ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

இன்றையநாகரிகம் - தந்தை பெரியார்

தோழர்களே! இனி அடுத்தபடியாக நிகழ்ச்சிக்குறிப்பில் கண்டுள்ள விஷயம். அக்கிராசனர் முடிவுரை எனக் குறிப் பிடப்பட்டிருக்கிறது. நான் அனேக கேள் விகளுக்குச் சரியான பதில் சொல் லுவேன் என்று எனக்கு முன்பு பேசிய நண்பர் கூறினார். நான் எப்பொழுதும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாராயிருக்கிறேன். ஆனால் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான - முடிவான பதில் சொல்லக்கூடிய சகலகலாவல்லவ னென்று எண்ணிவிடாதீர்கள். நான் சொல்லும் அபிப்பிராயம்தான் முடிவான தென்றோ, அதுவே முடிந்த ஆராய்ச்சி யின் சரியான கருத்து என்றோ, நீங்கள் கருதக்கூடாது.
விவகாரம், நியாயம் என்ற இரண்டு வார்த்தைகளையும் உபயோகப்படுத்தும் விதத்தை சரியாக உணர்ந்து கொள்ளும் படி கோருகிறேன். நியாயம் வேறு - விவகாரம் என்பதும் வேறு. விவகாரம் என்பது வலுத்தவன் ஆதிக்கத்தையும், தந்திர சூழ்ச்சிகளையும், பணச் செல்வாக் கையும் பொறுத்து முடிவு பெற்றுவிடும். ஒருவன் தன்னிடம் சக்தி இல்லாத கார ணத்தால் - பேசும் திறமை, எடுத்துக் காட்டும் அனுபோகம் ஆகியவை இல் லாத காரணத்தால் - ஒரு விஷயத்தைப் பற்றி வாதித்துத் தோல்வியுற்று விட்டால் அது நியாயம் கண்டு பிடித்ததாகி விடுமா? அதுபோல் உங்கள் வாய் அடங் கும்படி நான் பதில் சொல்லி விட்ட தாலேயே நான் சொன்னது சரி என்ற சொல்லிவிட முடியாது. உங்களுக்கு எடுத்துச் சொல்லி மெய்ப்பிக்க முடியாத தாலேயே நான் சொன்னது தப்பு என்றும் சொல்லிவிட முடியாது. ஆதலால் எனக்குத் தெரிந்த பதில் சொல்லுகிறேன். அதை ஆராய்ச்சி செய்து பிறகு ஒரு தக்க முடிவுக்கு வாருங்கள்.
இன்றையதினம் இங்கு பேச எடுத்துக் கொண்ட விஷயம் இந்தியாவின் தற்கால நாகரிகம் என்பதாகும். இது ஒரு கூடாத விஷயமல்ல. மிக்க ருசிகர மானதும் விரிந்த பொருள்களைக் கொண்டதுமான நல்ல விஷயத்தையே நீங்கள் இங்கு பேச எடுத்துக் கொண் டிருக்கிறீர்கள்.
நாகரிகம் என்கின்ற வார்த்தைக்குப் பொருளே பிடியில் சிக்காத ஒரு விஷய மாகும். ஒவ்வொருவரும் நாகரிகம் என்பதற்கு ஒரு தனிப்பொருள் கூறி வருகிறார்கள். கண்ணோட்டம் என்கிற தலைப்பின் கீழ்குறளில் நாகரிகம் என்கிற வார்த்தை வள்ளுவரால் உபயோகப்படுத் தப்பட்டிருக்கிறதாக நான் 10,20 வருஷங் களுக்கு முன்பு பார்த்ததாக ஞாபகம். அது தாட்சண்ணியம், அடிமை என்கிற பொருளில் உபயோகப்படுத்தப்பட்டி ருப்பதாகவும் எனக்கு ஞாபகம்.
நாகரிகம் என்கிற வார்த்தைக்கு எந்தக்கருத்தை வைத்துக்கொண்டு பேசினாலும் மக்கள் சமூகம், நடை, உடை, ஆகாரம் மற்றும் எல்லா பாவ னைகளிலும் பெரிதும் மாறுபட்டிருக் கிறது. எந்த ஆதாரத்தினால் தான் இவைகள் வேறுபட்டிருக்கிறதென்று கூறமுடியாது. எப்படியோ எல்லாம் மாறுதலில் தான் போய்க் கொண்டிருக் கிறது. நம்முடைய பெண்கள் முன்பு முழங்கைக்குக் கீழும் இரவிக்கை அணிந்து வந்தார்கள். பின்பு மேலேறி யது. மறுபடி கீழே இறங்கியது. இப் பொழுது மறுபடியும் மேலேயே போய்க்கொண்டிருக்கிறது. மேல்நாட்டு ஸ்திரிகளும்-தெருக்களில் தெருக் கூட்டுவது போன்ற ஆடைகளை முன்பு அணிந்து வந்தார்கள். அந்தக் காலத்தில் துணிகளைத் தூக்கிப் பிடித்துக் கொள்ள பணம் படைத்தவர்கள் ஆள்களை நியமித்துக் கொண்டிருந்தார்கள். அது அக்கால நாகரிகம். இப்பொழுதோ என் றால் ஆடை விஷயத்தில் மேல்நாட்டுப் பெண் களும் எல்லாம் சுருக்கிக் கொண்டு விட் டார்கள். அதை நாம் இப்பொழுது நாகரிகமென்று தான் கருதுகிறோம்.
நாம் இவைகளைப்பற்றி எல்லாம் பேசும்பொழுதும் யோசிக்கும் பொழுதும் எந்தவித பற்றுதலும் இல்லாமல் அதாவது ஜாதி, மதம், தேசம் என்பன போன்ற பற்று களை விட்டுவிட்டு (திக்ஷீமீமீயாக) சுயேச்சை யாக சீர்தூக்கிப் பார்த்தால்தான் விஷ யங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். அதன் உண்மையும் அப்பொழுதுதான் விளங்கும். ஒரு காலத்தில் சாம்பலைப் பூசிக் கொண்டு சிவசிவா என்று ஜெபிப்பதுதான் யோக்கியமாகக் கருதப்பட்டது. இன்றைய காலதேச வர்த்தமானங்கள் மேல் சொன்ன விஷயத்தைக் கேலி செய்கிறது.
புருஷன் பெண்ஜாதி என்கிற இரு சாரர்களை எடுத்துக்கொண்டாலும், முன்பு கல் என்றாலும் கணவன், புல் என்றாலும் புருஷன் என்று மதித்து அடுப்பூதுவதே ஒரே கடமையென்று நடந்து வந்த பெண்களைப் பற்றி பெரிதும் மதித்து வந்தார்கள். ஆனால் இன்றோ புருஷனிடம் மனைவியானவள் நான் உனக்கு வேலைக் காரியா? அடிமைப் பட்ட மாடா? ஜாக்கிர தையாயிருந்தால் சரி, இல்லாவிட்டால் எனக்கும் சம அந்தஸ்தும் சம உரிமையும் சர்வ சுதந்திரமும் உண்டு என்று கர்ஜனை செய்யும் பெண்களையே நாகரிகம் வாய்ந்தவர்களென்று கருதுகிறோம்.
முன்பு புராணத்தைப் பற்றியும் மதத்தைப் பற்றியும் பேசுவதுதான் வித்வத்தன்மையாக இருந்தது. ஆனால் அது இன்று குப்பையாகி பரிகசிக்கத் தக்கதாக ஆகிவிட்டது. புத்திக்கும் அறிவிற்கும் பொருத்தமில்லாத முரட்டுப் பிடிவாதத்தில் முன்பு நம்பிக்கை யிருந்ததை சிலாகித்துப் பேசினோம். ஆனால் இன்றையதினம் பிரத்தியட்சமாக எதையும் எடுத்துக்காட்டித் தெளிவுபடுத்து வதையும் - விஞ்ஞானம் போன்றதான அறிவியக்க நூல்களைக் கற்றுணர்ந்த வல்லுணர்களையுமே நாம் பெரிதும் மதித்து வருகின்றோம்.
நாகரிகம் என்பது நிலைமைக்கும் தேசத்திற்கும்-காலப் போக்கிற்கும் தக்க வாறு விளங்குகிறது. காலதேச வர்த்தமான - வழக்கத்தையே யொட்டி நாகரிகம் காணப்படுகிறது.
காலப்போக்கானது எந்த தேக்கத்தையும் உண்டாக்குவதில்லை. ஒன்றிலிருந்து மற் றொன்று தோன்றவும் - புரட்சி ஏற்படவும் செய்கிறது.
மீசை, தலைமயிர் இவைகளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டுப் பேசினீர்கள். எது நாகரிகமென்று கருதுகின்றோமோ அது பெருத்த அஜீர்ணத்துக்கு வந்துவிடுகிறது. மீண்டும் அந்த நிலைமையானது மாறிக் கொண்டு போகத்தான் செய்கின்றது.
ஒரு விஷயமானது வாய் சாமர்த்தியத் தினால் செலாவணியாகிவிடும். அது மெய்யோ-பொய்யோ சரியோ-தப்போ எப்படியும் இருக்கலாம்.
நாம் ஏன் எதற்காக உழைத்துப் பாடுபட வேண்டும்? பகுத்தறிவு படைத்த நாம் பாடுபட்டுத்தான் ஆகவேண்டுமா? நாகரிகம் என்பது சதா உழைத்துத்தான் உண்ணவேண்டுமா? என்கிற கேள்விகள் எழுந்து மக்கள் சமுகம் கஷ்டம் தியாகமின்றி நலம்பெற முயற்சிக்கலாம். இது நாகரிகமாக கருதப்பட்டு பயன் அடைந்தாலும் அடையலாம்.
இன்றைய அரசியல் விஷயத்தில் இராட்டை சம்பந்தப்பட்டிருக்கிறது. இது ஆயிர வருஷங்களுக்கு முன்பு ஏற்பட்டு நாகரிகமாக பாவிக்கப்பட்டிருந்தது. பின்பு குப்பையில் தள்ளப்பட்டது. பிறகு மீண்டும் அது வெளிப்படுத்தப்பட்டு அதற்குக் கொஞ்சம் மதிப்புக் கொடுக்கப்பட்டு இராட்டை சுற்றுவதும் தக்ளி நூல் நூற்பதும் நாகரிகமாகக் கருதப்பட்டது. ஆனாலும் அதுவும் ஒழிந்து போயிற்று என்றே சொல்ல லாம். இவைகளையெல்லாம் எந்தவிதமான (தேசம், மதம், ஜாதி) பற்றுதலுமில்லாத பொதுமனிதன், பொதுநோக்கோடு கவனித் தால் உண்மை விளங்காமல் போகாது.
நாம் ஒரு காலத்தில் தேசம், தேசியம்-தேசப்பற்று என்பதை நாகரிகமாகக் கருதி வந்திருக்கிறோம். ஆனால் இன்றோ அவைகளையெல்லாம் உதறித்தள்ளி மனித ஜீவகாருண்யம் உலக சகோதரத்துவம் மக்கள் அபிமானம் (Citizen of the World) என்று கருதுவதையே பெரிதும் நாகரிக மாகக் கருதமுன் வந்துவிட்டோம்.
ஒரு காலத்தில் நாகரிகமாக கருதி வந்ததை இன்று நாம் பரிகசித்து வருகிறோம். ஒரு மனிதன், தான் நாயக்கன், முதலி, வைணவன், சைவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் பாராட்டிக் கொண்டு ஒவ்வொருவரும் தாங்கள் அதிக மேல் ஜாதிக்காரனா வதற்குச் சைவ, வைணவப் போக்கைப் பற்றிக்கொண்டு பூணூலையும் நாமத்தையும் போட்டுத் தங்கள் மதத்தையும் சிலாகித்துப் பிதற்றிக் கொண்டும் வந்தான். ஆனால், இன்றைய தினம் இவைகளையெல்லாம் புத்தி கெட்ட தனமென்றம், முற்போக்குக்கு முரணான தென்றும் கூறி வெகுவாகக் கண்டனம் செய்துவருகிறோம். ஒரு காலத்தில்   தனித் தத்துவம் நாகரிகமாகக் கருதப்பட்டது. உதாரணமாக ஒரு தனித்தனி ஜாதி. நன்மை யும்-தேச நன்மையும் சிலாக்கியமாகக் கருதப்பட்டது. ஆனால், ஒரு ஜாதியின் அனுகூலம் பிற ஜாதியானுக்குப் பாதகம் என்பதையும் ஒரு தேச நன்மை மற்றொரு தேசத்திற்குப் பொல்லாங்கு என்பதையும் நாம் இன்று நன்கு உணர ஆரம்பித்து விட்டோம்.
தோழர்களே! நான் குறிப்பாக ஒரு விஷயத்தைப்பற்றி வற்புறுத்தி இங்குக் கூற விரும்புகிறேன். அதாவது நாம் அனுபவ முதிர்ச்சியால் அறிவு ஆராய்ச்சியால் நாம் முற்போக்காகிக் கொண்டு வருகிறோம் என்பதேயாம். நாம் எல்லா மனிதர்களையும் அறிவின் உணர்ச்சியால் ஆழ்ந்து கவனிக் கிறோம். உதாரணமாக வியாபாரிகளை - மக்கள் சமுகத்தின் நலனைக் கெடுத்து லாபமடையும் கோஷ்டியைச் சேர்ந்தவர் களென்றும், லேவாதேவிக்காரர்களை-மனித சமுக நாச கர்த்தாக்களென்றும்-மத ஆதிக்கங் கொண்ட வர்க்கத்தினர் களையும் மனித சமுக விரோதிக ளென்றும் கண்டிக்கின்றோம்.
நாகரிகம் என்பது பிடிபடாத ஒரு விஷய மென்றும் முன்பே கூறினேன். நம்நாட்டுப் பெண்கள் எப்படி (Belt) (பெல்ட்) கட்டாமல் சீலை கட்டுகிறார் களென்றும் அது இடுப்பில் எவ்வாறு தங்கியிருக் கிறதென்றும், தலைக்கு ஊசி இல்லாமல் பெண்கள் எவ்வாறு மயிர் களைச் சேர்த்து முடிந்து கொள்ளு கிறார்களென்றும், நாம் சாப்பாட்டுக்குத் தினம் ஒரு இலை (Plate) எப்படிச் செலவு செய்கின் றோம், என்ன மகத்தான நஷ்டமென்றும், மேனாட்டார் ஆச்சரி யப்பட்டு நம்மவர்களைக் கேட்ப வரையும் கேட்டிருக்கி றோம். ஒவ்வொரு வரும் அவர்களின் செய்கையைச் சரியாக உணராததினால் சிலதை ஆச்சரியமாகக் கருத நேரிடுகிறது.
நம்மிடையேயுள்ள ஜாதி அபி மானம் சொந்தக்கார அபிமானம், பாஷா அபிமானம், தேசாபிமானம் எல்லாம் தொலையவேண்டும். இல்லாவிட்டால் எந்த நல்ல விஷயத்திலும் நாம் முடிவு காணுவது சரியாக ஆகிவிடாது.
காந்தியார் மேனாட்டில் முழங்கால் துண்டோடு போதிய ஆடையின்றி போன பெருமையைப் பற்றி ஒரு நண்பர் குறிப்பிட்டார். இது எவ்வளவு தூரம் புத்திசாலித் தனமானதாகும். சவுகரியத் திற்காகவும்-நன்மைக்காகவும் அங்கு அதிக ஆடைகளை பந்தோபஸ்துக்காக அணிந்துகொள்ளாமல் பிடிவாதத் தோடு- கேவலம் இந்திய தர்மம் என்ற வெறும் எண்ணத்திற்காக குளிரில் விரைத்துப்போக இங்கிலாந்து வாசம் செய்தது எவ்வளவு தூரம் நியாயமான செய்கையாகும்?
புதிய எண்ணங்களும் புதிய எழுச்சிகளும்-புதிய காரியங்களும் நிகழுகின்றன. நீங்களும் காலப்போக்கின் உயரிய பலனை வீணாக்காது பகுத் தறிவை மேற் போட்டுக் கொண்டு ஜன  சமுதாய நன்மையைத் தேடி பாடுபட முன் வாருங்கள். உங்களுடைய முயற்சிக்கு எல்லாம் வெற்றியே உண்டு. வெறும் கடவுள் நம்பிக்கை கொண்டி ருந்தவர்கள் கூட தங்களுடைய போக்கை மாற்றிக்கொண்டு முயற்சி மெய்வருந்தக் கூலிதரும் என்று சொல்லி வருகிறார்கள். ஆகவே, தோழர்களே! நீங்கள் தன்நம்பிக்பிக்கை கொண்டு  மக்களின் விடுதலைக்குச் சரியான வழிகளில் பகுத்தறிவை அடிப்படை யாகக் கொண்டு போராட வாருங்கள்.
(ஈரோடு லண்டன் மிஷினரி சொசைட்டியின் லைப்ரரி அசோசியேஷன் கூட்டத்தில் இன்றைய நாகரிகம் என்பது பற்றிய ஆற்றிய சொற்பொழிவு)
புரட்சி - சொற்பொழிவு - 31.2.1933
-விடுதலை29.3.15

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக