திங்கள், 7 நவம்பர், 2016

தமிழனுக்கு கடவுள் உண்டா?

29.6.2016-குடிஅரசிலிருந்து....

நாம் ஒரு தமிழர் என்கின்ற முறையில் கடவுள் என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்வோமானால் கடவுள் என்கின்ற பதமே கட + உள்  என்பதான இரண்டு சொற்கள் சேர்ந்த பகுபதமாக இருக்கின்றதே தவிர வடமொழியிலும், ஆங்கில மொழியிலும் இருப்பதுபோன்ற பகவான் (ழுடின) காட், அல்லா என்பது போன்ற தனிவார்த்தையோ அல்லது அந்த விதங்களான வாக்கியமோ தமிழில் இல்லை என்பதை உணரவேண்டும்.

தமிழர்களுக்கு பாஷை தோன்றிய காலத்தில் கடவுள் உணர்ச்சி இருந்து இருக்குமானால் அதற்கு ஒரு தனி வார்த்தை இருந்திருக்கும். அது மாத்திரமில்லாமல் ஆங்கிலம் முதலிய பாஷைகளில் கடவுள் இல்லை என்று சொல்லப்படுவதை உணர்த்துவதற்கு எப்படி எத்தீசம் - எத்தீட்டு, நாதிகம் - நாதிகன், என்கின்ற வார்த்தைகள் இருக்கின்றனவோ அவைபோலவே தமிழிலும் கடவுள் இல்லை என்று சொல்லுவதை உணர்த்துவதற்கு கடவுள் இல்லை என்று சொல்லுபவனைக் குறிப்பிடுவதற்கும் அப்பொருள்கள் கொண்ட ஏதாவது ஒரு வார்த்தை இருந்திருக்கும்.

ஆகவே, அவைகளிலிருந்தே தமிழர்களுக்கும் (அதாவது தமிழ் நாட்டாருக்கு) கடவுளுக்கும் ஆதியில் எவ்வித சம்பந்தமும் இருந்ததில்லை என்பது ஒருவாறு புலப்படும்.

இறைவன் என்ற பதத்தைக் கடவுளுக்குள்ள தமிழ்ப்பதம் என்று பண்டிதர்கள் சொல்லக்கூடுமானாலும் அது அரசனுக்கும் தலைவனுக்கும் ஏற்பட்டதே தவிர கடவுளுக்காக ஏற்பட்ட தனிப்பொருள் அமைந்த சொல் அல்ல வென்றே சொல்லுவோம். ஆனால் கடவுள் என்பது எப்பொருளுக்கும் தலைவன் என்கின்ற முறையில் வேண்டுமானால் இறைவன் பெரியவன் எனினும் பொருந்தும் என்று அப்புக்கட்டலாமே யொழிய அது அதற்கே ஏற்பட்ட  தனிவார்த்தை ஆகாது.

நிற்க, தமிழ் நாட்டில் பலர் காலஞ்சென்ற பிதுர்க்களையும், செல்வாக்குள்ள பெரியார்களையும் அன்பினாலும், வீரர்களைக் கீர்த்தியாலும், வழிபட நினைத்து அவர்களை உருவகப்படுத்த என்று ஒரு கல் நட்டு அக்கல்லை வணங்கி வந்ததாக மாத்திரம் சொல்லப்படுவதை நான் கேட்டிருக் கிறேன்.

மற்றப்படி, இப்போதைய கடவுள்களான சிவன், விஷ்ணு, பிர்மா, பிள்ளையார், சுப்ரமணியன் முதலிய கடவுள்களையோ, மற்றும் அது சம்பந்தமான குட்டிக் கடவுள்களையோ தமிழ் மக்கள் வணங்கி வந்தார்கள் அல்லது நம்பி இருந்தார்கள் என்றாவது சொல்லுவதற்குக் கூட  இடமில்லை என்று கருதுகிறேன். இதற்கெனக்கு தோன்றும் ஆதாரம் என்னவென்றால் இப்பொழுது உள்ள கருப்பன், காத்தான் முதலிய பேர்கள் கொண்ட நீச்சக் கடவுள்கள் தவிர மற்ற கடவுள்கள் பெயர்கள் எல்லாம் வடமொழியிலேயே இருக்கின்றதென்பதே போதுமான தாகும்.

ஆனால், வடமொழி பெயருள்ள சில கடவுள்களின் பெயர்களை தமிழில் மொழிபெயர்த்து அந்த கடவுள் களைத் தமிழில் அழைப்பதை பார்க்கின்றோம் என்றாலும் இவை தமிழர்களுக்குள்ளும் ஆதியில் இருந்தது என்பதற்குத் தக்க சமாதானம் சொல்ல யாரும் முன் வருவதை நான் பார்க்கவில்லை.

இது மாத்திரமல்லாமல், சைவம், வைணவம் என்று சொல்லப்படும் சமயங்களாகிய தமிழ் மக்களைப் பிடித்த நோய்களான சைவ, வைணவ மதக் கடவுள்கள் எல்லாம் வடமொழிப் பெயர்களை உடையதாகவும், அவைகளின் ஆதாரங்கள் முழுவதும் வடமொழி வேதசாதிரப் புராண இதிகாசங்களாகவும்தானே இருக்கின்றதே அல்லாமல் தமிழ் ஆதாரத்தால் ஏற்பட்ட தாகச் சொல்லக்கூடிய கடவுள் ஒன்றையுமே நான் கண்டதும், கேட்டதும் இல்லை.

இவைகளுக்குச் செய்யப்படும் பூசை முதலியவை களும், வடமொழி நூல்கள் ஆதாரப்படி வடமொழி பெயர்கள் கொண்ட வதுகளும், செய்கைகளுமாகவே இருப்பதையும் காணலாம். அதாவது அர்ச்சனை, அபிஷே கம், பலி, கற்பூரம், சாம்பிராணி, காணிக்கை முதலியவை களாகும்.

தவிரவும், மேற்கண்ட இரண்டு சமயங்களின் பேரால் சொல்லப்படும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலிய சமயாச்சாரியார்களும், பக்தர்மார்களும் கும்பிட் டதும், தேவாரம், திருவாசகம், திருத்தாண் டகம், பிரபந்தம் முதலாகியவைகள் பாடினதும் மற்ற மக்கள் வாழ்க்கையில் உபயோகப்படுத்துவதும் ஆகிய எல்லாம் வடமொழிப் பெயர்கொண்ட கடவுள்களை பற்றியும்,

அவர்களது செய்கைகளைப் பற்றிச் சொல்லப் பட்ட வடமொழி புராண இதிகாசங்களிலுள்ள கதைகளைப் பற்றியுமே இருக்கின்றன வே அல்லாமல் மற்றபடி, அவைகள் தமிழர்களோ அல்லது தமிழ்ப் பண்டிதர்களோ தமிழர்களுக்கு ஆதியில் இருந்தது என்று சொல்லத் தக்கதாக ஒன்றையுமே, ஒருவர் வாக் கையுமே நான் பார்த்ததும் இல்லை. பிறர் சொல்லக் கேட்டதும் இல்லை.

மற்றும், சமயக்குறிகள் என்று சொல்லப்படும் விபூதி, நாமம் முதலிய சின்னங்களின் பெயர்கள்கூட வடமொழியில் உள்ளதே தவிர, தமிழில் உள்ளவையல்ல என்பதே எனது அபிப்பிராயம், வேண்டுமானால் அதைத் தமிழில் விபூதியை திருநீறு என்றும், திருமண் என்றும் சொல்லிக் கொள்ளுகிறோம்.

ஆனாலும், அது சரியான மொழி பெயர்ப்பல்ல வென்று சொல்வதோடு விபூதி, நாமம் என்கின்ற பெயர்கள் எந்தக் கருத்துடன் சொல்லப்படு கின்றனவோ அந்தக் கருத்தும், பொருளும் அவற்றில் இல்லை என்றே சொல்லுவேன்.  விபூதி என்றும், நாமம் என்றும் சொல்லப்படும் வஸ்துகள் சாம்பலும், மண்ணுமாய் இருப்பதால் அந்தப் பெயரையே அதாவது, சாம்பலுக்குள்ள மறுபெயராகிய நீறு என்றும், மண்ணை மண் என்றும் திரு என்பதை முன்னால் வைத்து திருநீறு, திருநாமம் என்று சொல்லப்படுகின்றதே ஒழிய வேறில்லை என்றே தோன்றுகின்றது.

ஆகவே தமிழில் காட், அல்லா, பகவான் என்ப வைகளைக் குறிப் பதற்கு ஒரே வார்த்தையாக ஒன்றுமே இல்லை என்பதும், அதன் சின்னங்களையும் குறிப்பிடுவ தற்குத் தமிழில் வார்த்தைகள் இல்லை என்பதும், அனுபவத் திலுள்ள கடவுள்களும் பெயர்களும் அவற்றின் நட வடிக்கைகளும் கூட தமிழில் இல்லை என்பதும், மற்றபடி இப்போது இருப் பவைகள் எல்லாம் வடமொழியிலிருந்து தமிழர்கள் எடுத்துக்கொண்டு தங்களுடையனவாக்கிக் கொண்ட மயக்கமே என்றும் எனக்குப்பட்டதை உங்களுக்குச் சொன்னேன்.
-விடுதலை,5.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக