சனி, 13 ஜூலை, 2019

கண்ணை மூடிப் பின்பற்றுங்கள்! கருப்புச் சட்டையை எங்கும் பரப்புங்கள்! -II

05.06.1948 - குடிஅரசிலிருந்து.... -

பார்ப்பனத் தோழர்களே! எங்களை முட்டாள் களென்று கூறி உங்களைப் புத்திசாலிகள் என்று பெருமையடித்துக் கொள்கிறீர்கள்! ஆணவப்பட்டு அழிந்து போகாதீர்கள்! புத்திசாலிகளானால் புத்திசாலிகளாகவேப் பிழைத்துக் கொள்ளுங்கள்! உங்களவரே இந்தியா முதன் மந்திரியாயிருப்பது பற்றியும், உங்களவரே கவர்னர் ஜெனரல் ஆகப் போவது பற்றியும் நீங்கள் பெருமையடித்துக் கொள் கிறீர்கள்! இவர்கள் பார்ப்பனர்களாய் இருப்பதால் தான் இந்தப் பதவிக்கு உரியானார்களே தவிர, எங்களவர்களை விட அதிகமான யோக்கியதை ஒன்றும் இவர்களுக்கு இருந்துவிடவில்லை என் பதை ஒப்புக்கொள்ளுங்கள்! இந்நாட்டில் எத்தனை யோ அறிவாளிகளான திராவிடத் தாய்மார்கள் இருக்க ஒரு பார்ப்பனத்திதான் இம்மாகாணத்தில் மந்திரியாக முடிந்தது என்றாலும், அதுவும் உங் களவர் ஆதிக்கத்தினால்தானே ஒழிய, புத்திசாலித் தனத்தால் அல்ல என்பதையும் அறிந்து கொள் ளுங்கள்! 100க்கு 3 பேராயுள்ள உங்களுக்கு உயர்ந்த பதவிகள் எல்லாம் சொந்தமாய் இருப்பது முறை யல்ல! பாடுபடும் பாட்டாளிகள் சூத்திரர்களாகவும், பாடுபடாத சோம்பேறி நீங்கள் உயர்ஜாதிக்காரர் களாகவும் இருப்பது நேர்மையல்ல என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்! பொதுவாக உங்களுக்குச் சகல உரிமைகளும் வாங்கிக் கொடுத்தவர்கள் திராவிடர்கள்தான் என்பதை, இந்நாட்டிற்கு சுயராஜ்யம் வாங்கிக் கொடுத்ததும் திராவிடர் கள்தான் என்பதை, நீங்கள் உணருங்கள்! கரையான் புற்றெடுக்க கருநாகப் பாம்பு குடிபுகுந்தது போல், நீங்கள் சுயராஜ்யத்தை உங்களவரின் நன்மைக் காகவே பயன்படுத்திக் கொள்ளல் நியாயமல்ல என்பதையும் உணருங்கள்! எல்லோருக்கும் சமவுரிமை இருக்கப் பார்த்துக் கொள்ளுங்கள்! உங்களுக்குத்தான் புத்தியுண்டு என்கிற அகம்பாவ அக்கிரகாரப் பேச்சை விட்டொழியுங்கள்! எங் களையும் உங்கள் சகோதரர்களைப் போல் நடத் துங்கள்! எல்லோரையும் சமமாகப் பார்ப்பவர்கள் பிராமணர்கள் என்று கூறிக்கொண்டு எதற்காக உச்சிக்குடுமி வைத்துக் கொள்கிறீர்கள்? எதற்காகப் பூணூல் போட்டுக் கொள்கிறீர்கள்? எதற்காக எங்களைக் கண்டால் தாவிக் குதிக்கிறீர்கள்? எத்தனை நாளைக்கு எங்களவர்களில் சிலரை உங்கள் கையாள்களாக வைத்துக் கொண்டு எங்களை ஏய்த்துவரலாம் என்று நினைக்கிறீர்கள்? அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் பக்கம் வந்து விட்டால் உங்கள் கதி என்ன ஆவது?

இன்று கூட ஒருவர் வந்தாரே!

இப்போதே வந்து கொண்டிருக்கிறார்களே! அதற்கென்ன செய்யப் போகிறீர்கள்? இன்று கூட ஒருவர் வந்து விட்டாரே, உங்கள் கூடாரத்தை விட்டு? சென்ற கருஞ்சட்டை மாநாட்டின் போது மதுரையில் எங்கள் பந்தலைக் கொளுத்துவதில் முக்கியப் பங்கெடுத்துக் கொண்ட தோழர் ஒருவர் என்னிடம் வந்து, அய்யா நான் அக்கிரகாரக் கும்பலின் பேச்சைக் கேட்டு அன்று ஏமாந்து போனேன். இன்று முதல் நான் உங்கள் சிஷ்யன். என்னை மன்னிக்க வேண்டும் என்று கூறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டாரே! அப்பா நீ மட்டுமல்ல, நானும் இப்படித்தானப்பா ஏமாந்தேன். ஆகவே மன்னித்து ஏற்க வேண்டும் என்று ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவர்களோடு சேர்ந்தேன் என்று ஆறுதல் கூறினேன்! ஒவ்வொரு தோழருக்கும் இப்படித்தானே நடக்க நேரிடும்! அந்த மதுரைக்காரரைத் தூண்டி விட்ட அக்கிரகாரத்து அய்யர் கூறினாராம், டேய் நீ நேற்று வரை நீ  ரங்கசாமியாயிருந்தே, இன்று நீ  ரங்கசாமி நாயக்கர் ஆகிவிட்டே என்று. (மதுரைத் தோழர் பெயர் நிச்சயமாக வெறும் ரங்கசாமி அல்ல. குறிப்புக்காக இந்தப் பெயர் சொல்ல நேர்ந்தது) அதற்கு அந்தத் தோழர் கூறினாராம், நானாவது நேற்று வரை வெறும் ரங்கசாமியாயிருந்து இன்று ரங்கசாமி நாயக்கரானேன், ஆனால் நீ பிறந்தது முதற்கொண்டு அய்யராகவே இருந்து வருகிறாயே, இது நியாயமாகப்படுகிறதா உனக்கு என்று கேட்டாராம். கேள்வி கேட்ட பார்ப்பனர் பேசாமல் வாயை மூடிக்கொண்டாராம்.

பார்ப்பனர்கள் தரும் தொல்லைகள்

இந்தப் பார்ப்பனர்கள்தான் எங்கு பார்த்தாலும் நமக்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள். நமது கூட்டங்களுக்குத் தடை விதிக்கும்படி பார்ப்பன சப்-இன்ஸ்பெக்டர்களைத் தூண்டுகிறார்கள். நமது கருப்புச் சட்டைக்காரர்கள் மீது தடையுத்தரவு பிறப்பிக்கும்படி சர்க்காரைத் தூண்டுகிறார்கள். பார்ப்பன வாத்தியார்கள் நமது பிள்ளைகளுக்குத் தொந்தரவு கொடுக்கிறார்கள். பார்ப்பனத் தலைமை உபாத்தியாயர் திராவிட உபாத்தியாயர்களுக்குத் தொல்லை கொடுக்கிறார். நாம் கோரும் முன் னேற்றத் திட்டங்களையெல்லாம் கூடுமான அள வுக்கு எதிர்க்கிறார்கள். ஆனால் அது சட்ட மாகியவுடன் அதன் முழுப்பலனையும் அவர்களே அடைந்து கொள்கிறார்கள். பெண்களுக்கு வயது வந்த பிறகுதான் கல்யாணம் செய்ய வேண்டுமென்று நாம் கூப்பாடிட்ட போது எதிர்த்தார்கள். ஆனால், அது சட்டமான பிறகு அவர்கள்தான் அதன் முழுப் பயனையும் அடைந்து வருகிறார்கள். விவாகரத் துரிமை, பதிவுத் திருமணம், சொத்துரிமை ஆகிய எதையும் எதிர்ப்பவர்கள் இவர்கள்தான். இப்படி யாகப் பார்ப்பனர்கள் நம்மை எவ்வளவுதான் எதிர்த்து வந்த போதிலும் நமக்கு ஏதோ நல்ல காலமாய்த்தான் இருந்து வருகிறது. நாம் இதுவரை உயிரோடிருப்பதே ஒரு நல்ல காலம்தான்.

நான் இறந்தாலும் இனி நான் இறந்தாலும் ஏனையத் திராவிடத் தோழர்கள் ஏமாந்து விட மாட்டார்கள். எனது வேலையை அப்படியே விட்டுவிடமாட்டார்கள். தொடர்ந்து போராடி, வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுவிட்டது. நமது கொள்கைகள் ஒரு அளவுக்குப் பொது மக்களின் செல்வாக்கைப் பெற்றுவிட்டது. இன்னும் கொஞ்ச காலத்திற்குள் நம் இஷ்டம் போல் நடக்காத மந்திரிகளுக்கு மந்திரிசபை நாற்காலி இடம் கொடுக்காது, நம் இஷ்டப்படி நடக்காத அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடைக்காது. நம் இஷ்டப்படி நடக்காத சட்டசபை மெம்பர்களுக்கு சட்டசபை இடங்கொடுக்காது என்கிற நிலை ஏற்பட்டுவிடும். இந்நிலை வெகு சீக்கிரமே ஏற்பட வேண்டுமானால் நாம் எல்லோரும் கருப்புச் சட்டைக்காரர்களாக வேண்டும். நீங்கள் என்ன சட்டைக்காரர்களோ என்று நம்மைச் சிலர் கேட்கக் கூடும். நம் நாட்டில் சட்டைக்காரர்கள் என்றொரு கூட்டம் இருந்து வருவது உண்மைதான். அவர்கள் பல ஜாதிக்குப் பிறந்தவர்கள், ஆகவே வெறும் சட்டைக்காரர்கள் என்று மட்டும் அழைக்கப்பட்டு வருகிறார்கள். நாம் அப்படிக்கல்ல, நாம் ஒரே ஜாதிக்குப் பிறந்தவர்கள். ஆகவே கருப்புச் சட்டைக்காரர்கள் என்று நம்மை அழைத்துக் கொள்கிறோம். கருப்புச் சட்டை ஒரு படை யமைப்பின் சின்னமல்ல. அது இழிவின் அறிகுறி, இழிவிற்காக அவமானப்படுகிறோம், துக்கப்படு கிறோம், அதைப் போக்கிக் கொள்ள முடிவு செய்துவிட்டோம் என்பதன் அறிகுறி. பாடுபட்டுப் படி அளந்துவிட்டுப் பட்டினி கிடக்கும் நானா பஞ்சமன்? என் பாட்டின் பலனால் நோகாமல் உண்டு வாழும் நீயா பார்ப்பனன் இது நியாயமா?

கேள்விகளின் அறிகுறி கருப்புச்சட்டை

பாடுபடும் எங்களுக்கெல்லாம் இழிவான வேலைகள், பாடுபடாத உங்களுக்கெல்லாம் மந்திரி வேலையா? இது நியாயமா? பாடுபடும் நாங்கள் எல்லாம் அய்.சி.எ படிப்பதா? கலெக்டர் ஆவதா? இது நியாயமா?

தொடரும்

-  விடுதலை நாளேடு, 13.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக