ஞாயிறு, 19 ஜூலை, 2015

பெண்களுக்குத் தற்காப்பு



பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு ஆயுதம் கொடுக்கப்படுமா என்று மத்திய சட்டசபையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், மாகாண சர்க்கார் அவசியமானதைச் செய்யும் என்று உள்நாட்டு மந்திரியான தோழர் பட்டேல் கூறியிருக்கிறார்.
மாகாண சர்க்கார் இத்துறையில் எதுவும் செய்யும் என்று நம்பிக்கை நமக்கில்லை. ஏனெனில், பெண்களை அடிமைப் பிறவிகளாக நினைக்கும் வைதிக மனப்பான்மை படைத்தவர்களே பெரிதும் மாகாண மந்திரிகளாயிருக்கின்றனர் என்றாலும், இவர்கள், எங்களுக்கு எந்த விடுதலையும் வேண்டாம்! அடிமைத்தனமே ஆனந்தம் என்று சொல்லக்கூடிய பத்தாம் பசலிகளாகவே இருக்கின்றனர்.

இந்தியப் பெண்கள் கல்வி, சொத்து, திருமண வாழ்க்கைகள் ஆகிய எந்தத் துறையிலும் சுயேச்சையில்லாதவர்களா-யிருக்கின்றனர். நவீன நாகரிகம் என்றால், பிரிட்டிஷ் பெண்களைப் போலவும், அமெரிக்க சிங்காரிகளைப் போலவும் உடை உடுத்துவதும், அலங்கரித்துக் கொள்வதும்தான் எனக் கருதியிருக்கிறார்களே தவிர, இரஷ்யப் பெண்களைப்போலவும், துருக்கிப் பெண்களைப்போலவும், போலீஸ், இராணுவம், விமானம் ஓட்டுதல் போன்ற காரியங்களையும் ஆண்களைப் போலவே செய்ய வேண்டும் என்ற நினைப்பே நமது படித்த பெண்களுக்குக்கூட இருப்பதில்லை.
தற்காலப் படிப்பு ஆண்களை எப்படித் தொடை நடுங்கிகளாகவும், வெறும் புத்தகப் பூச்சிகளாகவும் ஆக்கிவிட்டதோ, அதைப்போலவே நம் பெண் மக்களையும் வெறும் அலங்காரப் பொம்மைகளாகவும், புல் தடுக்கிகளாகவும் ஆக்கிவிட்டது.
உயர் படிப்புப் படித்துப் பட்டமும் பெற்ற பெண்கள், ஆண்டாள் அன்பு பற்றியும், காரைக்காலம்மையாரின் சிவ பக்தி பற்றியும் பேசிப் பொழுது போக்குகிறார்களென்றால், நம் பெண்களுக்கு நவீன மேல்நாட்டுக் கல்விகூட ஒருவித முன்னேற்றத்தையும் அளிக்கவில்லையென்பது கண்கூடு.
நம்முடைய ஆட்சிமுறையில் அடிப்படையான, புரட்சிகரமான மாறுதல் ஏற்பட்டாலொழிய, இந்தியப் பெண்களைச் சுயேச்சையுள்ள ஜீவன்களாக ஆக்குவது முடியாத காரியமேயாகும்.
பெண்களுக்கு உத்தியோகம் கொடுப்பதைப்பற்றிப் பேசியுள்ள ஒரிசா முதன் மந்திரியார், போலீஸ் இலாகாவைத் தவிர, மற்ற சர்க்கார் இலாக்காக்களில் பெண்களுக்கு உத்தியோகம் அளிப்பதென்று ஒரிசா சர்க்கார் தீர்மானித்திருப்பதாகக் கூறியுள்ளார்.
இம்மாகாண சர்க்காரைக் காட்டிலும் முற்போக்கான முடிவைச் செய்துள்ள ஒரிசா சர்க்காரை நாம் பாராட்ட வேண்டியதுதான். ஏனெனில், பெண்கள் ஆசிரியர் வேலைக்கும், டாக்டர் வேலைக்கும், நர்சு வேலைக்கும், குமாஸ்தா வேலைக்கும் தவிர வேறு பதவிகளுக்குத் தகுதியற்றவர்கள் என்றே சென்னை சர்க்கார் கூறியிருப்பதாகத் தெரிகிறது.
இதைப்பற்றிப் பெண் மந்திரியான தோழியர் ருக்குமணி லட்சுமிபதி அம்மாளுக்குச் சிறிதும் கவலையிருப்பதாகவே தெரியவில்லை. அவர்களிடம் முற்போக்கான திட்டங்களையோ, பெண் இனத்தின் சுதந்திரத்திற்கான முயற்சி-களையோ எதிர்பார்ப்பது, 20 வயதுள்ள இளங்காளை, 75 வயது கிழவியை ஓட்டப்-பந்தயத்திற்குக் கூப்பிடுவது போலவேயாகும்.
ஆனால், ஒரிசா சர்க்கார் போலீஸ் இலாகாவை மட்டும் நீக்கி வைத்திருப்பதன் காரணம் நமக்கு விளங்கவில்லை. போலீ-சாருக்குப் பொதுமக்கள் அஞ்சுகிறார்-களென்றால், அவர்களுக்கிருக்கும் தனிப்பட்ட வலுவினால் அல்ல; அவர்கள் கையில் குண்டாந்தடி அல்லது துப்பாக்கிக்கும், அவர்களுக்குள்ள அதிகாரத்துக்குமே பொது-மக்கள் அஞ்சுகிறார்கள். எனவே, பெண்கள் கையிலும் போலீஸ் துப்பாக்கியைக் கொடுத்தால், தபாலாபீசைக் கொளுத்திய மாஜி ஆகஸ்ட் வீரன் கூட அவரைக் கண்டு ஓட்டம் பிடிப்பான் என்பது நிச்சயம்.
இரஷ்யாவில் பெண் போலீஸ் மிகத் திறமையாக வேலை செய்கிறது. இரஷ்யப் பெண்கள் விமானத்திலிருந்து பாரசூட் மூலம் குதிப்பதிலும் வல்லுநர் எனப் பெயர் பெற்றிருக்கின்றனர்.
இந்நாட்டிலும் போலீஸ் வேலை செய்யும் துணிவும், திறமையும், ஆசையும் உள்ள பெண்கள் ஆயிரக்கணக்கிலிருக்கின்றனர். பெண்கள் படிப்பதே பெரிய அதிசயமாகவும், சைக்கிள் விடுவதை வேடிக்கையாகவும் கருதப்-பட்டதுபோலவே, போலீஸ் உத்தியோகமும் சில ஆண்டுகள் வரையில் அதிசயமாகத் தோன்றலாம். பிறகு, நாளடைவில் அதுவும் இயற்கைக் காட்சியாகவே போய்விடும்.
எனவே, பெண்கள் முன்னேற்றத் துறையில் இரஷ்யா, துருக்கி போன்ற பெண் இனப்புரட்சி நாடுகளை இந்தியா பின்பற்றினாலொழிய, நம் பெண்கள் என்ன கல்வி கற்றாலும், எவ்வளவு சொத்துரிமை பெற்றாலும், வெறும், நகை பீரோவாகவும், உடை ஸ்டாண்டாகவும்தான் இருப்பார்கள். பெண் உலகில் தலைகீழான புரட்சி ஏற்படக்கூடிய முறைகள் நமக்குத் தேவை. அதுவரையில் துரௌபதையைப் பற்றியும், சீதையைப் பற்றியும் பேசியும் எழுதியும் வருகின்ற ஆமைத் தன்மைதான் இருக்கும். பெரோவிஸ்காயா போன்ற இரஷ்ய வீரப்பெண்கள் நம் நாட்டில் தோன்றவே முடியாது. நளாயினிகள் போன்ற தன்மானமற்ற அடிமைகள்தான் தோன்ற முடியும்.
(18.11.1946 _ விடுதலை இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்)
* * *
பெண்கள் முடியைக் கத்தரித்துக் கொள்ள வேண்டும்
நம் மக்கள் ஆரிய மாயையில் சிக்கி இருந்தபோது ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இத்திருமண முறை என்பதாகும். இம்முறை மூன்று காரியங்களை அடிப்படையாக வைத்து நம்மிடையே புகுத்தப்பட்டதாகும். பெண்ணடிமை, மூடநம்பிக்கை, ஜாதி இழிவு ஆகிய மூன்று காரியங்களே அவையாகும்.
இம்மூன்றையும் ஒழிக்க  வேண்டுமென்று இந்த நாட்டில் யாருமே பாடுபட முன்வரவில்லை. தோன்றிய மகான்கள், மகாத்மாக்கள், தெய்வீக சக்தி பொருந்தியவர்கள் எல்லாம் மனிதனின் மானமற்ற தன்மை. மூடநம்பிக்கை, ஜாதி இழிவு ஆகியவற்றைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை என்பதோடு, இவற்றை நிலைநிறுத்தவே பாடுபட்டு வந்திருக்கின்றார்கள்.
சுமார் 30 ஆண்டு காலத்திற்குமுன் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கமானது மனித சமுதாய மடமையையும், ஜாதி இழிவையும், பெண்ணடிமையையும் ஒழிப்பதைக் கொள்கையாகக் கொண்டு பாடுபட்டு வருவது. ஆகையால், இவற்றை நிலைநிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பழைய திருமண முறையினை மாற்றியமைக்க வேண்டியதாயிற்று.
நமது நாட்டில் மொத்த ஜனத்தொகையில் சரி பகுதியாக இருக்கிற பெண்கள், மனித சமுதாயத்திற்குப் பயன்படாமல் ஆண்களுக்கு அடிமையாகிப் பிள்ளை பெறுவதையும், அதைக் காப்பதையுமே கடமையாகக் கொண்டிருக்-கிறார்கள். உலகில் பல இடங்களில் தற்போது பெண்ணடிமை நீங்கி வருகின்றது.
எனக்கு இப்பெண்ணடிமையை நீக்க, திருமண முறையையே நீக்கவேண்டும், சட்ட விரோதமாக்க வேண்டும் என்று கருதத் தோன்றுகின்றது. நம் நாட்டில் அடிமை முறை இருந்தது, பெண்களை விற்கும் முறை, உடன்கட்டை ஏறும் முறை, குழந்தைகளைப் பலியிடும் முறை போன்ற அனேகக் கொடுமைகள் இருந்தன. வெள்ளைக்காரன் ஆட்சியின் போது இக்கொடுமைகள் யாவும் சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட்டன.
அதன் பின்னும் வெள்ளையன் ஆட்சியின் போது பெண்களுக்குச் சொத்துரிமை கிடையாது. பால்ய விவாகம் என்கின்ற மணமுறை, கணவன் பிடிக்காமல் பிரிந்து சென்றால் ஜீவனாம்சம் என்கிற பெயரால் மிகச் சிறிய தொகை கொடுக்கப்பட்டு வந்தது. நமது இயக்கம் தோன்றிய பின்தான் இவையெல்லாம் நம் போராட்டத்தின் காரணமாகச் சிறிது சிறிதாக மாற்றியமைக்கும்படிச் செய்தோம்.
நமது நாட்டு இலக்கியங்கள், தோன்றிய பெரியவர்கள், அறிவாளிகள் என்பவர் யாவரும் பெண்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்று சொன்னார்களே ஒழிய, பெண்கள் சுதந்திரத்தோடு வாழ வேண்டுமென்று எவருமே சொல்லவில்லை.
வள்ளுவனைச் சொந்த புத்தியுள்ளவன் என்பார்கள். அவனும் ஒரு சில இடங்களில் பார்ப்பன புத்தி கொண்டவனே யாவான். அவன் பெண்களை அடிமையாகவே இருக்க வேண்டுமென்றுதான் சொல்கின்றான். நம் பெண்கள் பகுத்தறிவு பெற்றிருந்தால் இப்போதிருப்பது போல் இரண்டு மடங்கு வளர்ச்சியினை இந்நாடு அடைந்திருக்கும்.
பெண்கள் குறைந்தது 20 வயதுவரைப் படிக்கவேண்டும். கோவில்களுக்குச் செல்லக் கூடாது. உத்தியோகங்களுக்குச் செல்ல வேண்டும். அல்லது ஏதாவது தொழில் செய்ய வேண்டும். மேல்நாட்டில் பெண்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்கள். உத்தியோகத்-திற்குச் செல்பவர்களைத் தவிர மற்ற பெண்கள் வீட்டில் சும்மா இருப்பதில்லை. ஏதாவது கைத்தொழில் செய்து அதன்மூலம் தங்கள் வாழ்விற்குரிய வருவாயைத் தேடிக் கொள்கிறார்கள்.
நான் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அங்கு உள்ள பெண்கள் சிங்காரித்துக் கொள்வது கிடையாது. லுங்கி கட்டிக் கொள்கிறார்கள். மேலே சட்டை போட்டுக் கொள்கிறார்கள். மக்கள் யாவருடனும் கலந்து பழகுகிறார்கள். தன் கணவனைப் பிடிக்கவில்லை-யென்றால், வேறு பிடித்த ஆணோடு சென்று விடுவார்கள். அங்கு அது குற்றமாகக் கருதப்படுவது கிடையாது. இளம் வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்வதால் அவர்களுக்கு உலக அறிவு வளர முடியாமல் போய்விட்டது.
இதற்கு முன் இருந்தவர்கள் எல்லாம் பழைமையைப் பற்றிச் சொல்லிவிட்டுப் போனார்களே ஒழிய, கோவிலைக் கட்டி மக்களை மடையர்களாக்கிப் போனார்களே ஒழிய, மனிதனுக்கு அறிவு இருக்கிறது, அதைக் கொண்டு சிந்தித்து அதன்படி நட என்று எவனும் சொல்லவில்லை. உலக வளர்ச்சியில் நம் நாட்டு மக்களுக்கு ஒரு சிறு பங்குகூட இல்லையே!
கல்லையும், செம்பையும் உருவமாக்கி _- கடவுளாக்கி அவற்றை வணங்கும்படியாகச் செய்து, திருவிழா, உற்சவம் என்று நடத்தி மக்களை மடையர்களாக்கினரே ஒழிய, அறிவுப்படி நட என்று எவனுமே சொல்ல-வில்லை. காரணம் தெரியாத _- சமாதானம் சொல்ல முடியாத காரியங்களை மனிதன் கைவிடவேண்டும்.
நாம் வளர்ச்சியடைய வேண்டும். நம் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம் மக்கள் அறிவு வளர்ச்சி பெற முடியாமல் போனதற்குக் காரணமே கடவுள், மதம், சாஸ்திரம் ஆகியவற்றாலேயேயாகும். இவற்றையெல்லாம் மாற்றினால் நம் மக்களின் அறிவு வளர்ச்சி-யடையும். மற்ற மக்களுக்கு நம் அறிவு பயன்படும்; நம் அறிவிற்கு அவ்வளவு சக்தியுண்டு.
இறுதியாக, மணமக்கள் வாழ்வில் சிக்கனமாக வாழவேண்டும். ஆடம்பரமாக வாழக் கூடாது. பெண்கள் முடியைக் கத்தரித்துக் கொள்ளவேண்டும். லுங்கி அணியவேண்டும், சட்டையணிந்து கொள்ளவேண்டும். நகை அணியக் கூடாது. வரவிற்குள் செலவிட்டுப் பழக வேண்டும். கூடுமானவரை குழந்தை பெறுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஒன்று மிஞ்சினால் இரண்டு. அதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்.
11.4.1971 அன்று அறந்தாங்கியில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு
( `விடுதலை, 10.6.1971)
உண்மை,1.3.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக