வெள்ளி, 5 ஜூலை, 2019

சுயராஜ்யம் (முதல் அத்தியாயம்) - சித்திரபுத்திரன்

03.04.1948 - குடிஅரசிலிருந்து...

கத்தி இன்றி இரத்தமின்றி இந்திய சுதந்திரம் பெற நடத்திய அகிம்சைப் போராட்டத்தில் 945 தபால் ஆபீசுகள், 332 ரயில்வே ஸ்டேஷன்கள் கொளுத்தப் பட்டன, இடிக்கப்பட்டன. 60 இடங்களில் ரயில் கவிழ்க்கப்பட்டன.

இவை தவிர, கொளுத்தப்பட்ட சர்க்கார் கச்சேரிகள் பல. கொளுத்தப்பட்ட கோர்ட்டு ரிகார்டுகள் ஏராளம். கத்தரித்த தந்திக் கம்பிகள் பல மைல் நீளம்.

பெயர்த்த தண்டவாளங்கள் பல மைல் கள் தூரம், கொல்லப்பட்ட அதிகாரிகள் பலர்

ஆகிய இவை யாவும் உங்களுக்குத் தெரிந்தது தானே.


சுதந்திரம் கிடைத்த பின்பு


இவைதாம் போகட்டும் என்றால் சுதந்திரம் கிடைத்த பின்பும் அகிம்சா, சுயராஜ்யத்தில் இடிக்கப்பட்ட வீடுகள் பல, கொளுத்தப்பட்ட கட்டடங்கள், கடைகள் பல, கொல்லப்பட்ட மக்களோ பலப்பல. கற்பழிக்கப்பட்ட பெண்கள் இன்னும் பலபல என்பதும் உங்களுக்குத் தெரிந்ததுதானே.

இந்து முஸ்லிம் ஒற்றுமை


சுயராஜ்யம் கிடைத்து விட்டால் இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்பட்டு விடும் என்றார் காந்தியார். ஆனால் சுயராஜ்யம் கிடைத்த பிறகு நூற்றுக்கணக்கான ஊர்களில் முஸ்லிம்களின் வீடுகள் கொள்ளை இடப்பட்டன. முஸ்லிம் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

முஸ்லிம் தொழில் ஸ்தாபனங்கள் கொளுத்தப் பட்டன. இவையும் உங்களுக்குத் தெரிந்ததுதான்.

இவ்வளவு தானா?


இவ்வளவும் தவிர இன்னமும் என்ன நடந்தது என்று பாருங்கள். ஏராளமான எதிர்க்கட்சியார் கூட்டங்கள் குழப்பத் தால், காலித்தனத்தால் கலைக்கப்பட்டன. அவர்களது மகாநாட்டுக் கொட்டகைகள் கொளுத்தப்பட்டன. மகாநாட்டு மக் களை அடித்துக் கண், கால் ஊனமாக்கி அவர்களது சாமான்கள், பணங்கள் வழிப்பறி செய்யப்பட்டன.

என்ன நடந்தது?


இவ்வளவு காரியம் சுயராஜ்யம் கிடைத்த பிறகு செய்வதற்கு அகிம்சா ஆட்சிக்கு உரிமை ஏற்பட்டும், இவ்வளவும் போதாமல் இந்தத் தர்மராஜ்யத்தில் அடக்குமுறைச் சட்டங்கள் ஏராளமாக ஒவ்வொரு மாகாணத்திலும் செய்யப்பட் டன.

இவ்வளவோடு நிற்கவில்லை


எங்கு பார்த்தாலும் ஸ்ட்ரைக்கு, ஸ்ட் ரைக்கு! வேலை நிறுத்தம், வேலை நிறுத் தம்! என்பதாகவே கக்கூசு எடுப்பவர்கள் முதல் செக்ரட்டெரியேட் அதிகாரிகள் வரை நடந்தவண்ணமாயிருக்கின்றன.

பஞ்ச தேவதை திருவிளையாடல்


சோத்துப் பஞ்சம், துணிப் பஞ்சம் தாண்டவமாடின.

வியாபாரிகள் கள்ள மார்க்கெட்டும், சட்டசபை மெம்பர்கள் கொள்ளையும், அதிகாரிகள் லஞ்சமும், மந்திரிகளின் பாரபட்ச அநீதியும் ஆனந்தக் கூத்தாடின.

சந்தடி சாக்கில் கந்தப்பொடிக்கு கால்பணம் என்பதுபோல் வருணாசிரமம் வரம்பு கடந்து ஆட்சி புரிந்தது.

ஆண்டவனிடம் பிராது


இவ்வளவு நடந்தால் பிறகு மக்கள் என்ன செய்வார்கள். அழுதார்கள், ஆத் திரப்பட்டார்கள்,  ஆண்டவனிடம் முறையிட்டார்கள். ஆண்டவன்தான் என்ன செய்வான்? ஆண்டவனும் பார்ப் பன ரூபமாக இருந்துதானே உலகை நடத்துகிறார். இவை எல்லாம் ஆண்டவன் செயல்தானே?

ஆண்டவன் காரணம் என்றால் என்ன? பார்ப்பனர் காரணமென்றால் என்ன? இரண்டும் ஒன்றுதானே?

எனவே, ஆண்டவன் பிராதை வாங்கிக் கொண்டு யோசித்தார் யோசித்தார், வெகுதூரம் யோசித்தார். எவ்வளவு தூரம்? யோசனை தூரம் யோசித்தார்.

யோசித்து என்ன முடிவுக்கு வந்தார்? வந்தார் ஒரு முடிவுக்கு. கண்டுபிடித்தார் ஒரு சங்கதியை, அதாவது கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்ததுபோல் கண்டுபிடித்தார்!

என்ன கண்டு பிடித்தார் என்றால் இவ்வளவு அக்கிரமத்துக்கும், அநீதிக்கும், கொலைக்கும், கொள்ளைக்கும், நாசத்துக்கும், கற்பழிப்புக்கும், கொலை பாதகத்துக்கும் காந்தியார்தான் காரணம் என்று கண்டுபிடித்தார். சரியான கண்டுபிடிப்புத்தானே இது? சரியோ தப்போ ஆண்டவன் கண்டுபிடித்த முடிவு என்றால் அப்புறம் அப்பீல் ஏது?

தீர்ப்பு


முடிவுக்கு ஏற்ற தண்டனை வேண்டாமா? வேண்டும். யோசித்தார் யோசித்தார். நிரம்பவும் குறைந்த தண்டனை கொடுக்க வேண்டுமென்று கருதி ஒரு சிறு தண்டனை கொடுத்தார். எப்படிக் கொடுத்தார்? தன்னடிச் சோதிக்கு அழைத்துக் கொள்வது என்ற மோட்சப் பிராப்த (மரண) தண்டனை கொடுத்தார். அதை எப்படி நிறைவேற் றினார் என்று கேட்பீர்கள். தானே கொலையாளியாய் இருந்து கொல்லுகிற மரண தண்டனை கொடுத்தார். கடவுள் பார்ப்பன ரூபம் தானே, ஆதலால் பார்ப்பனனாக, கோட்சேயாக, பி.ஏ. படித்த பார்ப்பனனாக வந்தார். ஒன், டூ, திரி என்று மூன்று வேட்டுகள் போட்டார். சரி காந்தி முடிந்தார். மோட்சமடைந்தார்.

இந்தப் பிராதை கடவுளே அல்லாமல் ஒரு சர்வதேச சங்கம் விசாரித்தாலும் இந்தத் தண்டனைதானே கொடுக்கும். இதற்குக் கடவுள் எதற்கு? என்று சிலர் கேட்கலாம்.

அதற்கும் இதற்கும் வெகு வித்தியாசம் உண்டு.

சர்வதேச சங்கம் தண்டனை கொடுத் தால் காந்தியாருக்கு அது தெரியும். தண்டனை நிறைவேற்றப்படும்வரை அவர் மனம் பதறும். அப்பீல் அல்லது கருணை மனு போடச் சொல்லும். பிறகு என்ன ஆகுமோ? கடைசி காலத்தில் அவர் மனம் வருந்தலாமா? ஆகையால் ஆண்டவன் அந்தப் பிராதைத் தன் பைலிலேயே வைத்துக் கொண்டு காந்தி யாருக்கும் மனம் நோகாமல் பிராது க்காரருக்கும் திருப்தி ஏற்படும்படி பார்ப்பனனாகவே ஆண்டவன் வந்து கேசையும் தண்டனையையும் முடித்துத் தள்ளிவிட்டார்.

கடவுளே கொலைகாரனாக வந்து காந்தியைக் கொன்று விட்டதால், கொலை செய்யப்பட்ட விஷயமும் கிணற்றில் விழுந்த கல்லுப்போல் அடியில் போய் அமர்ந்து விட்டது.

அடுத்தபடி நேரு கேஸ் விசாரணையில் இருக்கிறது. பிரசாரத்துக்கு வாரண்டு வந்து தேடுகிறது. அகிம்சா தர்ம சுயராஜ்யத்தின் முதல் அத்தியாயம் முடிந்தது.

- விடுதலை நாளேடு, 5.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக