனர்கள் தனியாக நடக்க தயங்குவார்கள்.
பார்ப்பனர்கள் கொஞ்சப் பேர்தான் என்றாலும் கட்டுப்பாடாக நம்மீது தப்புப்பிரசாரம் செய்கிறார்கள். எங்கள் நாட்டில் எங்கள் கட்சியை பார்ப்பானை எதிர்க்கிறகட்சி என்றே அழைக்கிறார்கள்.
அந்த அளவுக்கு நாங்கள் பக்குவப்படுத்தி வைத்திருக்கிறோம்.
எங்கள் கட்சியின் முக்கியமான திட்டங்களில் ஒன்று பார்ப்பனரல்லாத மக்களாகிய நாம் யாரும் பார்ப்பான் கடைக்கு சென்று எதுவும் வாங்கக்கூடாது என்பதாகும். (பலத்த கைத்தட்டல்)
எந்தவித சடங்குகளுக்கும் நாங்கள் பார்ப்பானை அழைப்பதில்லை. அதனால்தான் ரொம்ப பார்ப்பனர்கள் எங்கள் நாட்டைவிட்டு இங்கு வந்துவிட்டார்கள். மேலும் வர வாய்ப்புத் தேடிக்கொண்டும் இருக்கிறார்கள். (கைத்தட்டலும் சிரிப்பு) நான் உங்களுக்குச் சொல்லுவதும் இதுதான் நீங்கள் கூடுமானவரை எல்லா விதத்திலும் பார்ப்பனர்களை பகிஷ்கரிக்க வேண்டும்.
பசி உயிர் போகிறது என்றாலும்கூட பார்ப்பான் கடையிலிருந்து எதையும் வாங்கி சாப்பிடக் கூடாது. அதில் நமக்கு உறுதிவேண்டும். பார்ப்பன பகிஷ்காரத்தை தீவிரப்படுத்துவதே எனது அடுத்த திட்டமாக இருக்கும்.
உங்களுக்கும் சொல்லவேண்டியது இன்னொன்றும் உண்டு. அநேக மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களை தவறாக நினைக் கிறார்கள்.
பார்ப்ப னரல்லாத மக்கள்தான் தங்கள் எதிரிகள் என்றும் பார்ப்பனர்கள்கூட அல்லவென்றும்! இது மிகவும் தவறான எண்ணமாகும். இதற்குக் காரணம் பார்ப்பன ஆட்சியில் பல அதிகாரங்களும் பண வினியோகமும் இருப்பதால் பார்ப்பானுக்கு நல்ல பிள்ளையாகவும் அவனது விஷமப் பிரச்சாரத்தை நம்புவதும் ஆகும். நாங்கள் வேறு என்றும் நீங்கள் வேறு என்றும் எண்ணக் கூடாது. சூத்திரர்கள் ஓர் இனமாக இருந்தால் தங்களுக்கு ஆபத்து என்று கருதி பல இனம் ஆக ஆக்கிவிட்டார்கள்.
ஆகவே இப்படியெல்லாம் உங்களை எண்ணும்படி வைப்பது பார்ப்பனர்கள் சூழ்ச்சிதானே ஒழிய வேறில்லை. இப்படிப் பட்ட கருத்தைப் பார்ப்பனர்கள்தான் தூண்டிவிடுகிறார்களே ஒழிய வேறில்லை. இதையெல்லாம் உண்மை என்று நீங்கள் நம்பவேண்டாம்.
பார்ப்பான் எதை எதைச் செய்கிறானோ அதையெல்லாம் இவன் அவனைப் பார்த்து அதேபோல் இவனும் செய்கிறானே தவிர வேறில்லை. ஆகவே அவன் (பார்ப்பான்) அதைச் செய்யவில்லை என்றால் மற்றவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள்.
ஓர் உதாரணம் சொல்ல விரும்புகிறேன். ஈரோட்டில் எங்கள் தெருவில் தண்ணீர் குழாய் இருக்கிறது. அதில் எல்லோரும் தண்ணீர் எடுக்க வருவார்கள். ஒரு பார்ப்பார பெண் வந்தால் அவள் கையில் ஒரு சொம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து அதை அந்த குழாய்க்கு மேல் ஊற்றி கழுவிவிட்டு பிறகு தான் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடிப்பாள். அதைப்பார்த்து நம்மவன் வீட்டுப்பெண் பிள்ளையும் அப்படியே செம்பில் தண்ணீர் கொண்டுவந்து ஊற்றி விட்டு தண்ணீர் பிடித்துக் கொண்டு போவாள். அதைப் பார்த்து எங்கள் பக்கத்துவீட்டு (முஸ்லிம்) சாயபு பொம்பளையும் வந்து சொம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவந்து குழாய்மேல் ஊற்றி கழுவிவிட்டுத்தான் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்கிறாள்.
முதலாவது பார்ப்பார பொம்பளை தண்ணீர் ஊற்றுவது மற்ற ஜாதிக்காரர்கள் குழாயைத் தொட்டுவிட்டார்களே தீட்டுப்பட்டு விட்டதே என்பதற்காக ஊற்றிக் கழுவுகிறாள்.
இதைப்பார்த்து அதை அப்படியே காப்பி அடித்துச் செய்கிற மற்ற பொம்பளைகளுக்கு நாம் எதற்காக இப்படிச் செய்கிறோம் என்று தெரியாமலேயே செய்து கொண்டு வருகிறார்கள். அது போலத்தான் பார்ப்பனரல்லாதாரில் ஜாதி வெறியும் பிற்போக்கு மனப்பான்மையும் கொண்டுள்ளவர்கள் நிலைமை அவர்களது இந்த மாதிரியான நடத்தைக்குக் காரணம் அறியாமையும் பார்ப்பானைப் பார்த்து காப்பி அடிப்பதுமே தவிர அகம்பாவம் (பார்ப்பனர்களைப்போல) கிடையாது. சொல்லிக்கொடுக்கும் வாத்தியாரைச் சரிப்படுத்தினால் மாணவன் தானே சரிப்பட்டு விடுவான். ஆகவே இதற்காக நீங்கள் பெரும் அளவு உங்கள் நேரத்தைச் செலவழிக்க வேண்டியதில்லை.
பார்ப்பான்தான் நமக்கு முக்கிய எதிரி; பார்ப்பன மதம் பார்ப்பனப் புராணங்கள், பார்ப்பன சாஸ்திரங்கள், பார்ப்பனக் கடவுள்கள். இவைகள்தான் நமக்கு எதிரிகளே ஒழிய வேறில்லை. பார்ப்பனரல்லாதார் அல்ல நமக்கு எதிரிகள் என்பதை நீங்கள் தெளிவாக உணர வேண்டும்.
ஆகவே நீங்கள் இவைகளை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இதற்காகப் பாடுபட வேண்டும். அப்போதுதான் நமது இழிவு ஒழியும் என்று கூறி இந்த வரவேற்புக்காக உங்களது அன்பிற்காக எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்து முடித்துக் கொள்ளுகிறேன் என்று கூறி முடித்தார்கள்.
- விடுதலை 22.09.1959
- விடுதலை 10.04.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக