வியாழன், 14 பிப்ரவரி, 2019

தமிழ் இசைக் கிளர்ச்சி



தந்தை பெரியார்


தமிழ் இசை முயற்சி அல்லது கிளர்ச்சி என்றால் என்ன? தமிழ் நாட்டில் தமிழர்கள் இடையில் இசைத் தொழிலில் வாழ்க்கை நடத்தவோ அல்லது பொருள் திரட்ட அதை ஒரு வியாபார முறையாகவோ கொண்டுள்ள இசைத் தொழிலாளி அல்லது இசை வியாபாரியை இந்த நாட்டானும், பொருள் கொடுப்பவனும், இசை (சரக்கை)யை அனுபவிப்பவனுமானவன் “இசை என் விருப்பத்திற்கு ஏற்ற வண்ணம் இருக்க வேண்டும்’’ என்று சொல்லி விரும்புவதே ஆகும். இதில் எவ்வித விவாதமோ வெறுப்போ ஏற்பட சிறிதும் இடமில்லை. இந்த முயற்சியும் கிளர்ச்சியும் இத்தனை நாள் பொறுத்து ஏற்பட்டதேன் என்பதுதான் அதிசயிக்கத்தக்கதாகும். அன்றியும் “எங்களுக்கு இப்படிப்பட்ட இசைச் சரக்குத்தான் இருக்க வேண்டும்’’ என்று கொள்வோரும் நுகர்வோரும் கேட்டால் அதை தர்க்கித்து “நீ இதைத்தான் கொள்ள வேண்டும்’’ என்று சொல்லுவது இசைப் பிழைப்பாரின் ஆதிக்கத்தையும், இசை வியாபாரியின் ஆதிக்கத்தையும், கொள்வோரின் இழிதன்மையையும் வலிவற்ற, மானமற்ற, தன்மையையும் காட்டும் அறிகுறியாகும்.

சுருக்கமாகச் சொன்னால் தமிழன் தான் நுகரும் இசையை தமிழில் இசை, தமிழில் பாடு, தமிழர்களைப் பற்றித் தமிழர்களுக்கு ஏற்றதை, தமிழர்களுக்குப் பயன்படுமாறு பாடு என்கிறான். இதை யார்தான் ஆகட்டும் ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? ஏன் குறை கூறவேண்டும் என்று கேட்கிறேன்! அதிலும் தமிழன் இப்படிக் கேட்டதை தமிழனால்  தமிழன் அல்லாதவன் என்ற கருதப்பட்டவன் ஏன் மறுக்க வேண்டும்? இது மிகமிக அதிசயமானதும் தமிழனால் மிகமிக வருந்தத்தக்கதுமாகும். தமிழன் தமிழ் மக்கள் தமிழில் பாட்டுக் கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகிறான். பணம் கொடுப்பவன் தனக்கு தமிழ்ப்பாட்டு பாடப்பட வேண்டுமென்று ஆசைப்படுகிறான். பாட்டுக் கேட்பவன் தமிழில் பாட்டுப் பாட வேண்டும் என்று ஆசைப்படுகிறான். இந்த ஆசையில் பழந்தமிழர் அல்லாத தோழர்கள் கே. சீனிவாசனும், சி.ஆர். சீனிவாசனும், சர். சி. பி. இராமசாமியும், சர்.இராதாகிருஷ்ணனும், டி.டி. கிருஷ்ணமாச்சாரியும் அவர்கள் இனத்தாரும், வெங்கிடு சுப்பராவும் அதை மறுக்கவோ, குறை கூறவோ, குற்றம் சொல்லவோ எப்படி உரிமை உடையவர்கள் என்று கேட்கின்றேன்.

தமிழன் காதுக்கும் மனதிற்கும் வேண்டிய உணவுக்கு இந்த தமிழர் அல்லாதவர் என்று கருதப்பட்டவர்கள் பக்குவமும், நோட்டமும், சுவையும் சொல்ல வருவது அவர்களது அதிகப் பிரவேசத்தனத்தையும், அகம்பாவத்தையும் தமிழர்களை இழிவாய்க் கருதி இருக்கும் சிறு குணத்தையும் காட்டுவதல்லாமல் அதற்கு வேறு பெயர் என்ன சொல்லக் கூடும். (இந்தப் பெயர்களை பெரியார் யுனிவர்சிட்டி சொற்பொழிவின்போது குறிப்பிடவில்லை. தமிழர் அல்லாதவர்கள் என்பதற்கு இவர்களை நினைத்துக் கொண்டுதான் சொன்னார் _- நிருபர்).

 

“தமிழன் அந்நிய மொழியைக் கற்க வேண்டும்’’ என்று சொல்லுவது தேசாபிமானமும்,

நாட்டு முற்போக்கு இயல் கலை அபிவிருத்தியும் ஆகிவிடுகிறது. தமிழனுக்குத் தெரியாத - புரியாத மொழியில் தமிழன் பாட்டு கேட்க வேண்டும். இதற்குப் பேர்தான் கலை வளர்ச்சியாம்.

 

“தமிழர் என்றும், தமிழர் அல்லாதவர் என்றும் பேதம் பாராட்டக்கூடாது’’ என்பதாக தமிழர்களுக்கு அறிவுரை கூறும் இந்தப் பெருமான்களே “தமிழில் பாட வேண்டும் என்பது பொதுநலத்துக்குக் கேடு; கலைக்குக் கேடு; கலைநலத்துக்குக் கேடு’’ என்று சொல்ல வந்தால் இவர்கள் உண்மையில் தமிழர் - தமிழர் அல்லாதவர் என்கின்ற உணர்ச்சியைக் குறையச் செய்வார்களா? நெருப்பில் நெய்யை ஊற்றி எரியச் செய்யும்படியான மாதிரியில் வளரச் செய்பவர்களா? என்று கேட்கிறேன்.

அன்றியும் இப்படிப்பட்ட இவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடுமா? தமிழில் பாடினால் இசை கெட்டுப் போகும் என்றால் மேற்கூறிய தமிழர் அல்லாத தோழர்களைவிட இராஜா சர். அண்ணாமலை செட்டியார், சர். சண்முகம் செட்டியார் போன்றவர்கள் குறைந்த அளவு கலை அறிவோ, பொது அறிவோ உடையவர்கள் என்பது இவர்கள் எண்ணமா என்று கேட்கிறேன்.

காது, கண், மனம் ஆகியவை எல்லா விஷயங்களுக்கும் எல்லோருக்கும் ஒன்று போல் இருக்க முடியாது என்பது அறிஞர் ஒப்ப முடிந்த விஷயமாகும்.

தமிழில் பாடு என்றால் சிலர், அதுவும் ஒரு வகுப்பாரே பெரிதும் ஆட்சேபணை சொல்ல வந்ததாலேயே தமிழ் இசை இயக்கம் வகுப்புத் துவேஷத்தையும் உண்டு பண்ணக்கூடிய இயக்கமாகவும், பலாத்காரத்தை உபயோகித்தாவது தமிழ் இசையை வளர்க்க வேண்டிய இயக்கமாகவும் ஆக வேண்டியதாய் விட்டது. இத்தனைப் பெரியவர்கள் எதிர்ப்பும், தமிழர் அல்லாதவர்களின் பத்திரிகைகளின் எதிர்ப்பும் ஏற்பட்ட பிறகேதான் இது ஓர் இயக்கமாக விளங்க வேண்டியதாயும், சில இடங்களில் பாட்டுப் பிழைப்புக்காரர்களை நிர்ப்பந்தப்படுத்தி, பயமுறுத்தி தமிழில் பாடச் செய்ய வேண்டியதாயும், பாட்டுப் பிழைப்புக்காரர்கள் சில இடங்களுக்குப் போகும் போது பந்தோபஸ்துக்கு ஆட்களைக் கூட்டிக் கொண்டு போக வேண்டியதாகவும் ஏற்பட்டு விட்டது. பாட்டுப் பிழைப்புக்காரரான சிலர் மீது தமிழர்கட்கு வெறுப்புக்கூட ஏற்படும் படியாக நேர்ந்துவிட்டது. கூடிய சீக்கிரத்தில் இசைக்கலை வியாபாரம் தமிழர்கள் அல்லாதவர்களை விட்டு விலகினாலும் விலகிவிடலாம். அல்லது அவர்களே அதை விட்டு விலகினாலும் விலகி விட நேரிடலாம் என்றுகூடக் கருத வேண்டியதும் ஆகிவிட்டது.

பொதுவாகச் சொன்னால் இந்த நிலையானது நாட்டின் நலத்திற்கும், ஒற்றுமைக்கும் ஏற்றதல்ல என்றே சொல்லுவேன். இன்று தமிழனின் நிலைமை “தமிழன் அந்நிய மொழியைக் கற்க வேண்டும்’’ என்று சொல்லுவது தேசாபிமானமும், நாட்டு முற்போக்கு இயல் கலை அபிவிருத்தியும் ஆகிவிடுகிறது. தமிழனுக்குத் தெரியாத - புரியாத மொழியில் தமிழன் பாட்டு கேட்க வேண்டும். இதற்குப் பேர்தான் கலை வளர்ச்சியாம். மற்றும் தமிழனுக்குத் தமிழ் வேண்டும், தமிழ் இசை வேண்டும் என்பது தேசத் துரோகமாகவும் கலைத் துரோகம், வகுப்பு துவேஷம் என்பதாகவும் ஆகிவிடுகிறது. காரணம், பெண்களுக்கு ஆண்கள் ஒழுக்க நூலும் கற்பு நூலும் எழுதுவதுபோல் தமிழனுக்குத் தமிழன் அல்லாதவன் தமிழர்களை அடிமை கொண்டு அடக்கியாண்டு சுரண்டிக் கொண்டிருப்பவன் தேசாபிமானம், மொழி அபிமானம், கலை அபிமானம் முதலியவை கற்பிப்பவனாய்ப் போய்விட்டதே ஆகும்.)

தமிழ்நாடும், தமிழ் மொழியும், தமிழன் தன்மானமும் விடுதலை பெற்று வளர்ச்சி அடைய வேண்டுமானால் தமிழன் காரியத்தில் தமிழன் அல்லாதவன் அவன் எப்படிப்பட்டவன் ஆனாலும் தலையிடுவது முதலில் ஒழிந்தாக வேண்டும். இதைவேறு எதை ஒழித்தாவது ஒழிக்க வேண்டும். அறிஞர்களே நமக்கு பாட்டுக் கேட்கக்கூடத் தெரியாது என்றும், நம் மொழியானது பாட்டு இசைக்கக்கூட பயன்படாது என்று சொன்னால் இந்த இழிமொழி நம் உயிரைப் போயல்லவா கவ்வுகிறதாய் இருக்கிறது என்று மிக்க வேதனையோடு கூறுகிறேன். தமிழ் துரோகத்தால் வாழ வேண்டியவனும், வள்ளுவர் சொன்னதுபோல் “குலத்திலேயே அய்யப்பட’’ வேண்டியவனுமான தமிழ் மகன்களுக்கு இது எப்படி இருந்தாலும், அவன்களது வாழ்வும் நம் எதிரிகளின் புகழுமே அவன்களுக்கு அணியாகவும், அலங்காரமாகவும், முக்கிய லட்சியமாகவும் இருக்கும். ஏன், நம் எதிரிகளுக்கு இருக்கும் செல்வாக்கால் நம்மில் துரோகிகள் பெருகிவிட்டார்கள். இன்னும் பெருகுவார்கள் என்பதும் உண்மைதான். ஏனெனில் இம்மானங் கெட்ட தமிழ் மக்கள் பலர் இப்படிப்பட்ட இனத் துரோகிகளை அறியாமையாலும், சுயநலத்துக்கு ஆகவும் ஆதரிக்கிறார்கள் என்பதை நாம் பிரத்தியட்சத்தில் காண்கிறோம். ஆனால் நாம் இப்படிப்பட்டவர் களையும்தான் முதலில் நன்றாய் வெறுக்க வேண்டும். அவர்களைத் தமிழர் சமுதாயத்திலிருந்து ஒதுக்கித்தள்ள வேண்டும்.

எப்படியோ ஓர் அளவில் நம் எதிரிகளின் எதிர்ப்பையும், நம் இனத் துரோகிகளின் சதிச் செயலையும் தாண்டித் தமிழிசை வெற்றி வழியில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு நம் வள்ளல் ராஜா சர். அண்ணாமலையாரும், நம் அறிஞர் சர்.சண்முகனாரும் ஓர் அளவுக்குப் பெரும் காரணஸ்தராவார்கள். அவர்களுக்குத் தமிழ் மக்கள் நன்றி என்றும் உரித்தாகுக. ஆனால் இனி தமிழிசைக் கிளர்ச்சி அடுத்தாற்போல் செய்ய வேண்டியது என்ன? என்பது யோசிக்கத் தக்கது.

தந்தை பெரியார் அவர்களின் இந்த கருத்து திராவிடர் கழக மேடைகளில் தொடர்ந்து எதிரொளித்து ஆங்காங்கே இசை விழாக்களில் ரசிகர்களிடையே புதிய கிளர்ச்சிகள் தோன்றின.

பின்னர், தமிழிசை இயக்கம் வந்தாலும் அதன் போக்கு எவ்வாறு அமையவேண்டும் என்று தந்தை பெரியார் விளக்கினார்.

இனி என்ன செய்ய வேண்டும்?

தமிழ் இசையை நாம் ஏன் வேண்டுகிறோம். எதற்காக நமக்குத் தமிழில் இசை வேண்டும் என்கிறோம்? தமிழ் மொழியை ஏன் வேண்டுகிறோம்? ‘கந்தத்தைக்’ கந்தபுராணம் என்றும், கிருஷ்ணனை கிருட்டினன் என்றும், ‘ஹோம் நமக’ என்பதை, ‘ஓம் நமோ’ என்றும், ‘நரசிம் ஹ மூர்த்தி’ என்பதை ‘சிங்கமுகக் கடவுள்’ என்றும் ‘தசகண்ட இராவணன்’ என்பதை ‘பத்துத் தலை இருட்டுத் தன்மையன்’ என்றும் மொழி பெயர்த்துக்கொண்டு

வணங்கி, நம்பி திருப்தி அடையவா? என்று கேட்கிறேன்.

- ‘குடிஅரசு’, சொற்பொழிவு - 26.02.1944

 -  உண்மை இதழ், 1- 15.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக