புதன், 16 அக்டோபர், 2024

தாலி கட்டுதல் என்னும் சடங்கு ஒழிந்தது

 

ஏப்ரல் 16-30

– தந்தை பெரியார்

 

இத்திருமணமானது மணமக்கள் மனமொத்து மெய்க்காதல் கொண்டு தாங்களாகவே தைரியமாய் முன்வந்து சீர்திருத்த முறையில் ஆண் பெண் இருவரும் சம உரிமையோடு வாழ்க்கையை நடத்துவதற்கேற்றதோர் சுயமரியாதைத் திருமணமாகும். இதைப் பலர் அதிசயமாக நினைக்கலாம். இதில் ஒன்றும் அதிசயமில்லை. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து செய்து கொள்ளும் திருமணம்தான் இது. ஆனால் நம் நாட்டில் வெகுகாலமாக வேரூன்றிக் கிடக்கும் அர்த்தமற்ற சடங்குகள் இல்லாமலும், பெண்ணை ஆண் அடிமையாக்குவதற்கு அறிகுறியாகிய தாலி கட்டுதல் என்னும் சடங்கு இல்லாமலும் சீர்திருத்த உலகத்துக்கேற்ற முறையில் இத்திருமணம் நடந்திருக்கிறது.

பெண்கள் விடுதலையடைந்து ஆண்களோடு சம சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்ற அடிப்படையான கொள்கையுடைய சுயமரியாதை இயக்கம் தோன்றி இன்றைக்கு 4, 5, வருஷங்களேயாகினும் இதுவரை இம்மாதிரி பல சுயமரியாதைத் திருமணங்கள் நடந்-தேறியிருப்பது உங்களுக்குத் தெரியும். இம்மாதிரி புதுமுறைத் திருமணத்தில் கர்நாடகப் பிடுங்கல்களால் பலவித இடைஞ்சல்கள் ஏற்படுவது சகஜமே. அதைப் பொருட்-படுத்தாமல் இளைஞர்கள் தைரியமாய் முன்வர வேண்டும்.

இத்திருமணத்தில் தாலிகட்டுதல் என்னும் சடங்கு நீக்கப்பட்டிருக்கிறது.

கலியாண காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி என்னும் ஒரு கயிற்றைக் கழுத்தில் கட்டித் தனக்கு அடிமை என்று நினைத்துக் கேவலமாக நடத்தி வருவதானது எருமை மாடுகளை விலைக்கு வாங்கி அதன் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி இழுத்து வந்து நடத்துவது போலவேதானாகும்.

பெண்களுக்குக் கழுத்தில் தாலி கட்டுவதன் கருத்து கலியாணம் ஆனது ஆகாதது என்ற அடையாளத்தைக் காட்டுவதற்கும் இன்னான் பெண்டாட்டி என்ற உரிமையை நிலை-நாட்டுவதற்கும் பிறத்தியான் அப்பெண்ணைக் காதலிக்காதிருப்பதற்குமென்றே கருதப்பட்டு வருகிறது. அப்படியானால் ஆண்களில் கல்யாணம் ஆகாதவர்கள் ஆனவன் என்பதற்கும், இன்னாளுடைய புருஷன் என்பதற்கும், பிற மாதர் காதலிக்காதிருக்கும் பொருட்டும், அடையாளம் வேண்டியது-அவசியமல்லவா?

அதற்காக கல்யாண காலத்தில் ஆண்கள் கழுத்திலும் ஒரு தாலிக்கயிறு கட்ட வேண்டும். அப்படியில்லாமல் பெண்களை மட்டும் ஏமாற்றிக் கழுத்தில் தாலிக் கயிற்றைக் கட்டி அடிமைப்படுத்தி வருவது கண்டித்து ஒழிக்கத் தகுந்ததோர் சடங்காகும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. அதோடு மனைவியிழந்த புருஷன் மறுமணம் செய்து கொள்ளலாம். கணவனையிழந்த கன்னிகைதான் ஆயுள்மட்டும் தன் காலத்தை விதவை என்ற கட்டுப்பாட்டில் கழிக்க வேண்டும் என்ற மூடப்பழக்கம் ஒழிந்து நமது மணமகள் செல்வி சிவகாமி போல தைரியமாய் முன்வர வேண்டும்.

இதற்குத் தோன்றும் இடையூறும் எதிர்ப்பும் அர்த்தமற்ற அநாகரிகமான செய்கையென்று-தான் சொல்ல வேண்டும். அத்தகைய எதிர்ப்பையும் இடைஞ்சலையும் மூடக் கட்டுப்பாடுகளையும் உதறித்தள்ளி தம் பகுத்தறிவை உபயோகித்து அர்த்தத்தோடு கூடிய செய்கைகளையும் நடவடிக்கைகளையும் நமது வாழ்வின் லட்சியமாகக் கொள்வதே மக்களின் சுயமரியாதைக்கு அடையாளமாகும் என்பதை உங்களுக்குக் கூறி மணமக்களை மனமார வாழ்த்துகிறேன்.

(5.5.1930இல் ஈரோட்டில் நடைபெற்ற மணவிழாவில் தந்தை பெரியார் பேசியது  குடிஅரசு – 11.5.1930)

தாலி ஓர் அடிமைச் சின்னம்

சகோதரர்களே! தென்னாட்டில் இதுவரை நடந்த சுயமரியாதைக் கல்யாணங்களுக்குள் இதுவே முதன்மையானது என்று சொல்வேன். என்னவெனில் இந்தக் கலியாணத்தில் பெண்ணின் கழுத்தில் கயிறு (தாலி) கட்டவில்லை, மணமக்களைப் பெற்றவர்கள் இருவரும் மிகத் துணிச்சலான சுயமரியாதை வீரர்கள் என்பது அவர்களது உபந்யாசத்தி-லிருந்தே பார்க்கலாம். தாலி கட்டுவது ஒழிந்தாலல்லாது நமது பெண்கள் சமூகம் சுதந்திரம் பெற முடியவே முடியாது. பெண்கள் மனிதத்தன்மை அற்றதற்கும் அவர்களது சுயமரியாதை அற்ற தன்மைக்கும் இந்தப் பாழும் தாலியே அறிகுறியாகும். புருஷர்களின் மிருக சுபாவத்திற்கும் இந்தத் தாலி கட்டுவதே அறிகுறியாகும். ஆனால் தங்களை ஈனப் பிறவி என்று நினைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த வார்த்தை பிடிக்காதுதான். இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும் பெண்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால் அறுத்தெறியட்டும். இல்லா-விட்டால் புருஷர்கள் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும். தங்களைத் தாங்களே அடிமை என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற சமூகம், என்றும் உருப்படியாகாது.

நம்மை நாம் சூத்திரர்கள் இந்துக்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கீழ்மைக்    குணமே நம் நாடு அடிமையாய் இருப்பதற்குக் காரணமாயிருப்பது என்பது போலவே பெண்கள் புருஷனுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும். அதிலும் தாலி கட்டின புருஷனுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்னும் உணர்ச்சிகள் பெண்களை மிருகமாக்கி இருக்கின்றன. ஆதலால் அப்பேர்ப்பட்ட மிருக உணர்ச்சியையும் அடிமை உணர்ச்சியையும் ஒழிக்க முயற்சித்த இந்த மணமக்களையும் அதற்கு உதவியாயிருந்த பெற்றோர்களையும் நான் மிகப் போற்றுகிறேன். பெண்கள் முன்னேற்றத்தில் கவலை உள்ளவர்கள் பெண்களைப் படிக்க வைக்கும் முன் இந்தக் கழுத்துக் கயிற்றை (தாலியை) அறுத்தெறியும் வேலையையே முக்கியமாய் செய்ய வேண்டுமென்று சொல்வேன்.

நிற்க, இதுவரை மணமக்களுக்கு ஆசீர்வாதமோ வாழ்த்தோ என்பது மணமக்கள் நிறைய அதாவது 16 பிள்ளைகள் பெற வேண்டுமென்று சொல்வார்கள். ஆனால் நான் மணமக்களுக்குச் சொல்லுவதென்னவென்றால் அவர்கள் தயவு செய்து பிள்ளைகள் பெறக்கூடாது என்பதும், மிக்க அவசியமென்று தோன்றினால் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் கூடாது என்றும் அதுவும் இன்னும் அய்ந்து ஆறு வருடம் பொறுத்துத்தான் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். அன்றியும் அப்படிப் பெறும் குழந்தைகளையும் தாய்மார்கள் குரங்குக் குட்டிகள் போல் சதா தூக்கிக்கொண்டு திரிந்து, போகின்ற இடங்களுக்கெல்லாம் அழைத்துப் போய் அழவைத்துக் கொண்டு கூட்டமும் நடவாமல் தங்களுக்கும் திருப்தியில்லாமல் சபையோருக்கும் வெறுப்புத் தோன்றும்படியாய்ச் செய்யாமல் குழந்தைகளை ஆயம்மாள் வைத்து வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவைகளுக்கு ஒழுங்கும், அவசியமான கட்டுப்பாடும் பழக்கிக் கொடுக்க வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் நான் பேச முடியாதபடி எத்தனை குழந்தைகள் அழுகின்றது பாருங்கள். அவற்றின் தாயார் முகங்கள் எவ்வளவு வாட்டத்துடன் வெட்கப்படுகின்றது பாருங்கள். அந்தத் தாய்மாரும் தகப்பன்மாரும் இந்தக் கூட்டத்தில் ஒருவரையொருவர் பார்த்து வெறுப்பதைத் தவிர அவர்களுக்கு  இங்கு வேறு வேலையே இல்லாமல் இருக்கின்றது. இன்பமும் அன்பும் என்பது சுதந்திரத்தோடு இருக்க வேண்டுமேயல்லாது நிபந்தனையோடும் தனக்கு இஷ்டமில்லாத சவுகரியமில்லாத கஷ்டத்தைச் சகித்துக் கொண்டு இருப்பதாய் இருக்கவே முடியாது. ஆகவே இப்போதைய குழந்தை இன்பம் என்பது ஒருக்காலமும் உண்மையான இன்பமாகாது. ஆகையால் அவைகளை மாற்றிவிட வேண்டும்.

தவிர, அதிக நகை போடாமலும் தாலிகட்டாமலும் மூடச் சடங்குகள் இல்லாமலும் மாத்திரம் நடைபெற்ற திருமணம் சுயமரியாதைத் திருமணமாகிவிடாது.

பெண்ணின் பெற்றோர் இப்பெண்ணுக்கு தங்கள் சொத்தில் ஒரு பாகம் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். புருஷர்களைப் போலவே பெண்களுக்கும் சொத்து உரிமை உண்டு, தொழில் உரிமை உண்டு என்கின்ற கொள்கை ஏற்படாவிட்டால் எப்படி அவர்கள் சுயமரியாதை உடையவர்களாவார்கள்? ஆகையால் அவர்களுக்குச் சொத்துரிமையும் அவசியமானதாகும். தவிர பெண்களுக்கு இப்போது பொதுநல சேவை என்னவென்றால் எப்படியாவது ஒவ்வொரு விதவையையும் ஒவ்வொரு புருஷனுடன் வாழச் செய்ய வேண்டும். அதுவே அவர்கள் இப்போது செய்ய வேண்டியது.

தவிர பெண்களும் புருஷர்களைப் போலவே தினமும் அல்லது வாரத்திற்கு ஒன்று இரண்டு நாளோ ஒரு பொது இடத்தில் கூடி மகிழ்ச்சியாய் பேசி விளையாட வேண்டும். பத்திரிகைகளைப் படிக்க வேண்டும். படிக்காத பெண்களுக்குப் படித்தவர்கள் படித்துக் காட்ட வேண்டும்.

வீட்டுவேலை செய்வதுதான் தங்கள் கடமை என்பதை மறந்துவிட வேண்டும். புருஷனுக்குத் தலைவியாய் இருப்பதும் குடும்பத்திற்கு எஜமானியாய் இருப்பதும் தங்கள் கடமை என்று நினைத்து அதற்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும். இந்த உணர்ச்சியோடேயே பெண் மக்களை வளர்த்து அவர்களுக்குத் தக்க பயிற்சி கொடுக்க வேண்டும்.

(10.7.1930 விருதுநகரில் நடைபெற்ற மணவிழாவில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது – குடிஅரசு 13.7.1930)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக