புதன், 27 பிப்ரவரி, 2019

கடவுள் தர்பார்



31.01.1948 - குடிஅரசிலிருந்து...

கடவுள்: (தனது மனைவிகள், பரிவாரங்கள் சகிதம் பரமண்டலத்தில் உள்ள தர்பார் மண்ட பத்தில் வந்து சிம்மாசனத்தில் உட்கார்ந்ததும் கனைத்துக் கொண்டு) வேண்டும்! இந்த நாதிக ஆணவம் பிடித்த அயோக்கியப் பய்யன் களுக்கு இதுதானா? இன்னும் என்ன செய்யப் போகிறேன் பார்! அதற்குள் ஆகி விட்டதா உங்களுக்கு, உஹூம், உஹூம் என்று ஆத்திர மூச்சு விடுகிறார்.

அம்மன்: (கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருக்கும் மனைவியாகிய பாலகுஜலாம் பாள்) (இளமுலையம்மன்) நாதா! என்ன தாங்களே எதையோ பேசிக்கொண்டு ஆத்திரப்படுகிறீர்களே! எனக்கு ஒன்றும் புரியவில்லையே! தங்களுக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம் வரவேண்டும்? தாங்கள் தான் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும் உள்ள சர்வக்ஞன் ஆயிற்றே! இப்படி ஆத்திரத்துடன் துடிக்கலாமா?

கடவுள்: அதெல்லாம் பாட்டி கதையாகி விட்டது. நீ சொல்லும் நம்முடைய இந்தச் சக்தியை இந்தக் காலத்துப் பய்யன்கள் எவனும் நம்புவதில்லை, ஒப்புக்கொள்ளுவ தில்லை. அதற்கேற்றப் படி நடந்து கொள் வதுதான். அந்தப்பயல்களுக்குப் புத்திவரட் டும் என்று சில காரியம் செய்தேன். அவர்கள் இப்போது ஓடிவருகிறார்கள் நாயோட்டமாய் எனது ஞானதிருஷ்டியால் அவர்கள் வருகிறது தெரிந்தது. அதோ வருகிறார்கள்.  ஆதலால் எனக்கு ஆத்திரம் வந்தது.

அம்மன்: தாங்கள் மகா கருணாநிதியாயிற்றே! மக்கள் மடையர்கள் தானே! அவர் களுக்குத் தங்கள் சக்தியை அறிந்துகொள்ள யோக்கியதை உண்டா? சுவாமி! அவர்கள் மீது உங்களுக்குக் கோபம் வேண்டாம்! கருணை பாலியுங்கள்!

கடவுள்: சீச் சீசீ! பொட்டச்சியே! வாயை மூடு! இந்த விஷயத்தில் நீ ஒன்றுக்கும் குறுக்கே வரக்கூடாது. உனக்கு ஒன்றுமே தெரியாது. உன் அளவில் உன் வேலையைப் பார். இது பூலோகம் அல்ல, பெண்கள் சுதந்திரம் கொண்டாடுவதற்கு. இது தெய்வலோகம் என்பது உன் மனதில் இருக்கட்டும்.

அம்மன்: சுவாமி! மன்னிக்க வேண்டும். தெரியாமல் பேசிவிட்டேன். தப்பு, தப்பு. போதும் என்கிறவரையில் தோப்புக்கரணம் போட்டு விடுகிறேன், (என்று சொல்லி உட்கார்ந்து விடுகிறாள்)

மகா ஜனங்கள்: (கூட்டமாக வந்து) சுவாமி பகவானே! கேள்வி கேட்பாடு இல்லையா? சோறு இல்லை! துணி இல்லை! பெண்டு பிள்ளை, வீடுவாசல் சொத்துக்கும் பாதுகாப்பு என்பதே இல்லை! அடியும், உதையும், குத்தும், வெட்டும் கொண்ட அதிகாரத்துக்கு மாத்திரம் கணக்கில்லை!!! எங்களால் சகிக்க முடியவில்லையே. பூலோகத்தில் நாங்கள் படும்பாடு கொஞ்சம் கூடத் தங்களுக்குத் தெரியவில்லையா? நாங்கள் இந்தப் பாடு படும்போது நீங்கள் பெண்டு, பிள்ளைகள், பரிவாரங்கள் சகிதம் சுகமாக இருந்து கொண்டு தர்பார் நடத்துகிறீர்களே! இது தானா ஆபத்பாந்தவன், அனாதைரட்சகன், சர்வலோக தரண்யன் ஆன தங்களுக்குத் தகுதி. அய்யோ! அய்யோ! எங்கள் நிலைக்குப் பரிகாரம் இல்லையா?

கடவுள்: சீச்சீ! பகுத்தறிவற்ற நாய்களே! வாயை மூடுங்கள். உங்கள் யோக்கியதைக்கு இங்கு வந்து பேசத் துணிந்து விட்டீர்களே! நாதிகப் பயல்களே! ஆணவம் பிடித்த அகங் காரிகளே! உங்கள் வினைப்பயனை நீங்களே அனுபவிக்கிறீர்கள், உங்கள் நினைப்பின் பயனை நீங்கள் அனுபவிக்கிறீர்கள் பாருங்கள்! பாருங்கள்! இவ்வளவு தானா? இன்னமும் பாருங்கள் என்ன நடக்கிறதென்று? என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்களே! அயோக்கிய சிகாமணிகளே!

மகாஜனங்கள்: சுவாமி! தாங்கள் இப்படிப் கோபிக்கலாமா? நாங்கள் ஒரு அபராதமும் செய்யவில்லையே. ஒரு கெட்ட நினைப்பும் நினைக்கவில்லையே! தங்களுக்கு அதிருப்தி ஏற்படும்படி ஒரு காரியமும் செய்யவில்லையே!

கடவுள்: சீச்சீ! ஆணவம் பிடித்த அறிவிலிகளே! வாயை மூடுங்கள். என் ஆத்திரத்தைக் கிளப்பாதீர்கள்.

மகாஜனங்கள்: சுவாமி கோபிக்கலாகாது. நாங்கள் மட ஜென்மங்கள். தாங்களால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். தங்கள் பிள்ளைகள் நாங்கள், தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும் மன்னித்தருள வேண்டும். தாங்கள் கோபிப் பதின் காரணமும், ஆத்திரப்படுவதன் காரண மும் எங்களுக்குப் புரியவில்லை. சத்தியமாய் தங்கள் மீது ஆணையாய், அம்மன் மீது ஆணையாய்ச் சொல்லுகிறோம். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கடாட்சித்தருள வேண்டும்.

கடவுள் : கடாட்சமா கடாட்சம், இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

மகாஜனங்கள்: பூலோகத்தில் இருக்கிறோம்.

கடவுள்: பூலோகத்தில் யாருடைய ராஜ்யத்தில் இருக்கிறீர்கள்?

மகாஜனங்கள்: சுவாமி நாங்கள் சுயராஜ்யத்தில் இருக்கிறோம்.

கடவுள்: (அம்மனைப் பார்த்து) கேட்டா யாடி! இந்தப் பசங்கள் சொல்லுவதை, எவ்வளவு அகங்காரமாக, ஆணவமாகப் பேசுகிறார்கள், பார்த்தாயா?

அம்மன்: அவர்கள் என்ன பேசுகிறார்கள், தாங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு கிறார்கள். அதில் ஆணவமோ, அகங்காரமோ ஒன்றும் எனக்குத் தெரியவில்லையே!

கடவுள்: தெரியவில்லையா? நீயும் அவர்களோடு சேர்ந்தவளாகி விட்டாய்.

அம்மன்: நாதா! தாங்கள் இப்படி ஆத்திரப்பட்டுக் கோபித்துக் கொள்ளாதீர்கள். தாங்கள் பொறுமை ரூபி, கருணை ரூபி, அப்படி இருக்க இப்படிச் சொல்லலாமா?

தொடரும்...

-  விடுதலை நாளேடு, 22.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக