வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

அர்ச்சகர் -ஜோசியர் சம்பாஷணை - சித்திரபுத்திரன்

10.05.1931 - குடிஅரசிலிருந்து....



அர்ச்சகர்: என்ன ஜோசியரே கோவிலுக்கு முன் போல் ஆளுகள் வருவதே இல்லையே! குடும்ப நிர்வாகம் வெகு கஷ்டமாகவல்லவா இருக்கிறது.

ஜோசியர்: என்ன காரணம்? அர்ச்சகர்: இந்த இழவு எடுத்த சுயமரியாதைதான்!

ஜோசியர்: சுயமரியாதை காரணம் என்றால் சுயமரியாதைக்காரர்கள் சாமி இல்லை. பூதம் இல்லை என்று  சொல்லி மக்களைக் கோவிலுக்குள் போக கூடாது  என்று பிரச்சாரம் செய்கின்றார்களே அதனாலா?

அர்ச்சகர்:  இல்லை - இல்லை அதற்கெல்லாம் நமக்கு பயமில்லை இன்னமும் ஆயிரம்  தடவை  சாமி  இல்லை பூதம்  இல்லை என்று சொல்லட்டும். கோவிலை வேண் டுமானாலும் இடிக்க வேண்டுமென்று சொல்லட்டும். அதனால்  நமக்கு ஒன்றும்  கெட்டுப் போகாது.

ஜோசியர்: மற்றென்ன காரணம் சொல்லுகிறீர்கள்?

அர்ச்சகர்: கோவில்களுக்குத் தேவதாசிகள் வருகின்றதான, முக்கிய கைங்கரியத்தைப் பற்றிக் கண்டபடி பேசி அதை நிறுத்தி விட்டார்கள் அல்லவா  அதனால் தான்.

ஜோசியர்: இதற்கும் பக்திக்கும் சம்பந்தமென்ன? இதனால்   எல்லாம் மக்களுக்கும் கடவுள் பக்தி குறைந்து விடுமா?

அர்ச்சகர்: கடவுள் பக்தி என்றால் என்ன என்கிறீர்?  கடவுள்தான் எங்கும் நிறைந்தவராயிற்றே. இதற்காக ஒரு மனிதன் கோவிலுக்கு வரவேண்டுமா?

ஜோசியர்: மற்றெததற்காக வருகின்றீர்கள்?

அர்ச்சகர்: இரண்டு காரியத்திற்காகத்தானே கோவிலுக்கு  வருகின்றார்கள்.

1. தன்னை பக்திமான்  என்று பிறர் மதிக்க வேண்டும்

2. அங்கு வரும் நல்ல பெண்களை ஆண்கள் பார்க்கவும், ஆண்களைப் பெண்கள் பார்க்கவுமான காரியங்களுக்கு என்றாலும்  இரண்டாவது விஷயத்திற்கு தான் அதிகப் பேர்  வாலிபர்கள் சற்று ஷோக் பேர்வழிகள்  சிறிது வயதானவர் களாயிருந்தாலும், சபலமுடையவர்கள் ஆகியவர்கள் வருவது. இப்படிப்பட்ட ஆண்கள் தாராளமாய்   வரா விட்டால்  குடும்பப் பெண்களும் வருவதில்லை.  ஆக இப்படிப்பட்ட இரண்டு  கூட்டம் வந்தால்தானே.  காணிக்கை, கட்டளை, இணைப்புத் தரகு  ஆகியவைகள் கிடைக்கும் ஆகவே நமக்குக் கோவிலில் மணியடிப்பதில்  என்ன பிரயோசனம்?   கோவில் சம்பளமாகிய  மாதம் 1-12-0

ரூ. சம்பளமா நமக்குக் கட்டும்?

ஜோசியர்: அப்படியா சங்கதி? அவர்கள் இப்படிச் செய்தால் நமக்கு வேறு வழி கிடைக்காதோ?

அர்ச்சகர்: என்ன வழி?

ஜோசியர்: நம்ம ஆளுகளே ஒன்று சேர்ந்து நாம் ஆளுக்கு இரண்டு மூன்று வீதம் பெண்டாட்டிகள் கட்டி,நன்றாய் அலங்கரித்து தினம் காலை, மாலையில் கோவிலுக்கு வரும்படி செய்தால் என்ன?

அர்ச்சகர்: அப்படிச் செய்வது சாத்தியமாகுமா? அவர் களுக்கு நகை,புடவை, மினுக்கு, கண்ட கண்ட இடங்களுக்கு எல்லாம் சென்று அறிமுகம் செய்து கொள்ளுவது முதலாகிய இதெல்லாம் செய்ய வேண்டாமா? பிறகு நமது வீடுகளிலும் போதிய சவுகரியம், வீடு,வாசல், கட்டில், படுக்கை முதலிய சவுகரியம் ஆகியவைகள் வேண்டாமா?  இவற்றிற்கெல்லாம் பணத்திற்கு எங்கே போவது? நாம் ஏதோ தாசிகள் செல்வாக்கினால் கோவிலுக்கு வருகின்றவர்களில் ஒன்று இரண்டு ஆள்களைப் பிடித்து  சரிபண்ணி  அதுவும் இரகசியம் என்றும் அவசரமென்றும் பயப்படுத்தி 10,5 பெற்றுக்கொண்டு கஷ்டமில்லாமல்,  நஷ்டமில்லாமல்  சம்பாதிப்பது நலமா? அப்படிக்கின்றி நம்ம பெண்களையே தாசிபோல் நடக்க ஏற்பாடு செய்து கொள்ள முடியுமா?

ஜோசியர்: என்னமோ கஷ்டகாலம் உங்களுக்கு மாத்திரமல்ல நமக்கும் கூடத்தான் வந்து விட்டது.

அர்ச்சகர்:  உங்களுக்கு  என்ன வந்தது?

ஜோசியர்: இப்போது  எந்தத்தேவடியா மகன்  நம்மிடம்  ஜோசியம் பார்க்க வரு கின்றான்?  பிள்ளைக்கும்,  பெண் ணுக்கும்  பார்க்கின்ற  வேலையே மிகவும் குறைந்து போய்விட்டது.

அர்ச்சகர்: ஏன் ?

ஜோசியர்: என்ன அதுகளே பெண்ணும் மாப்பிள் ளையுமே  பொறுத்தம் பார்த்துக் கொள்ளுகின்றன.

அர்ச்சகர்: இருந்தாலும் இப்ப கிரகதோஷம் பார்க்க வாவது  வருவார்களே.

ஜோசியர்:  அதாவது வந்தாலும் பரவாயில்லை.  அதற்கு தான் எங்கு வருகின்றார்கள்? திருட்டுத் தேவடியா பிள்ளை  காயலா தலைவலி வந்தால் உடனே  டாக்டர்கள்  இடம் போய் விடுகின்றார்கள் . நம்மிடம்  வருவதேயில்லை. நம்மை கண்டால்  சிரிக்கின்றார்கள் . என்னடா என்றுக் கேட்டால்  சுயமரியாதையடா  என்கின்றார்கள்.

அர்ச்சகர்:  சரி. இவ்வளவு ஆனதுக்கு அப்புறம்  எனக்கு ஒன்று தோன்றுகின்றது.

ஜோசியர்: என்ன?

அர்ச்சகர்: நாமும் சுயமரியாதைப் பிரச்சாரம் செய்வ தாகச் சொல்லி ஏமாற்றி மெள்ள மெள்ள உள்ளே இருந்தே அதை ஒழித்து விடுவது. எப்படி என்றால்  இப்பொழுது எத்தனையோ தமிழ் பண்டிதர்கள் அப்படித்தான்  அதாவது நானும் சுயமரியாதைக் காரன் என்று சொல்லிக்கொண்டு அதற்குள் பிரவேசித்து அதை ஒழிக்கப் பார்க்கிறார்களே அதுபோல.

ஜோசியர்: அது நல்ல வழிதான். நம்முடைய பெரியவாள் பவுத்தர்கள் காலத்திலும் இப்படித்தான் செய்தார்கள்.  ஆனால், இந்தச் சுயமரியாதை பயல்கள் (சுயமரியாதைக் காரர்கள்) இது தெரிந்துதான் பு.ம. பயல்களை (புராண மரியாதைக்காரர்களை) அதாவது பிராமணர்களைச் சேர்ப்ப தில்லை என்று தீர்மானித்து விட்டார்கள்.

அர்ச்சகர்: அதுவும் அப்படியா? அப்படியானால் இந்தப்படியானால் இந்தப்படி ஏழைகளை வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்ளும்  இந்த  சு.ம காரர்கள் நாசமாய், நிர் மூலமாய்ப் போகட்டும், நாம் போய் இனி காங்கிரசில் சேர்ந்து  கொள்ளுவோம்.

 

 

மக்களுக்குத் தன்மதிப்பும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளரல் வேண்டும். மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும். உயர்வு, தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்து வரும் ஜாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால், இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிரும் ஒன் றென்று எண்ணும் உண்மையறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும். சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும்.

- தந்தை பெரியார்

- விடுதலை நாளேடு, 10.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக