சனி, 27 ஜூலை, 2019

கண்ணை மூடிப் பின்பற்றுங்கள்! கருப்புச் சட்டையை எங்கும் பரப்புங்கள்! -II (2)

05.06.1948 - குடிஅரசிலிருந்து.... -

சென்ற வாரத் தொடர்ச்சி

இந்த இடத்தில் அரசமரமும், வேப்பமரமும் இல்லையே சுற்றிச் சென்றால் கர்ப்பம் தரிக்கு மென்று சுற்றிப் போவதற்கு! இது திருப்பதியும் அல்லவே, உள்ள காசைப் பார்ப்பானிடம் பறி கொடுத்து விட்டு மொட்டை அடித்துக்கொண்டு போக.

கோயிலுக்குப் போகாதீர்! குண்டர்களுக்குப் பொருளைக் கொடுக்காதீர்!

இது அறிவு பற்றிப் பேசும் இடம். ஆகவே, நீங்களும் ஏதாவது அறிவு பெற்றுச் செல்ல வேண்டாமா? கொஞ்சம் காது கொடுத்துக் கவனத்தோடு கேளுங்கள். தாய்மார்களே! நீங்கள் தற்போது தழுவி நிற்கும் இந்துமத வருணாசிரம தர்மப்படி, நீங்கள் சூத்திரச்சிகள், பார்ப்பனனின் தாசிகள் என்பதை முதலில் உணர்ந்து கொள் ளுங்கள். கடவுள்களுக்கும் நீங்கள்தான் தாசிகள். எந்தக் கடவுளும் சூத்திரச்சிகளுடன்தான் லீலை செய்ததாகப் புராணக் கதைகள் கூறுகின்றனவே ஒழிய, எந்தக் கதையும் கடவுள் பார்ப்பனத்திகளோடு லீலை செய்ததாகக் கூறக்காணோம். கடவுள் அவதாரமெல்லாம் நம் பெண்களின் கற்பைத்தான் சோதித்ததாகக் கதைகளில் கூறப்படுகிறதே ஒழிய, நம்மவரின் பெண்களைத்தான் கைப்பிடித் திழுத்துக் கற்பழித்ததாகக் கூறப்படுகிறதே ஒழிய, எந்தக் கதையிலும் பார்ப்பனப் பெண், கடவுளால் கற்பழிக்கப்பட்டதாகக் கூறப்படக் காணோம். அவ்வளவு இழிவு படுத்திவிட்டார்கள் இந்த அன்னக்காவடி பார்ப்பனர்கள் நம்மை. இதை யறியாமல் நீங்கள் இன்னும் அவன் காலடியில் வீழ்ந்து காசு பணம் அழுது வருகிறீர்கள்.

இனி நீங்கள் ஒரு காசு கூட எந்தப் பார்ப் பானுக்கும் அழக்கூடாது. உங்கள் வீட்டு நல்ல காரியங்களுக்கோ, கெட்ட காரியங்களுக்கோ அவனை ஒரு நாளும் அழைக்கக் கூடாது. நீங்கள் கோயிலுக்குப் போகக் கூடாது.போவதாயிருந் தாலும் பார்ப்பான்தான் பூசை செய்ய வேண்டு மென்கிற கட்டுத்திட்டம் உள்ள கோயிலுக்கோ இரண்டு பெண்டாட்டிகளைக் கட்டிக்கொண்டு, அதோடு ஒரு வைப்பாட்டியையும் வைத்திருக்கும் சாமிகளுள்ள கோயிலுக்கோ, நீங்கள் கட்டாயம் போகக் கூடாது.

போவதானால் தடியுடன் போங்கள்

அப்படிப் போவதானால், போகும்போது ஒரு தடி எடுத்துக் கொண்டு போங்கள், தேங்காய் வெற்றிலை பாக்குக்குப் பதிலாக! அந்தத் தடியால் அடித்துக் கேளுங்கள் அந்தச் சாமியை! நான் தடியால் அடிக்கிறேன். நீ அழாமல் இருக்கிறாயே! உனக்கு உயிர் கிடையாது, நீ வெறும் குழவிக் கல் சாமி, அதனால்தான் நான் அடிப்பது உனக்குத் தெரியவில்லை. அப்படியிருக்க உனக்கேன் பெண்டாட்டி? அப்படித்தான் பெண்டாட்டி வேண்டுமென்றால் ஒரு பெண்டாட்டி போதாதா? இரண்டு பெண்டாட்டி ஏன் உனக்கு? இரண்டு பெண்டாட்டிகள்தான் இருந்து தொலையட்டும். ஒரு தடவை அவர்களைக் கலியாணம் செய்து கொண்டால் போதாதா? வருடா வருடம் ஏன் உனக்குக் கலியாணம் நடக்க வேண்டும்? அதுவும் போதாதென்று வைப்பாட்டிகள் வேறு வேண்டு மென்கிறாயே! இது நியாயமா? இத்தனையும் வேண்டுமானால் வைத்துக்கொள். அண்டங்களை எல்லாம் படைத்த உனக்கு நாங்கள் ஏன் சாமி படியளக்க வேண்டும்? உனக்கு வேண்டியதை உன்னால் தேடிக் கொள்ள முடியவில்லை. நீயா எங்களுக்குப் படியளக்கப் போகிறாய்? ஏன் சாமி மவுனம் சாதிக்கிறீர்கள்? கல் இல்லையானால், நீர் உண்மையில் கடவுள் ஆனால், நாங்கள் தரும் பொருள் உனக்குச் சேர்வதில்லை யானால், உன் பேரால் எங்களைக் கொள்ளை யடித்து வாழும் இந்த அன்னக்காவடிப் பார்ப்பானை ஏன் நீர் தண்டிக்கக் கூடாது? என்று தடியால் அடித்துக் கேளுங்கள். பதில் இல்லையானால் நாங்கள் கூறுவதுபோல் அது வெறும் குழவிக்கல் என்பதை அறிந்து கொண்டு வீடு திரும்புங்கள். பிறகு ஒரு வார்த்தை உங்களை எதிர்த்துப் பேசுவார்களா, உங்கள் கணவர்கள்?

இந்தக் கடவுளா உங்கள் கடவுள்

கடவுளுக்கே இந்தக் கதியானால் அவர்கள் தம் கதி என்னவாகும் என்று அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா? அப்புறம் ஒரு நாள் வெளியே போவார்களா? உங்கள் புருஷர்கள்; வேறு மங்கையர்களைத் தேடி. அந்தச் சாமியை அடித்து வைத்தவன் நம்மவன். அந்தச் சாமிக்கு உயிர் பிச்சை கொடுக்க கும்பாபிஷேகம் நடத்த உதவியது நம்முடைய பொருள். அந்த சாமிக்கு அரிசி, பருப்பு அழுது வருவது நாம். அப்படியிருக்க நாம் அதைத் தொடக் கூடாதென்று அந்த பார்ப்பான் கூறுகிறானென்றால் அப்படிப்பட்ட இடத்திற்கு நாம் போகலாமா? அதற்குத் தேங்காய் பழம் படைக்கிறீர்களே, துணிமணி வாங்கித் தருகிறீர்களே? அதை அந்த குழவிக் கல்லா அனுபவிக்கிறது? குழவிக் கல்லால் சாப்பிட முடியுமா? சாப்பிட்டால் ஜீரணமாகி வெளிக்குப் போகிறதா? எல்லாவற்றையும் பார்ப்பான்தானே அனுபவிக்கிறான்? பாடுபட்ட பணத்தை அப்படி விரயமாக்கலாமா நீங்கள்? கடவுள் என்றால் அது யோக்கியமாக, ஒழுக்கமாக பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டாமா? பாடுபடும் நீங்கள் பட்டினி கிடக்க, படிக்க வசதியின்றித் தற்குறிகளாயிருக்க, ஏழைகளாக, கீழ் ஜாதி மக்களாக இருக்க, பாடுபடாத பார்ப்பனத்திகள் சோம்பேறிகளாக, அய்.சி.எ. காரர்களின் மனைவிகளாக, பட்டாடை உடுத்தி மேனி மினுக்குடன் உயர் ஜாதி மக்களாக வாழ அனுமதிக்கும் கடவுளா உங்களுக்குக் கடவுள்?

பாப்பாத்தி மொட்டையடிக்கிறாளா?

பார்ப்பான் காவடி தூக்குகிறானா?

கடவுள் என்றால் கல், களிமண், புல், பூண்டு, செடி, கொடி, கழுதை, குதிரை, சாணி, மூத்திரம் இத்தனையும் கடவுளா? கடவுள் என்றால் அறிவுக்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண் டாமா? திருப்பதிக்குப் போய் மொட்டையடித்துக் கொண்டு வருகிறீர்களே! சாமி மயிரா கேட்கிறது? எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதிக்குப் போய் மொட்டையடித்துக் கொண்டு வருகிறாளா? இப்போது தாலியறுத்தால் கூட அவர்கள் மொட் டையடித்துக் கொள்வதில்லையே? மொட்டை யடிக்கப்படும் என்று தெரிந்தால் அதற்கு முன்பே வீட்டை விட்டு யாருடனாவது ஓடி விடுகிறார் களே! அப்படி இருக்க உங்கள் மயிரைத்தானா சாமி கேட்கும்? உங்கள் கணவன்மாரைக் காவடி தூக்கிச் செல்ல அனுமதிக்கிறீர்களே அது தகுமா? எந்தப் பார்ப்பானாவது பழனி ஆண்டவனுக்குக் காவடி தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அய்ந்து புருஷர்கள் போதாதென்று 6 ஆவது புருஷனையும் விரும்பிய துரவுபதியம்மாளை போய்க் கும்பிடுகிறீர்களே! அவளுக்கு மாவிளக்கு வைக்கிறீர்களே, உங்களுக்கு இன்னும் அதிகப் படியான புருஷர்கள் வேண்டுமென்று வரங் கேட்கவா, அந்தப்படி செய்கிறீர்கள்? திராவிடத் தாய்மார்களாகிய உங்களுக்கு அடுக்குமா இது?

இரண்டு பணிகள்!

பன்னெடுங்காலமாகவே அறிவீனர்களாக ஆக்கி வைக்கப்பட்டிருக்கும் திராவிட மக்களுக்குச் சிந்தனை அறிவை உண்டாக்கி வைப்பதுதான் திராவிடர் கழகத்தின் முதல் பணி. திராவிடர்களின் இழி தன்மையைச் சூத்திரத் தன்மையைப் போக்குவதுதான் அதனுடைய இரண்டாவது முக்கிய பணியாகும்.

- பெரியார் குடிஅரசு -  20.03.1948

- விடுதலை நாளேடு, 27.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக