ஞாயிறு, 6 ஜனவரி, 2019

யந்திரங்கள் (2)

14.12.1930-  குடிஅரசிலிருந்து...

மற்றும் பாஷைகள் ஆதியில் எழுத்துகள் கூட இல்லாமல் சப்த ரூபமாய் இருந்ததும், பிறகு எழுத்துக்கள் ஏற்படுத்தப்பட்டதும் அவை கூரிய ஆணி களால் ஏடுகளில் எழுதப்பட்டதும் பிறகு காகிதம் ஏற்பட்டதும், அதில் நாணலில் எழுதினதும், உருக்குத் தகடுகளில் எழுதினதும், பிறகு பௌண்டன் பேனாவில் எழுதினதும், டைப்பில் அடிப்பதும், அச்சடிப்பதும் அந்த அச்சும் மணிக்கு 100 பிரதிகளாக இருந்து இப்போது 10000 பிரதிகள் வீதம் அச்சடிக்கும் படியானதும். அதுவும் 12 ஜ் 8க்குமாயிருந்த அகல காகிதத்தில் மாத்திரமிருந்து இப்போது 60 ஜ் 40க்குமாக அச்சடிக்கக் கூடியதானதுமான  காரியங்கள் படிப் படியாய் விருத்தி ஆகியிருக் கின்றதைப் பார்த்துக் கொண்டும் அதன் பலன் களை அனுபவித்துக் கொண்டும் ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொருவரும் அதைச் செய்து கொண்டும் இருக்கின்றோம். இவையெல்லாம் யந்திர பலன்கள் அல்லவா? என்றும் இவற்றில் எது தள்ளுவதற்குரியது? என்றும் கேட் கின்றோம்.

இது தவிர மற்றொரு உதாரணத்தைக் கவனிப்போம். சங்கராச்சாரி மடாதிபதி என்று சொல்லப்படும் ஆட்கள் ரயில் ஏறுவது நீச்சத்தனம் என்றும், மாட்டுவண்டி, குதிரை வண்டி ஆகியவைகளில் ஏறுவது ஜீவஇம்சை என்றும் கருதிக் கொண்டும் மரக்கட்டையில் பல்லக்கு செய்து அதற்குத் தந்தம், வெள்ளி, தங்கம் முதலிய தகடுகள் போட்டு அதன்மீது, தான் ஏறி உட்கார்ந்து கொண்டு தண்டு 1க்கு 4பேர் வீதம் 4தண்டுக்கு 16பேர் ம்கு ம்கு என்று முக்கிக் கொண்டு மணிக்கு 4மைல் வீதம் தூக்கி ஓடுவதை பார்க்கிறோம். இது யந்திர சம்பந்தமில்லாதது என்று வைத்துக் கொண்டாலும் (கண்டிப்பாய் பார்த்தோமா னால் பல்லக்கு என்பதும் ஒரு யந்திரமேயாகும்) இந்த வாழ்வு காட்டு மிராண்டி உலக வாழ்வா? அல்லது நாகரிக உலக வாழ்வா? என்பதை யோசித்துப் பாருங்கள். மனிதன் தூக்குவதை விட்டு மாடோ, கழுதையோ, குதிரையோ, ஒட்டகமோ, யானையோ, சுமப்பதாக வைத்துக் கொண்டாலும், அதுவும் அதற்கு சற்று அடுத்த காட்டு மிராண்டி வாழ்வா அல்லது நாகரிக ஜீவகாருண்ய வாழ்வா என்றும் கேட்கின்றோம்.

ஆகவே இவைகளிலிருந்து இயந்திரம் மனி தனுக்கு அவசியமென்றும் சவுகரியமான தென்றும், ஜீவகாருண்ய முடைய தென்றும் முற்போக்குக்கும் நாகரிகத்திற்கும் ஏற்ற தென்றும் இயற்கை உணர்ச்சி யில் பட்ட தென்றும் அறிவு ஆராய்ச்சியின் பய னென்றும் ஒப்புக் கொண் டுதானாக வேண்டும்.

ஆனால்...

ஆனால், முற்சொல்லப்பட்ட அதாவது யந்திரங்கள் பெருகுவதால் தொழிலாளி களுக்கு வேலையில்லாமல் போய் ஜீவனத்திற்கு கஷ்டப்பட வேண்டிய தாகுமே என்பதற்கு சமாதானம் சொல்லியாக வேண்டும். இதற்கு பதிலாக நாம் அவர்களைக் கேட்பதென்ன வென்றால்

தொழிலாளி என்று ஒரு கூட்டம் ஏன் இருக்க வேண்டும்? முதலாளி என்று ஒரு கூட்டம் ஏன் இருக்க வேண்டும்? இது யாருடையக் கட்டளை? என்ன அவசியத்தைப் பொறுத்தது? என்று அவர்களை நாம் முதலில் கேட்கிறோம்.

பிறகு பாடுபடுபவன், சோம்பேறி, கஷ்டப் படுபவன், சுகப்படுபவன், வேலைசெய்பவன், வேலையின் பயனை அனுபவிப்பவன், ஏமாறு கிறவன் ஏமாற்றுகிறான் என்பன போன்ற பிரிவுகள் மனித வாழ்க்கையில் இருக்கும் படியாகவே வாழ்க்கைத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்பதற்கு ஏதாவது அவசியமும் ஆதாரமுமுண்டா? என்பது நமது இரண்டாவது கேள்வியாகும்.

மனிதன் தொழில் செய்வது என்பது மனித வாழ்க்கையின் சவுகரியம்  அல்லது தேவையின் அவசியம் என்பதற்காகவா? அல்லது முதலாளி, மிராசுதாரன் ஆகியவர்கள் வேலை செய்யாமல் சம் பாதிக்கவோ பணம் சேர்க்கவோ வேண்டிய அவசியத் திற்காகவா என்பது மூன்றாவது கேள்வியாகும்.

இம்மூன்று கேள்விகளுக்கும் பதில் அறிந்தோ மானால் வேலை என்பதும், வேலையில்லாத் திண்டாட்டம் என்பதும் ஒருவனை ஒருவன் கொடுமைப் படுத்துவதுதான் இந்த முறைகள் என்பதும் விளங்கிவிடும்.

இவை ஒருபுறமிருக்க வேலைகளின் கூலிகளை உயர்த்தி, வேலை நேரத்தைக் குறைத்து, முதலாளிகளின் லாபத்தையும் குறைத்து, ஒரு வரையறை ஏற்படுத்தி; உள்ள நேரத்தையும் கூலியையும் எல்லா வேலைக் காரர்களுக்கும் பங்கு வரும்படியான ஒரு திட்டம் போடுவோமேயானால் அதாவது மோட்டார் பஸ்காரர்கள்  யூனியன் வைத்து வருகின்ற பிரயாணிகள் சத்தத்தை உயர்த்திக் கிடைத்த வாடகையை எல்லோரும் பங்கிட்டுக் கொள்வதுபோல் செய்தால் வேலையில்லாத்  திண்டாட்டம் தானாகவே ஒருவாறு ஒழிக்கப் பட்டு விடுமா? இல்லையா? என்று கேட்கின் றோம்.

நிற்க, இன்றைய வாழ்க்கை நிலைமையைப் பார்த்தால் மனிதன் வேலை செய்வதற்காகவே பிறருக்கு அடிமையாய் உழைப்பதற் காகவே மனிதன் பிறந்திருக்கிறானேயொழிய சுகப்படு வதற்கில்லையென்றும் ஆதலால் அவன் வேலைசெய்வதற்காக ஒரு தொழில் கண்டு பிடித்துக் கொடுக்க வேண்டுமென்று தான் ஏற்படுகின்றது. இதுவும் தான் வயிற்றுக்கு வேண்டிய அளவு கூட கிடைக்க முடியாத கூலிக்கு முழுநேரத்தையும் செலவு செய்து பாடுபட வேண்டும் என்பதாகக் காணப்படு கின்றது.

இது பகுத்தறிவில்லாத மிருக வாழ்வைவிட மிக மோசமான வாழ்வேயாகும். எப்படி எனில்  அவற்றிற்காவது (ஒரு காரண்டி) உத்திரவாதம் இருக்கின்றது. அதாவது அதன் எஜமான் வயிறு நிறைய அதற்கு வேண்டிய ஆகாரம் கொடுக்கக் கட்டுப்பட்டிருக்கின்றான். மனித வேலைக் காரனுக்கோ உத்தரவாதமே கிடையாது. இன் னும் பட்சிகள், காட்டு மிருகங்கள் ஆகியவை களில் எதற்கும் எவ்வித வேலையும் செய்யாமல் வாழும் சவுகரியமிருக்கின்றது.

தொடரும்..

- விடுதலை நாளேடு, 4.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக