வெள்ளி, 17 ஜூன், 2016

ஜஸ்டிஸ் கொள்கை வெற்றி - தந்தை பெரியார்


தேர்தல்களில் ஏற்படும் வெற்றி தோல்விகளினால் ஒரு தனி மனிதனு டையவோ கட்சியினுடையவோ யோக்கியதையை நிர்ணயம் செய்து விடுவது முழு முட்டாள்தனம் என்று நாம் பலமுறை வற்புறுத்தியிருப்பதைத் தோழர்கள் மறந்திருக்க மாட்டார்கள். குதிரைப் பந்தயம், லாட்டரி, சீட்டாட்டம் மாதிரி தேர்தலும் ஒரு வகைச் சூதாட் டமே. யோக்கியதையுடையவர்கள் தோல்வியடைவதும், அநாமதேயப் பேர்வழிகள் வெற்றியடைவதும் சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. தேச மக்களில் 100க்கு 94 பேர் எழுத்து வாசனையில்லாத பாமர மக்களாய் இருக்கும் வரை தேர்தலில் மோசடிகளும், சூழ்ச்சிகளும், அயோக்கியத்தனங்களும் தாராளமாக நடைபெற்றுக் கொண்டே இருக்கும். தேர்தல்களுக்கு முன் வந்திருப்பவர்களின் யோக்கியதை, அவர்களோ, அவர்களது கட்சியோ இதுகாறும் நாட்டுக்குச் செய்துள்ள நன்மைகள், தேச மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதற்குள்ள ஆற்றல் தேர்தலுக்கு முன் வந்திருப்பவருக்கோ, அவரது கட்சிக்கோ உண்டா என்ற சிந்தனை அபேட்சகர்களின் அல்லது அவர்களது கட்சியின் பூர்வச் சரித்திரம் ஆகிய காரியங்களைப் பற்றிச் சிந்தனை செய்யாமல் காந்திக்காகவும், கதருக்காகவும் ஓட்டுக் கொடுக்கும் அறிவற்ற மக்கள் இருக்கும் வரை தற்காலத் தேர்தல்களை, ஜனநாயக முறைப்படி நடக்கும் தேர்தல்கள் என்று சொல்ல முடியுமா? அனேக இடங்களில் நடைபெற்ற நகர சபை, ஜில்லா போர்டு தேர்தல்களில், மதுவிலக்குத் திட்டத்தை தமது லக்ஷியமாகக் கொண்டிருக்கும் காங்கிரஸ் காரர்கள் தாராளமாகக் கள் வழங்கினதாகப் பல பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இதை எந்தப் பொறுப்புடைய காங்கிரஸ்வாதியும் இந்நிமிஷம் வரை மறுக்க முன் வரவில்லை. மற்றும் கைக் கூலிப் பேய் தாண்டவமாடியதாயும் பலர் புகார் செய்திருக்கிறார்கள்.

திருநெல்வேலியில் ஜில்லா போர்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் தோழர் குப்புசாமி அய்யர் தலைமையில் நடைபெற்ற ஒரு காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில், காங்கிரஸ்வாதியான தோழர் ஷண்முகம் பிள்ளை என்பார் ஜில்லா போர்டு தேர்தலில் பல காங்கிரஸ் அபேட் சகர்கள் கைக்கூலி வழங்கியதாகத் தாம் கேள்விப்பட்டதாயும், காங்கிரசின் கௌரவத்துக்கு அது அடாத செயல் என்றும் பகிரங்கமாகக் கண்டித்துப் பேசினார். தலைவரோ ஏனைய காங்கிரஸ்வாதிகளோ அதை மறுக்கவில்லை. எனவே தேர்தல் காலங்களில் காங்கிரஸ்காரர் லஞ்சம் வழங்குகிறார்கள் என்பது உறுதியாகிறது.

இந்நிலையில் காங்கிரஸ்காரர் பெறும் வெற்றிக்கு மதிப்போ, யோக்கியதையோ, நாணயமோ உண்டு என்று கூற முடியுமா?

சென்ற வருஷ நவம்பரில் நடைபெற்ற அசம்பிளித் தேர்தலின் போது (1) வரப் போகும் சீர்திருத்த அரசியலைக் கவிழ்ப்போம்  (2) பிரதிநிதித்துவ சபை கூட்டுவோம்  (3) எதிர்கால அரசியலை அமைப்போம் என்று காங்கிரஸ்காரர்கள் வாக்காளர்களுக்கு உறுதி கூறினார்கள். அந்த மூன்று காரியங்களில் ஒன்றையாவது காங்கிரஸ்காரர்கள் நிறைவேற்றி வைக்க வில்லை. நிறைவேற்ற முயலவுமில்லை. மாறாக எதிர்கால அரசியலைக் கைப்பற்றி மந்திரிகளாகவும் காங்கிரஸ்காரர் பகிரங்கமாக முயற்சி செய்கிறார்கள். தேச மக்களுக்கு எள்ளளவேனும் அரசியல் உணர்ச்சியோ, ஞானமோ இருந்திருந்தால் தேர்தல் வாக்குறுதிகளைக் காற்று வாக்கில் பறக்கவிட்ட அயோக்கியப் பேர்வழிகளுக்கு மீண்டும் ஓட்டுக் கொடுப்பார்களா? தேச மக்கள் எல்லாம் அப்பாவிகள் என்ற நம்பிக்கையினாற்றானே காங்கிரஸ்காரர் மீண்டும் அவர்களிடம் ஓட்டுக் கேட்க முன் வருகிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை மீறுகிறவர்களுக்கு மீண்டும் ஓட்டுக் கொடுக்கும் முட்டாள்தனத்தை இந்தியாவிலன்றி உண்மையான ஜனநாயக அரசியல் அமுலில் இருக்கும் எந்த நாட்டிலாவது பார்க்க முடியுமா? சுயராஜ்யம் நடத்த இந்தியர்களுக்கு லாயக்கில்லையென்று கன்சர்வெட்டிவ் கட்சியார் கூறும்போது நாம் அவர்கள் மீது சீறி விழுகிறோம்; திட்டுகிறோம்; துரோகப்பட்டம் சூட்டுகிறோம். ஓட்டுரிமையைப் புத்திசாலித்தனமாக வழங்கத் தெரியாத மக்களுக்கு ஓட் டுரிமை வழங்குவது குரங்கு கையில் கூரிய கத்தியையோ, ரிவால்வாரையோ கொடுப்பதற்கே ஒப்பாகும்.  75 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றிருக்கும் இக்காலத்திலேயே தேர்தல்களில் மானக்கேடான அலங் கோலங்கள் நடைபெறுகின்றன. வரப்போகும் சீர்திருத்தப்படி ஏழரைக் கோடிப்பேர் ஓட்டுரிமை பெறப் போகிறார்கள். ஜனநாயகக் கொள்கைப்படி பிராய பூர்த்தி வந்தவர்கள் எல்லாம் ஓட்டுரிமை பெற வேண்டியது அவசியமானாலும் இந்தியாவின் தற்கால நிலையில் ஏழரைக்கோடிப் பேர் ஓட்டுரிமை பெறுவது ஆபத்தான பலனையே கொடுக்கப் போகிறது. ஏழரைக் கோடிபேர் வாக்குரிமை பெறப் போவதை தோழர் சத்தியமூர்த்தி இரு கையாலும் வரவேற்பதே நமது அபிப்பிராயத்துக்கு மறுக்க முடியாத அத்தாட்சி. காந்தி, கதர், பாரத மாதா, அடிமைச் சங்கிலி, விடுதலை என்பன போன்ற பகட்டு வார்த்தைகளைச் சொல்லி பாமர மக்களை மயக்கச் சௌகரியம் இருப்பதினாலேயே தோழர் சத்தியமூர்த்தி ஆனந்தக் கூத்தாடு கிறார். தேச மக்களின் தற்கால மோசமான நிலைமையைப் பற்றி எண்ணும் போதெல்லாம் நாம் மனச் சோர்வடைந்து ஜனநாயக ஆட் சியைவிட ஹிட்லர் ஆட்சியினாலும், முசோலினியாட்சியி னாலும் இந்தியாவுக்கு அதிக நன்மை ஏற்படாதா என்று நாம் நம்மையே கேட்டுக் கொண்டதுண்டு. மனச் சோர்வினால் இத்தகைய மனத் தடுமாற்றம் அனேகருக்கு ஏற்படுவது சகஜமே. நாம் விரும்பினாலும், வெறுத்தாலும் புதிய அரசியல் சீர்திருத்தம் வரப்போவது உறுதி.
அதன்படி ஏழரைக்கோடி பேர் ஓட்டுரிமை பெறப் போவதும் நிச்சயம். காலம் ஏமாற்றக்காரருக்கு அநுகூலமாயிருந்தாலும், நாம் மனந்தளர்ந்து கை கால்களைப் பரக்கப் போட்டு அல்லற்படாமல் நாம் நமது கடமையைச் செவ்வனே செய்வதைத் தவிர வேறு கதியில்லை.
திருநெல்வேலி, திருச்சி, கர்நூல், அனந்தப்பூர், சித்தூர் முதலிய இடங்களில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ்காரரே வெற்றிக்கொடி நாட்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. தென்னாற்காடு ஜில்லா தேர்தல் முடிவு நாளை அல்லது மறுநாள் வெளிவரவும் கூடும். தென்னாற்காட்டில் நமக்குத் தோல்வியே ஏற்பட்டாலும் நாம் அதைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை.
ஏன்? தேர்தல் வெற்றி தோல்விகளினால், தற்கால நிலையில் அபேட்சகர்களில் யோக்கியதா, யோக்கியதைகளை நிர்ண யிக்க முடியாத நிலைமையே நமது அபிப்பிராயத்துக்கு காரணம். நமது கூற்றை விளக்குவதற்கு ஆந்திர வீரர் தோழர் டி. பிரகாசம் டிசம்பர் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஹிந்துப் பத்திரிகையில் எழுதியுள்ள ஒரு கடிதத்தை எடுத்துக் கொண்டால் போதுமானது. ஆந்திர தேசத்தில், ஜில்லா போர்டு தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ்காரருக்கு வாழ்த்துக் கூறுகையில் தோழர் பிரகாசம் அறிந்தோ அறியாமலோ அக்கடிதத்தில் சில மானக்கேடான உண்மைகளையும் வெளியிடுகிறார். அவர் எழுதுவதாவது,

கர்நூலிலும், அனந்தப்பூரிலும் காங்கிரஸ் பேரால் தேர்ந் தெடுக்கப்படாத ஜில்லா போர்டு மெம்பர்கள் காங்கிரஸ் அபேட்சகர்களையே ஆதரித்தார்கள். சிலர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தமது அபிப்பிராயத்தையே மாற்றிக் கொண்டு காங்கிரசில் சேர்ந்து கொண்டார்கள். தேர்தலில் காங்கிரஸ்காரரோடு போட்டி போட்டு வெற்றிப் பெற்றவர்களும் தலைவர் தேர்தல்களில் காங்கிரஸ் அபேட்சகர்களையே ஆதரித்தார்கள்.

ஜில்லா போர்டு தேர்தலுக்கு முன் வருபவர்கள் எல்லாம் பொதுவாக படிப்பும், அந்தஸ்தும், சமூக வாழ்வில் மதிப்புக்குரிய ஸ்தானமும் பெற்றிருப்பவர்களே. அவர்களே தோழர் பிரகாசம் கூறுகிறபடி நடந்திருக்கையில் வெற்றி தோல்விகளை எண்ணி மாரடித்துக் கொள்வதில் பயனுண்டா? கட்சிப் பற்றோ, கொள்கையோ, மனவுறுதியோ இல்லாத இத்தகைய ஆசாமிகளை நம்பினால் எந்தக் கட்சிக்குத்தான் மானக்கேடு ஏற்படாது? அரசியலில்  கூடு விட்டுக் கூடு பாய்வது ஒரு மாதிரி அரசியல் விபசாரமேயாகும். விபசாரிகளையாவது மன்னித்து விடலாம். ஏன்? படிப்போ, நற்பழக்கமோ இல்லாத வர்கள்; வயிற்றுப்பாட்டுக்கு வழியில்லா தவர்கள். மேலும் மதத்தின் பேரால் விபசாரம் ஆதரிக்கப்படுவதினால் சாமானிய விபசாரிகளைக் குறை கூற வழியில்லை.

அரசியல் விபசாரிகள் நிலைமையோ அப்படியல்ல. படிப்பும், பணமும், அந் தஸ்தும் உடையவர்கள். அவர்கள் கட்சித் துரோகம் செய்து விபசாரியாவதைவிட கொடுமை, மானக்கேடு, துரோகம் வேறுண்டா? திருநெல்வேலியிலும் திருச்சியிலும் கூடுவிட்டுக் கூடு பாய்ந்த அரசியல் சிங்கங்களைப் பற்றிய வரலாறுகளை தென்னாட்டு பத்திரிகைகளில் காங்கிரஸ்காரரே வெளியிட்டிருக்கிறார்களாகையால், அவைகளை மீண்டும் எடுத்துக் கூறி நமது பத்திரிகையை அசுத்தப்படுத்த நாம் விரும்பவில்லை.

ஆகவே காங்கிரஸ்காரர்களுக்கு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் வெற்றிக்கு எவ்வளவு மதிப்புக் கொடுக்கலாம் என்பதை தேச மக்களே நிர்ணயம் செய்து கொள்ளட்டும். ஜில்லா போர்டு தேர்தல்களிலும், தலைவர் தேர்தல்களிலும், வெற்றி பெற்றவர்கள் எந்தப் போர்வையைப் போர்த்திக் கொண்டாலும், இது வரை தேர்ந்தெடுக்கப்பட்ட மெம்பர்களில் பெரும்பாலாரும், தலைவர்கள் அனைவரும் பார்ப்பனரல்லாதாரா யிருப்பதை நம்மவர்கள் பார்வைக்குக் கொண்டுவர விரும்புகிறோம். அவர்களில் பெரும்பாலார் அரசியல் விபசாரக் குற்றத்துக்கு ஆளாகி யிருந்தாலும் அரசியல் விபசாரம் மன்னிக்க தக்கதென்ற உணர்ச்சி நம்மவர்களில் பெரும்பாலார் உள்ளத்துக்குக் குடி கொண்டிருக்கையில் அவர்களது வெற்றியை நமது வெற்றி யாகப் பாராட்டுவதில் அவ்வளவு குற்ற மில்லையென்றே நினைக்கிறோம்.

இதுவரை வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகளினால் ஜஸ்டிஸ் கட்சியின் மூலம் கொள்கை வெற்றி பெற்றிருக்கும் சந்தோஷச் செய்தியை எந்த மலையுச்சியிலிருந்தும் கூற நாம் தயாராயிருக்கிறோம்.

இதுவரை நடைபெற்றுள்ள தேர்தல் களினால் பல உண்மைகள் வெளி வந்துள்ளதையும் நம்மவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டும்.
தேர்தல்களில் வெற்றி பெற வேண்டு மானால் பார்ப்பனரல்லாத பிரமுகர் களின் காலில் விழுவதைத் தவிர காங்கிரஸ் காரருக்கு வேறு வழியில்லை யென்பது புலனாகிவிட்டது.
சிறை புகுந்த  தடியடிபட்ட காங்கிரஸ் காரர்களைவிட சட்ட வரம்புக் குட்பட்டு ஜஸ்டிஸ் கட்சிக் கொள்கையைப் பின்பற்றி வந்தவர்களுக்கே நாட்டில் மதிப் புண்டென்பதும் சந்தேகத்துக்கு இடமின்றி வெளியாகிவிட்டது.

இத்தியாதி காரணங்களால், பார்ப்பன ரல்லாதார் எல்லாத் துறைகளிலும் ஆதிக் கம் பெற வேண்டும் என்ற ஜஸ்டிஸ் கட்சியின் மூலக் கொள்கை வெற்றி பெற்று வருவதைக் கண்ணுள்ளோர் பார்த்துக் கொள்ளட்டும். இதுவரை வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகளால் ஜஸ்டிஸ் கட்சிக்குத் தோல்வியேற்பட்டது போல் தோன்றினாலும் உண்மையில் அஞ்சக் கூடிய தோல்வியல்லவென்பதை நம்மவர்கள் நம்புவார்களாக!
தென்னாற்காடு தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு அடுத்த வாரம் மீண்டும் இதைப் பற்றி எழுதுவோம்.
‘குடிஅரசு’  தலையங்கம்  22.12.1935
-விடுதலை,22.5.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக