செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

கிருஷ்ணன், அர்ஜூனன் சம்வாதம்

- சித்திரபுத்திரன் -

09.11.1930- குடிஅரசிலிருந்து..

அர்ஜுனன்: - சகே சீனாம் நிகே சீனாம் காகதி புருஷோத்தமா?

கிருஷ்ணன்:- அஹம் சந்யாசி ரூபேணாம் புரோஷ்டிதாம் தனஞ்சயா! இதன் பொருள்.

அர்ஜுனன்: - ஹே புருஷோத்மா! தலையில் மயிருடனும், மயிரில்லாமல் மொட்டத் தலையுடனும் இருக்கும் (படியாய் நீ செய்திருக்கின்ற) விதவைகளுக்கு என்ன கதி?

கிருஷ்ணன் :- ஹே அர்ஜுனா! நானே சந்நியாசியாக பூமியில் அவதரித்து அவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்வேன்.

அர்ஜுனன்: -  ஹே கிருஷ்ணா! உன்னை ஒரு பெரிய கடவுளென்று சொல்லிவிட்டு பிறகு நீ இப்படிச் செய்தாய், அப்படி செய்தாய், கண்ட ஸ்திரீகளுடன் கலந்தாய், உதைபட்டாய், அடிபட்டாய், அழுவாரற்ற பிணமாய் செத்தாய் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கின்றார்களே இதைப் பற்றி உனக்குச் சிறிதும் அவமானமில்லையா?

கிருஷ்ணன்:- ஹே அர்ஜுனா! அதைப் பற்றி நீ சிறிதும் கவலைப்பட வேண்டாம். இதெல்லாம் எனது திருவிளையாடலென்றும் இவற்றைப் படித்த கேட்ட ஒவ்வொரு வரும் இதனைக் கொண்டாட வேண்டுமே யொழிய குற்றம் சொல்லக்கூடாதென்றும், குற்றம் சொன்னால் பாவமென்றும், நரகமென்றும் அவற்றை எழுதின அவர்களே எழுதி இழிவை அடக்கி விட்டார்கள். ஆதலால் நமக்கு ஏன் கவலை?

அர்ஜுனன்: -  கிருஷ்ணா! அதுதான் போகட்டும், நம்ப முடியாத அநேகப் பொய்யையும் புளுகையும் சொல்லி நீ சின்னக் குழந்தையாயிருக்கும் போது பெரிய முலையை உறிஞ்சி சூப்பையாக்கி விட்டாயென்றும் மலையைச் சுண்டு விரலால் குடையாய்ப் பிடித்தாய் என்றும் 10 ஆயிரம் பெண்களை ஏக காலத்தில் கலந்தாய் என்றும் இப்படி எல்லாம் எழுதி இருக்கின்றார்களே இந்த புளுகுகளை எவன் நம்புவான்?

கிருஷ்ணன் :- ஓ! அர்ஜுனா! அதைப் பற்றியும் நீ கவலைப்படாதே. ஏனென்றால் அந்தப் படியெல்லாம் எழுதினவர்கள் இவற்றையெல்லாம் எவன் நம்ப வில் லையோ அவன் நாஸ்திகன் என்றும் அவனை அரசன் தண்டிக்க வேண்டுமென்றும் அரசன் தண்டிக்கா விட்டா லும் அவன் நரகத்துக்குப் போகவேண்டும் என்றும் எழுதி மக்களை மிரட்டி பயப்படுத்தி வைத்திருக்கின்றார்கள். ஆதலால் எவனும் தைரியமாய், தான் இவற்றை நம்புவ தில்லை என்று வெளியில் சொல்லவரமாட்டான்?

அர்ஜுனன்: -  அதென்ன கிருஷ்ணா! பாவம் என்றால் என்ன? நரகம் என்றால் என்ன? எனக்கு ஒன்றும் புரியவில்லையே,

கிருஷ்ணன்:- அந்தபடி புரியாமலிருக்கின்றதாகவே பார்த்துதான் சொல்லி இருக்கின்றார்கள்.

அர்ஜுனன்: -  அதென்ன புரியாததைச் சொன்னால் என்ன பயன்.

கிருஷ்ணன்: - ஒருவனுக்குத் தெரியாததையும் புரியா ததையும் சொன்னால் தான் மனிதர்கள் பயப்படுவார்கள். புரியும்படியானதாக எதைச் சொன்னாலும் திருப்பிக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். ஆதலால் தான் அது செய்தால் பாவம், இது செய்தால் பாவம், நினைத்தால் பாவம் என்றெல்லாம் மிரட்டி வைத்திருக்கின்றார்கள்.

அர்ஜுனன்: - இந்த மாதிரி எத்தனை நாளைக்கு ஏமாற்ற முடியும்?

கிருஷ்ணன்:- முடிந்தவரையில் முடியட்டும்.

அர்ஜுனன்: - இந்த புரட்டு வெளியாய் விட்டால் அப்புறம் என்ன செய்வது?

கிருஷ்ணன் : - அப்புறம் வேறு புரட்டை உண்டாக்கிக் கொள்ள அவர்களுக்குத் தெரியும்.

அர்ஜுனன்: -  அதென்ன புரட்டு?

கிருஷ்ணன் : - அரசியல் புரட்டு.

அர்ஜுனன்: - அதுவும் வெளியாகிவிட்டால்?

கிருஷ்ணன் : - அதற்குள் பார்த்துக் கொள்ளுவோம். இந்த இரண்டு புரட்டும் மண்டுகள் நிறைந்த இந்தியாவுக்குச் சுலபத்தில் வெளியாய் விடவா போகின்றது?

அர்ஜுனன்: - சுயமரியாதைக்காரர்கள் இந்த இரண்டையுமே சேர்த்து வெட்டவெளியாக்கிக் கொண்டு வருகின்றார்களே, சீக்கிரத்தில் வெளியாய் விடாதா?

கிருஷ்ணன்:- அவர்களால் சுலபத்தில் முடியாது. ஏனென்றால் அந்த இரண்டு புரட்டின் மேல் தங்கள் வாழ்வையே ஏற்பாடு செய்து கொண்ட அநேகர் சுயமரியாதைக்காரர்களுக்குள்ளாகவே இருக்கிறார்கள். அந்தப்படி மீறி அவர்களெல்லாம் தங்கள் வாழ்க்கைக்குக் கேடு வந்தாலும் வரட்டும் என்று துணிந்து கட்டுப்பாடாய் வேலை செய்தாலும் கூட அது தமிழ் நாட்டிலும் மலையாளத்திலும் தான் செல்லும். இந்தியாவில் மற்ற பாகங்கள் எவ்வளவோ இருக்கின்றன.

அர்ஜுனன்: - எப்படியானாலும் என்றைக்கிருந்தாலும் இந்த இரண்டு புரட்டுக்கும் ஆபத்து ஆபத்துதான்.

கிருஷ்ணன்:- அந்த காலத்தில் பார்த்துக் கொள் ளலாம். நடந்தவரை நடக்கட்டும்.
-விடுதலை,3.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக