வெள்ளி, 28 செப்டம்பர், 2018

வகுப்புவாதிகள் அயோக்கியர்களா?

***தந்தை பெரியார்***




இந்தியர்களின் அடிமைத் தன்மைக்கும், இழி நிலைக்கும் மதமும், ஜாதியும், வகுப்பும் அவை சம்மந்தமான மூட நம்பிக்கை எண்ணங்களும், வெறிகளும், சடங்குகளும், இவற்றிற்காக ஒருவரை ஒருவர் அவநம்பிக்கை கொண்டு அடக்கி ஆள நினைப்பதுமே முக்கியமான காரணங்களாகும் என்பதாக நாம் பலதடவை சொல்லி வந்திருக்கின்றோம். பலமாக அனேக உதாரணங்களுடன் எழுதியும் வந்திருக் கின்றோம்.

மதங்களின் பேரால் பல முக்கிய மதங்களும், அநேக கிளை மதங்களும் உட்பிரிவு மதங்களும் ஏற்பட்டு, மக்களைப் பெரும் பெரும் பிரிவுகளாகப் பிரித்து விட்ட தென்றாலும் வருணாசிரமத்தையும், ஜாதிப் பிரிவுகளையும், பல வகுப்புப் பிரிவுகளையும் கொண்டதான இந்து மதமானது, எல்லா மதங்களையும் விட மக்கள் சமுகத்திற்குப் பெரிய இடையூறாய் இருந்து கொண்டுமக்களின் ஒற்றுமையையும், தன்னம்பிக்கை யையும் அடியோடு பாழாக்கி வருவதுடன் இதன் காரணமாய் மக்கள் வலு இழந்து, சுயமரியாதை இழந்து, சுதந்திரமற்று நடைப்பிணங்களாகவும், பகுத்தறிவற்ற மிருகத்தன்மையிலும் கேவலமாகவும் வாழ்ந்து வருகின்றார்கள்.

இதற்கு உதாரணமாக, சென்னை மாகாணத்தை மாத் திரம் எடுத்துக்கொண்டு பார்த்தாலே போதும், இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஜனங்கள் சுமார் மூன்றே முக்கால் கோடி மக்கள் இருக்கின்றார்கள் என்றாலும் அவர்கள் 385 ஜாதி களாகவும் மற்றும் பல உள் பிரிவு ஜாதிகளாகவும் வகுக்கப் பட்டிருக்கின்றார்கள் (இந்த ஜாதி பெயர்களும் ஒவ்வொரு ஜாதியாரின் எண்ணிக்கையையும் காலம் சென்ற எல்.டி சாமிக்கண்ணு பிள்ளை அவர்களால் பிரசுரித்த மெட்ராஸ் இயர்புக் என்னும் புத்தகத்தில் காணலாம்). நாளேற நாளேற நாகரிகத்தின் காரணமாகவும், செல்வ நிலையின் காரண மாகவும் இன்னும் அதிகமான ஜாதிப் பிரிவுகளும், உட்பிரிவுகளும் ஏற்படும்படியான நிலையிலேயே தேசம் போய்க் கொண்டிருக்கின்றதே தவிர அவைகள் குறைந்து ஒன்று படத்தக்க முயற்சியோ அறிகுறியோ காண்பதற்கில்லை.

இந்தியாவின் 8-ல் ஒருபாகம் கொண்ட சென்னை மாகாணத்தில் மாத்திரம் 385 ஜாதிப் பிரிவுகள் இருக்கின்ற தென்றால் இனி மற்ற 7 பாக ஜனத் தொகையில் எத்தனை ஜாதிப் பிரிவுகள், எத்தனை உட்பிரிவுகள் இருக்கக்கூடும் என்பதை வாசகர்கள் சற்று சிந்தித்துப்பார்த்தால் தானாக விளங்கிவிடும்.

இந்த ஜாதிப் பிரிவுகள் மாத்திரமல்லாமல் உயிரினும் தேசத் தினும் முக்கியமாய் கருத வேண்டியதான தாய் பாஷைப் பிரிவுகள் எவ்வளவு? இவ்வளவு ஜாதியும், தாய் பாஷையும் தங்களுக்குள் பிரிவுபட்டு இருக்கின்றோம் என்று மாத்திரம் நினைத்துக் கொண்டிருக்காமல் தங் களுக்குள் ஒன்றுக்கொன்று உயர்வு தாழ்வு என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற உள் எண்ணமும் வெளி நடவடிக்கைகளும் வெறுப்பும் துவேஷமும் எவ்வளவு?

இவற்றையெல்லாம் கவனிக்காமலும், இதை நேர்படுத்த முயற்சிக்காமலும் யாரோ சில சோம்பேறிகளும் சுயநலக் காரரும் தேசியம் தேசியம் என்று சொல்லி மக்கள் கண்களில் மிளகாய்ப் பொடியைப் போட நினைத்தால் நாடு எப்படி சேமம் அடையும்? கொஞ்ச நாளைக்கு மாத்திரம்தான் தேசிய வயிற்றுப்பிழைப்பு வியாபாரம் நடத்த முடியுமே ஒழிய இது என்றும் நிலைத்திருக்க முடியுமா என்பது யோசிக்கத் தக்கதாகும்.

வகுப்புவாதம் கூடாது என்று சொல்லுவதன் மூலம் ஏதோ சில பயங்காளிகளையும், வேறு வழியில் பிழைக்க வகையற்ற தேசியவாதி களையும், உத்தியோகம் பதவிப் பிரியர்களையும் மிரட்டலாமே ஒழிய, வகுப்புப் பிரிவுகளாலும், உயர்வு தாழ்வு வித்தியாசங்களாலும் உள்ள கஷ்டத்தையும் கேட்டையும் ஒழிக்க முடியுமா என்று கேட்கின்றோம்.

வகுப்புவாதம், மதவாதம், ஜாதிவாதம் பேசி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பவர்களால் தேசத்தின் விடுதலை கெட்டுப்போகின்றது என்று திப்பிலி, தேசாவரம், சதகுப்பைக ளெல்லாம் பேசவும் எழுதவும் தொடங்கி விட்டதைக் கண்டு நாம் சிறிதும் லட்சியம் செய்யவில்லை.

அந்தப்படி எழுதும் பேசும் யோக்கியர்களில் 100-க்கு அரைப்பேராவதுதங்கள் மதத்தையும், உள்மதத்தையும், ஜாதியையும், உள் ஜாதியையும், வகுப்பையும், உள் வகுப் பையும் விட்டு விட்டவர்கள் உண்டா என்று பந்தயம் கட்டி கேட்கின்றோம்.

ஆகவே, தேசியம் என்பதும், தேசியப் பிழைப்பு என்பதும் மக்களை எவ்வளவு அயோக்கியர்களாகவும் இழிதகைமை உள்ளவர்களாகவும் செய்து விடு கின்றது என்பது கவனித்துப் பார்ப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.

எப்பொழுது ஒருவனுக்கு, அவனுக்கு என்று தனி மதம், தனி ஜாதி, தனி வகுப்பு என்பதாக பிரிக்கப்பட்ட பின்பு அவன் தனது மதம், தனது ஜாதி, தனது வகுப்புக்கு என்ற ஒரு உரிமை கேட்பதில் என்ன தப்பிதமோ, அயோக்கியத்தனமோ இருக்க முடியும்?

வகுப்புவாதம், மதவாதம், ஜாதிவாதம் கூடாது என்கின்ற யோக்கியர்கள்  ஒருவராவது மதத்தையும், ஜாதியையும், வகுப்பையும் அழிக்கச் சம்மதிக்கின்றார்களா? அது மாத்திர மல்லாமல் பார்ப்பனர் முதல் பறையர் வரை மாயாவாதம் முதல் சைவர் வரை அவரவர்களின் ஜாதி மத வகுப்புக்கு உயிரை விட்டாவது காப்பாற்ற வேண்டும் என்கின் றார்களேயொழிய ஒருவராவது ஜாதி மத வகுப்புக்களைக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்று சொல்லுகின்றவர்களைக் கண்டு பிடிக்க முடியுமா? மதத்தையும், ஜாதியையும், வகுப் பையும் ஒருபுறத்தில் காப்பாற்றிக் கொண்டு மற் றொரு புறத்தில் ஜாதி மத வகுப்புப் பிரதிநிதித்துவம் கேட்பதை அயோக்கியத்தனம், இழி தன்மை என்று சொன்னால் அப்படிச் சொல் லுவது ஆயிரம் மடங்கு அயோக்கியத் தனமும், இரண்டாயிரம் மடங்கு இழிதன்மையும், வஞ்சகத்தன்மையும், துரோகத் தன்மையும் ஆகாதா என்பதோடு இது தங்கள் வயிற்றுப்பிழைப் புக்கும், வாழ்வுக்கும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற கீழ்மக்கள் தன்மையா அல்லவா என்று கேட் கின்றோம்.

தேசம் ஜீவராசிகளுக்குப் பொதுவானதாகும். தேச ஆட்சியும் மக்களுக்குப் பொதுவானதாகும். எந்த மனிதனுக் கும் ஆட்சியில் அவனது இஷ்டத்தை தெரிவிக்கவும், ஆட்சியில் பங்குபெறவும் உரிமை உண்டு என்பவை எந்த மூடனும் மறுக்க முடியாததாகும். ஏதோ சில அயோக்கிய வஞ்சககாரர்களது செல்வாக்குக்காலத்தில்  அவர்களது ஏய்ப்பில் விழுந்த முட்டாள் மன்னர்களான, ஒழுக்க ஈன முள்ள அரசர்கள் காலத்தில் ஏற்பட்ட அக்கிரமங்களாலும், கொடுங் கோன்மைகளாலும் ஜாதி மத வகுப்பு ஆணவர்கள் ஏற்பட்டு ஒரு ஜாதி மத வகுப்பை மற்றொரு ஜாதி மத வகுப்பு அடக்கி ஆளும்படியாகவும், ஒரு ஜாதிமத வகுப்பு உழைப்பில் மற்றொரு ஜாதி மத வகுப்பு சோம்பேறியாய் இருந்து கொண்டு உண்டு வாழும் படியாயும் செய்யப்பட்டு விட்டதினாலேயே எல்லா காலங்களிலும் எல்லா அரசாட்சி களும் அப்படிப்பட்ட வஞ்சகர்களுக்கே உதவியாகவே இருக்கவேண்டுமா என்றும், யாரோ சிலருக்குப் பிழைப்பதற்கு வேறு வழி இல்லாத தினாலேயே அந்த ஈனர்க்களுக்கு கூலியாய் இருக்கும் இழிதகைமையை மற்றவர்களும் அடையவேண்டுமா என்றும் கேட்கின்றோம்.

ஏதாவது ஒரு மனிதன் என்னுடைய மதம் சிறுபான்மை யானது என்றும், என்னுடைய ஜாதி வலியிழந்த ஜாதி யென்றும், என்னுடைய வகுப்பு தாழ்த்தப்பட்டு இழிவுபடுத்தப் பட்டதென்றும் சொல்லி, அதன் காரணமாக ஆட்சியில் எனக்குள்ள பங்கு இன்னது என்பதைத் தெளிவாய்ச் சொல்லி, என்னை நீ அடக்கி ஆள முடியாதபடி செய்துவிடு என்று சொல்வதில் என்ன தப்பு இருக்கின்றது என்று கேட்கின்றோம். இதற்குப் பதில் சொல்லாமல் அப்படிக் கேட்பது குலாம் தன்மை என்றும், தேசத் துரோகத்தனம் என்றும் சொல்லுவதானால் அப்படிச் சொல்லுகின்றவர்களை இப்படிச் சொல்லுவது வயிற்றுப் பிழைப்புக்கு எச்சிலை பொறுக்கும் இழிதன்மை என்று ஏன் சொல்லக் கூடாது. தன் பங்கை தனக்குக் கொடு என்று கேட்டவுடன் கொடுக்க மறுத்த குடும்பங்கள் எல்லாம் அநேகமாய் நாசமுற்றே இருக்கின்றன. ஆகவே எந்த மதக்காரருடைய பங்கையானாலும், எந்த ஜாதி வகுப்புக் காரருடைய பங்கையானாலும் மறுத்து ஏமாற்றப்பார்த்தால் கண்டிப்பாக அந்த நாடு கேடுறுவது திண்ணம். எப்படிக் கேடுற்றாலும் சில பொறுப்பற்ற கூலிகளின் ஜீவனம் நடந்தேறலாம் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை. ஆனால், நாடு கெடும் என்பதை உண்மையும் பொறுப்பும் உள்ள மக்களுக்கு எடுத்துக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

சுமார் ஏழு கோடி தாழ்த்தப்பட்ட மக்களும், சுமார் எட்டுகோடி முஸ்லிம்களும், தங்களுக்கு இந்துக்களிடம் நம்பிக்கை இல்லை என்று சொன்னால் எங்களை நம்பித் தானாக வேண்டும் என்று சொல்ல எந்த இந்துவுக்கு உரிமை உண்டு என்று கேட்கின்றோம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தக்க சமாதானம் சொல்லி சரிப்படுத்த முயற்சிக்காமல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு காந்தி யிடமும், காங்கரசினிடமும் நம்பிக்கை இருக்கின்றது. அம்பேத்காரிடம் நம்பிக்கை இல்லை என்று சில பாவங்களுக்குப் பணம் கொடுத்து சீமைக்குத் தந்தி அடித்து பத்திரிகைகளில் விளம்பரப் படுத்தி விடுவது யோக்கியமான செய்கையாகுமா? என்று கேட்கின்றோம்.

உண்மையிலேயே தாழ்த்தப்பட்ட வகுப்பார்கள் என்பவர் களில் நூற்றுக்குக் கால் பேராவது காந்தியையும் காங்கிரசையும் நம்புகின்றார்களா என்று பந்தயம் கட்டிக் கேட்கின்றோம்.

சீமையில் திரு. காந்தியவர்கள் தாழ்த்தப்பட்டவர் களுக்குக் காங்கிரசும் நானும்தான் பிரதிநிதி என்று சொன்னபோது திரு. அம்பேட்கர் சொன்ன பதிலுக்கு திரு. காந்தி என்னபதில் சொன் னார்? அம்பேட்கர் அவர்கள் நல்ல வெளிப் படையான பாஷையில் காங்கிரசுக்குத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் யாதொரு சம் பந்தமும் இல்லை. காங்கிரசில் தாழ்த்தப்பட்ட மக்கள் கிடையா. அப்படியிருக்கத் திரும்பத் திரும்ப திரு. காந்தியவர்கள் காங்கிரசும் தானும்  தான் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரதிநிதிகள் என்று சொல்லுவது பொறுப் பற்றவர்கள் சொரணையில்லாமல் பேசும் பேச்சாகும் என்று எடுத்துச் சொன்னார். அப்படி இருக்கும் போது மறுபடியும் மறுபடியும் காங்கிரசுதான் தாழ்த்தப்பட்டவர் களுக்குப் பிரதிநிதி என்று சொல்லுகின்ற வர்களுக்குச் சிறிதாவது மானமோ,  சுய மரியாதையோ இருக்குமானால் திரு. அம்பேட்கருக்குப் பதில் சொல்லிவிட்டு மேல்கொண்டு சமாதானம் சொல்ல வேண்டும். அதாவது இன்ன இன்ன தாழ்த்தப்பட்ட மக்கள் இத்தனை, பேர்கள் காங்கிரசில் இருக்கின்றார்கள். அவர் களது நிலைமை இன்னது என்று தெரிவித்துவிட்டு அம்பேட்கரையும் அவரது அபிப்பிராயத் தையும் கண்டிப்பது ஒழுங்காகும். அப்படிக்கில்லாமல் அம்பேட்கர் ஒரு குலாம், எம்.சி ராஜா ஒரு குலாம், என்.சிவராஜ் ஒரு குலாம், மதுரைப்பிள்ளை ஒரு குலாம், அவர்களை ஆதரிக்கின்ற மற்றவர்களும் குலாம் - இழிமக்கள் என்று பேசி விட்டால் எழுதி விட்டால் சமாதானமாகிவிடுமா என்று கேட்கின்றோம். இந்தப்படி பேசுகின்ற எழுதுகின்றவர் களுடைய உண்மை குலாம் தன்மை நமக்குத் தெரியாதா என்பதை அவரவர்களே யோசித்துப் பார்க்க வேண்டுமாய் வணக்கத்துடன் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

தன் பங்கைக் கேட்பவனைக் குலாம் என்றும், அடிமை என்றும், அதிகார வர்க்கத்தினர் கூலி என்றும், எச்சில் பொறுக்கிகள் என்றும் சொல்லத் துணிவதின் கருத்தெல்லாம் பேனாவும், காகிதமும் தன்வசம் இருக்கின்றன என்கின்ற தலைகொழுப்பில்லாமல் மற்றபடி அறிவும் நாணயமும் இருந்து செய்த காரியம் என்று சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.

அன்றியும் வட்ட மேஜை மகாநாட்டு முஸ்லிம் பிரதிநிதிகளைத் துரோகிகள் என்றும், வஞ்சகர்கள் என்றும், முஸ்லீம்களின் தொல்லை, என்றும், முஸ்லீம்களின் முட்டுக் கட்டை யென்றும், முஸ்லிம்களின் வஞ்சகம் என்றும், முஸ்லிம்களின் சூழ்ச்சி என்றும், தலையங்கம் கொடுத்து எழுதுவதே தேசியப் பத்திரிகைகளுக்கு ஒரு யோக்கியதை யாக விளங்குகின்றது. இது தட்டிப் பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன் என்று சொல்வது போல் நடக்கும் காரியமேயல்லாமல் வேறு என்ன என்று சொல்லமுடியும்.  தாழ்த்தப்பட்ட மக்கள் கையிலும், முஸ்லிம்கள் கையிலும் சரியான பத்திரிக்கைகள் இருந்து.  அச்சமுகத்தாருக்கும், தங்கள் உரிமைக்குப் பாடுபடுவதில் இன்னும் சரியான அக்கறை இருந்து அப்பத்திரிக்கைகளை ஆதரித்து பிரபலப் படுத்தி இருந்தால் இந்த தாழ்த்தப்பட்ட மக்கள் கையிலும், முஸ்லிம்கள் கையிலும் சரியான பத்திரிகைகள் இருந்து அச்சமுகத்தாருக்கும் தங்கள் உரிமைக்குப் பாடுபடுவதில் இன்னும் சரியான அக்கரை இருந்து, அப்பத்திரிக்கைகளை ஆதரித்து பிரபலப்படுத்தி இருந்தால் இந்த சமூகங்களின் தலையில் தேசியத்தின் பேரால் சுலபத்தில் கல்லைப் போட்டு விட முடியுமா என்று கேட்கின்றோம். மௌலானா ஷௌகத் அலியைப் பற்றி சில பத்திரிகைகள் வெகு இழிவாய் எழுதத் தொடங்கி விட்டன. மௌலானா ஷௌகத் தலியின் நாணயத்தைவிட எந்த விதத்தில் திருவாளர்கள் காந்தியும், மாளவியாவும், ரங்கசாமி அய்யங்காரும், ராஜகோபாலாச் சாரியாரும், சத்தியமூர்த்தியும் உயர்ந்தவர்கள் என்று கேட் கின்றோம். மௌலானா ஷௌக்கத்தலி அவர்கள் மகமதிய சமுகமாகிய 8 கோடி மக்களுக்கும் சமமான ஆதிக்கம் வேண் டுமென உழைக்கிறார் என்றே வைத்துக் கொள்ளுவோம்.

ஆனால், மேல்கண்ட திரு. காந்தி முதலியவர்களின் உழைப்பு எத்தனை கோடி மக்களின் ஆதிக்கத்திற்கு என்பதை யோசித்துப் பாருங்கள். இந்திய ஜனத்தொகையில் 100க்கு மூன்று பேராய் உள்ள பார்ப்பன வகுப்புக்குமாத்திர மல்லாமல், வேறு வகுப்புக்கு ஆதிக்கமில்லாவிட்டாலும் சமத்துவமாவது கிடைக்கும்படி உழைக்கின்றார்களா? என்று கேட்கின்றோம். இம்மாதிரி சுயவகுப்புப் புலிகளான ஆசாமிகளைத் தேச பக்தர்கள் என்றும், உண்மையான முஸ்லிம் பிரதிநிதிகளை வகுப்புவாதிகள் சூழ்ச்சிக்காரர்கள், குலாம்கள் என்றெல்லாம் சொல்லுவதென்றால் இது எவ் வளவு மோசடியான தந்திர மென்பது யோசித்துப் பார்ப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.

நிற்க, ஒரு சமுகத்தாரிடமோ ஒரு மதக்காரரிடமோ மற்றொரு சமுகத்தார் உண்மையில் வயப்பட்டு பந்தோ பஸ்து விரும்பினால் அவர்களுக்கு சமாதானம் சொல்லி அவர்கள் பயம் தீரும்படியான மார்க்கம் செய்வதை விட்டு விட்டு இந்தப்படியெல்லாம் கேவலப்படுத்தி அவர்களது விருப் பங்களை அலட்சியப்படுத்தி அடக்கி ஆள நினைப்பது ஒரு நாளும் முடியாது என்பதற்காகவும், விஷமப்பிரசாரம் செய்து இழிவுபடுத்தப்பார்ப்பது இனி செல்லாது என்பதற்காகவுமே இதை எழுதுகின்றோம். அன்னியன் கையில் ஆதிக்கமும் பாதுகாப்பும் இருக்கும் போதே இவ்வளவு அக்கிரமங்களும், கொடுமைகளும், வஞ்சகங்களும் மனந்துணிந்து வேண்டு மென்றே செய்கின்ற மக்கள் இனி தங்கள் கைக்கு ஆதிக்கம் வந்தால் என்ன செய்யமாட்டார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியது நடுநிலைமையாளர் கடமையாகும்.

'குடிஅரசு' - தலையங்கம் - 08.11.1931

-  விடுதலை நாளேடு, 23.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக