வெள்ளி, 19 மார்ச், 2021

உபி இலக்னோவில் பெரியார் சிலை திறப்பு

கன்சிராம்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோ நகரில் தந்தை பெரியாரின் சிலை திறப்பு விழா 29.7.1995 அன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. உத்தரப்பிரதேச மாநில முதல்வரான மாயாவதி அரசு நிறுவிய பெரியாரின் சிலையை ஆளும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான கன்சிராம் திறந்து வைத்தார். திரு.கன்சிராம் அவர்கள் பெரியாரின் கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பெரியாரின் கொள்கைகள் வட இந்தியாவிலும் பரவ வேண்டும். அப்போதுதான் அங்குள்ள தாழ்த்தப்பட்ட -_ பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் அகலும் என்ற ஆழமான கருத்தை கொண்டவர். முன்னதாக சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் விழாவில் உத்தரப்பிரதேசத்தில் தந்தை பெரியார் சிலையை அமைப்போம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாயாவதி

அதன்படி லக்னோ நகரின் பரிவர்த்தன் சதுக்கத்தில் பெரியார் சிலையை அரசு சார்பில் முதல்வர் மாயாவதி நிறுவினார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பேயிடம் இதைப் பற்றி கேள்வி எழுப்புகையில் “பெரியார் தீவிரமான கொள்கை கொண்டவர். பெரியாருடைய சேவையைப் பார்த்த பிறகு நாடு முழுவதும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காக நான் என்னுடைய இந்து மத கொள்கைகளில் சிலவற்றை குறைத்துக் கொண்டேன்’’ எனவும் பதில் அளித்தார். இதற்கெல்லாம் மாயாவதி அரசு எங்களை கலந்தாலோசிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என வாஜ்பேயி கூறினார்.

தந்தை பெரியார் சிலையை உத்தரப்பிரதேச அரசு நிறுவியதைப் பாராட்டி வாழ்த்துத் தந்தி ஒன்றை அனுப்பினேன். அதில்,

“மிகச் சிறந்த சமுதாயப் புரட்சி வீரரான தந்தை பெரியார் சிலையை லக்னோவில் திறந்ததன் மூலம் _ பாராட்டத்தக்க சாதனையைச் செய்துள்ளீர்கள். உளம் நிறைந்த பாராட்டுகளையும், உணர்வுபூர்வமான மகிழ்ச்சியையும் _ நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என மனம் மகிழ்ந்து செய்தி அனுப்பினேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 1-15.2.21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக