வியாழன், 2 ஜூலை, 2015

தமிழும்,தமிழர் முன்னேற்றமும்




தந்தை பெரியார்
தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழி வரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால், தமிழையும், மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.
மத சம்பந்தமற்ற ஒருவனுக்கு, தமிழில் இலக்கியம் காண்பது மிக மிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக் கணம் கூட மதத்தோடு பொருத்தப் பட்டே இருக்கிறது.
உதாரணமாக மக்கள், தேவர், நரகர் உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத் திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சி தானே இது?
இனிப் பள்ளிக் கூடப் பிள்ளை களுக்குத் தமிழ் இலக்கியத் துக்குப் புத்தகங்கள் எவை? கம்பராமாயணம், பாரதம், பாகவதம், பெரிய புராணம், தேவாரம், திருவாய்மொழி போன்ற மததத்துவங்களையும், ஆரிய மத தத்துவம் என்னும் ஒரு தனிப்பட்ட வகுப் பின் உயர்வைப் போதித்து மக்களை மானமற்றவர்களாக்கும் ஆபாசக் களஞ் சியங்களும் அல்லாமல் வேறு இலக் கியங்கள் காணப்படுகின்றனவா? பண்டி தர்களுக்கு உலக ஞானத்தைவிடப் புராண ஞானம் தானே அதிகமாயி ருக்கின்றது?
மேல்நாட்டுப் புலவர்கள் மேல்நாட்டு இலக்கியங்கள் ஆகியவைகளுக்கு இருக்கும் பெருமையும், அறிவும் நம் தமிழ்ப் புலவர்களுக்கு இருக்கின்றது என்று சொல்ல முடியுமா? ஷேக்ஸ்பியர் வேண்டுமா? இங்கிலாந்து வேண்டுமா? என்றால், இங்கிலீஷ் மகன் ஷேக்ஸ் பியர் வேண்டும் என்பானாம். தமிழன் எதைக் கேட்பது?
இந்தியா வேண்டுமா? கம்பராமா யணம் வேண்டுமா? என்றால், உண்மைத் தமிழ்மகன் என்ன சொல்லுவான்? இரண்டு சனியனும் வேண்டாம் என்று தானே சொல்லுவான்.
மேல் நாட்டில் தான் அறிவாளிகள் உண்டு என்றும், கீழ்நாட்டில் அறி வாளிகள் இல்லை என்றும் நான் சொல்ல வரவில்லை.
மேல்நாட்டு அறிவாளிகள் தாங்கள் செய்த இலக்கியங்களை மத சம்பந்த மின்றி பெரிதும் செய்து வைத்தார்கள். அதனால்  நுற்றுக்கணக்காக மேல்நாட்டு இலக்கியங்களும் பண்டிதர்களும் போற்றப்படுகிறார்கள்.
கீழ்நாட்டில் குறிப்பாக இந்தியாவில் எத்தனை இலக்கியம் உலகத்தால் மதிக் கப்படுகின்றன? எத்தனை பண்டிதர்கள் உலகத்தால் போற்றப்படுகிறார்கள்? தாகூர் அவர்கள் கவிக்கு ஆகப் போற்றப்படலாம். ஆகவே மதம், கடவுள், சம்பந்தமற்ற இலக்கியம், யாவருக் கும் பொதுவான இலக்கியம், ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும்மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக் கியம் ஆகியவை மூலம்தான், ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத் திரமல்லாமல், அதைக் கையாளும் மக் களும் ஞானமுடையவர்களா வார்கள்.
கம்பராமாயணம் அரிய இலக்கியமாய் இருக் கிறதாகச் சொல்லுகிறார்களே இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்வளவு தான் பட்டினி கிடந்தாலும் மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அதுபோல் தானே கம்பராமாயண இலக்கியம் இருக்கிறது. அதில் தமிழ் மக்களை எவ்வளவு இழிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது! தமிழரின் சரித்திர கால எதிரிகளை எவ்வளவு மேன்மையாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது. சுயமரி யாதையை விரும்புகிறவன் எப்படி கம்ப ராமாயண இலக்கியத்தைப் படிப்பான். இன்று கம்பராமாயணத்தால் தமிழ் மக் களுக்கு இலக்கியம் பரவிற்றா என நடு நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.
தமிழ் மொழியின் பெருமை பரம சிவனுடைய படைப்பினால் வந்த தென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய மொழி என்றோ, சொல்லிவிடுவதாலும், தொண்டர் நாதனைத் தூதினிடை விடுத்த தாலும், முதலை உண்ட பாலனை அழைத்த தாலும் எலும்பைப் பெண்ணாக்கின தாலும், தமிழ் மேன்மையுற்றதாகி விடாது. இந்த ஆபாசக் கதைகள் தமிழ் வளர்ச்சியையும், மேன்மையையும் குறைக்கத் தான் பயன்படும்.
பரமசிவனுக்கு உகந்த மொழி தமிழ் என்றால் - வைண வனும், முஸ்லிமும் தமிழைப் படிப்பதே பாவமல்லவா? அன்றியும் அந்தப்படியிருந்தால் பார்ப்பான் தமிழ் மொழியைச் சூத்திர பாஷை என்றும், அதைக் காதில் கேட்பதே பாவம் என்றும் சொல்லுவானா? என்று யோசித்துப் பாருங்கள்.
இன்று தமிழ் நாட்டில் வந்து, தமிழ் கற்று, வயிறு வளர்ப்பவர்களாகிய பார்ப்பனர்கள் தானே, இந்தி பாஷை இந்தியப் பாஷை ஆக வேண்டுமென்று முயற்சித்து வெற்றி பெற்று வருகிறார்கள்? கோர்ட் பாஷை, அரசாங்க பாஷை ஆகியவை எல்லாம் இந்திமயமாக வேண்டும் என்கிறார்களே. காரணம் கேட்டால் இந்தி பாஷையில் துளசிதாஸ் ராமாயணம் நன்றாய் விளங்கு மென்கிறார்.
தமிழ்ப் பண்டிதர்கள் பெரும்பா லோர்க்கு இதைப் பற்றி சிறிதும் கவலை இருந்தது என்று சொல்ல முடியவில்லை; தமிழ்ப்பண்டிதர்கள் இந்த அரசியல் வாதிகளின் கூச்சலுக்கும் பார்ப்பனர்கள் கோபத்துக்கும் பயந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.
பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ் கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்? பொதுப்பணம் சமஸ்கிருதத்தின் பேரால் எவ்வளவு செலவாகின்றது? பொது மக்களின் வரிப்பணம் சமஸ்கிருதத்துக்கு ஆக ஏன் ஒரு பைசாவாவது செலவாக வேண்டும். தமிழ்மக்கள் யாரும் இதைப் பற்றிக் கவனிப்ப தில்லை. தமிழ், தமிழ் என்று எங்கோ ஒரு மூலையில் சில பண்டிதர்கள்தான் சத்தம் போடுகிறார்கள்.
ஆனால் சமஸ்கிருதத்துக்கும் இந்திக்கும் கேபினெட் மெம்பர்கள், அய்க்கோர்ட் ஜட்ஜ்கள் முதல் எல்லாப் பார்ப்பன அதிகாரி களும் பாடுபடுகின்றார்களே! நம்ம பெரிய அதிகாரிகளுக்கோ, பெரிய செல் வாக்கும் செல்வமும் உள்ளவர்களுக்கோ தமிழைப் பற்றி கவலையும் இல்லை. தமிழைப் பற்றி அதிகம் பேருக்கு ஒன்றும் தெரியவும் தெரியாது.
தமிழின் பரிதாப நிலைக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? தமிழ்மொழியில், ஒரு சிறு மாற்றமோ, முற்போக்கோ செய்யக் கூட ஒரு தமிழ் அபிமானியும் முயற்சிப்ப தில்லை. யாராவது முயற்சித்தாலும் ஆதர வளிப்பது மில்லை. தற்கால நிலைக்குத் தமிழ் போதியதாகவும் சவுகரியமுள்ள தாகவும் ஆக்க யார் முயற்சித்தார்கள்?
மேல் நாட்டு மொழிகள் எவ்வளவு மாற்றமடைந்து வருகின்றன.
எழுத்துக் களில் எவ்வளவு மாறுதல் செய்து வரு கிறார்கள்! ரஷ்யாவில் சில பழைய எழுத் துக்களை எடுத்துவிட்டார்கள். புதிய எழுத் துக்கள் சேர்த்தார்கள். அமெரிக்காவில் எழுத்துக் கூட்டுவதாகிய ஸ்பெல்லிங் (Spelling) முறையை மாற்றி விட்டார்கள். துருக்கியில் துருக்கி மொழிக்கு உண்டான எழுத்துக்களையே அடியோடு எடுத்து விட்டு ஆங்கில எழுத்துக்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். தமிழர்கள் தமிழுக்காக நமக்கு விவரம் தெரிந்த காலமாய் என்ன காரியம் செய்தார்கள்? காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றி கரமாய் வாழ முடியாது; மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்க வேண் டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடைய வனாவான்.
தமிழ் எழுத்துக்களில் ஒரு சில மாற்றம் செய்தேன். அநேக பண்டிதர்கள் எனக்கு நன்றி செலுத்தி என்னைப் பாராட்டினார்களேயல்லாமல், ஒருவ ராவது, அம்முயற்சிக்கு ஆதரவளித்த வர்கள் அல்ல.
இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய நான் தகுதியற்றவன் என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன்.
ஆனால் தகுதி உள்ள வேறு எவரும் வெளிவராவிட்டால் என்செய்வது?
ஆனாலும், நான் அம்முறை யிலேயே பத்திரிகைகள் நடத்துகிறேன். அம்முறையிலேயே பல புத்தகங்களும் வெளியிட்டிருக்கிறேன். இன்னும் எவ்வ ளவோ செய்ய வேண்டி இருக்கிறது, இவைகளையெல்லாம் பார்ப்பனர்களே செய்வதாகப் பாசாங்கு செய்து பார்ப் பனர்கள் தமிழின் மீது ஆதிக்கம் செலுத் தப் பார்த்தார்கள். அநேக பண்டிதர்கள் அவர்களுக்கு அதரவு அளித்தார்கள்.
எப்படி ஆனாலும் தமிழ் மொழி உணர்ச்சி தமிழ் மக்களுக்கு இன்றிய மையாதது. அதன் மூலம் தமிழ்மக்கள் ஒன்று சேர வசதி உண்டு.
தீபாவளி போன்ற மூடநம்பிக்கையும், சுயமரியாதை அற்றதும், ஆபாசமானது மான பண்டிகைகள் கொண்டாடு வதை விட, இப்படித் தமிழ்த் திருநாள் என்று தமிழ் மக்கள் கூட்டுறவுக்கும் மகிழ்ச்சிக் கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூல மாகத் திருநாள்களைப் பரப்ப வேண்டும்.
நமது நண்பர்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதையும் இருந்தாலும், ஒரு திருநாள் வேண்டி இருக்கிறதால் - தீபாவளியும், மாரிப்பண்டிகையையும் கொண்டாட ஆசைப்படுகிறார்கள்.
இந்தப் பண்டிகையால் தமிழர் முன்னேற முடியுமா? சுயமரியாதை உணர்வுகள் வந்திருந்தால் தான் முன்னேற முடியும்.
தந்தை பெரியார் அவர்கள் விடுதலை ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை,  (விடுதலை 28.6.1964)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக