திங்கள், 1 அக்டோபர், 2018

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் இனமான தீ பறக்கும் அறிக்கை!

இது தந்தை பெரியார் மண்! திராவிடக் கோட்டை!
பெரியார் சிலையை எங்கள் தலையைக் கொடுத்தேனும் காப்போம்!
மூலகாரணமான எச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை?
சென்னை, அக்.1 தந்தை பெரியார் பிறந்த திராவிடக் கோட்டையான தமிழ்நாட்டில் தந்தை பெரியார் சிலையைத் தலை கொடுத்தேனும் காப்போம் என்று தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கை வருமாறு:
பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கூடாது என்பதும், பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதும் தான் சுயமரியாதை யையும், அதற்கான சமூக நீதியையும் வலியுறுத்துகின்ற திராவிட இயக்கம்.
ஜாதி - மதப் பாகுபாடுகளால் மனிதர்களை ஒடுக்குவது மட்டுமின்றி, ஆண் -பெண் என்ற பாலின பேதம் காட்டு வதையும் திராவிட இயக்கம் ஏற்பதில்லை. பெண்களுக் குரிய உரிமைகளை வழங்கி, பெண் விடுதலை வேண்டும் எனப் போராடியும், ஆட்சி செய்யக் கிடைத்த வாய்ப்புகளில், சொத்துரிமை உள்ளிட்ட உரிமைகளை அவர்களுக்கு வழங்கியும், அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்காகப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியும் சாதனை புரிந்தது திராவிட முன்னேற்றக் கழகம்.
வடக்கே அம்பேத்கர் - தெற்கே தந்தை பெரியார்
அந்த வகையில்தான், சபரிமலை கோவிலில் பெண் களின் வழிபாட்டு உரிமைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் அளித்த நல்ல முற்போக்கான தீர்ப்பினைக் கொள்கைப் பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் உங்களில் ஒரு வனாக - உங்களால் அடையாளம் காட்டப்பட்டிருக்கும் தலைவனாக வரவேற்றுள்ளேன். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் விதைத்த விதை, பேரறிஞர் அண்ணா வளர்த்த நாற்று, தலைவர் கலைஞர் காலமெல்லாம் பாதுகாத்து வளர்த்த மரம் - அதுதான் இன்றைக்கு இந்தியா முழுவதும் சமூக நீதியாக விழுது பரப்பி, ஒடுக்கப்படுகின்ற அனைவருக்கும் நிழல் கொடுக்கிறது. வடக்கே அண்ணல் அம்பேத்கர் பாடுபட்டார். தெற்கே தந்தை பெரியார் போராடினார். வள்ளலார், நாராயணகுரு என ஒவ்வொரு மாநிலத்திலும் சீர்திருத்தவாதிகள் தங்கள் கருத்துகளைப் பரப்பினர். அவற்றின் ஒட்டுமொத்த விளைவுதான் உச்சநீதி மன்றம் வழங்கியிருக்கிற பாலின சமத்துவம் மிகுந்த தீர்ப்பு.
கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட போது ஆற்றிய உரையிலேயே, நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்லர் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளேன். அவரவர் நம்பிக்கையும், அதற்கான உரிமைகளும் காக்கப் படவேண்டும் எனப் போராடுவதே திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு கால வரலாறு. அனைத்து ஜாதியினரும் அர்ச் சகராக வேண்டும் என்பதும், பெண்களுக்கு வழிபாட்டு உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதும் அவரவர் நம்பிக்கையைக் காக்கின்ற செயல்பாடுகளே!
அனைத்து மதத்தினரும் அவரவருக்குரிய உரிமை களைப் பெற்று இணக்கமாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் திராவிட முன்னேற்றக் கழகம் தனது தோழமை சக்திகளுடன் கரம் கோர்த்துச் செயல்பட்டு வருகிறது. அதற்கு மாறாக, மதவெறியைத் தூண்டி, கலவர  நெருப்பைப் பற்ற வைத்து, அமைதியைக் குலைத்து அதன் மூலம் தேர்தல் ஆதாயம் அடைய முடி யுமா என நினைக்கின்ற அரசியல் சக்திகள் தமிழ்நாட்டில் புதிய வகை ஆபத்தான கலாச்சாரத்தை உருவாக்கி வருகின்றன.
அனைத்து தமிழர்களாலும் மதம். - ஜாதி கடந்து போற்றப்படும் தலைவரான தந்தை பெரியாரின் சிலை களைக் குறி வைத்துத் தாக்கும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. பெரியாரின் பிறந்த நாளான செப் டம்பர் 17 அன்று சென்னையிலும், திருப்பூர் மாவட்டத் திலும் பெரியார் சிலையை அவமதிப்பு செய்த கயவர் கள்மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறைகூவல் விடுத்து அறிக்கை வெளியிட்டேன்.
ஆட்சியாளர்களின் அலட்சியம் தொடர்கின்ற காரணத் தால், கயமைத்தனம் ஊக்கம் பெற்று, கடந்த 24 ஆம் தேதி திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ள பெரியார் சிலையின் கைத்தடி சேதப்படுத்தப்பட்டது. அதேநாளில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவராபட்டில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்ய நினைத்திருக்கிறார்கள்.  இதுமட்டுமல்ல, சேலம் மாவட் டத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலையையும் சேதப்படுத்தி யுள்ளனர் மதவெறி தலைக்கேறிய மூடர்கள்.
மானமும் அறிவும் மனிதர்க்கழகு என்றவர்
தந்தை பெரியார்
‘‘மானமும் அறிவும் தான் மனிதருக்கு அழகு'' என்ற தந்தை பெரியார் அவர்கள் தன்மானத்தை வலியுறுத்தினார். அந்த தன்மானத்தை விட இனமானம் பெரிது என்றார் அவர். இந்த இனம் தலைநிமிர்ந்து வாழ சொல்லடியும், கல்லடியும் ஏற்று ஓயாது உழைத்து, இனத்தின் மானம் காத்தவர். கடலூரில் எந்த இடத்தில் தன் மீது செருப்பு வீசப்பட்டதோ அங்கேயே சில ஆண்டுகள் கழித்து அவ ருக்கு, அவர் முன்னிலையிலேயே தலைவர் கலைஞர் அவர்களின் கரங்களால் சிலை திறந்து வைக்கப்பட்ட புரட்சி வரலாற்றுக்குச் சொந்தக்காரர். உயிருடன் இருந்த போதே அவரை ஒன்றும் செய்ய முடியாத செருப்புகளால், வரலாறாய் உயர்ந்து நிற்கும் பெரியாரை என்ன செய்துவிட முடியும்?
எச்.ராஜா விதைத்த நச்சு விதை!
இதையறியாத சில மூடர்கள் தொடர்ச்சியாகப் பெரியார் சிலைகளை அவமதிப்பு செய்யும் வேலைகளில் இறங்கி, தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்க நினைக் கின்றனர். குறிப்பாக திரிபுராவில் புரட்சியாளர் லெனின் சிலை பா.ஜ.க. ஆட்சியாளர்களால் அகற்றப்பட்டபோது; அதுபோலவே தமிழ்நாட்டில் உள்ள பெரியார் சிலைகள் அகற்றப்படும் என பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் எச்.ராஜா விதைத்த விஷ விதைக்குப் பிறகே, இந்த நச்சுக் கலாச்சாரம் பற்றிப் பரவத் தொடங்கியிருக்கிறது. அந்த எச்.ராஜாவின் நிழலுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருக் கும் தமிழக காவல்துறையின் போக்கினால், தமிழ்நாட்டை வன்முறைக்காடாக மாற்ற மாநில ஆட்சியாளர்கள் மறைமுகமாகத் துணை போய்க் கொண்டிருக்கிறார்கள்.
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வின் தாளத்திற்கேற்ப ஆடும் ஊழலில் புழுத்த அ.தி.மு.க. ஆட்சி, ‘ரிமோட் கண்ட்ரோலில்’ இயங்கும் பொம்மை கார் போல முன்னும் பின்னுமாகப் போய்க் கொண்டிருக்கிறது. விரைவில் குட்டிச்சுவரில் போய் முட்டிக்கொள்ளும் என்ற நிலையில், அதற்கு முன்பாகத் தமிழகத்தை குட்டிச்சுவராக்கி விடுமோ என்ற அச்சம் மக்களின் மனதில் எழுந்துள்ளது.
கமிஷன் + கலெக்ஷன் + கரப்சன் =
அ.தி.மு.க. ஆட்சி!
கமிஷன் - கலெக்ஷன் - கரப்ஷன் என கொள்ளையையே கொள்கையாகக் கொண்டுள்ள அ.தி.மு.க. ஆட்சி, மத்திய பா.ஜ.க. அரசிடம் மண்டியிட்டு அது சொல்வதற்கேற்ப, முக்கிய பிரச்சினைகளைத் திசை திருப்பிக் கொண்டி ருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஈழப் பிரச்சினை தொடர்பாக தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் எதிராக அ.தி.மு.க. நடத்திய கவர்ச்சி நடன கேலிக்கூத்துப் பொதுக் கூட்டம் அந்த திசை திருப்பலுக்கு ஒரு சான்று. ராஜபக்சே ஏதோ சொல்லிவிட்டார் என்று எதிர்க்கட்சிக்கு எதிராக ஆளுங்கட்சி போராட்டம் நடத்திய அருவருப்பான அதிசயத்தை அ.தி.மு.க அரங்கேற்றி முடித்த நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா அமெரிக்காவில் ராஜபக்சேவுக்கு நேரெதிரான மற்றொரு அவதூறு கருத்தை தெரிவித்திருக்கிறார். இலங்கை நாட்டின் அரசியலில் இருவருக்கும் நடக்கும் அதிகாரப் போட்டியில் அவர்கள் உளறிக் கொட்டுவதை இங்கே உள்ள அதிமேதாவித்தனமான அ.தி.மு.க.வினர் தங்கள் எஜமானரான பா.ஜ.க. தலை வர்கள் சொல்லுக்கேற்ப அரசியல் செய்து அதிலாவது ஆதாயம் தேடலாம் என நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது.
‘‘தலையைக் கொடுத்தேனும்
பெரியார் சிலையைக் காப்போம்!''
பா.ஜ.க.வின் மதவெறி முகத்தையும், அ.தி.மு.க. ஆட்சியின் அடிமைத் தனத்தையும் தமிழக மக்கள் முழு மையாக உணர்ந்துள்ளனர். மக்கள் நலனுக்காகப் போராடு பவர்கள் மீதும், பொதுக்கூட்டங்களில் பேசுகின்றவர்கள் மீதும் கைது நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு, நீதிமன்றத்தையும், காவல் துறையையும் இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நாடே கேட்கிறது. மனசாட்சி கொண்ட அ.தி.மு.க. தொண்டர்களும் கேட் கிறார்கள். பா.ஜ.க.வின் பின்னணியில் எச்.ராஜாவின் திட்டமிட்ட வன்முறைச் செயல்களின் விளைவுதான், தந்தை பெரியார் சிலைகள் மீது வைக்கப்படும் குறி. அதனைக் கண்டுகொள்ளாமல் அ.தி.மு.க ஆட்சியாளர்கள் இருப்பார்களேயானால், தி.மு.கழகம் பொறுத்துக் கொண் டிருக்காது. ஏனெனில், இது பெரியார் மண்; திராவிடக் கோட்டை. இங்கே அமைதியைக் குலைக்கும் வெறியுடன் குரோத வால்கள் ஆடினால் கொள்கை வாள்கள் உயரும். பெரியாரின் இலட்சியப் புகழ் காக்க, எங்கள் தலையைக் கொடுத்தேனும் அவரது சிலையைக் காப்போம்.
அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள அ.தி.மு.க. ஆட்சி யாளர்கள் ஏன் செயல்படாமல் இருக்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். அதனை இன்னும் உரக்க விளக் கிடத்தான் அக்டோபர் 3, 4 ஆகிய இரு நாட்களும் தமிழ் நாடு முழுவதும் 120 இடங்களில் தி.மு.கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. எடப்பாடி பழனி சாமியும் அவரது தலைமையிலான கொள்ளைக் கூட்டமும் செய்யும் தகிடுதத்தங்களையும், அதனால் தமிழ்நாடு அடைகின்ற கடும் பாதிப்பையும் விளக்கிட கழகம் களம் இறங்குகிறது. தந்தை பெரியாரின் கொள்கைகளை, - பேரறிஞர் அண்ணாவின் இலட்சியங்களை, - தலைவர் கலைஞரின் கோட்பாடுகளை உயர்த்திப் பிடித்திட உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்று திரண்டிடுக!  என உங்களில் ஒருவனாக, இருகரம் கூப்பி அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்!
- இவ்வாறு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விடுதலை நாளேடு, 1.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக