சனி, 3 நவம்பர், 2018

கடவுள்

20.11.1932 - குடிஅரசிலிருந்து...


கடவுள் என்பது அர்த்தமும்  குறிப்பும் அற்ற வார்த்தையாய் இருந்து வந்த போதிலும் அது மனித சமுகத்தில் 100க்கு  99 மக்களை பிடித்து தன்வயப்படுத்தி மடமையாக்கி  ஆதிக்கம்  செலுத்தி வருகின்றது. கடவுள் என்ற வார்த்தை கற்பிக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான  வருஷங்கள் ஆயி ருந்த  போதிலும்கூட, கடவுள் என்பது இன் னது என்று குறிப்பாக குளறுபடி இல்லாமல் - தெளிவுபட உணர்த்திய வர்களோ  உணர்ந்த வர்களோ இது வரையில்  காணக் கிடைக்கவில்லை. பொதுவாக  அந்தப் படி ஒரு உணர்ச்சியை மக்களுக்குள் எப்படி யாவது புகுத்தி அவர்களைப் பயப்படுத்தி வைக்க  வேண்டும் என்கின்ற  அவசியத்தினால் அதற்கு என்று வேறு ஒரு (மானச) உலகத் தையும், பாவ புண்ணிய பயனையும் மோட்ச நரகத்தையும், கற்பித்து அதை பரப்ப பலவித தாபனங்களைச் உண்டாக்கி அதன் பிரசாரத்தின் பேரால் பிழைக்க ஒரு கூட்டத் தையும் ஏற்பாடு செய்து அக்கூட்டத்திற்கு அதிலேயே பிழைத்துத் தீர வேண்டியதான நிலைமையையும் ஏற்படுத்தி விட்டதால் வெகு சுலபமாகவும்,  செல்வாக்காகவும் அதன் பிரச்சாரம் நடக்கவும்,  மக்களை தன் வயப்படுத்தவும்  ஆன காரியங்கள் நடந்து கொண்டே வருகின்றன. கடவுள் என்றால் என்ன, என்றாலும், கடவுள் என்றால் என்ன, என்பதை உணரு வதற்கில்லாமலும், உணர வேண்டும் என்று  நினைப்பதற்கு இல்லாமலும் இருந்து வருகிறது. யாராவது  கடவுளைப் பற்றி நெருக்கிப் பிடித்துக் கேட்டால் அது முழுவதும் முன் னுக்குப் பின் முரணான கருத்துகளையும், செய்கை களையும் கொண்டிருப்பதும் ஆளுக்கு ஒரு வித வியாக்கியானம் கூறு வதுமாய் இருப்பதோடல் லாமல் வேறு விதமாய் குறிப்பான பதில் கிடைப்பது என்பது அறிதாகவேயிருக்கிறது.

கடவுள் என்பது சர்வ  வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வசக்தியும் கொண்ட ஒரு ஒப்பற்ற தனி பொருளென்று சொல்லப் பட்டு விட்டு உடனேயே அது கண்ணுக்குத் தெரியாதது என்றும், மனதிற்குத் தோன்றாதது என்றும் சொல்லப்படுவதோடல்லாமல் அதற்கு உருவம் இல்லை யென்றும், குணம் இல்லை யென்றும், இன்ன தன்மையது என்று விளக்க முடியாதது என்றும் சொல்லப்பட்டு விடுகின்றது.

ஒரு வேடிக்கை


இவற்றுள் மற்றொரு வேடிக்கை என்ன வென்றால் இப்படிப் பட்ட ஒரு கடவுள் தன்மையை அதாவது சர்வ சக்தியும் சர்வ வியாபகமும், உடையதும் கண்ணுக்கும் மனதிற்கும் தென்படாததும், குணமும், உரு வமும் இன்னதன்மை யென்று  குறிப்பிடக் கூடிய தன்மையும் இல்லாதது? மான ஒரு கடவுளை நிலை நிறுத்தவும் அதைப் பற்றி மக்கள் நம்பிக்கை  கொள்ளவும் கடவுளால் உண்டாக்கப்பட்ட மக்களிலேயே பலர் வக்காலத்துப் பெற்று கடவுளை நிருபிக்க ஒழுங்கற்ற முறையிலும் ஒழுக்க ஈனமான முறையிலும் எவ்வளவோ பாடு படவேண்டியிருப்பது மேயாகும்.

மற்றும் அப்படிப்பட்ட வக்காலத்துக்காரர் தங்கள் சொந்த நிலையில் தங்களால் செய்யப் படும் ஒவ்வொரு காரியத்தையும் தாங்களே செய்வதாகவும் தங்களால் சொல்லப் படும் ஒவ்வொரு விஷயமும் தாங்களே அறிந்து சொல்லுவதாகவும், நினைத்தே பேசியும் நடந்தும் வருகிறார்கள். அது மாத்திரமல்லாமல் மற்றவர்களால் செய்யப்படும், சொல்லப்படும் ஒவ்வொரு விஷயத்தையும் மற்றவர்கள் தங்களுக்குச் செய்வதாகவும் சொல்லுவதாகவும், எழுதுவ தாகவும் கருதுவதுடன், மற்றவர்கள் மீது துவேஷம், வெறுப்பும், விருப்பும் கொண்டு அவர்களை இன்ன இன்னபடி  நடவுங்கள் என்றும், தங்களுக்கு இன்ன இன்ன காரியங் களைச் செய்து கொடுங்கள் என்றும் கோரு கிறார்களேயல்லாமல் இவையெல்லாம் சர்வ வல்லமை உள்ள கடவுள் செயலால்தான் நடக்கின்றது. நடந்து விடும் என்ற நம்பிக் கையும் உறுதியும் தைரியமும் இல்லாத வர்களாகவே இருக்கிறார்கள்.

- விடுதலை நாளேடு, 2.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக