திங்கள், 24 ஆகஸ்ட், 2015

நான் ஏன் தமிழைப் போற்றுகிறேன்?

- தந்தை பெரியார்
தோழர்களே!
தலைவர் அவர்கள் என்னை உங் களுக்கு அறிமுகப்படுத்தும் முறையில் தமிழில் மிகப் பரிச்சயமுள்ளவன் என்றும், தமிழுக்கு ஆக மிகவும் உழைக்கிறவன் என்றும், மேல்நாடு சுற்றுப்பிரயாணம் செய்தவனென்றும் கூறி, இக்கூட்டம் சர்க்கார் சம்பந்தமான பள்ளியின் மாணவர் கூட்டம் என்றும், இதற்கு ஏற்றவண்ணம் எனது உபந் நியாசம் இருக்குமென்று எதிர் பார்ப்பதாகவும் மற்றும் பல சொற்களோடு அறிமுகப்படுத்தினார்கள்.
முதலில் நான் அவரது பாராட்டு தலுக்கும், புகழ் வார்த்தைகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
தமிழ் பாஷை
நான் தமிழில் நிரம்பவும் பரிச்சயம் உள்ளவன் என்பதைக் கேட்டபோது நான் வெட்கமடைந்தேன்.  நான் பள்ளியில் படித்ததெல்லாம் மிக சொற்ப காலமே யாகும்.  திண்ணைப் பள்ளிக் கூடத்தில் 3 வருஷமும், ஸ்கூல் பள்ளிக் கூடம் என்னும் ஆங் கில முறைப் பள்ளிக் கூடத்தில் 2,3 வருஷமும்தான் படித்தவன்.  என்னை என் வீட்டார் படிக்கவைக்கக் கருதிய தெல்லாம் வீட்டில் என்னுடைய தொல்லை பொறுக்க மாட்டாமல் என்னை பள்ளியில் வைத்துக் கொண்டிருப்பதற்காகவே ஒழிய, நான் படிப்பேன் என்பதற்காக அல்ல என்பதை நான் பெற்றோர்களிடமிருந்தே உணர்ந்தேன்.  காரணம் என்னவென்றால், எனக்குப் படிப்பே வராது என்று அவர்கள் முடிவு கட்டி விட்டதாகவும், நான் மிகவும் துடுக்கான பிள்ளையாய் இருந்ததாகவும் ஆதலால், என்னை பள்ளியில் பகலெல் லாம் பிடித்துவைத்து இருந்து இரவில் வீட்டிற்கனுப்பினால் போது மென்று கருதியதாகவும் சொன்னார்கள்.  அக் காலத்தில் பிள்ளைகள் காலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளாகவே பள்ளிக்குப் போய் விடுவார்கள்.  வீட் டிற்கு சாப்பாட்டிற்கு செல்லும்போது ஒவ்வொரு மாணவனும் எச்சில் துப்பிவிட்டுப்போய், அது காய்ந்து போவதற்கு முன்பே வந்து சேர வேண்டு மென்று உபாத்தியாயர் சொல்லி அனுப்பு வார்.  அம்மாதிரியாக ஒரு மாணவனின் நேரமெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே கழியும்.  அப்படிப்பட்ட பள்ளிக்கூடத்திலும் நான் படித்ததெல்லாம் நாலுவார்த்தை பிழை யறக் கூட எழுத முடியாது என்பதுதான். அப்படிப்பட்ட நான் காலேஜ் வகுப்பு மாணவர்களுக்கு, அதுவும் தமிழ் பாஷை என்பதைப் பற்றி, அதுவும் விவாதத் துக்கு இடமில்லாமல் பேச வேண்டும் என்றால், எனது நிலை எப்படிப்பட்ட சங்கடமானது என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.
பொதுவாகவே பள்ளிக் கூடங்களி லும், வெளியிலும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் விஷயத்திலேயே மிக நிர்பந்த முண்டு.  இன்ன இன்ன விஷயம்தான் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற  நியதி இருக்கிறது.  அதோடு நான் அரசியல் சமுதாயத் திட்டங்களில் சம்பந்தப்பட்டவனானதால் அவற்றைப் பற்றி இங்கு பேசக்கூடாத இடமாகவும் இருக்கிறது.  தவிரவும், என்னை இங்கு அழைக்கும் விஷயத்திலும் பல அபிப்பிராயபேதம் ஏற்பட்டு, ஏதோ சில நிபந்தனைகள் மீது என்னை அழைக்க அனுமதி பெற்றதாக இச்சங்கக் காரியதரிசி சொன்னார்.  ஆகவே, எனக்குத் தெரியாத விஷயத்தைப் பேச வேண்டியவனாக இருக்கிறேன் என்பதோடு, எவ்வளவோ நிர்பந்தங்களுக்குள் - நிபந்தனைகளுக்குள் பேச வேண்டிய வனாய் இருக்கிறேன் என்பதை எண்ணும்போது, நான் எனக்குத் தெரிந்ததைக்கூட பேச முடியாமல் போகும் படியான கஷ்டம் ஏற்பட்டு விடும்போல் இருக்கிறது.  மீறி ஏதாவது பேசிவிட்டால் பள்ளி அதிகாரிகள் நாளைக்கு மேல் அதிகாரிகளுக்குப் பதில் சொல்லவேண்டிய கஷ்டத்திற்கு ஆளாகிவிடுவார்களே என்று பயப்பட வேண்டியவனாய் இருக்கிற படியால், கூடியவரை அடக்கமாகவே நான் பேசு வதைக்கொண்டு திருப்தி அடை யுங்கள் என்று மாணவர்களாகிய உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
தாய் பாஷையும் - தமிழ்ப் பற்றும்
தாய் பாஷையாகிய தமிழ் பாஷையில் எனக்கு அபார பற்று என்று தலைவர் சொன்னார்.  அதற்காகவே பாடுபடு கிறேன் என்றும் சொன்னார்.
தாய் பாஷை என்பதற்காகவோ, நாட்டு பாஷை என்பதற்காகவோ எனக்கு தமிழ் பாஷையிடம் எவ்விதப் பற்றும் இல்லை.  அல்லது தமிழ் என்பதற்காகவோ, மிகப் பழைய பாஷை சிவபெருமான் பேசிய பாஷை என்பதற்காகவோ, அகஸ்தியரால் உண்டாக்கப்பட்ட பாஷை என்பதற் காகவோ, எனக்கு அதில் பற்றில்லை. வஸ்துவுக்காக என்று எனக்கு ஒன்றினி டத்திலும் பற்று கிடையாது. அது மூடப் பற்று - மூடபக்தியே ஆகும். குணத்திற் காகவும், அக்குணத்தினால் ஏற்படும் நற்பயனுக் காகவும்தான் நான் எதனிடத்திலும் பற்றுவைக்கக்கூடும்.  எனது பாஷை, எனது தேசம், எனது மதம், என்பதற்காகவோ, எனது பழமையானது என்பதற்காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவதில்லை.
எனது நாடு எனது லட்சியத்துக்கு உதவாது என்று கருதினால் - உதவும்படி செய்யமுடியாது என்று கருதினால் உடனே விட்டுவிட்டுப் போய்விடுவேன்.  அது போலவே எனது பாஷை என்பதானது எனது லட்சியத்துக்கு, எனது மக்கள் முற்போக்கடைவதற்கு, மானத்துடன் வாழ்வதற்குப் பயனளிக்காது என்று கருதினால் உடனே அதை விட்டுவிட்டு பயனளிக்கக் கூடியதைப் பின்பற்றுவேன்.  மனிதனுக்குப் பற்றுதலும், அன்பும், பக்தியும் எல்லாம் வியாபாரமுறையில் லாப நஷ்டக்கணக்குப் பார்த்துத்தானே ஒழிய, தனது நாட்டினது தனது பெரியார் களுடையது என்பதற்காக அல்ல.
அன்பு என்பது...
உதாரணமாக புருஷன், மனைவியர், மகள், தாய், தகப்பன் முதலாகிய எல்லாரி டத்திலும் ஒருவருக்கொருவர் காட்டும் அன்புக்கும், பற்றுதலுக்கும்கூட வியாபார முறையும், எதிர்பார்க்கும் பலாபலன் களும்தான் ஆதாரமே தவிர, அவற்றில் பற்றிக் கொண்டிருக்கும் இயற்கை அன்பு என்பது எதுவும் இல்லை. புருஷன் - மனைவியை எடுத்துக் கொள்ளுங்கள். மனைவி செத்தால் புருஷனுக்கு கொஞ்ச நாளைக்குத்தான் துக்கம் இருக்கும்.  புருஷன் செத்தால் மனைவிக்கு சாகும் வரையும் அல்லது நீண்ட நாளைக்கு இருக் கும்.  மறுவிவாகம் செய்து கொள்ளும் வகுப்பாய் இருந்தால் ஒரு சமயம் பெண்ணுக்கும் சீக்கிரத்தில் துக்கம் ஆறி, மறந்துபோகும்.  தகப்பனுக்கும் - பிள்ளைக் கும் கூட பிறந்த உடன் பிள்ளை செத்து விட்டால் பிள்ளையைப்பற்றி தகப்பனுக்கு அவ்வளவு துக்கம் இருக்காது.  90 வயதாகிச் சம்பாதிக்கத் திறமையற்று, மகனுக்கு இனி எந்த விதத்திலும் தகப்பனால் பயனில்லை தொல்லைதான் அதிகப்படும் என்கின்ற நிலையில் தகப்பன் இறந்துவிட்டால், பிள்ளைக்கு அவ்வளவு துக்கம் இருக்காது.  தாய் தந்தையர்கூட ஆண்பிள்ளை  இறந்து போனால் படுகிற துக்கத்தின் அளவு பெண்பிள்ளைக்குப் படுவதில்லை, தாசி களில் பெண்பிள்ளை இறந்து போனால் படுகிற துக்க அளவு ஆண்பிள்ளை இறந்து போனால் படுவ தில்லை.  மற்றபடி எந்த விதத்திலோ ஒருவரிடம் ஒருவர் பலன் அனுபவிக்க இருக்கும் சமயத்தில் மகிழ்ச் சியோ, இன் பமோ, புகழோ, திருப்தியோ அனுபவிக்க இருக்கும் சமயத்தில் ஒருவர் இறந்து போனால் ஒருவர் துக்கம் அனுப விப்பதும், அது இல்லாதவிடத்தில் அவ் வளவு இல்லாதிருப்பதும் இயல்பேயாகும்.
அதுபோல்தான் நான் தமிழினிடத் தில் அன்பு வைத்திருக்கிறேன் என் றால், அதனிடத்தில் அதன்மூலம் நான் எதிர் பார்க்கும் நன்மையும், அது மறைய நேர்ந் தால் அதனால் நஷ்டமேற்படும் அளவை யும் உத்தேசித்தே நான் தமிழினிடம் அன்பு செலுத்துகிறேன்.
அப்படியேதான் மற்றொரு பாஷை நமது நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து, அதனால் நமக்கு ஏற்படும் நஷ்டத்தை அறிந்து சகிக்க முடியாமல் தான் எதிர்க் கிறேனே ஒழிய புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.
நாடும் - காலமும்
ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒரு வித பழக்க வழக்கமும், அவைகளிடத்தில் சில விருப்பு வெறுப்பும் இருந்துவருவது டன் விருப்பமானதைப் பெருக்கவும், வெறுப்பானதை ஒழிக்கவும் முயற்சிப்பது முண்டு.  ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டாருக்குப் பிடிக்காமலும் இருக்கலாம்.
ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டாருக்கு பிடிக்கக்கூடியதாகவும் பின்பற்றக்கூடிய தாகவும் இருக்கலாம்.  ஆதலால், அந்நிய நாட்டினது என்பதற்காகவும், பழையது - புதியது என்பதற்காகவும் எதனிடமும் விருப்பு வெறுப்பு இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழர்களின் சமுதாய வாழ்க்கையின் பழைய நிலை இன்றைய நிலையைவிட மேலானது என்று கருதுகிற ஒருவன், உண்மையில் பாஷை சம்பந்தமாக அப் பழைய நிலை ஏற்படக் கூடும் என்று கருதினால், அந்தப் பாஷைக்காக அவன் போராடவேண்டியவனே ஆவான்.  மற்ற நாட்டு பாஷை எதினாலாவது நமது நிலைமேலும் உயரும் என்று கருதினால் அந்தப் பாஷையையும் வரவேற்க வேண்டியவனேயாவான்.
இன்று சில தேசியவாதிகள் அந்நிய நாட்டு பாஷையான இங்கிலீஷை நீ ஏன் எதிர்க்கவில்லை என்றுகூட என்னைக் கேட்கிறார்கள்.  இங்கிலீஷால் தீமை இல் லாததோடு நாட்டு மக்கள் முன்னேற்றத் திற்கான விஷயம் பல இங்கிலீஷில் இருக்கின்றன என்றுகூட சொல்வேன்.  இது என் அபிப்பிராய மாத்திரமல்ல.  இந்திய மேதாவிகள், உலகப் புகழ்பெற்ற இந்தியப் பிரமுகர்கள் என்பவர்கள் எல்லாம் இந்தியர்களுக்கு இங்கிலீஷ் ஒரு வரப் பிரசாதம் என்று சொல்லி இருக் கிறார்கள்.  அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் இன்று அபிப்பிராயபேத மன்னியில் போற்றப் படுகிறார்கள்.  ஆதலால், விரும்புவதற்கும், வெறுப்பதற்கும் அதனதன் பலந்தான் காரணம் என் பதை, உங்களுக்கு மறுபடியும் தெரிவித் துக்கொள்கிறேன்.   தமிழ், இந்த நாட்டு மக்களுக்கு சகல துறைக்கும் முன் னேற்றமளிக்கக் கூடியதும், சுதந்திரத்தை அளிக்கக்கூடியதும், மானத்துடனும் பகுத் தறிவுடனும் வாழத்தக்க வாழ்க்கை அளிக் கக் கூடியதும் என்பது எனது அபிப்பிராயம்.  ஆனால், அப்படிப்பட்டவை எல்லாம் தமிழிலேயே இருக்கிறதா என்று சிலர் கேட்கலாம் - எல்லாம் இல்லை என்றாலும், மற்ற அநேக இந்திய பாஷையை விட அதிகமான முன் னேற்றம் தமிழ் மக்களுக்கு அளிக்கக் கூடிய கலைகள், பழக்க வழக் கங்கள், அதற்கேற்ற சொற்கள் தமிழில் இருக் கின்றன என அறிகிறேன்.  ஆதலால், தமிழுக்குக் கேடு உண்டாக்கும் என சந்தேகப்படத்தக்க வேறு எந்தப் பாஷையும் விரும்பத்தகாததேயாகும்.
பழங்காலம்
பழம் பெரியார்கள், முன்னோர்கள் செய்தார்கள் - சொன்னார்கள் என்பதற் காகவும் நாம் பயந்து எதையும் ஏற்றுக் கொள்கிற மாதிரியில் அல்ல எனது அன்பும் பற்றுதலும்.  யார் என்ன சொன்ன போதிலும் வாழ்க்கைத் துறையில் நம் முன்னோர் களைவிட, பழம் பெரியோர் களைவிட, நாம் முன்னேற்றமடைந்தவர் களே ஆவோம்.  ஏனெனில், பழங்காலத்தில் இல்லாத சாதனங்களும், சுற்றுச்சார்பு களும் இன்று நமக்கு இருந்துவருகின்றன.  இதன் மூலம் நாம் எவ்வளவோ முற்போக் கும் வாழ்க்கை சவுகரியமும், மேன்மையும் அடைந்திருக் கிறோம்.  இனியும் எவ்வளவோ காரியங் களில் நம் பின் சந்ததியார்கள் அடையப் போகிறார்கள்.
முற்காலத்தில் யாரோ ஒரு சிலர், ஏதோ தெய்வீக சக்தியின் பேரால் என்னமோ ஒரு ஆச்சரியமான காரியத்தை அனுபவித்த தாகச் சொல்லப்படும் அநேக காரியங்கள் எவ்வித தெய்வீக சம்பந்தமும் இல்லாமல் அநேக மக்கள் அடைந்து வருகிறார்கள்.  இதனாலேயே அக்கால பழைய கால மக்களை நான் மூடர்கள் என்று குறை கூறவில்லை.  அக்கால  மக்களுக்கு இருந்த வசதியும், சுற்றுச் சார்பும் கொண்டு அவ்வளவுதான் அவர்களால் செய்ய முடிந் தது.  இக்கால மக்களுக்குள்ள வசதியும், சுற்றுச்சார்பும் கொண்டு இவ்வளவும், இதற்கு மேம்பட்டதும் செய்ய முடிகிறது என் கிறேன்.
இதனாலேயே பழைய காலத்தில் இந்தச் வசதிகள் இருந்ததில்லை என்று சொல்ல முடியுமா என்று சில பழமைப் பெருமை யர்கள் கேட்கலாம்.  பழங் காலத்தில் இந்த வசதிகளும், இந்த சுற்றுச்சார்புகளும் இருந்திருக்கலாம்.  ஆனால், அவைகளும், அவற்றால் ஏற்பட்ட பலன்களும் உடைய னவாய் இருந்த நாடும், மக்களும் கடல் கொண்டுபோய் இருக்கலாம்; பூகம்பத்தால் மறைந் தொழிந்து போயிருக்கலாம்; அல்லது வெள்ளம், புயல் அழித்திருக்கலாம்.  இப் போது நமக்கு ஆராய்ச்சி யோசனைக்கு - ஆதாரத்திற்கு எட்டிய பழமை அ,ஆ,வில் இருந்துதான் ஆரம்பித்து பண்டிதத் தன்மைக்குப் போய்க் கொண்டிருப் பதைக் காண்கிறோம். ஆகையால், பெரும்பான் மையான விஷயங்கள் பழமையைவிட புதுமை மேன்மையாய் இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.  இவற்றை யெல்லாம் மாணாக் கர்களாகிய உங்களுக்குத்தான் சொல்லுகிறேனே ஒழிய, பெரியவர் களுக்கு அல்ல. நீங்கள் யாவற்றையும் யோசித்து, பிறரிடமும் கேட்டு தெரிந்து முடிவுக்கு வர வேண்டும்.
தமிழ், தாய் பாஷை என்ற உரிமைக் காகப் பாராட்ட வேண்டும் என்றும் யாரும் கருதிவிடாதீர்கள்.  நம் தாய் நமக்குக் கற்பித்த பாஷை நமக்கு இன்று பயன்படாது.  நாம் பயன்படுத்துவதுமில்லை.  உதாரண மாக, பாலுக்கு பாச்சி என்றும், சோற் றுக்கு சோச்சி என்றும், படுத்துக் கொள்வதற்கு சாச்சி என்றும் சொல் லிக்கொடுத்தார்கள்.  இன்று நாம் அவற்றையா பயன்படுத்து கிறோம்?  அது போலவே பாஷைகள் காலத் துக்குத் தக்கபடி, பருவத்திற்குத் தக்க படி, நிலைமைக்குத் தக்கபடி தானாகவே மாற்றமடையும்.
தமிழ்நாட்டில் பழமையில் - அதாவது பாஷை ஏற்படும் காலத் தில் இல்லாத பல காரியங்கள் அரசி யல் காரணமாகவும், சுற்றுச்சார்பு காரணமாகவும் இப்போது ஏற்பட்டு, அவற்றிற்காக பல அந்நிய பாஷை வார்த்தைகள் இன்று பழக்கத்தில் இருக்கின்றன.  இந்நிலையில் அந்நிய பாஷை வார்த்தைகளே கூடாது என்று நம்மால் சொல்லிவிட முடியுமா?  அவசியமானவற்றை வைத்துக்கொள்ள வேண்டும்.  அவசியமில்லாவிட்டாலும் கேடில்லாததாக இருந்தால் அவைகளைப் பற்றிக் கவலை இல்லாமல் இருந்து விட லாம்.
கேடு பயப்பவைகளை வார்த்தைகளா னாலும், கலைகளானாலும், இலக்கியங் களானாலும் ஒதுக்கிவிட வேண்டியதே யாகும்.  இந்தக் கருத்தின் மீது கண்ட உண்மையினால்தான் நான் தமிழை ஆதரிப்பதும், மற்ற பாஷையை எதிர்ப் பதும் என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன்.
தோழர்களே!  இவ்வளவுதான் இந்த இடத்தில் தமிழ் பாஷை என்பதைப்பற்றி நான் உங்களுக்குச் சொல்ல முடிந்தவை என்று கருதுகிறேன்.  இதற்கு மேற் பட்டுச் சொல்லுவது இந்த இடத்துக்கு ஏற்றது அல்ல என்று கருதி இவ் வளவோடு நிறுத்திக்கொள்ளுகிறேன்.
(21.7.1939 அன்று கோயமுத்தூர் அரசினர் கல்லூரியில் தமிழ்க் கழக மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு - சொற்பொழிவு - 06.08.1939
-விடுதலை,20.7.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக