திங்கள், 7 நவம்பர், 2016

கலை வளர்ச்சி - தந்தை பெரியார்


தமிழ் மக்களுக்குக் கலை வளர்ச் சியைப் பற்றிய கவலை, பண்டிதர் களைத் தவிர, மற்ற கலை உணர்ச்சியே இல்லாத பொது மக்களுக்கும், கலை என்றால் என்ன என்று அறிந்திராத செல்வச் சீமான்களுக்கும், கலை இன் னது என்றே உணர்ந்திராத செல்வச் சீமான்களுக்கும்,
கலை இன்னது என்றே உணர்ந்திராமல் கலையின் பேரால் வயிற்றுப்பாட்டுத் தொழில் நடத்தின தொழிலாளிகளுக்கும் இன்று திடீ ரென்று ஏற்பட்டு, கலை வளர்ப்பு முயற்சியில் இறங்கத் தோன்றின காரணம் என்ன என்பதை முதலில் யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளுகிறோம். அதாவது இந்தியின் ஆதிக்கத்தை ஒழிக்க மக்கள் ‘தமிழ், தமிழ்’ என்று செய்த தமிழ்க் கிளர்ச்சியேயாகும்.
தமிழ்நாட்டில் ஆரியர் ஆதிக்கம் பெற்று எல்லாத் துறைகளையும் தம் வயப்படுத்திக் கொண்டு தங்கள் இன நலத்துக்கும் சுயநலத்துக்கும் ஏற்ற வண் ணம் அவைகளைப் பெருக்கிக் கொண் டார்கள். மேலும், அவற்றின் மூலமே தமிழர் செல்வத்தைக் கொள்ளை கொண்டு வாழ்வதல்லாமல் சமுதாயம்,
சமயம் ஆகிய துறைகளிலும் தங்களது ஆதிக்கத்தையும், தமிழர்களுடைய இழிவையும், அடிமைத்தனத்தையும் பெருக்க முயல்கிறார்கள். இவை சுயமரியாதை உணர்ச்சியுள்ள தமிழர் களுக்குத் தோன்றி அவர்கள் ஒவ்வொரு துறையிலும் உள்புகுந்து தடவிப் பார்த்து உள் இரகசியங்களை வெளிப் படுத்தியதன் பயனாகவே கலை இன, மொழி முதலிய இன்றைய கிளர்ச்சிகள் தோன்ற வேண்டியதாயிற்று.
இக்கிளர்ச் சிகளுக்குச் செல்வாக்கு ஏற்பட்டவுடன் பண்டிதர்கள், கலைத் தொழில் வாழ்வுக் காரர்கள், பிரபுக்கள் முதலியவர்கள் இவற்றில் கவனம் செலுத்திப் பயனும், பொது நலத் தொண்டு புகழும் பெற முயல வேண்டியவர்களானார்கள். இது மிக்க நியாயமும், பாராட்டத்தக்க காரியமும் ஆகும் என்பதில் எள்ளளவும் ஆட்சேபணை இல்லை.
இசைக்கலை
ஆனால், இந்த முயற்சியினால் இம்மாதிரியான கிளர்ச்சி தோன்ற வேண்டிய உட்கருத்து என்ன இருந் ததோ அதற்கு அனுகூலம் ஏற்பட வேண்டாமா என்றும், அனுகூலம் ஏற்படா விட்டாலும், கேடாவது ஏற்படாமல் இருக்க வேண்டாமா என்றும் கேட்கிறோம். உதாரணமாக “இசை (சங்கீத)க் கலைக்கு   மொழி முக்கியமில்லை.
குரல் இனிமை, ஒலி இனிமை, தாள இனிமை தான் முக்கிய மானது. மொழி இனிமை முக்கியமல்ல என்று இருக்குமேயானால், நமக்கு இந்த இசைக் கலை வளர்ச்சி முயற்சியில் இன்று கலந்து கொள்ள வேண்டிய அவ சியமே இல்லை என்று சொல்லலாம். அப்படிக்கில்லாமல் இசையில் மொழி இனிமையே முக்கியமானது.
அம்மொழி தமிழ்மொழியாய் இருக்க வேண்டும் என்று நாம் சொல்லுவதனால் அம் மொழிக்கு பொருள் வேண்டாமா?
அப்பொருளுக்கு பலன் வேண் டாமா? அப்பலன் கிளர்ச்சியின் குறிக் கோளுக்கு ஏற்றதாக, நலந்தரத்தக்கதாக இருக்க வேண்டாமா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுமாய் வாசகர்களை வேண்டுகிறோம்.
உதாரணமாக சென்னைத் தமிழ் இசை மாநாட்டில் இசைவாணர் தியாக ராஜ பாகவதர் பாடினார். அவற்றுள் மாதிரிக்கு இரண்டு பாட்டுகளின் தன்மையைப் பாருங்கள்.
ஒரு பாட்டு:
(ராகம்: ஷண்முகப்பிரியா)
பல்லவி
பார்வதி நாயகனே பரமசிவா
கருணாகர சம்போ

அனுபல்லவி
சர்வ பௌமனே சங்கரனே கைலாச வாசனேசந்திரசேகரா
என்பதாகும்,
மற்றொரு பாட்டு.
(ராகம்: லதாங்கி)
பல்லவி
ஸ்ரீஜகதாம்பிகையே தீனதயாபரி சங்கரி
அனுபல்லவி
ஒ ஜனநி நீயே அபயம் சாணுன் உபய சரணம் என்பதாகும்.
இப்படியே தான் அங்கு நடந்த 100க்கு 97 மற்ற பாட்டுகளும் இருந்தன. இந்தப் பாட்டுகளை தெலுங்கிலோ, சமஸ்கிருதத்திலோ, இந்தியிலோ, அல்லது ஜப்பான், ஜெர்மனி மொழியிலோ பாடி, இருந்தால் என்ன குடிமுழுகிப் போய் இருக்கும்?
இந்த மாதிரி பாட்டுகள் பாடச் செய் வதற்கு ஆகவா இருகோடீஸ்வரர்கள் கூடி, உலகத்தைத் திரட்டி பல பதினாயிரக்கணக்கான ரூபாய்கள், பல அறிஞர்களின் அருமையான நேரங்கள், ஊக்கங்கள், செலவழித்து என்றும் கண்டிராத ஓர் உயர்ந்த திருவிழா இராப்பத்து பகல் பத்து போல் நடத்துவது என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
இதுதான் தமிழிசைக் கிளர்ச்சி என்றால் இதற்கு (பார்ப்பனர்களின் ஐகோர்ட் ஜட்ஜுகள், ஐ.சி.எஸ். கலெக் டர்கள் முதல்) இத்தனை “பெரியவர்கள்” விரோதம் தான் இப்பெரியார்களுக்கும், தமிழ் இசை கிளர்ச்சி இயக்கத்திற்கும் எதற்கு ஏற்பட வேண்டும், என்று யோசித்தால் இது ஒரு பைத்தியக்காரத் தனமான வேலை என்றே தோன்றும்.
(29.1.1944 “குடிஅரசு” தலையங்கம்)
-விடுதலை ஞா.ம.,9.1.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக