திங்கள், 1 ஜூலை, 2019

எனது ஆசை



10.01.1948   - குடிஅரசிலிருந்து... -

மாநாட்டுக்கு தலைமை வகித்த தோழர் அவர்கள், தான் ஒரு சின்னப் பையன் என்றும், தன்னைத் தலைமைப் பதவியில் உட்கார வைத்து நான் வேடிக்கை செய்கிறேன் என்றும் சொன்னார். இந்த இயக்கம் இன்று ஏதாவது மதிக்கத் தகுந்த அளவுக்கு பயன்பட்டு வருகின்றது என்று சொல்லப்படுமானால் அதற்குக் காரணம் இந்த மாதிரி சின்னப் பையன்களே காரணமாகும். இப்படிப்பட்ட சின்னப் பையன்கள் இந்த இயக்கத்தில் இருப்பதினாலேயேதான் எனக்கும் ஒருபுறம் வயது வளர்ந்தாலும், வாலிபமும் கூடவே வளர்ந்து வருகிறது.

எனது சகவாசம் முழுவதும் சின்னப் பையன்களிடமே இருப்பதினால்தான் சின்னப் பையன் தன்மை எனக்கு இன்னமும் இருந்தும், வளர்ந்தும் வளர்கிறது. என் ஆசை யெல்லாம் நான் எப்பொழுதும் சின்னப் பையன்கள் மாதிரியே இருக்க வேண்டு மென்பதோடு, பெரிய ஆள்கள் மாதிரி ஆகக்கூடாது என்பது மாகும்.

வித்தியாசங்களின் வேர்


10.01.1948 - குடிஅரசிலிருந்து....

சிலர் சொல்லுவது போல் கீழேயிருந்து இவ்வித்தியாசங் களைப் போக்கிக் கொண்டு போகவேண்டும் என்பது ஒரு காலத்திலும் முடியும்படியான காரியமல்ல. அதற்கு ஆதாரமானதாகிய வேரிலிருந்து பறித்து வெட்டியிருந்தால்தான் மறுபடி முளைக்காமலிருக்கும். அப்படிக்கில் லாமல் அதிலிருந்து முளைத்த கிளைகளை மாத்திரம் வெட்டினால், மறுபடியும் அது நன்றாய்த் துளிர்த்து தழைத்துக் கொண்டுதான் இருக்கும். எனவே உற்பத்தி தானமாகிய பார்ப்பனர்களிடமிருந்து அதை ஒழிக்கவேண்டும். அவர்களால்தான் இவ்வித்தியாசங்கள் பரவுகின்றன. உதாரணமாக எங்கள் வீட்டிற்கு முன் ஒரு குழாய் இருக்கிறது. அதில் தண்ணீர் பிடிக்க ஒரு பார்ப்பனச் சகோதரி வரும்போது ஒரு சுண்டைக்காய் பிரமாணம் புளியும், பஞ்சபாத்திரத்தில் தண்ணீரும் கொண்டு வந்து குழாயைப் புளியால் விளக்கிக் கழுவி, பின்பு தண்ணீர் பிடித்துக்கொண்டு போக ஆரம்பித்தாள். இதைப் பார்த்த நம் சகோதரிகள் நெல்லிக்காய் அளவு புளியும், ஒரு தோண்டி தண்ணீரும் கொண்டு வந்து புளியால் விளக்கிக் கழுவித் தண்ணீர் பிடித்து எடுத்துக் கொண்டு போகப் பழகினார்கள். இதைக் கண்ணுற்ற நம் முகமதிய சகோதரிகளும் கொளுமிச்சங்காய் அளவு புளியும், முக்கால் குடம் தண்ணீரும் கொண்டு வந்து புளியால் குழாயை விளக்கிக் கழுவித் தண்ணீர் பிடித்து எடுத்துக் கொண்டு போகப் பழகினார்கள். அந்த முகமதிய சகோதரியை தடுத்து உங்கள் மதத்திற்கு வித்தியாசமில்லையே; நீங்கள் கூட ஏன் இப்படிக் கழுவித் தண்ணீர் பிடிக்கிறீர்கள்? என்றால், எனக்கு என்ன தெரியும்? இப்படித்தான் தண்ணீர் பிடிப்பது வழக்கமோ என்னமோ என்று கருதி நான் செய்து வருகிறேன் என்கிறாள். இவ்வளவுக் கும் காரணமாயிருந்தவர்கள் யார் என்று பாருங்கள். பார்ப்பனர்கள் இப்படிச் செய்யாதிருந்தால் இவ்வித வழக்கங்கள் பரவ வழியில்லை.

- விடுதலை நாளேடு 22. 6. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக