திங்கள், 20 ஜூலை, 2015

முதலாளிகள் ஆதிக்கம் உஷார்!

இந்திய நாட்டின் தொழிலாள வகுப்பார்கள் தங்கள் அடிமைச் சங்கிலிகளை அறவே தகர்த்தெறிய, பரிபூரணமாக இன்னும் முற்படவில்லை என்றாலும், ஓர் அளவிற்கு அவர்கள் சமீப காலத்தில் விழிப்படைந்திருக்கிறார்கள் என்பது மாத்திரம் மறுக்க முடியாத உண்மையாகும். தொழிலாளர்களுடைய விழிப்பிற்குக் காரணம், அவர் களுடைய சகிக்க முடியாத கொடிய துன்பங்களும் கஷ்டங் களுமேயாகும்.
தொழிலாளர்களுக்கு, முதலாளிகளாலோ, அரசாங்கத் தாலோ இன்றைய தினம் கிருபா கடாட்சம் காட்டப் படுகின்றதென்று சொன்னால், அது அந்தத் தொழிலாளி களின் உழைப்பின் பயனாகவே, நியாயமாக கிடைக்க வேண்டிய வரும்படியிலிருந்து கொஞ்சம் கொடுத்து, தொழிலாளர்கள் வயிறு ஒட்டி,
வாடி வதங்கிச் சாகாம லிருக்கச் செய்து, மீண்டும் சாவதமாக தங்களுக்கே ஊழியம் செய்து கொண்டிருப்பதற்கே தவிர, மற்றபடி நியாய புத்தியையோ, கருணைப் பிரவாகத்தையோ பச்சாதாப இரக்க புத்தியையோ, கொண்டதல்லவென்று துணிந்து கூறுவோம்.
இன்றைய தினம் முதலாளியானவன், ஒரு தொழி லாளியைப் பற்றி எப்பேர்க்கொத்த மனோநிலையைக் கொண்டிருக்கிறான் என்று முடிவு கட்டுவதற்கு, அவனுடைய நடைமுறை வாழ்க்கையைப் பரிசீலனை செய்யுங்கள். ஒரு முதலாளிக்கு, அவனுடைய நாய்க்குட்டியோ, மைனாக் கிளியோ, எருமை மாடோ, செத்துப் போனால்,
அதை நஷ்டமாகக் கருதி துக்கப்படுகிறான். ஆனால், ஒரு தொழிலாளி செத்துப் போனால், அந்தப்படி கூட துக்கப்படு வதைக் காணோம். தொழிலாளர்களுடைய இந்தப் பரிதாப நிலைமைக்கு யார் என்ன சமாதானம் கூறக் கூடும்?
தொழிலாளர்கள் தங்களுடைய நியாயமான உரிமையைப் பாதுகாத்துக்கொள்ள, இன்னும் தக்க சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், ஆங்காங்கே தொழிலாள சமுக விழிப்பின் காரணமாக, சில தொழிற் சங்க தாபனங்களும், டிரேட் யூனியன் சங்கங்களும் தாபிக்கப் பட்டு வந்திருக் கின்றன, வருகின்றன.
இவற்றில் சில முதலாளிமார்களின் சூழ்ச்சிக்கு அடங்கியதும், தொழிலாளர்களை வஞ்சித்து துரோகம் செய்வதுமாகும். இதுபோன்ற தாபனங்கள் நாட்டில் புதிய அரசியல் சீர்திருத்தங்கள் வழங்க உத்தேசிக்கப்படும் காலம் முதல், ஒரு சில சுயநலப்பித்தர்களால் உண்டாக்கப் படுவது சர்வ சாதாரணமாகும்.
இதைத்தக்கவாறு, தொழிலாளத் தோழர்கள் கவனித்து - பிறர் சூழ்ச்சிக்கு இடம் கொடுத்து விடக்கூடாது. (தொழிலாளர்களாகிய) தங்களின் ஆதிக்கத்தையே பரப்பப் பெரிதும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டுகிறோம்.
முதலாளி வகுப்பின் ஆதிக்கம் ஒழிந்தாலொழிய, தொழிலாளி விடுதலை பெற மார்க்கமில்லை என்பதை இன்றைய தினம் யாரும் ஆட்சேபணையின்றி ஒப்புக் கொள்வர். அதோடு ஜாதி அபிமானத்தாலோ மத அபி மானத்தாலோ தேசாபிமானத் தாலோ, கடவுளபிமானத் தாலோ, தொழிலாளர்களுடைய முற்போக்கு கிஞ்சிற்றும் ஏற்படுவதற்கு வழியில்லை என்பதும், சமீப காலத்தில் நாம் அனுபவப் பூர்வமாகக் கூட கண்டறிந்த உண்மையாகும்.
உதாரணமாக இந்தத் தத்துவத்தை இரண்டு மாதங்களுக்கு முன்பு கூடிய அகில இந்திய டிரேட் யூனியன் காங்கிரசானது ஓர் அளவிற்கு நன்கு உணர்ந்து கொண்டது குறிப் பிடத்தக்கது. தொழிலாளர்களுடைய சரித்திரத்திலேயே மிகவும் சிலாகிக்கத்தக்க ஒரு விசேஷ சம்பவமும் இந்த மகாநாட்டில் நிறைவேறியது.
அதாவது மகாத்மா காந்தி உள்ளிட்ட மாபெரும் தேசியத் தலைவர்களெல்லாம் நாட்டின் முற்போக்கிற்கு தீங்கு விளைக்கும் தேசத் துரோகிகள் என்று பகிரங்கமாகவும், வன்மையாகவும், ஆத்திரத் தோடும் எடுத்துக்காட்டப்பட்டுக் கண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தொழிலாளர்களுடைய விழிப்பு நிலை. ஒருவாறு இவ்விதமாக இருப்பதால், தொழிலாள தோழர்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் குறிப்பிட்டு விட்டு இதனை முடித்து விடுகின்றோம். அதாவது தொழிலாளியின் முன்னேற்றத் திற்குத் தொழிலாளி களையே நம்புங்களென்பதேயாகும்.
- புரட்சி - தலையங்கம் - 25.03.1934

எல்லாம் பொதுவுடைமையா?
இனாம்தார்கள் குடி விஷயமாய் விவாதம் நமது சட்டசபையில் நடக்கும்போது ஒரு சட்ட நிபுணர் கூறினார். இனாம்தார்களுக்கு சொந்தமானதைப் பறிமுதல் செய்யும் உரிமை இச்சட்டத்துக்கு இருக்கிறது. இது பொதுவுடைமைத் தத்துவம் என்றார்.
மற்றோர் பிரபலஸ்தர் கூறினார். இச்சட்டம் செய்தல் ரஷ்ய பொதுவுடைமையை வரவேற்பது போலாகுமென்றார். இதற்குப் பதிலளித்த கனம் மந்திரியாரோ! இவ்விதம் சட்டம் செய்யாதிருத்தலானது ரஷ்யப் பொது உடைமையை இங்கு கூப்பிட இடமுண்டாகு மென்றார். இவ்விதம் தொட்டதெல்லாம் பொதுவுடைமையாகத் தோன்றுகிறது.
இதைப்போன்றே அய்க்கிய மாகாணத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாயிகள் கஷ்ட நிவாரண மசோதாவை, அம்மாகாண பேங்கர்கள் சங்கத்தார் தெரிந்து கவர்னருக்கு அனுப்பியுள்ள ஒரு மகஜரில் - பொதுவு டைமைக் கொள்கையை இம்மசோதா மூலம் ஒப்புக் கொள்வது போலாகிறது - என்று காட்டியிருக்கிறது. இவ்விதம் பிரபுக்கள் சர்க்கார் செய்யும் ஒவ்வொன்றையும் - பொதுவுடைமை என்று சொல்கிறார்களே! இதற்காக இவர்கள்மீது சர்க்கார் ஏதும் நடவடிக்கை எடுக்காதா?
- புரட்சி - செய்தித்துணுக்கு - 04.02.1934
விடுதலை 18.4.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக