வியாழன், 17 அக்டோபர், 2024

கோவில் கட்டினால் மோட்சமா? ஒரு சந்தேகம்

 

பெரியார் பேசுகிறார் : 

ஜுன் 16-30 ,2021

தந்தை பெரியார்

புது பக்தன்: சிவனுக்கு திருப்பணி செய்பவர்கள்; அதாவது “கல்லினால் கோவில் கட்டுபவர்கள், கும்பாபிஷேகம் செய்பவர்கள்; பழைய கோவில்களை ரிப்பேர் செய்து புதுப்பித்து, கும்பாபிஷேகம் செய்பவர்கள் ஆகிய எல்லோரும், கைலாயத்தில் சிவபெருமானுடன் இரண்டறக் கலந்து கற்பகோடி காலம் வாழ்வார்கள்’’ என்று சாஸ்திரங்கள் சொல்லுவதாக பெரியோர்கள் சொல்லுகிறார்களே, இது மெய்தானா?

பழைய பக்தன்: அட, பயித்தியமே! எந்த மடையன் சொன்னான் உனக்கு இந்தப்படி?

புது பக்தன்: ஏனய்யா! சந்தேகம் கேட்டால் கோபிக்கிறீர்கள்? விவரம் சொல்லுங்கள்.

பழைய பக்தன்: இதற்கு சந்தேகம் என்னப்பா வந்தது? சொல்லுகிற மடையனோ, அயோக்கியனோ சொன்னால், கேட்கிறவனுக்கு புத்தி வேண்டாமா? எவனாவது மலத்தைக் கையில் வைத்துக் கொண்டு, “அய்யா, இது ஜவ்வாது’’ என்று சொன்னால், மூக்கு நன்றாய் இருக்கிற ஒருவன் அதில் சந்தேகப்பட்டு, “ஏனய்யா இது ஜவ்வாதா’’ என்று கேட்பானா?

புது பக்தன்: இது என்ன உபமானமய்யா! எனக்குப் புரியவில்லையே.

பழைய பக்தன்: அட முண்டமே, இந்த உலகத்தில் சிவனுக்குக் கல்லில் கோவில் கட்டித் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் செய்து, சிவனுக்குக் கல்யாணம், கருமாதி எல்லாம் பண்ணி, தினம் மூன்று வேளை, ஆறு வேளை பொங்கல் படைப்புக்கு பூமி எழுதி வைத்த பக்த சிகாமணிகளை, இந்த உலகத்திலேயே இவற்றையெல்லாம் சிவன் நேரில் கண்ணில் கண்டுகூட அப்படிப்பட்டவனைத் தன் கிட்ட வந்து தொட்டுக் கும்பிடவோ, தன் பக்கத்தில் நின்று நேரில் பிரார்த்தனை செய்யவோ அந்த சிவன் சம்மதிப்பதில்லையே, பக்தன் பாஷையே சிவனுக்கு புரிவதில்லையே. அப்படி இருக்க இவற்றையெல்லாம் நேரில் காண முடியாத இடமாகிய கைலாயத்தில் இருக்கும் சிவன், திருப்பணி செய்தவனைக் கிட்டச் சேர்க்குமா? இவன் செய்த திருப்பணி சங்கதி சிவனுக்கு எப்படித் தெரியும்? தெரிந்தாலும் இங்கே சேர்க்காத சிவன் அங்கே சேர்க்குமா? அதுவும் இங்கு கல்லில் இருக்கும் சிவன் சேர்க்கவில்லை என்றால் நிஜமா இருக்குமா? சிவன் சேர்க்குமா? இது தெரியாமல் ‘ஒரு சந்தேகம்’ என்கிறாயே! சந்தேகமா; மடத்தனமா?

புது பக்தன்: அய்யய்யோ. நீங்கள் சொல்லுவது பார்க்கிறதுக்கு நிஜமாய் இருந்தாலும், அது உண்மையல்ல. ஏனென்றால், இங்கு இருக்கும் பார்ப்பனர்கள் அப்படிச் செய்து நம்மை அவமானப்படுத்துகிறார்கள். சிவபெருமான் அப்படிப்பட்டவரல்லவே.

பழைய பக்தன்: அட மடக் குன்றே! பார்ப்பனர் அப்படிச் செய்யவிலை. அவர்கள் ரொம்பவும் நல்லவர்கள், சிவபெருமான் கூடவே கைலாயத்தில் இருந்து இங்கு வந்தவர்களும், பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்களுமாவார்கள். சாஸ்திரங்கள் அந்தப்படி, அதாவது இந்த மக்களை கிட்ட நெருங்கி விடக் கூடாது என்று சொல்லுவதால் பார்ப்பனர்கள் அப்படிச் செய்கிறார்கள். ஆதலால், பார்ப்பனர்கள் மீது குற்றம் சொல்லித் தப்பித்துக் கொள்ளவோ, சிவனைக் காப்பாற்றவோ பார்க்க வேண்டாம்.

புது பக்தன்: அய்யய்யோ, அந்த சாஸ்திரம்கூட இந்தப் பார்ப்பனர்கள் எழுதியதுதானே. இதற்கு சிவன் என்ன செய்வார்?

பழைய பக்தன்: அட களிமண் உருண்டையே! அந்த சாஸ்திரத்தை நீ எப்போதாவது பார்த்தாயா? நான் பார்த்து இருக்கிறேன். நீ சொல்லும் அந்த சாஸ்திரம் பார்வதிக்கு பரமசிவனே நேரில் சொன்னது, அதை நந்தி கேட்டிருந்து நமக்குச் சொல்லப்படுவதாகும். அதிலேயே அப்படி இருக்கிறது. ஆதலால், சாஸ்திரத்தில் அவநம்பிக்கை வைக்க வேண்டாம்.

புது பக்தன்: அய்யா நீங்கள் வேண்டுமென்றே பேசுகிறீர்கள் போல் தெரிகிறது. பார்ப்பனர் தங்கள் பிழைப்புக்கும், மேன்மைக்கும் எழுதி வைத்த ஏடுகளை எடுத்துக் கொண்டு அதை சாஸ்திரமென்றால் செல்லுமா? அப்படி எந்தக் கடவுளாவது சொல்லி இருக்குமா? என்ன அய்யா இப்படிப் பேசுகிறீர்கள்?

பழைய பக்தன்: நான் பேசுவது தப்பு என்கிறாய் _ அப்படியானால் நீ யோசித்துப் பார். என்னை எதற்கு ஆக “ஒரு சந்தேகம்’’ என்று கேட்க வந்தாய்? சாஸ்திரங்களில் சொல்லப்படுவது உண்மையா என்றுதானே கேட்க வந்தாய்?

புது பக்தன்: இப்போது நீ குறித்துக் கொண்டு வந்த சாஸ்திரம் மெய்யா, பொய்யா என்று தெரிந்து கொண்டாயா? அதை யார் என்ன காரியத்திற்கு எழுதினார்கள் என்றும், அதை நம்பலாமா, வேண்டாமா என்றும் தெரிந்து கொண்டாயா? சாஸ்திரம் என்றால், “கல்லால் கோவில் கட்டினவர், கற்பகோடி காலம் கைலாயத்தில் சிவனோடு கலந்திருப்பார்கள்’’ என்று எழுதப்பட்டிருப்பதும், “சூத்திரர்கள் கோவில் கட்டியவர்களாயிருந்தாலும், (சிவனையே) செய்து வைத்தவர்களாயிருந்தாலும் சிவனைத் தொட்டு விட்டால் உள்ளே நுழைந்து விட்டால் மகா பாவம் என்பதல்லாமல் சிவனும் தீட்டுப்பட்டு விடுவான்’’ என்று எழுதப்பட்டிருப்பதும் ஒன்றுதான். இந்த இரண்டும் ஒருத்தன் எழுதியதுதான்.

புது பக்தன்: சரி சரி, இப்போது தெரிந்துகொண்டேன்.

பழைய பக்தன்: அப்படி வாப்பா! இப்போது புரிந்ததா என் ‘உதாரணம்’.

புது பக்தன்: புரிந்தது புரிந்தது. எல்லாம் புரட்டு என்பதும், இந்த திருட்டுப் பசங்கள் எழுதினதென்பதும் நன்றாய்ப் புரிந்தது.

பழைய பக்தன்: அய்யனே! உனக்கு அறிவு இருக்கிறது, கண் இருக்கிறது, அனுபவம் இருக்கிறது. இவ்வளவையும் விட்டு, “மனுஷனுக்குப் பிறக்காத’’ நிஜமாய் இருந்திருக்காத, எவனோ ஒரு மடையன் எப்போதோ, எதற்காகவோ சொன்னதை, நம்பினதை எடுத்துக் கொண்டு, என்னிடம் வந்து  ‘பொய்யா’, ‘மெய்யா’, ‘சந்தேகம்’ என்கிறாயே? இப்படித்தானே மனிதரில் பெரும்பாலோர் இதுபோல் ஒன்றுக்கொன்று முரணான எத்தனையோ காரியங்களை நம்பியும், சந்தேகப்பட்டும், பேராசைப்பட்டும் மாடுகளாக ஆகி விட்டார்கள். போ, இனியாவது இம்மாதிரி காரியத்துக்கு ‘சந்தேகம்’ கொள்ளாதே.

புது பக்தன்: சரி புத்தி வந்தது. போய் வருகிறேன்.

பழைய பக்தன்: போய்த் தொலை.

‘சித்திரபுத்திரன்’ என்ற புனை பெயரில்

தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை

(‘விடுதலை’ 2.3.1950)

திராவிடர்களை இழிவுபடுத்தவே தீபாவளி!-தந்தை பெரியார்

 

திராவிடர்களை இழிவுபடுத்தவே தீபாவளி!-தந்தை பெரியார்

2024 அக்டோபர் 16-30 2024 பெரியார் பேசுகிறார்

தீபாவளிக் கதை பற்றி சுமார் 10 வருடங்களுக்கு மேலாக எழுதியும் பேசியும் வருகிறேன். ஆதலால் விரித்து எழுத வேண்டியதில்லை; என்றாலும் குறிப்பு கொடுக்கின்றோம். தீபாவளிக் கதை மிகவும் அதிசயமானதும், ஆபாசமானதும், இழிவும், ஈனத் தன்மையும் பொருந்தியதாகும்.

பார்ப்பனர் சாபமாம்!

மகாவிஷ்ணுவுக்கு வாயில் காப்பாளராக இருந்த இரு காவலர்கள் உத்தரவின்றி உள்ளே விட மறுக்கப்பட்ட இரண்டு பார்ப்பனர்கள் சாபத்தால் இரணியன் – இரண்யாட்சன் என்ற இரண்டு ராட்சதர்களாகப் பிறந்து விஷ்ணுவால் கொல்லப்பட்டு சீக்கிரம் மோட்சமடைய வேண்டுமென்று ஏற்பட்டுவிட்டதற்கிணங்க மூத்தவன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தான்; இளையவன் பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக்கொண்டு ஓடி சமுத்திரத்திற்குள் நுழைந்து கொண்டான். தேவர்கள் வேண்டுகோளால் மூத்தவனைக் கொல்ல மகாவிஷ்ணு நரசிம்ம (சிங்க) அவதாரமெடுத்து வந்து கொன்றுவிட்டார். இளையவனான இரண்யாட்சனைக் கொல்ல மகாவிஷ்ணு வராக(பன்றி) அவதாரமெடுத்து வந்து சமுத்திரத்திற்குள் பாய்ந்து இரண்யாட்சனைக் கொன்று பூமியைக் கொண்டு வந்து பழையபடி விரித்துவிட்டுப் போய்விட்டார்.

இனிமேல் நடப்பது ஆபாசம்

இதுவரை கதையில் அதிசயம் – அதாவது பொய்யும் புளுகும் இருக்கலாமே தவிர, இதில் ஆபாசமில்லை; இனிமேல் நடப்பதுதான் ஆபாசம். என்னவென்றால், விஷ்ணு பல அவதாரம், பல ரூபம்எடுத்து இருக்கிறார். அவற்றுள் பெரும் பாகம் ஆபாசமாகவே முடிகின்றன.

விஷ்ணு அசுரர்களால் கடைந்து எடுக்கப்பட்ட அமிர்தத்தை வஞ்சித்து தேவர்களுக்குக் கொடுப்பதற்காக அசுரர்களை ஏமாற்ற மோகினி அவதாரமெடுத்தார். அந்தக் காரியம் தீர்ந்தவுடன் சிவனுக்கு அந்த மோகினி அவதாரத்தின் மீது ஆசை வந்து – அவர் பின் திரிந்து மோகினி இணங்காமல் போய் – இருவரும் பலாத்காரம் செய்து சிவன் இந்திரியம் பூமியில் கொட்டப்பட அந்த இந்திரியம் பூமியில் வெள்ளி, தங்கமாக வேர் இறங்கிவிட்டன. அதுதான் இன்று வெள்ளியும் தங்கமுமாம்! அய்யனார் பிறந்தார் மற்றொரு சமயம் சிவன் பத்மாசுரனுக்கு வரம் கொடுத்ததால் அவன் சிவன் தலையிலே கையை வைத்து சிவனைக் கொல்ல வர, சிவன் ஓடி ஒளிந்து விஷ்ணுவைக் கூப்பிட, விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து தந்திரம் செய்து பத்மாசுரனை இறக்கும்படிச் செய்துவிட்டுத் திரும்புகையில் சிவன் அவளைப் புணர்ந்தானாம். அப்போது  அய்யனார் பிறந்தார்.

பூமியைப் பன்றி புணர்ந்ததாம்!

இப்படியுள்ள கதைகள் போலவே விஷ்ணு பன்றி அவதாரமெடுத்து இரண்யாட்சனைக் கொன்றுவிட்டுத் திரும்புங்காலையில் பன்றி, தான் கொண்டுவந்த பூமியைத் தனக்கு என்னவேண்டுமானாலும் செய்ய உரிமை இருக்கிறதென்று கருதி அந்தப் பூமியையே அந்தப் பன்றி புணர்ந்ததாம். பூமியும் அதற்கு சம்மதித்து இடம் கொடுத்ததாம். அப்போது பூமி கர்ப்பமாகி ஒரு குழந்தையையும் பெற்றுவிட்டதாம்.

நரகல் தின்பதால் நரகாசுரன்

அக்குழந்தைக்கு நரகாசுரன் என்று பெயரிட்டார்களாம். ஏன் அப்பெயர் இட்டார்கள் என்றால் நரகலைச் சாப்பிடுகின்ற பன்றிக்கும் நரகலைச் சுமக்கின்ற பூமிக்கும் குழந்தை பிறந்ததால் நரகன் என்று பெயர் இடாமல் வேறு என்ன பெயர் இடுவார்கள்?

இப்படிப் பிறந்த இந்தக் குழந்தை வங்காளத் துக்கும், அசாமுக்கும் மத்தியில் உள்ள ஒரு பிரதேச அரசனாக இருந்து கொண்டு பிரம்மா மனைவியின் காதணியையும் வருணனின் ஆயுதத்தையும் பிடுங்கிக்கொண்டு, இந்திரனின் சிம்மாசனத்தையும் தூக்கி வர எத்தனித்தானாம். அதோடு தேவர்களுக்குத் தொல்லைகொடுத்தானாம். உலகத்தையும் துன்புறுத்தினானாம்.

தேவர்களுக்காக கிருஷ்ணபகவான் வந்து இந்த அசுரனை வதம் செய்தாராம். அந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளியாகும். இது என்ன கதை? இதில் அறிவு மானம் இருக்கிறதா?

உருண்டையைச் சுருட்ட முடியுமா?

இரண்யாட்சன் பூமியை சுருட்டித் திருடிக் கொண்டு போகக் காரணம் என்ன? பூமி தட்டையாய் இருந்தாலல்லவா சுருட்ட முடியும்? அதுதான் உருண்டை ஆயிற்றே? பூமியை உருட்டிக்கொண்டல்லவா போயிருக்கவேண்டும்!

அப்படியே சுருட்டினதாக வைத்துக்கொள்வதானாலும் சுருட்டினவன் எங்கே இருந்துகொண்டு பூமியைச் சுருட்டி இருப்பான்; ஒரு சமயம் ஆகாயத்தில் தொங்கிக்கொண்டு சுருட்டி இருந்தாலும் பூமியில் இருந்த மலை, சமுத்திரம், ஆறு, ஜீவப்பிராணி முதலிய சகலமும்தானே பாயாகச் சுருட்டப்பட்ட பாய்க்குள் சிக்கியிருக்க வேண்டும். அப்படியிருக்க, அவன் பூமியைத் தூக்கிக் கொண்டு ஒளிய வேறு சமுத்திரமேது? வேறு சமுத்திரமிருந்தால் அது எதன் மீது இருந்திருக்கும்?

பன்றியுடன் போகமா?

அப்படி வைத்துக் கொண்டாலும் இந்தப் பூமியைத் திருப்பிக் கொண்டுவர விஷ்ணு அவதார மெடுப்பானேன்? அதுவும் பன்றி அவதாரமெதற்கு?

அப்போது அது ஆகாரமாக எதைத் தின்று இருக்கும்? எதையோ தின்று தொலைந்து போகட்டும். இந்தப் பன்றி பூமியைப் புணர ஆசைப்படுவானேன்? கொண்டு வந்ததற்குக் கூலியா? அப்படியே தான் இருக்கட்டும்; இதற்கு இந்தப் பன்றியுடன் போகம் செய்ய பூமிதேவி இணங்கலாமா? இது என்ன கதை?

திராவிடர்- ஆரியர்

மக்களை அசுரன், இராட்சதன், அரக்கன் என்று கூறி அவர்களை இழிவு செய்ய எழுதினதல்லாமல் வேறு என்ன இது? வங்காளத்தில் ஆரியர் வரும்
முன்பு திராவிடர்கள்தான் ஆண்டு கொண்டிருந் திருக்க வேண்டும்! ஆரியர்கள் திராவிடர்களைக் கொல்வதானால் மானம், வெட்கம் பார்க்காமல்
மிருகங்களுடன் புணர்ந்தாலும் சரி; மலத்தைத்தின்றாலும் சரி; “எப்படியான இழிவான அசிங்கமான காரியத்தைச் செய்தாவது கொல்லலாம்” என்கின்ற தர்மத்தை ஆரியர்களுக்குப் போதிக்க வந்த மனு நூல் போன்ற ஒரு ‘கோட்’ தானே ஒழிய, இப்புராணங்களுக்கு வேறு என்ன கருத்துச் சொல்ல முடியும்?
ஆகவே, அப்பேர்ப்பட்ட கதையில் ஒன்றான நரகாசுரன் கதையை நம்பி நாம் பண்டிகை கொண்டாடலாமா? நாம் திராவிடரல்லவா? நம் கடவுள்கள் மலம் தின்பதையும், நம் பெண் கடவுள்கள் பன்றியுடன் புணர்ச்சி செய்வதையும் ஒப்புக்கொள்ள நம்மால் முடியுமா? ஒப்புக்கொள்ளலாமா? நமக்கு மானம், வெட்கம், புத்தி ஒன்றுமே கிடையாதா?

நம் தலைவனைக் கொன்றதை நாம் கொண்டாடும் அளவிற்கு மான ஈனம் அற்றவர்களா நாம்? நாம் வீர திராவிடரல்லவா? நம் இனமக்கள் தீபாவளி கொண்டாடலாமா? கண்டிப்பாய் கொண்டாடாதீர்கள்! கொண்டாடுவதானால் இந்தக் கதை கொண்ட புத்தகங்களை வாங்கி நடுவீதியில் வைத்து
ஆண்கள் மிதியடியால் மிதி மிதியென்று மிதியுங்கள்; பெண்கள் முறத்தால் மொத்து மொத்து என்று மொத்துங்கள்!

(“குடிஅரசு’ – 7.10.1944 இதழில் ‘சித்திரபுத்திரன்’ என்ற புனைபெயரில் எழுதியது)

மனிதன் முன்னேற்றத்திற்கு கடவுள் கொள்கையே தடை !- தந்தை பெரியார்

 

மனிதன் முன்னேற்றத்திற்கு கடவுள் கொள்கையே தடை !- தந்தை பெரியார்

2024 அக்டோபர் 1-15 பெரியார் பேசுகிறார்

நான் பேசும் விஷயம் உங்கள் மனதிற்குத் திருப்தியாய் இருக்காது. ஆனாலும் உங்கள் மனதைப் புண்படுத்த வேண்டும் என்று நான் பேச வரவில்லை. ஆனால், இதன் பயன் என்ன என்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளவே நான் சில விஷயங்களைப் பேசுகின்றேன்.

இன்றைய உற்சவமும், கொண்டாட்டமும் என்ன கருத்தைக் கொண்டது? சுப்பிரமணியசாமிக்கு கல்யாணம்; கல்யாணம் செய்து கொண்ட சாமி தேர்மீது ஊர்கோலம் வருகின்றார். இதற்காக இத்தனை ஆயிரம் ஜனங்கள் வீடு, வாசல், வேலை, வியாபாரம் முதலியவைகளை விட்டுவிட்டு வந்து இன்று இங்கு கூட்டத்தில் நெருக்கப்படுகிறார்கள்; பலர் காவடி தூக்கி ஆடுகிறார்கள். சாமிக்குக் கல்யாணம் என்பதில் ஏதாவது அறிவு இருக்கிறதா? வருஷந்தோறுமா கல்யாணம் செய்வது?

இந்தக் காவடி தூக்கிக்கொண்டு கண்டபடி குதிப்பதிலும், உளறுவதிலும் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? இதை அந்நிய மதக்காரனோ, அந்நிய தேசத்தானோ பார்த்தால் என்ன சொல்லுவான்? வேறு மதக்காரன் இந்தப்படி ஆடினால் நாம் என்ன சொல்லுவோம்? நமது அறிவுக்கும், நாகரிகத்திற்கும் இதுதானா அடையாளம்?

எத்தனை வருஷ காலமாக இந்தப்படி மூடக் கொள்கையில் ஈடுபட்டு வருகிறோம்? என்ன பலனைக் கண்டோம்? மனிதனுக்கு முற்போக்கே கிடையாதா? 2,000, 3,000 வருஷத்திற்கு முந்திய நிலை நம்மிடம் சிறிதும் மாறவில்லை. இம்மாதிரி நடவடிக்கை நம்மை மிருகப் பிராயக்காரன் என்று காட்டுவதுடன், நமது பணம் எவ்வளவு செலவாகின்றது? நமது நேரமும், ஊக்கமும் எவ்வளவு செலவாகின்றது பாருங்கள்.

கடவுளைப் பற்றிய எண்ணங்களும், பக்திகளும் நமக்கு என்ன பலனைக் கொடுக்கின்றன? அதிக பக்திக்காரன் தனக்கு வேண்டியதெல்லாம் கடவுள் தருவார் என்று எண்ணுகின்றான். கடவுளைப் பற்றி அதிகமாய் அறிந்தவன் சகலமும் கடவுள் செயல் – அவனின்றி ஓரணுவும் அசையாது என்று எண்ணுகின்றான். மனிதனுடைய முற்போக்கையும், அவனது கஷ்டத்தையும், கொடுமையையும் நிவர்த்தி செய்து கொள்ளுவதையும் இந்த எண்ணங்கள் தடைப்படுத்துகின்றன.

பல ஆயிர வருஷங்களாக ஒருவன் கீழ் ஜாதியாய் இருப்பதற்கும் கல்வி அறிவு பெறாமல் இருப்பதற்கும் சதா உழைத்து உழைத்துப் பாடுபட்டும் பட்டினியாயும், போதிய ஆகாரமும் வசதியும் இல்லாமலும் இருப்பதற்கும் இந்த எண்ணங்களே காரணமாகும்.
இதுபோலவே பாடுபடாத சோம்பேறிகள் கோடீசுவரர்கள் ஆகவும், தலைமுறை தலைமுறை
யாய் பிரபுக்களாகவும், மேல் ஜாதிக்காரர்களாகவும் இருப்பதற்கும் இந்த எண்ணங்கள்தான் காரணம்.

இந்த எண்ணங்கள் பணக்காரனுக்கும், சோம்பேறிக்கும் (பார்ப்பானுக்கும்)தான் அனுகூலம் தொழி
லாளிக்கும், கூலிக்காரனுக்கும் பண்ணையாளுக்கும் கெடுதியே ஆகும்.

ஏழைகள் தங்கள் தரித்திரத்திற்கும், கஷ்டத்திற்கும் கடவுளும், தலைவிதியும்தான் காரணம் என்று சொல்லி விடுவாரேயாகில், அவர்கள் எப்படி தரித்திரத்தை நீக்கிக் கொள்ள முடியும்? அவன் தன் பாட்டின் பயனை எவன் அனுபவிக்கிறான்? ஏன் அனுபவிக்கிறான் என்று பார்த்து அவைகளைத் தடுக்க வேண்டும். இந்தக் காரியம் செய்ய ஒரு கடவுளும் ஒப்பாது. ஏனென்றால் கடவுளையும், தலைவிதியையும் பணக்காரனும், சோம்பேறியும்தான் உண்டு பண்ணுகிறான். ஆகையால், அவைகளைத் தங்களுக்குத் தகுந்த மாதிரியாகத்தான் உண்டு பண்ணிக்கொள்ளுவார்கள். இதில் உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம். இங்கு மாத்திரம் அல்லாமல் எல்லாத் தேசங்களிலும் பணக்காரர்கள் தங்கள் நன்மைக்கும், அது ஸ்திரமாய் இருப்பதற்கும் இந்த மாதிரியாகத்தான் கடவுளைச் சிருஷ்டித்து அதைப் பிரச்சாரம் செய்ய பாதிரிகளை ஏற்படுத்தி, அவர்களுக்குப் பணம் கொடுத்துக் காப்பாற்றி வருகிறார்கள்.

இந்தப் புரட்டுகளை உலகில் வெகு பேர் அறிந்திருந்தாலும் ரஷியா தேசத்தார்கள்தான் முதன்முதலில் இதை அழித்து நிர்த்தூளியாக்கிப் பணக்காரத் தன்மையையும் பாதிரித் தன்மையையும் ஒழித்தார்கள். ரஷியா தேசமானது இந்தியாவைப் போலவே பணக்காரருடையவும் பார்ப்பனர் (பாதிரி)களுடையவும் ஆதிக்கத்தில் இருந்து ஏழை மக்களை வாட்டி வதைத்து வந்தது. ஆனால், அவர்கள் அதற்குக் காரணம் கடவுள் புரட்டும். மதப்புரட்டும் என்பதை உணர்ந்து, அந்த இரண்டையும் அழிக்கத் தொடங்கி இன்று எல்லோரும் சமமாய் வாழ்கின்றார்கள். அங்கு சோம்பேறியோ, பிரபோ, பணக்காரனோ, முதலாளியோ, மிராசுதாரனோ, ஜமீன்தாரனோ கிடையாது. எல்லோரும் பாடுபட வேண்டியது; அதன் பயனை எல்லோரும் சமமாய் அனுபவிக்க வேண்டியது. ஒருவனை ஒருவன் ஏய்க்கவோ, ஒருவன் பாடுபட்டதை ஒருவன் அனுபவிக்கவோ முடியாது.

ஆனால், இன்று இங்கு “கடவுள் செயலால்” இருக்கும் தேசத்தில் ஒரு மனிதனுக்கு 1,000 ஏக்கர் 10,000 ஏக்கர், பூமிகூட இருக்கிறது. பூமிக்குச் சொந்தக்காரன் என்பவன் உழுவதில்லை, விதைப்பதில்லை, தண்ணீர் இறைப்பதில்லை, பாத்தி கட்டுவதில்லை, அறுப்பு அறுப்பதில்லை. ஆனால், விளைந்த வெள்ளாமையை எல்லாம் தன் வீட்டில் கொண்டு போய்க் கொட்டிக் கொள்கிறான். உழுது, விதைத்து, தண்ணீர் பாய்ச்சி, அறுப்பு அறுத்த ஆளுக்கு ஒரு படி போதாதா – இரண்டு படி போதாதா? என்று அரை வயிற்றுக்குத்தான் கொடுக்கிறான். துணி வேண்டுமானால் தர்மத்துக்கு இனாம் கொடுப்பதுபோல் அரைத்துணி கொடுக்கிறான். வீடு வேண்டுமானால் காட்டில் கை அகலம் இடம் காட்டுகிறான். இதெல்லாம் பிச்சைக் கொடுப்பதுபோல் கொடுக்கிறான்.

ஆனால், மிராசுதாரனோ இவ்வளவையும் விற்று மாடிவீடு, மோட்டார் வண்டி, தேவடியாள், பிராந்தி, விஸ்கி, நாடகம், சினிமா, தாலுகா, ஜில்லா போர்டு மெம்பர், பிரசிடெண்ட், முனிசிபல் சேர்மன் ஆகியவைகளுக்குப் பதினாயிரக்கணக்காக வாரிச் செலவு செய்து ராஜபோகம் அனுபவிக்கிறான். இந்த அக்கிரமங்களுக்கு உடந்தையாய் இருக்கிற கடவுளும், அனுமதித்துக் கொண்டிருக்கிற கடவுளும் இன்னமும் நமது நாட்டுக்கு வேண்டுமா என்று கேட்கிறேன்.

கடவுள் புரட்டு ஒழிந்தாலொழிய, இந்த மிராசுதாரர்கள் ஒழிய மாட்டார்கள். இவர்களது இப்படிப்பட்ட அகந்தையும், ஆணவமுமான காரியங்களும் ஒழியாது. உங்கள் தரித்திரங்களும் ஒழியாது.

ஆகையால், இவைகளையெல்லாம் நன்றாய் யோசித்து உங்கள் கஷ்டத்திற்கும், அறிவீனத்திற்கும் காரணம் என்ன என்று கண்டுபிடித்து அதன்படி நடவுங்கள்.

(09.02.1933 அன்று சென்னிமலையில் பேசியது – ‘குடிஅரசு’)

கடவுள் என்பது ஒரு பொருளா?- தந்தை பெரியார்

 

கடவுள் என்பது ஒரு பொருளா?- தந்தை பெரியார்

2024 பெரியார் பேசுகிறார் ஜுலை 16-31

அறிஞர்களே! நீங்களும் நாங்களும் இன்று 1968ஆம் ஆண்டில் பகுத்தறிவு விஞ்ஞானக் காலத்தில் வசிக்கிறோம்; அதன் பயனாய் நான் கடவுள் இல்லை என்றும் அது அறிவில்லாத காலத்து முட்டாள் மனிதனது கற்பனை என்றும் சொல்லுகிறேன். இந்தப்படி நான் 50, 60 வருஷங்களாகச் சொல்லி வருகிறேன்.

மக்கள் பக்குவப்படாத (காட்டுமிராண்டி) காலம்

நான் சொல்லுவது ஒருபுறம் இருந்தாலும் கடவுளைப் பற்றி மக்கள் அறிய நேர்ந்தது சுமார் “3000 ஆண்டு”க்கு மேல் “5000 ஆண்டுக்குள்” இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். நீங்களும் இதில் ஒரு 1000 அல்லது 500 ஆண்டுகள் வித்தியாசமாய்க் காணலாம். எப்படி ஆனாலும் அந்த 3000 ஆண்டுக்கு மேற்பட்ட காலம் பொதுவாக மக்கள் பக்குவப்படாத (காட்டுமிராண்டி) காலம் என்பதை நீங்கள் மறுக்க முடியாது.

மாற்றப்பட– _ மறுக்கப்பட வேண்டியவைகளே!

அந்தக் காலத்தில் மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட, நடந்துகொண்டு வந்த, பயன்படுத்திக்கொண்டு வந்த, எண்ணிக் கொண்டு நம்பிக்கொண்டு வந்தவைகளில் இன்று மனிதன் (உணவு, உறக்கம், கல்வி என்பதைத் தவிர, கடவுள் என்பதைத் தவிர) வேறு எதைப் பின்பற்றி வருகிறான்? பயன்படுத்தி அனுபவித்துக் கொண்டு வருகிறான்? என்று சிந்திப்போமேயானால் அவையெல்லாம் மாற்றப்பட வேண்டிய, கைவிடப்படவேண்டிய, மறுக்கவேண்டிய காரியங்களாகவே இருந்து வருகின்றன.

இன்றியமையாதவைகளில் மாறி வருகிறோம்

சாதாரணமாக மனிதனுக்கு உடை, உணவு, உறைவிடம், ஊர்தி ஆகிய இன்றியமையாத இந்நான்கில் காலத்துக்குக் காலம் மாறுதல் அடைந்துகொண்டே வருகிறோம். இவற்றுள் எதற்கும் நம்மை யாரும் கட்டாயப்படுத்தாமலே நாமே மாற்றிக்கொண்டு வருகிறோம். இந்த மாற்றமும் இதோடு நிற்கப் போவதில்லை. மேலும், நாளுக்கு நாள், ஆண்டுகளுக்கு ஆண்டு மாறிக்கொண்டே போக வேண்டியவைகளாகவும் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் மனிதன் கடவுளைப் பற்றிய கருத்தில் மாத்திரம் சிந்தனை அற்ற மூடனாக, முழுமூடனாகவே இருந்து வருகிறான் என்றால் காரணம் என்ன?

மருந்து வியாபாரியும் டாக்டரும்

ஒரு மருந்து வியாபாரி ஒரு மருந்தை ஒரு டாக்டரிடம் (வைத்தியனிடம்) கொடுத்து “இது இன்ன வியாதியைக் குணப்படுத்தும், வாங்கிப் பயன்படுத்துங்கள்” என்றால் அந்த டாக்டர் வியாபாரி பேச்சைக் கேட்டு உடனே வாங்கி நோயாளிக்குக் கொடுப்பாரா? எந்த டாக்டருமே கொடுக்க மாட்டார். மருந்தை வாங்கினவுடன், இதில் என்ன என்ன வஸ்து எவ்வளவு எவ்வளவு சேர்ந்திருக்கிறது என்றுதான் கேட்பார். அதற்கு வியாபாரி டாக்டரைப் பார்த்து “அதெல்லாம் கேட்கக்கூடாது. அதைப் புரிந்துகொள்ள உனக்கு சக்தியும் கிடையாது; அந்த மருந்தும் அதைப் பற்றி எவனும் புரிந்துகொள்ள முடியாத தன்மையுடையது. ஆதலால் (நான் சொல்லுவதை) நம்பி வாங்கி காயலாக்காரனுக்குக் கொடு” என்றால் உலகில் எந்த டாக்டர் அந்த மருந்தை வாங்கி காயலாக்காரனுக்குக் கொடுப்பார்?

ஒரு முறை இருந்தாக வேண்டும்

ஒரு மருந்து என்றால் அதற்கு ஒரு முறை இருக்க வேண்டும்; அதில் சேர்க்கப்பட்ட பண்டங்களுக்குத் தெளிவு வேண்டும்; அப்பண்டங்களின் தன்மைக்கும் ஆதாரம் வேண்டும். இதை ஆங்கிலத்தில் ஃபார்முலா (Formula) என்று சொல்லுவார்கள்.
அதாவது எந்த வஸ்துவானாலும் வஸ்து என்று சொல்லப்பட்டால் அதற்கு மேற்கண்டபடியான ஒரு (செய்) முறை (Formula) கூட்டுமுறை வேண்டும். அது இயற்கைப் பொருளானாலும் செயற்கைப் பொருளானாலும் அதற்கு முறை இருந்தே தீரும்.
ஆகையால், கடவுள் என்பது ஒரு பொருள் அல்லது ஒரு சக்தி என்று சொல்லப்பட்டாலும் அது பெயர்ச்சொல்லே ஒழிய, வினைச்சொல் அல்ல. பெயர்ச்சொல் ஆன பொருளுக்கு – வஸ்துவுக்கு – வஸ்து நிச்சயத்திற்கு கண்டிப்பாக செய்முறை கூட்டுப்பொருள் தன்மை “ஃபார்முலா” இருந்தே ஆகவேண்டும் அது இல்லாதது வஸ்துவே ஆகமாட்டாது. ஆதலால், கடவுளைப் பற்றிப் பேசுபவர்கள் முட்டாள்களானால் அவர்களிடம் இந்த விளக்கம் செல்லாது; அறிவுள்ளவனானால் இந்த விளக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய
வனாகத்தானே இருக்க முடியும்?

அறிவுக்குப் பொருந்தா விளக்கத்தை நம்புகிறவன் மனிதன் ஆவானா?

இங்ஙனமிருக்க, “கடவுள் என்றால் விளக்கம் கேட்க வேண்டாம்.”
“கடவுள் என்றால் ஆராய்ச்சி செய்ய வேண்டாம்.”
“அது உனக்குப் புரியக்கூடியதல்ல”
“அதை எவனாலும் அறிந்துகொள்ள முடியாது.”
“அது மனோவாக்கு காயங்களுக்கு எட்டாத பொருள்”
“கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நம்பிக்கொள்ள
வேண்டியதுதான் கடவுள் என்பதற்கு விளக்கம்”
என்று சொல்லப்படுவதானால் இந்த முறைப்படி (ஃபார்முலாப்படி) கடவுளை நம்புகிறவன் அவன் எவ்வளவு அறிவுமேதாவி ஆனாலும் அவன் மனிதக்கூட்டில் சேர்க்கப்பட வேண்டியவனாவானா?
அன்றியும் எதற்காக சர்வ சக்தி, சர்வ வியாபகம்,
சர்வக்ஞன் ஆன ஒரு பொருளுக்கு இந்த மாதிரியான நிபந்தனை இருக்கவேண்டும்? அதுவும் சுமார் 5000, 3000 ஆண்டுகளுக்கு முந்திய காலமான காட்டுமிராண்டி (மனிதப் பக்குவமற்ற) காலமல்லாத இந்த – இன்றைய காலங்களில் யாராலாவது இப்படிப்பட்ட ஒரு வஸ்துவைக் கண்டுபிடிக்க முடியுமா என்று கேட்கிறேன்.
“கடவுளை நம்பவேண்டும்” என்பதற்கும், “மந்திரம்
ஜெபித்தால் நோய் நீங்கும்” என்பதற்கும், “பிரார்த்தனை
செய்தால் தேவையான காரியம் கைகூடும்” என்பதற்கும் என்ன வித்தியாசம் கூற முடியும்?

பகுத்தறிவுக்குப் புரியாத சர்வசக்தி உள்ள பொருள் அவசியமா?

“சர்வசக்தி உள்ள ஒரு பொருள் என்பது பகுத்தறி
வுள்ள ஒரு மனிதனால் புரிந்துகொள்ள முடியாததாய் இருக்கவேண்டிய அவசியமென்ன?” என்பதைப் பற்றி மனிதன் சிந்திக்க வேண்டாமா? சர்வசக்தி உள்ள ஒரு கடவுள் இருந்தால் கடவுள் இல்லை என்று
கருதி இருப்பவர்களும் கடவுளைப் புரிந்துகொள்ள முடியாதவர்களுமான ஆறறிவு படைக்கப்பட்ட மனிதர்கள் உலகத்தில் எப்படி இருக்க முடியும்?
மனித வாழ்வில் கடவுளால் என்ன பயன்?
அன்றியும், மனித வாழ்வில் மனிதனுக்கு கடவுள்
எந்த வகையில் என்ன காரியத்திற்குப் பயன்படு
கிறார்? ஒரு சர்வசக்தி உள்ள கடவுள் படைப்பில்,
ஜீவராசிகளுக்கு பிறப்பு – இறப்பு எதற்காக இருக்க வேண்டும்?
நன்மை – தீமை, இன்பம் – துன்பம் எதற்காக இருக்க வேண்டும்?
திருப்தி – கவலை எதற்காக இருக்க வேண்டும்?
இம்சை – சுகம் எதற்காக இருக்க வேண்டும்? இவற்றால் உலகில் யாருக்கு என்ன நன்மை? அல்லது இவற்றிற்கு என்ன தேவை?

சர்வம் முட்டாள்தனமே!

இவை எல்லாம் சர்வம் மடத்தனம், முட்டாள்தனம், அயோக்கியத்தனம், காட்டுமிராண்டித்தனம் என்பதல்லாமல் வேறு என்ன என்பதைச் சிந்தித்துத் தெளியுங்கள்.
— ‘விடுதலை’ தலையங்கம் 13.6.1968

புதன், 16 அக்டோபர், 2024

கெடுவான் கேடு நினைப்பான்

 


பிப்ரவரி 01-15

கெடுவான் கேடு நினைப்பான் என்பது ஒரு பழமொழியாகும். இது இரு கட்சியாரும் ஒப்புக் கொள்ளக்கூடிய பழமொழியாகும்.

எந்தெந்த இரு கட்சியார் என்றால் பஞ்சேந்திரியங்களுக்குப் புலனாவதைத் தவிர வேறு வஸ்து கிடையாது என்கின்ற முடிவைக் கொண்ட மெடீரியலிஸ்ட் (Materialist) என்னும்  கட்சியாரும், பஞ்சேந்திரியங்களுக்கும் எட்டாத ஒரு வஸ்து இருக்கிறது என்கின்ற முடிவைக் கொண்ட ஸ்பிரிச்சுவலிஸ்ட் (Spiritualist) என்னும் கட்சியாரும் ஆகிய இரு கட்சிக்காரர்களும், அதாவது நாஸ்திகர்களும், ஆஸ்திகர்களும் ஆகிய இரு கட்சிக்காரர்களும் ஒப்புக் கொள்ளக்கூடிய பழமொழியாகும்.

 

இந்தப் பழமொழியின் கருத்து என்னவென்று தெரிந்திருக்கின்றோம் என்றால், அன்னியருக்குக் கேடு செய்ய வேண்டுமென்றோ, கேடு உண்டாக வேண்டுமென்றோ நினைப்பவன் கெட்டுப் போவான் என்பதாகும்.

இதை ஆஸ்திகர்கள் எந்த முறையில் ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்றால், மனிதர்களில் ஒவ்வொருவருடைய நடவடிக்கைகளையும்,  எண்ணங்களையும் தனித்தனியே கவனித்து அந்தந்த நடவடிக்கைக்கும், எண்ணத்துக்கும் தகுந்த பலனைக் கொடுப்பதற்குச் சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ, ஒரு சக்தியோ உண்டு என்றும், அது பிறருக்குக் கேடு செய்தவனையும், கேடு நினைத்தவனையும் அறிந்து அப்படிப்பட்டவனுக்குத் தண்டனையாக கெடுதி செய்வதனால் அவன் கெடுவான், கெட்டுப் போவான் என்றும் கருதுகிறார்கள். நாஸ்திகர்கள், அதாவது சர்வசக்தியும் சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ அல்லது ஒரு வஸ்துவோ, ஒரு ஆவியோ இருந்து கொண்டு மனித சமூகத்தின் ஒவ்வொரு மனிதனின் நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் கவனித்து அதற்கேற்ற பலன்களை அவரவர்களுக்குக் கொடுத்து வருகிறார் என்பதை முழுதும் நம்பாதவர்களின் வர்க்கம், இந்த கெடுவான் கேடு நினைப்பான் என்கின்ற பழமொழியை எப்படி ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்றால், சமூக வாழ்வில் பிறருக்குக் கேடு செய்கின்ற மனிதனும், கேடு நினைக்கின்ற மனிதனும் பிற மனிதர்களால் கேடு செய்யப்படுவதும், மற்றும் இவனது கெட்ட செய்கையைக் கண்ட, கேட்ட பிறரால் வெறுக்கப்படுவதும், துவேஷிக்கப்படுவதும் பெரிதும் சகஜமான சம்பவங்களல்லவா? ஆகவே, பிறருக்குக் கேடு செய்ய நினைத்து, பிறரால் வெறுக்கப்படவும், துவேஷிக்கப்படவும் ஆன மனிதன் பகட்டிற்கு ஆளாவதும் சகஜமாகும்.

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே என்ற பிரத்தியட்ச பழமொழிப்படியே நன்மையும் தீமையும் தான் தர வருமே என்பதும் யாவராலும் ஒப்ப முடிந்த விஷயமாகும்.

– குடிஅரசு 12.11.1933



 

மதம், அரசாங்கம், பிரபுத்துவம் ஆகிய மூன்றும் நாட்டை வருத்துகின்றது!

மதம், அரசாங்கம், பிரபுத்துவம் ஆகிய மூன்றும் சேர்ந்துதான் நாட்டை (அதாவது நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்களாகிய ஏழைகளை) வருத்துகின்றது. ஆதலால், நாட்டுக்கு உண்மையாக விடுதலை வேண்டுமானால், இம்மூன்று துறையிலும் முறைப்படி பெரும் புரட்சி ஏற்பட்டால்தான் விடுதலை அடைய முடியுமேயல்லாமல், வெறும் அரசியலைப் பற்றி, அதன் அஸ்திவாரத்தை விட்டுவிட்டுக் கூச்சல் போடுவதாலும், அரசாங்க ஆதிக்கத்தின் மீது கண் மூடிக்கொண்டு குறை கூறுவதாலும் ஒரு காரியமும் நடந்துவிடாது. நிற்க,

மேற்கண்ட இம்மூன்று விஷயங்களிலும் புரட்சி ஏற்படும்போது, இம்மூன்றிற்கும் உதவியாக இருக்கின்ற ஆயுதங்களையும் முதலில் நாம் பிடுங்கிக் கொள்ள வேண்டும். அதென்னவென்றால், அதுதான் கடவுள் என்பதாகும். எப்படியெனில், ஆட்சி ஆதிக்கக்காரன் உங்களை ஆளும்படி கடவுள் எங்களை அனுப்பினார் என்கின்றான். மத ஆதிக்கக்காரன், உங்களுக்காக உங்களை மோட்சத்திற்கு அனுப்ப கடவுள் இந்த மதத்தை ஏற்படுத்தி, அதைக் காப்பாற்ற எங்களை அனுப்பினார் என்கின்றான்.  செல்வ ஆதிக்கக்காரன், முன் ஜென்மத்தில் நான் செய்த புண்ணியத்தினால் இந்தச் செல்வத்தைக் கடவுள் எனக்குக் கொடுத்தார் என்கின்றான். ஆகவே, இம்மூன்று கொடியவர்களுக்கும் (மக்கள் விரோதிகளுக்கும்) ஆயுதங்களாக இருப்பது கடவுளாகும். ஆகவேதான், அதை நாம் முதலில் ஒழிக்க வேண்டி இருக்கின்றது. ஏனெனில், அம்மூவருக்கும் கடவுள் அனுகூலமாயிருப்பதால், அக்கடவுளை அவர்கள் எப்படிக் காப்பாற்ற முயலுகின்றார்களோ, அதுபோலவே நமக்கு அக்கடவுள் விரோதமாயிருக்கிறபடியால், நாம் விடுதலை பெறக் கடவுளை முதலில் ஒழிக்க வேண்டியவர்களாயிருக்கின்றோம். அதாவது, அம்மூவரையும் பார்த்து நாம், உங்களைக் கடவுள் அனுப்பினாரோ, கடவுள் உண்டாக்கினாரோ, உங்களுக்குக் கடவுள் கொடுத்தாரோ என்பதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்களுக்கு இல்லாமல் செய்து கஷ்டப்படுத்தி, உங்களுக்குக் கொடுத்து இருக்கும் கடவுளை நாங்கள் அரை நிமிஷமும் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று சொல்லிவிட்ட பிறகுதான், உங்கள் ஆதிக்கங்களையும் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று சொல்லி ஆகவேண்டும் என்கின்றோம்.

இந்தக் கொள்கையைக் கொண்டுதான் ரஷ்யர்களும் சமதர்மம் ஏற்பட வேண்டுமானால், முதலாவது கடவுள் ஒழிய வேண்டும் என்று நினைத்து, அதற்காக முதன்முதலாக கடவுளைக் காட்டும் மதத்தின் பேரில் போர் புரிந்து வெற்றி பெற்று பிறகே அவர்கள் மற்ற காரியங்களும் செய்து கொள்ளத்தக்கவர்களானார்கள் என்பது விளங்குகிறது.

– சித்திரபுத்திரன்  என்னும் புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது (குடிஅரசு 1.6.1930

தாலி கட்டுதல் என்னும் சடங்கு ஒழிந்தது

 

ஏப்ரல் 16-30

– தந்தை பெரியார்

 

இத்திருமணமானது மணமக்கள் மனமொத்து மெய்க்காதல் கொண்டு தாங்களாகவே தைரியமாய் முன்வந்து சீர்திருத்த முறையில் ஆண் பெண் இருவரும் சம உரிமையோடு வாழ்க்கையை நடத்துவதற்கேற்றதோர் சுயமரியாதைத் திருமணமாகும். இதைப் பலர் அதிசயமாக நினைக்கலாம். இதில் ஒன்றும் அதிசயமில்லை. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து செய்து கொள்ளும் திருமணம்தான் இது. ஆனால் நம் நாட்டில் வெகுகாலமாக வேரூன்றிக் கிடக்கும் அர்த்தமற்ற சடங்குகள் இல்லாமலும், பெண்ணை ஆண் அடிமையாக்குவதற்கு அறிகுறியாகிய தாலி கட்டுதல் என்னும் சடங்கு இல்லாமலும் சீர்திருத்த உலகத்துக்கேற்ற முறையில் இத்திருமணம் நடந்திருக்கிறது.

பெண்கள் விடுதலையடைந்து ஆண்களோடு சம சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்ற அடிப்படையான கொள்கையுடைய சுயமரியாதை இயக்கம் தோன்றி இன்றைக்கு 4, 5, வருஷங்களேயாகினும் இதுவரை இம்மாதிரி பல சுயமரியாதைத் திருமணங்கள் நடந்-தேறியிருப்பது உங்களுக்குத் தெரியும். இம்மாதிரி புதுமுறைத் திருமணத்தில் கர்நாடகப் பிடுங்கல்களால் பலவித இடைஞ்சல்கள் ஏற்படுவது சகஜமே. அதைப் பொருட்-படுத்தாமல் இளைஞர்கள் தைரியமாய் முன்வர வேண்டும்.

இத்திருமணத்தில் தாலிகட்டுதல் என்னும் சடங்கு நீக்கப்பட்டிருக்கிறது.

கலியாண காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி என்னும் ஒரு கயிற்றைக் கழுத்தில் கட்டித் தனக்கு அடிமை என்று நினைத்துக் கேவலமாக நடத்தி வருவதானது எருமை மாடுகளை விலைக்கு வாங்கி அதன் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி இழுத்து வந்து நடத்துவது போலவேதானாகும்.

பெண்களுக்குக் கழுத்தில் தாலி கட்டுவதன் கருத்து கலியாணம் ஆனது ஆகாதது என்ற அடையாளத்தைக் காட்டுவதற்கும் இன்னான் பெண்டாட்டி என்ற உரிமையை நிலை-நாட்டுவதற்கும் பிறத்தியான் அப்பெண்ணைக் காதலிக்காதிருப்பதற்குமென்றே கருதப்பட்டு வருகிறது. அப்படியானால் ஆண்களில் கல்யாணம் ஆகாதவர்கள் ஆனவன் என்பதற்கும், இன்னாளுடைய புருஷன் என்பதற்கும், பிற மாதர் காதலிக்காதிருக்கும் பொருட்டும், அடையாளம் வேண்டியது-அவசியமல்லவா?

அதற்காக கல்யாண காலத்தில் ஆண்கள் கழுத்திலும் ஒரு தாலிக்கயிறு கட்ட வேண்டும். அப்படியில்லாமல் பெண்களை மட்டும் ஏமாற்றிக் கழுத்தில் தாலிக் கயிற்றைக் கட்டி அடிமைப்படுத்தி வருவது கண்டித்து ஒழிக்கத் தகுந்ததோர் சடங்காகும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. அதோடு மனைவியிழந்த புருஷன் மறுமணம் செய்து கொள்ளலாம். கணவனையிழந்த கன்னிகைதான் ஆயுள்மட்டும் தன் காலத்தை விதவை என்ற கட்டுப்பாட்டில் கழிக்க வேண்டும் என்ற மூடப்பழக்கம் ஒழிந்து நமது மணமகள் செல்வி சிவகாமி போல தைரியமாய் முன்வர வேண்டும்.

இதற்குத் தோன்றும் இடையூறும் எதிர்ப்பும் அர்த்தமற்ற அநாகரிகமான செய்கையென்று-தான் சொல்ல வேண்டும். அத்தகைய எதிர்ப்பையும் இடைஞ்சலையும் மூடக் கட்டுப்பாடுகளையும் உதறித்தள்ளி தம் பகுத்தறிவை உபயோகித்து அர்த்தத்தோடு கூடிய செய்கைகளையும் நடவடிக்கைகளையும் நமது வாழ்வின் லட்சியமாகக் கொள்வதே மக்களின் சுயமரியாதைக்கு அடையாளமாகும் என்பதை உங்களுக்குக் கூறி மணமக்களை மனமார வாழ்த்துகிறேன்.

(5.5.1930இல் ஈரோட்டில் நடைபெற்ற மணவிழாவில் தந்தை பெரியார் பேசியது  குடிஅரசு – 11.5.1930)

தாலி ஓர் அடிமைச் சின்னம்

சகோதரர்களே! தென்னாட்டில் இதுவரை நடந்த சுயமரியாதைக் கல்யாணங்களுக்குள் இதுவே முதன்மையானது என்று சொல்வேன். என்னவெனில் இந்தக் கலியாணத்தில் பெண்ணின் கழுத்தில் கயிறு (தாலி) கட்டவில்லை, மணமக்களைப் பெற்றவர்கள் இருவரும் மிகத் துணிச்சலான சுயமரியாதை வீரர்கள் என்பது அவர்களது உபந்யாசத்தி-லிருந்தே பார்க்கலாம். தாலி கட்டுவது ஒழிந்தாலல்லாது நமது பெண்கள் சமூகம் சுதந்திரம் பெற முடியவே முடியாது. பெண்கள் மனிதத்தன்மை அற்றதற்கும் அவர்களது சுயமரியாதை அற்ற தன்மைக்கும் இந்தப் பாழும் தாலியே அறிகுறியாகும். புருஷர்களின் மிருக சுபாவத்திற்கும் இந்தத் தாலி கட்டுவதே அறிகுறியாகும். ஆனால் தங்களை ஈனப் பிறவி என்று நினைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த வார்த்தை பிடிக்காதுதான். இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும் பெண்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால் அறுத்தெறியட்டும். இல்லா-விட்டால் புருஷர்கள் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும். தங்களைத் தாங்களே அடிமை என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற சமூகம், என்றும் உருப்படியாகாது.

நம்மை நாம் சூத்திரர்கள் இந்துக்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கீழ்மைக்    குணமே நம் நாடு அடிமையாய் இருப்பதற்குக் காரணமாயிருப்பது என்பது போலவே பெண்கள் புருஷனுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும். அதிலும் தாலி கட்டின புருஷனுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்னும் உணர்ச்சிகள் பெண்களை மிருகமாக்கி இருக்கின்றன. ஆதலால் அப்பேர்ப்பட்ட மிருக உணர்ச்சியையும் அடிமை உணர்ச்சியையும் ஒழிக்க முயற்சித்த இந்த மணமக்களையும் அதற்கு உதவியாயிருந்த பெற்றோர்களையும் நான் மிகப் போற்றுகிறேன். பெண்கள் முன்னேற்றத்தில் கவலை உள்ளவர்கள் பெண்களைப் படிக்க வைக்கும் முன் இந்தக் கழுத்துக் கயிற்றை (தாலியை) அறுத்தெறியும் வேலையையே முக்கியமாய் செய்ய வேண்டுமென்று சொல்வேன்.

நிற்க, இதுவரை மணமக்களுக்கு ஆசீர்வாதமோ வாழ்த்தோ என்பது மணமக்கள் நிறைய அதாவது 16 பிள்ளைகள் பெற வேண்டுமென்று சொல்வார்கள். ஆனால் நான் மணமக்களுக்குச் சொல்லுவதென்னவென்றால் அவர்கள் தயவு செய்து பிள்ளைகள் பெறக்கூடாது என்பதும், மிக்க அவசியமென்று தோன்றினால் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் கூடாது என்றும் அதுவும் இன்னும் அய்ந்து ஆறு வருடம் பொறுத்துத்தான் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். அன்றியும் அப்படிப் பெறும் குழந்தைகளையும் தாய்மார்கள் குரங்குக் குட்டிகள் போல் சதா தூக்கிக்கொண்டு திரிந்து, போகின்ற இடங்களுக்கெல்லாம் அழைத்துப் போய் அழவைத்துக் கொண்டு கூட்டமும் நடவாமல் தங்களுக்கும் திருப்தியில்லாமல் சபையோருக்கும் வெறுப்புத் தோன்றும்படியாய்ச் செய்யாமல் குழந்தைகளை ஆயம்மாள் வைத்து வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவைகளுக்கு ஒழுங்கும், அவசியமான கட்டுப்பாடும் பழக்கிக் கொடுக்க வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் நான் பேச முடியாதபடி எத்தனை குழந்தைகள் அழுகின்றது பாருங்கள். அவற்றின் தாயார் முகங்கள் எவ்வளவு வாட்டத்துடன் வெட்கப்படுகின்றது பாருங்கள். அந்தத் தாய்மாரும் தகப்பன்மாரும் இந்தக் கூட்டத்தில் ஒருவரையொருவர் பார்த்து வெறுப்பதைத் தவிர அவர்களுக்கு  இங்கு வேறு வேலையே இல்லாமல் இருக்கின்றது. இன்பமும் அன்பும் என்பது சுதந்திரத்தோடு இருக்க வேண்டுமேயல்லாது நிபந்தனையோடும் தனக்கு இஷ்டமில்லாத சவுகரியமில்லாத கஷ்டத்தைச் சகித்துக் கொண்டு இருப்பதாய் இருக்கவே முடியாது. ஆகவே இப்போதைய குழந்தை இன்பம் என்பது ஒருக்காலமும் உண்மையான இன்பமாகாது. ஆகையால் அவைகளை மாற்றிவிட வேண்டும்.

தவிர, அதிக நகை போடாமலும் தாலிகட்டாமலும் மூடச் சடங்குகள் இல்லாமலும் மாத்திரம் நடைபெற்ற திருமணம் சுயமரியாதைத் திருமணமாகிவிடாது.

பெண்ணின் பெற்றோர் இப்பெண்ணுக்கு தங்கள் சொத்தில் ஒரு பாகம் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். புருஷர்களைப் போலவே பெண்களுக்கும் சொத்து உரிமை உண்டு, தொழில் உரிமை உண்டு என்கின்ற கொள்கை ஏற்படாவிட்டால் எப்படி அவர்கள் சுயமரியாதை உடையவர்களாவார்கள்? ஆகையால் அவர்களுக்குச் சொத்துரிமையும் அவசியமானதாகும். தவிர பெண்களுக்கு இப்போது பொதுநல சேவை என்னவென்றால் எப்படியாவது ஒவ்வொரு விதவையையும் ஒவ்வொரு புருஷனுடன் வாழச் செய்ய வேண்டும். அதுவே அவர்கள் இப்போது செய்ய வேண்டியது.

தவிர பெண்களும் புருஷர்களைப் போலவே தினமும் அல்லது வாரத்திற்கு ஒன்று இரண்டு நாளோ ஒரு பொது இடத்தில் கூடி மகிழ்ச்சியாய் பேசி விளையாட வேண்டும். பத்திரிகைகளைப் படிக்க வேண்டும். படிக்காத பெண்களுக்குப் படித்தவர்கள் படித்துக் காட்ட வேண்டும்.

வீட்டுவேலை செய்வதுதான் தங்கள் கடமை என்பதை மறந்துவிட வேண்டும். புருஷனுக்குத் தலைவியாய் இருப்பதும் குடும்பத்திற்கு எஜமானியாய் இருப்பதும் தங்கள் கடமை என்று நினைத்து அதற்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும். இந்த உணர்ச்சியோடேயே பெண் மக்களை வளர்த்து அவர்களுக்குத் தக்க பயிற்சி கொடுக்க வேண்டும்.

(10.7.1930 விருதுநகரில் நடைபெற்ற மணவிழாவில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது – குடிஅரசு 13.7.1930)


விஞ்ஞானமும் சனாதனமும்… தந்தை பெரியார் …

 


2024 கட்டுரைகள் பிப்ரவரி 16-29, 2024 பெரியார்

இன்றைய கூட்டம் வெளியில் மைதானத்தில் நடந்து இருக்கவேண்டும். பல காரணங்களால் அனுமதி கிடைக்காததனால் இங்கு ஏற்பாடு செய்து உள்ளார்கள். கன்னடத்தில் பேசவேண்டும் என்று சிலரும், தமிழில் பேசவேண்டும் என்று கோருபவர் பலரும் அவர்கள் ஆசைப்படுகின்றார்கள். இது பெரிதும் தமிழ் மக்கள் அழைப்பின் பேரில் வந்துள்ளதால் தமிழில் பேசுகின்றேன்.
தலைப்பு “விஞ்ஞானமும் சனாதனமும்” என்று தலைப்பு கொடுத்துள்ளார்கள். இதற்கு தமிழில் ஏற்ற சொல் இல்லை. இதற்கு தமிழில் நான் உணர்ந்தவரை “அறிவும், அறியாமையும்” என்று சொல்லலாம். பகுத்தறிவும் மூடநம்பிக்கையும் என்று சொல்லலாம். சுயமரியாதையும் புராண மரியாதையும் என்று சொல்லலாம். அவ்வளவு கருத்துகள் அதில் அடங்கி இருக்கின்றது.

விஞ்ஞானத்தின் காரணமாக சினிமா,ரேடியோ, மின்சாரம் போன்ற அரிய சாதனங்கள் எல்லாம் அறிவின் – ஆராய்ச்சியின் காரண
மாகக் கண்டுபிடிக்கப்பட்டு நடைபெறுகின்றது.

சனாதனம் என்பதற்கு அது எதைக் கண்டுபிடித்தது என்ற சொல்ல முடியாது. கடவுள், மதம், சாஸ்திர சம்பிரதாயங்களை விளக்குவது; அதன் மூலம் மக்களை மடமையாக்குவது என்ற அளவில்தான் நடைபெறுகின்றது.

விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டது காரணமாகத்தான் உலகம் வளர முடிகின்றது. சனாதனமே நிலைத்து இருந்திருக்குமானால் உலகமே தேய்ந்து இருக்கும்.
சுமார் 500, 600 ஆண்டுகளுக்கு முன்பு உலக ஜனத்தொகை சுமார் 45 கோடிதான் ஆகும். இன்றைக்கு சமார் 400 கோடியாக வளர்ந்து உள்ளது.
சுமார் 20 ஆண்டுக்கு முன்பு பெங்களூர் ஜனத்தொகையே 5 லட்சம்தான். மதராஸ் ஜனத்தொகை சுமார் 6 லட்சம். இன்றைக்கு பெங்களூர் ஜனத்தொகை சுமார் 16 லட்சம். சென்னை ஜனத்தொகை சுமார் 25 லட்சம் ஆகும்.

எனவே, உலக வளர்ச்சிக்குத் தடையாக இருந்து வந்தது சனாதன தர்மமாகும். இதன் காரணமாகத்தான் மக்கள் ஆராய்ச்சி அறிவு அற்றவர்களாக மூடநம்பிக்கை உடையவர்களாக ஆகி இருந்த காரணமாகத்தான் மனித சமுதாயத்தில் அறிவு, பண்பு வளர்ச்சி ஏற்படவே இல்லை.
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு 45 கோடியாக இருந்த உலக ஜனத்தொகையாக இன்றைக்கு 400 கோடியாகப் பெருகி இருக்கும்போது அதற்கு முன்பு 10 லட்சம் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே உலகம் இருந்தும் ஏன் வளர்ச்சி அடையவில்லை? காரணம் மக்கள் அறிவு, பண்பு வளர்ச்சி அடையவில்லை என்பது தானே பொருள்?

இன்றைக்கு மக்கள் சமுதாயம் வளர்ச்சி அடைந்து வரக்கூடிய வேகத்தைப் பார்த்து அரசாங்கம் மக்கள் தொகை வளர்வதை கட்டுப்படுத்த கர்ப்பத்தடைப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்கள்.

இப்படி கர்ப்பத்தடை பற்றி அவசியம் வேண்டும் என்று நாங்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பே இருந்து கூறிவருகின்றோம். ஆரம்பத்தில் முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும், சனாதனிகளும் எதிர்த்தார்கள்.

ஆனால், எங்கள் பிரச்சாரத்தின் பயனாக அரசாங்கமே இன்றைக்கு கர்ப்பத்தடைக்கு ஏற்பாடுகள் செய்யவும் முற்பட்டு உள்ளது.
சுமார் 10 ஆண்டுக்கு முன்புவரை நமது மக்களுடைய சராசரி வயது 32தான். காமராஜரின் 10 ஆண்டுகால நல்லாட்சியின் காரணமாக இன்றைக்கு மக்களுடைய சராசரி வயது 50ஆக உயர்ந்து உள்ளது.

அரசாங்கம், சுகாதார வளர்ச்சி, மருத்துவம் முதலியவைகளில் நாட்டம் செலுத்தியதன் காரணமாக மக்கள் அற்ப ஆயுளில் இறப்பது கம்மியாகியுள்ளது.
எப்படி இந்த நிலை? சனாதனம் தோற்றது, விஞ்ஞானம் வளர்ச்சியுற்றதன் காரணமாக மக்களுடைய ஆயுட்காலம் வளர்ந்து உள்ளது.
காமராஜர் திட்டம் (K Plan) முழுமையும் வெற்றி பெற்றுவிடுமானால் மக்களுடைய சராசரி வயது சுமார் 80க்கு அல்லது 100க்கு மேல் ஆகிவிடும். விஞ்ஞான வளர்ச்சி, மேற்கொண்டும் தடையின்றி வளர்ந்தால் மக்களுடைய சராசரி வயது 100 என்ன 150 ஆகக் கூட உயர்ந்துவிடும். ஏன் 150 வயது வாழ முடியாது? சேற்றினால் கட்டப்பட்ட கட்டடத்தினை கண்ணாம்பால் கட்டி தேக்குமரத்தையே உபயோகப்படுத்திச் செய்தால் 200 வருஷம் நிலைத்திருக்கும் என்கின்றார்கள். இப்படி இருக்க மனிதன் ஆயுள்காலம் நீளும்படியாக வசதி செய்தால் ஏன் வயது வளரமுடியாது?

முன்பு காலரா கண்டவர்கள் இறந்தார்கள். இன்றைக்கு காலரா கண்டவர்கள் 100 பேர் என்றால் 10 பேர்கள் கூட சாவதில்லையே! அந்த அளவுக்கு வைத்திய வசதி ஏற்பட்டு உள்ளது.
நோய்க்கு வைத்தியம் பார்க்கவேண்டும் என்பவன் விஞ்ஞானி; கர்மத்தின்படி நடக்கும் என்று கருதி கடவுளை வேண்டிக்கொண்டு சும்மா இருப்பவன் சனாதனி ஆவான். காய்ச்சல் வந்தால் முன்பு வைத்தியனிடம் போவதற்குப் பதில் கோயிலுக்குச் சென்று பூசாரியிடம் குறி கேட்பார்கள்; இன்றைக்கு அந்த நிலையானது மாற்றம் அடைந்துவிட்டது.
இப்படி எல்லாம் மாறுதல் அடைந்துவரும் மனிதன் கடவுள் விஷயத்திலோ, மத விஷத்திலோ பேச ஆரம்பித்தால் நாத்திகன் என்கின்றான்.
இன்றைக்கு உலகில் பல நாடுகளும் மூடநம்பிக்கையை விட்டு, சனாதனத்தை விட்டு அறிவியலில் நம்பிக்கை வைத்து அறிவுகொண்டு பல அரிய அற்புத சாதனங்களை எல்லாம் கண்டுபிடிக்கின்றன.

நாம் மற்ற நாட்டில் கண்ட விஞ்ஞான சாதனங்களை அனுபவிக்கின்றோமே ஒழிய, நாமாக ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை. காரணம், நாம் பழமையினை மாற்றிக் கொண்டு புதுமையில் நம்பிக்கை வைக்காததே காரணமாகும்.

விஞ்ஞானத்தின் பெருமையினை நாம் பார்க்கின்றோமே. அமெரிக்கா எத்தனை ஆயிரம் மைலுக்கு அப்பால் இருக்கின்றது. அங்கிருந்து ஜான்சன் பேசினால் அதே நேரத்தில் நாம் இங்கு ரேடியோ, டெலிஃபோன் போன்ற சாதனங்களால் கேட்க முடிகின்றதே – பார்க்கமுடிகின்றதே! எப்படி முடிகின்றது? இடையில் யாராவது காயத்திரி மந்திரம் ஜபிக்கின்றானா? வேதம் ஜபிக்கின்றானா? எப்படி முடிகின்றது?

இன்றைக்கு சனாதன தர்மத்தை வைத்துக் கொண்டு என்ன அக்கிரமம் வேண்டுமனாலும் பண்ணலாம், ஒழுக்கக் கேடாக துரோகமாக வேண்டு
மானாலும் நடக்கலாம்; ஆராயக்கூடாது. ஆராய்ந் தால் நாத்திகன் என்பார்கள்.
இராமாயணம் 20 லட்சம் வருஷத்துக்குமுன் நடந்ததாக புராணம் கூறுகின்றது. ஆனால், அந்த இராமாயணத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த புத்தன் சங்கதி கூறப்பட்டு உள்ளது. எப்படி புத்தன், 20 லட்சம் வருஷத்துக்கு முன்பு வாழ்ந்த இராமாயணத்தில் வரமுடியும்? முட்டாள்தனமாக எழுதி இருக்கின்றான்.
இராமன் தனது வாயாலேயே கூறுகின்றான் – மனிதன் 100 வயதுவரைதானே வாழ வேண்டியவன் என்று ஒரு சந்தர்ப்பத்தில் கூறி இருக்கின்றான்.
ஆனால், இராமனுடைய அப்பனுக்கு 60,000, அவன் பெண்டாட்டிகளுக்கு எல்லாம் 60,000 வயது என்று கூறப்பட்டு உள்ளதே! இவன்கள் எல்லாம் சாதாரணமான மனிதர்கள் தானே? எப்படி இத்தனை ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து இருக்கமுடியும்?
புராணம் எழுதியவன்- முட்டாளாகவும், காட்டுமிராண்டிகளாக மக்கள் இருந்த காலத்திலும் எழுதியவை ஆகும் இந்தக் கதைகள்!

அறிவுக்கு மரியாதை ஏற்பட்டு இருக்குமானால் நமது நாட்டில் உள்ள கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள் நடப்பு இதுகள் நிலைத்து இருக்க முடியுமா?
எனவே, மனிதனுக்குப் பகுத்தறிவில்தான் நம்பிக்கை இருக்கவேண்டும். மூடநம்பிக்கையை ஒழிக்கவேண்டும். பழமையினை விட்டு ஒழிக்க வேண்டும்.
நமது நாட்டில் நமது மதம் இந்துமதம் என்று கூறப்படுகின்றது. இப்படி இந்துமதம் என்ற ஒரு மதம் கிடையாது. எதிலும் இதற்கு ஆதாரம் இல்லை.
மக்களையெல்லாம் பிற்காலத்தில் மனதைக் கலைத்து ,குழப்பி அடிமைப்படுத்தி வைக்கக் கண்டுபிடிக்கப்பட்ட சொல்தான் இந்துமதம் என்பது. இப்படிப்பட்ட முட்டாள்தனமான மதம் உலகில் எங்குமே கிடையாது. கிறிஸ்துவ மதத்தை எடுத்துக்கொண்டால் கிறிஸ்து ஏற்படுத்தியது; ஆதாரம் பைபிள்; வருஷம் 1964 ஆகின்றது.
முஸ்லிம் மதத்தை எடுத்துக் கொண்டால் 1400 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது; ஆதாரம் குரான்;
முகமது நபியால் செய்யப்பட்டது.

இப்படி இந்து மதத்தைச் செய்தவர் யார்? எப்போது ஏற்பட்டது? என்ன ஆதாரம்? என்று கூற வகையே இல்லையே?
என்னுடைய வேலை மக்கள் சமுதாயத்தைத் திருத்துகின்ற வேலை. எனக்கு மதமோ, கடவுள் நம்பிக்கையோ, நாட்டுப் பற்றோ, மொழிப்பற்றோ கிடையாது. சமுதாய வளர்ச்சிப்பற்று ஒன்றுதான் உண்டு.
100 வருஷத்துக்கு முன்னமேயே நாம் அறிவுக்கு மதிப்புக் கொடுத்து நடக்க ஆரம்பித்து இருப்போமேயானால் எவ்வளவோ வளர்ந்து இருப்போம்.

(16.11.1964 அன்று பெங்களூர் சிட்டியில் பெரியார் ஆற்றிய உரை.)