வெள்ளி, 26 ஜூலை, 2019

சாமியும் சுயராஜ்யமும் பார்ப்பனர் நன்மைக்கே!

தந்தை பெரியார்




இன்று நாங்கள் செய்துவரும் இந்தத் திராவிடர் கழகப் பிரசாரத்துக்குப் பார்ப்பனர்கள் எதிரிகள்; காங்கிரஸ் காரர்கள் எதிரிகள்; கம்யூனிஸ்டுகள் எதிரிகள்; மதவாதிகள் எதிரிகள்; இவர்கள் எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். இவற்றிற்கெல்லாம் பார்ப்பனர்களே தலை வர்கள். பார்ப்பனர்கள் பிழைப்புக்கு ஆதரவளிப்பதற்கே இந்த ஸ்தாபனங்கள் இருக்கின்றன. ஆதலால் நாங்கள் இந்த எதிர்ப்புக்களைச் சமாளித்தால்தான் எங்கள் வேலை நடைபெறமுடியும்.

பார்ப்பானும் கல்லும் சாமிகளா?


நான் சாமி இல்லை  என்று சொல்லுவதாகவே வைத்துக் கொள்ளுங்கள், அதற்காக இந்த ஆள்களுக்கு ஏன் ஆத் திரம் வர வேண்டும்? இன்று நீங்கள் யாரை சாமி என் கிறீர்கள்? பார்ப்பனனைத்தானே சாமி என்கிறீர்கள்? பிறகு கல்லுகளையும், பொம்மைகளையும்தானே சாமி என்கிறீர்கள்; இவை சாமி ஆகுமா? நீங்கள் எதற்காக மனிதனைச்  சாமி என்று கூப்பிடுகிறீர்கள்? எதற்காக மனிதனைச் சாமி என்று  கூப்பிட்டுக் கையெடுத்துக் கும்பிடுகிறீர்கள்? மற்றும், கல் பொம்மை சாமிகளும் பார்ப்பான் மாதிரித்தானே செய்து  வைக்கப்பட்டிருக்கின்றன? பார்ப்பானுக்கு உச்சிக்குடுமி என்றால், சாமிக்கும் உச்சிக்குடுமி! பார்ப்பானுக்குப் பூணூல் என்றால் சாமிக்கும் பூணூல்!  பார்ப்பானுக்குப் பஞ்சகச்சம், வேட்டி என்றால் சாமிக்கும் பஞ்சகச்சம், வேட்டி! பார்ப்பானை நாம் தொடக்கூடாது என்றால், சாமியையும் நாம் தொடக்கூடாது. பார்ப்பானை நாம் தொட்டால் தோஷம் என்றால் சாமியையும் தொட்டால் தோஷம்! இப்படியாகப் பார்ப்பானும், பார்ப்பானைப்போல் உருக்கியும், அடித்தும் வைத்த பொம்மைகளும், எழுதி வைத்த சித்திரங்களும்தான் சாமிகளாக இருக்கின்றனவே தவிர,வேறு எது உங்களுக்குச் சாமியாக இருக்கிறது?  இந்தச் சாமிகளை நாங்கள் சாமிகள் அல்ல என்கிறோம். இதில் தப்பு என்ன? நீங்கள் சொல்லுங்கள், எதற்காக ஒரு மனிதனை சாமி என்று கூப்பிடுவது? அந்த மனிதன் எந்த விதத்தில் உங்களைவிட மேலானவன் ஆவான்? நம் ஜனங்களுக்கு வெட்கமில்லை, மானமில்லை என்பதல் லாமல் வேறு என்ன? இந்த ஊரில் ஒன்றோ இரண்டோ, பார்ப்பன வீடுகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன், அந்தப் பார்ப்பனரின் விஷமச் செய்கைதான் சுவரில் இப்படி எழுதச் செய்தது என்றும் சொன்னார்கள்.

பார்ப்பன ராஜ்யமே சுயராஜ்யம்!


உங்களுக்கு  சாமியைப்பற்றி புத்தி எவ்வளவு இருக் கிறதோ, அவ்வளவு புத்திதான் உங்களுக்கு சுயராஜ்யம், பொதுவுடைமை, நேதாஜி, ஜெய்ஹிந்த், என்பவைகளைப் பற்றியும் இருக்கிறது. சுயராஜ்யம் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? சுயராஜ்யம் என்றால் பார்ப்பான் மந்திரி, பார்ப்பான் பெரிய அதிகாரி, பார்ப்பான் கொள்ளை என்பதல்லாமல் வேறு மாறுதல் என்ன என்று கேட்கிறேன். உங்களுக்கு சுயராஜ்யம் வந்தால் பார்ப்பானுக்குச் சாமிப்பட்டம், பிராமணப்பட்டம், மேல்ஜாதிப்பட்டம், போய்விடுமா? அல்லது உங்களுக்குச் சுயராஜ்யம் வந்தால் உங்களுக்குள்ள சூத்திரப்பட்டம், பஞ்சமப்பட்டம், கீழ்ஜாதிப் பட்டம், போய்விடுமா? சொல்லுங்கள் பார்ப்போம் அல்லது இங்கு யாராவது காங்கிரஸ்காரர் இருந்தால் இங்கு வந்து சொல்லட்டுமே பார்ப்போம். பித்த லாட்டமும், புரட்டும் சுயராஜ்யம் என்று சொல்லப்படுவ தல்லாமல், யோக்கியமும், நாணயமும்தான் சுயராஜ்யம் என்று யாராவது சொல்லட்டும்! நான் இப்படிச் சொல் லுவதால் சுயராஜ்யம் வேண்டாம் என்று சொல்லுவதாக யாராவது கருதினால் அது தவறு, தவறு என்றே சொல்வேன்.

இன்று மக்களுடைய மானமற்ற தன்மை யும், மடத் தனமும், ஏமாந்த தன்மையும்தான்  சாமியாக, சுயராஜ்யமாக இருந்து வருகின் றனவே தவிர உண்மைக் கடவுளும், உண்மை சுயராஜ்யமும் உங்களுக்குத் தெரியவே தெரியாது. உங்களுக்கு யாரும்  சொல்லவும் இல்லை! விளக்கவும் இல்லை!

ஓரவஞ்சனை செய்யும் சாமி


உண்மையான கடவுள் ஒன்று இருக்கிறது என்றால் பாடுபடாத சோம்பேறி,  பித்தலாட்டக் கூட்டத்தார் வயிறு வீங்கச் சாப்பிடவும், பாடுபடும் பாட்டாளி மக்கள் பட்டினி கிடந்து, உடுத்த உடையில்லாமல், இருக்க வீடில் லாமல், படிக்க எழுத்து அறிவில்லாமல் இருக்கவும் முடியுமா என்று கேட்கிறேன்?  சாமியைப் பற்றிக் கவலை கொள்ளுகிற எவனுக்காவது இந்தக் குறைகளைப் பற்றிய கவலை இருக்கிறதா? என்று கேட்கிறேன்.

கோவில்கட்டி கும்பாபிஷேகம் பண்ணின ஜாதியார் கீழ்ஜாதியார் என்றும், சூத்திரன் என்றும், அழைக்கப்படு வதை, நடத்தப்படு வதை எந்தச் சாமியாவது தடுத்ததா? என்று கேட்கிறேன்.

அதுபோலவே, எந்தச் சுயராஜ்யத் திலாவது அல்லது இப்போது பேசப்படுகிற, கொடிகள் பறக்கின்ற மகாத்மாக் களோ, ரிஷிகளோ, வீரசூரதளபதிகளோ, தியாகமூர்த்தி களோ, வீராங் கனைகளோ, லட்சுமிகளோ, தேவிகளோ, தலைவர்களோ இருந்து நடத்துகின்ற எப்படிப்பட்ட சுயராஜ்யத்திலாவது பிராமணன், சூத்திரன், பஞ்சமன், மிலேச்சன் இல்லாமல் ஒரே ஜாதி மக்கள் உள்ள சுயராஜ்யமாய் இருக்குமா என்று கேட்கிறேன்? யாராவது பதில் சொல்லட்டுமே பார்ப்போம்! இங்கு பல கொடிகள் கட்டிய கொடி வீரர்களாவது, ஜெய்ஹிந்த் கூப்பாடுபோடும் நேதாஜி சங்கத்தாராவது, காங்கிரஸ் சமதர்மிகளாவது, யாராவது சொல்லட்டுமே, பார்ப்போம்!  சாமி இல்லை என்கிறவனும், தேசத்தைக் காட்டிக் கொடுத்தவனும் வரு கிறான்; ஒருவரும் போகா தீர்கள், என்று துண்டுப் பிரசுரம் போட்டுச் சுவரில் எழுதி விட்டால் போதுமா? வெட்கமும் இல்லை! அறிவும் இல்லையே! என்றால், இந்தக் கூட்டத் தாரின் இழிவான வாழ்வு எதற்குப் பயன்படும் என்று கேட்கிறேன்.

சாமி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, சுய ராஜ்யம் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, இந்த நாட்டுப் பழம் பெரும் குடிமக்களாகிய நாம் 100-க்கு 90 பேர் கொண்ட திராவிடர்கள் சூத்திரர் அல்லர், அடிமைகள் அல்லர், பஞ்சமர் அல்லர், கடை ஜாதியார் அல்லர், மக் களை ஏமாற்றி  வஞ்சித்துப் பாடுபடாமல் வயிறு வளர்க்கும் சோம்பேறிக் கூட்டத்தவரான பிராமணர் அல்லர், மேல் ஜாதியார் அல்ல யாவரும் ஒரு குல மக்களே! சரிநிகர் மக்களே யாவரும் என்று ஆகவேண்டும். இதுதான் திராவிடர் கழகத்தினரின் முதலாவதும், முக்கியமுமான குறிக்கோளாகும். இதற்கு நீங்கள், பார்ப்பனப் பித்தலாட்ட ஸ்தாபனம் எதுவானாலும் அதிலிருந்து விலகி ஆக வேண்டும். பார்ப்பன கடவுளும், பார்ப்பன மதமும், பார்ப்பனத் தேசிய (சுயராஜ்ய)மும் தான் நம்மை இன்று இந்த இழிநிலைக்கு ஆளாக்கிவிட்டன என்பேன்!

பார்ப்பனரில் இன்று 100-க்கு 100 பேர் படித்து இருக் கிறார்கள். திராவிடர்களாகிய கவுண்டர்கள், காணியாளர் களாகிய நீங்கள் 100-க்கு 90 பேர் படிப்பில்லாத, கைநாட்டுத் தற்குறிகள்! ஏன் என்று எந்தப் பார்ப்பானை யாவது கேட் டீர்களா? நீங்களாவது யோசித்தீர்களா? ஏதோ ஒரு கவுண்டர் சட்டசபை மெம்பர், ஜில்லா போர்டு பிரசி டெண்ட், பிளாக் மார்க்கெட்டில் லட்சக்கணக்காக கொள்ளையடித்தால் போதுமா?

பார்ப்பான் உழுகின்றானா?


பார்ப்பான் பாடுபடாமல் கையில் மண்வெட்டி, கலப்பை, ஏர் தொடாமல் இந்தப்பஞ்ச காலத்தில் வயிறு வீங்க சாப்பிட்டுக் கொண்டிருக்கவும், நீங்கள் எப்படிப்பட்டவர் களானாலும், காட்டுவேலை, மூட்டை தூக்கும் வேலை, ஆகிய உடலுழைப்பு வேலைகள் செய்து அரிசி, பருப்பு, துணிக்குத் திண்டாடவும், அதிகாரிகள் உங்களை மிருகங்களிலும் கேவலமாய் நடத்தவும், 100-க்கு 90 மக்கள் இருக்கிறீர்களே! ஏன்? என்று உங்கள் சட்டசபை மெம் பர்களை, பிரசிடெண்டுகளை, கள்ளமார்க்கட் இளவரசர் களைக் கேட்டீர்களா? பார்ப்பனத் தாய்மார்கள் 18 முழம் சேலைபட்டு, ஜரிகைத்துணி ரவிக்கை, வைரம், கெம்பு, தங்கம், மின்னல் நகைகளைப் போட்டுக்கொண்டு குலுக்கு நடை நடக்கவும், உங்கள் தாய், தங்கை, குழந்தைமார்கள் கிழிந்த ஜால்ரா துணி கட்டிக்கொண்டு ஒரு பக்கம் இழுத்தால் ஒரு பக்கம் நழுவும்படி, புல்லும், விறகும், சுப்பியும் சுமந்து தினம் 4, 5 மைல் நடக்கவும் ஆடு, மாடு மேய்த்துப் பால், தயிர், வெண்ணெய் சேர்த்துப் பார்ப்பனர், பட்டணத்தவர் வயிறுகள் என்னும் டாங்கியில் கொட்டி விட்டு எலும்புக்கூடு தெரியும்படி திண்டாடுகிறார்களே, ஏன் என்று கேட்டீர்களா? ஒருவர் இருவர் மெத்தை வீடு கட்டிக்கொண்டு மோட்டார், குதிரை வண்டி வைத்துக் கொண்டு,பணம் சேர்த்து பிரபு வாகுமாறு, பார்ப்பான் இடம் கொடுத்துவிட்டால் போதுமா?

இப்போது தெரிகிறதா, சாமி பேராலும் சுயராஜ்யத்தின் பேராலும் பார்ப்பனர் செய்யும் பித்தலாட்டமும், சாமி இல்லை என்கிறவனும் நாட்டைக் காட்டிக் கொடுத்த வனுமான ராமசாமி வருகிறான், வரவேற்காதீர்கள், அவன் கூட்டத்திற்குப் போகாதீர்கள் என்று பார்ப்பனர்களும் அவர்கள் அடிமைகளும் சுவர்களில் செம்மண்ணால் எழுதியதின் இரகசியமும்? என்று கேட்கிறேன்.

(பெரியார் அவர்கள் தமது கோஷ்டியாருடன் காஞ்சிக்கோவிலில் செல்லும்பொழுது சுவரில், 'சாமி இல்லை என்று சொல்லும் பாவி ராமசாமி ஒழிக' என்று ஒருசில இடங்களில் எழுதியதற்குப் பதில்கூறும் முறையில் பெரியார் தமது சொற்பொழிவைத் துவங்கினார்.)

(20.01.1947 அன்று ஈரோட்டிற்குப் பதினேழு கல் தொலைவில் உள்ள காஞ்சிக் கோவில் என்னும்

ஊரில் பி.சண்முகவேலாயுதம் தலைமையில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு - சொற்பொழிவு - 25.01.1947

- விடுதலை நாளேடு, 21.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக