ஞாயிறு, 7 ஜூலை, 2019

நமது இயக்கமும் திராவிட மாணவத் தொண்டர்களும்!



தந்தை பெரியார்


பணவசதியும் சிபாரிசு வசதியும் உடையவர்களே, இன்றையப் படிப்புத் துறையில் முன்னேற்றமடைய வேண்டும் என்கிற நோக்கத்தோடுதான் இப்போதையக் கல்வித் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த அடிப் படைதான் திராவிடர்கள் 100க்கு 90 பேருக்குமேல் படியாதவர்களாய் இருப்பதற்குக் காரணமாகுமென்றால், இதை அவினாசிலிங்கம் அவர்களோ, மற்றவர்களோ மறுத்துச் சொல்ல முடியாது.

திராவிட சமுதாயத்தில் நூற்றுக்குப் பத்துப் பேராவது படித்திருக்கின்றார்கள் என்று சொல்லப்படுகிற கணக்கு, தன்பெயரிலே கூட இரண்டொரு எழுத்துக்களை விட்டு விட்டு, கையெழுத்துப் போடும் நபர்களையும் சேர்த்துக் கூறுவதாகும் என்கிற உண்மையைத் தெரிந்தால், "பார்ப்பனர்கள் அளவில் படித்தவர்கள்" என்கிற எடைபோடும்போது 100க்கு 5 பேர்கூட படித்தவர்கள் என்று சொல்லுவதற்குத் தகுதியுடையவர்கள் ஆக மாட்டார்கள் என்பதும், இந்த அய்ந்து பேர்கூட திராவிடர் கழக (நீதிக்கட்சி)க் கிளர்ச்சியின் பயனால் படித்தவர்கள் ஆனார்கள் என்பதும், திராவிட சமுதாயம் என்கிற உரிமையினால் இந்த அய்ந்து பேரும் படிக்கவும், படித்து உத்தியோகமோ மற்ற தொழில்களோ கைக்கொண்டு வாழவும் ஆனநிலை ஏற்பட்டிருந்தாலும், இந்த அய்ந்து பேர்களில் அரைக்கால் பேர்வழிகூட திராவிட சமுதாயத்தின் நன்மைக்கான காரியங்களில் கருத்தைச் செலுத்துவோர் இல்லை என்பதும், அதற்கு மாறாகத் தன் சமுதாயத்தை காட்டிக் கொடுத்து, அடமானம் வைத்து, "கிரையம் செய்து" கொடுத்துவிட்டுத் தங்கள் சொந்த வாழ்வுக்கு, வயிற்றுச் சோற்றுக்கு வழி செய்து கொண் டவர்களே ஏராளம் என்பதும், இந்த மாதிரியான போக்கிலே படித்தவர்கள் என்பவர்கள் போய்க் கொண்டிருப்பதினால்தான்  திராவிட சமுதாயம் சூத்திரச் சமுதாயமாக, சண்டாளச் சமுதாயமாக, வேசி மக்கள் சமுதாயமாக இருந்து வரும் நிலைமை இருக்கிறது என்பதும் எவரும் இல்லை என்று சொல்லிவிடமுடியாத சங்கதிகளாகும்.

திராவிட மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட வேண்டிய இந்த படித்தவர்கள் கூட்டம், அவ்வாறு செய்யவில்லை என்பதை அக்கூட்டம் உணருவதற்கு மறுத்தபோதிலும், நாளைக்குப் படித்தவர்கள் கூட்டத்தில் சேரவிருக்கின்ற மாணவர்கள், இந்த நிலைமையைத் தெளிவாக உணர்ந்து கொள்ளவேண்டும்.

திராவிட மாணவர்கள், அதாவது திராவிட மாண வர்கள் என்கிற பெயரினால் தங்களை அழைத்துக்கொள்ள முன்வந்து, திராவிட மாணவருலகின் முற்போக்குக்கும், திராவிட மக்களின் நல்வாழ்வுக்கும் பாடுபடச் சபதம் புரியும் மாணவத் தோழர்கள், படித்தவர்களின் வஞ்சகப் போக்கை மற்றவர்களைக் காட்டிலும் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

விறுவிறுப்பான பேச்சு! சுறுசுறுப்பான நடவடிக்கை! உண்மைக்குப் பரியும் உள்ளம்! உலுத்தரை ஒழிக்கும் தீவிரம்! எடுப்பான தோற்றம்! எதற்கும் அஞ்சாத நோக்கு! இத்தனையும் உண்டு வாலிபத்துக்கு. இன்னும் பல நல்ல இயல்புகளுமுண்டு.

இந்த நல்லியல்புகளை மட்டுமே எடுத்துக்கூறி, பாராட்டுக்குமேல் பாராட்டு என்று சுமத்தி, இளைஞர்களே எதிர்கால மன்னவர்கள் என்று சரணம்பாடி முடிப்பதுதான் மாணவர்களுக்கிடையே பேசும் அறிஞர்கள், தலை வர்கள் என்பவர்களின் வழக்கம்.

இத்தகைய பாராட்டுரை பயனைத் தரும்! எந்த அளவுக்கு? தன் வேலையை நிறைவேற்றிக் கொள்ள விரும்பும் ஒருவர், ஒரு சிறுவனைத் தட்டிக் கொடுத்துத் தன் வேலையைச் சாதித்துக் கொள்ளும் அளவில் புகழ்ந்து கெடுத்தல் என்று இதனைச் சொல்வதை எல்லோரும் ஒப்புக்கொள்ள மறுத்தாலும்கூட, புகழ்ந்து பேசி மற்றவர் களின் சக்தியைத் திரட்டித் தன் சொந்தக் காரியத்தைச் சாதித்துக் கொள்வதுதான் இதன்  பயன் என்றால், இதனால்  புகழப்பட்டவருக்குப் பயன் சிறிதும் இல்லை என்றால் யாரேனும் மறுத்துவிட முடியுமா?

வேலைக்கு முன் கூலி! செயலுக்கு முன் பாராட்டு! வேண்டப்படலாம்! ஆனால் நிரந்தரமானதாய் இருக்க லாமா? இதுவே நிரந்தரமானால் ஏமாற்றமும் தோல்வியுமே பெருகும் அல்லவா? இதனை மாணவத் தோழர்கள் நன்கு சிந்தித்துத் தெளிவடைய வேண்டும்.

திராவிட மாணவர்கள் என்பவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பும், நிறைவேற்ற வேண்டிய செயலும் மிக மிகக் கடினமானவை. பல தலைமுறை தலை முறையாகப் பகுத்தறிவுக்கு வேலையின்றி வாழ்ந்த சமுதாயத்தை அழித்து, பகுத்தறிவு ஒளி வீசும் புது சமு தாயத்தை நிர்மாணிக்கும் பொறுப்பு! தலை கீழ் மாற்றமான இப்பொறுப்பைத் தத்தம் வாழ்வையே ஈடுகட்டி விட்டு, உயிரைப்பணயம் வைத்து, உண்மையும் அன்புமே ஆயுதமாகக் கொண்டு போராடி வெற்றிகாண வேண்டிய செயல்! இச்செயல் பலரால் பல முறை முயற்சிக்கப் பட்டதுதான்; ஆனால் எவரும் இதுவரை வெற்றி காணாதது! என்கிற இலட்சியத்தின் பொறுப்பை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும்!

மிகமிகக் கடினமான இந்த லட்சியத்தையும், செயலுக்கு முன் பாராட்டு என்கிற போக்கையும் சேர்த்து எண்ணினால், இந்தப் போக்கு லட்சியப் பாதையைக் காண்பியாது என்பது உறுதி.

சென்ற மாதம் திருச்சியில் நடைபெற்ற திராவிட மாணவர் மாநாட்டில், நம்மியக்கத்தைப் பின்பற்றும் திராவிட மாணவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்கிற கருத்தை விளக்கிப் பெரியாரவர்கள் பேசிய பேச்சின் ஒரு பகுதி மற்றொரு பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. அதனை ஒவ்வொரு மாணவத் தோழரும், கழகத் தொண்டரும் கட்டாயம் படித்துப் பார்த்துத் தங்கள் தங்கள் நிலைமையோடு ஒப்பிட்டு, தங்களைத் தாங்களே சோதனை செய்து கொள்வது நல்லது என்று சொல்ல ஆசைப்படுகிறோம்.

பெரியாரவர்கள் விளக்கியிருக்கும் ஒரு உண்மை, அதாவது மாணவர்கள் என்பவர்கள் சரியான சோல்ஜர்கள், நல்ல ஜெனரல்கள் அல்ல. நல்ல சிப்பாய்கள் ஆனால் நல்ல கமாண்டர்களல்ல என்று கூறியிருக்கும் கருத்து மாணவர்கள் மனதில் நல்ல முறையில் பதிவு பெற வேண்டிய ஒன்றாகும்.

தாய் என்றால் அது மற்றொரு சொல்லையும், கணவன் என்றால் அது மற்றொரு சொல்லையும் எதிர்பார்க்கும் இயல்புடைய, ஒவ்வொரு முறைச்சொல் என்பது போலவே, மாணவர்கள் என்பதும் ஆசிரியர் என்ப தையோ, கற்பித்துக் கொடுப்பவர் என்பதையோ காட்டும் மற்றொரு சொல்லை, எதிர்பார்த்து வழங்கும் ஒரு முறைச்சொல் என்கிற உண்மை தமிழ் மொழி பேசும் எவரும் அறிந்த ஒன்றாகும்.

உலகையே ஏடாகக் கொண்டு, மனிதன் ஒவ்வொரு வனும் சாகும் வரைக்கும் கற்றுக் கொண்டேயிருக்கிற பேருண்மையை எண்ணி, உலகிலுள்ள ஒவ்வொரு வரையும் மாணவர் என்றே குறிப்பிடுவது ஒருவகையில் பொருந்துமென்றாலும், குடும்பப் பொறுப்போ, பணக் கவலையோ, உழைப்பின் திறமோ உட்கொள்ளாத, அனுபவக் கல்வியைக் கற்க வாய்ப்பில்லாத இளம் பருவத்தையுடையவர்களையே இங்கு மாணவர்கள் என்று குறிப்பிடுகின்றோம்.

மாணவர்கள் என்று சொல்லும்போதே, அந்தச் சொல் இளமைப் பருவத்தையும், உலக அனுபவமில்லாமை யையும் உணர்த்துவதாகும் என்கிற உண்மை மாணவர்கள் மனதில் இடம் பெறுவதே, சோல்ஜர்கள்! சிப்பாய்கள்! என்கிற கருத்தைப் பதிவு செய்து கொள்ளுவதற்கு வழியாயிருக்க முடியும்.

"திராவிடர் இயக்கத்தில் மாணவர்கள் பங்குகொள் வதை நாங்கள் பெருஞ்செல்வமாக மதிக்கின்றோம், அவர் களைப் பெரிய சொத்தாகக் கொண்டு போற்றுகின்றோம்" என்று கூறியிருக்கிறார்கள் பெரியார் அவர்கள். ஆம்! நைந்தழுகிமுடைநாற்றம் நாறும் ஒரு சமுதாயத்தின் நிலைமையை மாற்றப் போராடும் ஒரு பெருவீரன், அச்செயலுக்கு உதவியாக முன்வரும் கட்டிளங் காளைகளைக் காணும்போது உவந்து கூறும் உள்ளக் களிப்பிற்பிறந்த சொல்லே இது.

மத நம்பிக்கையுடைய கிறிஸ்துவப் பாதிரிமார்களையும், கன்னிப் பெண்களையும் மாணவத் தோழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களுடைய ஒழுக்கத்தின் உயர்வை இங்கு நாம் குறிப்பிடவில்லை. காணாத கடவுளின் பேரால், இல்லாத மோட்ச ஆசையைத் தூண்டி, புரியாத புண்ணிய பாவம் பேசி, இவ்வுலகத்தையே தாங்கள் நம்பிய "சிறந்த மார்க்கத்தில்" செலுத்திவிட வேண்டுமென்று, தங்கள் வாழ்வின் சுகபோகத்தைத் துறந்தவர்களாய்க் காண்பித்து, மக்களுக்காவே வாழுகிறோம் என்கிற நிலைமையை எப்படி உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் எண்ணிப்பார்க்க வேண்டுகிறோம். இந்த மதவாதிகள், மதத்தொண்டர்கள்  எவ்வாறு உலகை ஏமாற்றுகிறார்கள் என்பது நமக்குத் தெரிவது போலவே, அவர்களுடைய தன்னலம் பேணாத உழைப்பையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அழிவிற்கே காரணமாக இருந்து வந்த மதவெறியைப் பரப்பும் ஒரு மதத்திற்கே, அது உயிர் வாழ்வதற்கு இப்பேர்ப்பட்ட தொண்டர்கள் வேண்டுமென்றால், அழிந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயம் புத்துணர்வு பெற்றுப் புதுவாழ்வு பெறவேண்டுமானால், அந்தச் செயலுக்கு எப்படிப்பட்ட தொண்டர்கள் வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.

உலக இயற்கைக்கு மாறுபட்டு ஆண் பெண் கூட்டுறவைத் தள்ளி, பெண்களைப் பேய்கள் என வெறுத்து, நிலையான நித்திய இன்பத்தையடைய முயலு கிறோம் என்று கூறி, கானல் நீருக்கு அலைந்த உண்மை யான துறவிகள் போக்கை நாம் வெறுத்தாலும்கூட, அந்த லட்சியம் நிறைவேறுவதற்காக அவர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்று விதித்திருக்கும் கடுமையான முறை களை, எந்த லட்சியவாதிதான் வெறுத்துவிட முடியும் என்று கேட்கிறோம்.

தனி ஒரு மனிதன் அடையலாம் என்று "எதிர்பார்த்த ஒரு இன்பத்திற்கே" இப்பேர்பட்ட கடுமையான நெறி களைக் கைக்கொள்ள வேண்டுமென்றால், ஒரு மனித சமுதாயமே தன் நைந்த நிலைமாறி இன்ப வாழ்வைப் பெற, எப்பேர்ப்பட்ட நெறிகளைக் கைக்கொள்ள வேண் டும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.

பொதுநலத் தொண்டில் ஈடுபடுகிறவர்கள், முதலில் பொதுநல சேவைக்கும், தங்களுக்கும் என்ன பொருத்தம்? எந்தெந்த வகையில் இருக்கிறது? என்கிற தங்களின் தகுதியைத் தாங்களே தெரிந்து கொள்ளவேண்டும். எழுதும் தகுதி, பேசும் தகுதி ஆகிய இரண்டு தகுதியைக் காட்டிலும் சிறப்புடையது நடந்து காட்டும் தகுதி என்றா லும், இம்மூன்றினும் சிறப்பாகப் பொதுநலத் தொண்டர் களுக்குரிய குணத்தகுதி தங்களுக்கு இருக்கிறதா என்பதையே மாணவத் தோழர்கள் கருதவேண்டும். இதைத்தான் பெரியாரவர்கள் தம் சொற்பொழிவில் வற்புறுத்தியிருக்கின்றார்கள்.

எளிய வாழ்க்கையைக் கைக்கொள்ளல், தன்னைத் தானே காத்துக்கொள்ளுதல், தன்னலம் பேணாது வாழ்தல், தற்பெருமை பேசாத அடக்கம், உயர்ந்தவன் என்ற மமதைக்கு இடங்கொடாமை, வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாத வீர இயல்பு, தலைவனின் ஆணைக்கு அடங்கல் போன்ற நற்குணங்களே தொண்டர் களுக்கு, சிறப்பாகத் திராவிட மாணவர்களுக்கு வேண்டிய குணத்தகுதிகள் என்று பெரியாரவர்கள் வற்புறுத்தியி ருப்பதைக் கருத்தூன்றிப் படித்துக் கைக்கொள்ள வேண்டுகிறோம்.

இவைகளை வாழுகிற ஒவ்வொரு மனிதனும் கடைபிடித்து ஒழுகுவதே வாழ்வில் ஒழுங்கையும், அமைதியையும் உண்டுபண்ணும் என்று பொதுவாகச் சொல்லலாம் ஆனாலும், எதிர் நீச்சலில் சென்று வெற்றிக் கொடியை நாட்ட வேண்டிய பொறுப்புடைய தொண்டர் களுக்கு இவைகள் அவசியத்திலும் அவசியமல்லவா?

பொதுநல சேவையில் அதுவும் திராவிடர் இயக்கத்தில் எத்தனை தொண்டர்களுக்கு வேண்டுமானாலும் இடமுண்டு! தொண்டர்களின் வாழ்வு நல்ல முறையில் அமைவதற்கும் வழியுண்டு! உண்மையாகவே இயக்கத் திற்குத் தம்மை அர்ப்பணம் செய்து கொள்ளுபவர், தம் ஒழுங்கான சொந்த வாழ்வைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றே சொல்லிவிடலாம்! இந்த நல்ல நிலைமை பெரியாரவர்களுடைய அரும்பெரும் உழைப்பினால் உண்டாக்கப்பட்டிருக்கிறது! இதைப் பயனின்றிப் போகுமாறு செய்யலாமா? இதை மாணவத் தொண்டர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

வழக்கம்போல இந்த வருஷத்திலும் மாணவர் கோடை விடுமுறைப் பிரசாரத்திற்கு ஏற்பாடாகி அது சம்பந்தமான அறிக்கை மற்றொரு பக்கத்தில் வெளியாகியிருக்கிறது. வகுப்பு நடைபெறும் காலம் மாற்ற வேண்டிய தாகவும் ஏற்படலாம். அது பின்னர் அறிவிக்கப்படும். இப்பிரசாரத்திற்குச் சென்ற ஆண்டு வந்தவர்களும்,  புதிதாக இவ்வாண்டில் வருகிறவர்களும் வந்து கலக்கலாம். பிரசாரத்திற்கு வருகின்றவர்கள், தங்கள் பிரசாரத்தினால் மற்றவர்களை நல்வழியில் அழைத்துப் போகிறோம் என்று எண்ணுவதைக் காட்டிலும், தாங்கள் நல்ல வழியில் பாதையைப் பின்பற்றிப் போகின்றோம் என்று எண் ணுவார்களானால், அது உண்மையும் பயனுமுடையதா யிருக்கும் என்று சொல்ல ஆசைப்படுகின்றோம்.

பெரியாரவர்கள் வற்புறுத்தியிருப்பதைப் போல, கட்டுப்பாடற்ற காலித்தனத்தைப் பழக்கமாக உடைய மைனர்களாயிருக்க ஆசைப்படுகின்றவர்களோ, வாழ்க்கையில் தங்கள் நிலைமைக்கு மேலான போக போக்கியத்தை அடைய வேண்டும் என்று ஆசைப் படுகின்றவர்களோ, பிரசாரம் செய்வது போன்ற பொது நலப் பணிக்குத் தம்மை ஆளாக்கிக் கொள்ளலாமா? அவ்வாறு செய்வதால் இயக்கத்திற்கு ஏற்படும் நன்மை என்ன? தாங்கள் அடையும் நன்மை என்ன? என்பவைகளை முதலிலேயே முடிவு கட்டிக் கொண்டு விடுவது நல்லதல்லவா என்பதையும், யோசித்துத் தீர்ப்புக்கூறிக் கொள்ளும்படி வேண்டிக் கொள்கின்றோம்.

மாணவர்கள் கைக்கொள்ள வேண்டிய அகிம்சையில் நம்பிக்கையைப் பற்றி, பெரியாரவர்கள் வலியுறுத்தியிருப் பதையும் திராவிட மாணவர்கள் சிந்தித்து தெளிவடைய வேண்டும்.

"அகிம்சை என்பது புண்ணியம் என்பதினாலோ, அல்லது அது மோட்சலோகக் கதவைத் திறந்து விடும் என்பதினாலோ அல்லது அந்தராத்மாவோடு தொடர் புடையது என்பதினாலோ, நான் அகிம்சையைக் கைக் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை; மனிதனுக்கு அறிவு இருப்பதினாலேயே - சிந்தனைத் திறம் பெற்றி ருப்பதினாலேயே, அவன் அகிம்சையைத்தான் கைக் கொள்ள வேண்டுமென்கின்றேன்" என்று கூறியிருப்பதை அறிவு பெற்றிருக்கிறோம் என எண்ணும் ஒவ்வொரு மனிதனும் எண்ணிப் பார்க்க வேண்டியதாகும்.

மற்ற ஜீவப் பிராணிகளைப் பார்க்கின்றோம். அவை களுள் பெரும்பான்மையானவை ஒன்றையொன்று இம்சை செய்து உயிர் வாழ்வதையும், அதனால் அந்த இம்சைக்கு உள்ளானது மட்டுமல்லாமல், துன்பத்தை உள்ளாக்கியதும்  தொல்லையை அடைவதையும், அவைகள் மனிதனுக்கே உள்ள ஆறாவது அறிவை, சிந்தனை செய்யும் திறமையைப் பெறவில்லை என்பதையும் பார்க்கிறோம்.   மேலும் அந்த அய்ந்தறிவு படைத்த மிருகங்களிலும்கூட ஆடு, மாடு, மான்போலச் சில மிருகங்கள், இம்சை முறையைக் கைக்கொள்ளாமல் வாழ்வதையும் பார்க்கின்றோம்.

இம்சை செய்யப்பட்டவனுக்கேயன்றி, செய்தவனுக் கும் துயரத்தை, தொல்லையைத் தருமென்றால், அய்ந்தறிவு படைத்த சில மிருகங்கள் கூட அந்த இம்சை முறையைக் கைக்கொள்ளவில்லை என்றால், ஆறறிவு படைத்தவன் என்றும், ஆராய்ந்து பார்க்கும் திறனுடை யவன் என்றும் சொல்லிக் கொள்ளும் மனிதன், இரு வருக்கும் துன்பத்தைக் கொடுக்கும் இன்னாச் செயலை, இம்சையை மேற்கொள்ளல் அறிவுடைமையாகுமா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.

பொழுது போக்குவதற்கான வேலை! பல ஊர்களைச் சுற்றிப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம்! விளம்பரத்தினால் பெரிய மனிதர்களாகும் வாய்ப்பு! சிகரெட் குடிக்கவும், சினிமாப் பார்ப்பதற்குமான கம்பெனி! என்பது போன்ற எண்ணங்களால் திராவிட இயக்கப் பிரசார வேலையிலே தயவுசெய்து இளம் மாணவர்களே! நீங்கள் இறங்கக்கூடாது என்பதுதான் நமது வேண்டுகோள்! சமுதாய இழிவை உணர்ந்து, இழிவை நீக்கும் பொறுப்பு நமக்குத்தானே ஒழிய, மற்றவர்களுக்கில்லை என்பதை அறிந்து, "வாழ்வோம் அல்லது வீழ்வோம்" என்ற துணிவு கொண்டு, கட்டுப்பாட்டுக்கு அடங்கித் தன்னலம் வெறுத்து தன் கையே தனக்கு உதவி என்ற தன்னம்பிக்கை வாய்ந்த, இளம் மாணவத் தொண்டர்கள் பெருகவேண்டும் என்பதுதான் நமது ஆசை!

இந்த நமது ஆசையும், வேண்டுகோளும் திராவிட சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கே என்பதை உணர்ந்து, திராவிட மாணவர்கள் பெருவாரியாகச் செயலில் ஈடுபடத் துணிவு பெற்று வாகை மாலை சூடுவார்களாக!

"குடிஅரசு" - தலையங்கம் - 03.04.1948

(இத்தலையங்கம் பெரியார் மூன்றாம் நிலையிலிருந்து அறிவுறுத்துவதுபோல அவர்களால் எழுதப்பட்டதே. நடை அதை உணர்த்துகிறது நமக்கு.

- பதிப்பாசிரியர்

- விடுதலை நாளேடு, 7.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக