வியாழன், 18 அக்டோபர், 2018

கடவுளைப் பற்றி நினைக்க முடியா மேல் நாட்டினர் முற்போக்கு தொழில் முயற்சி



30.10.1932 - குடிஅரசிலிருந்து...

நான் ஒரு நாதிகனல்ல.,,. தாராள எண்ணமுடையோன். நான் ஒரு தேசியவாதியுமல்ல, தேசாபிமானியுமல்ல, ஆனால் தீவிர ஜீவரட்ச எண்ணமுடையவன். எனக்கு ஜாதி என்பதோ, ஜாதியென்பதின் பேரால் கற்பிக்கப்படும் உயர்வு தாழ்வுகளோ கிடையாது. அத்தகைய எண்ணத்தையே நான் எதிர்ப்பவன். ஆதரிப்பவனல்ல. தாங்கள் மேல் ஜாதியார், உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு, மனிதரது ஜீவாதாரமான உரிமைகளாகிய தெருவில் நடத்தல், கோவிலுக்குள் செல்லல் முதலியவற்றை மறுத்துக் கொண்டு ஏனையோர்க்கும் சமத்துவம் வேண்டுமென்று செய்கிற முயற்சியைக் கண்டிக்கிறேன்.

காலமெல்லாம் பண்டைய பழக்கவழக்கங்களும், மூடக் கொள்கை களும் நிலைத்தே நிற்க வேண்டுமென்றால் ஒரு பறையன் என்று சொல்லப்படுகின்றவனோ, அல்லது சக்கிலி என்று சொல்லப் படுகின்றவனோ, மிருகத்தைவிடக் கேவலமாக நடத்தப்பட்டே வர எப்படி இந்தியா அவன் தாய் நாடு தான் என்று எண்ணமுடியும்? ஒரு பொது சேவைக்கு அவர்களை நம்மோடு ஒத்துழைக்க எதிர்பார்க்க முடியுமா?

வேலையில்லாத் திண்டாட்டம்

கஷ்டப்படுகின்ற தொழிலாளிகள் அரசாங்கத்தை நடத்துகின்றவர் களாயிருக்க வேண்டும். ஜனங்களின் நன்மைக்காக, ஜனங்களாலேயே நடத்தப்படுகின்ற அரசாங்கமாயிருத்தல் வேண்டும். இந்தியாவைப் பற்றியுள்ள வறுமையை அகற்றக் கூடிய அரசாங்கமாயிருக்க வேண்டும். பிரான், ஜெர்மனி, கிரீ, அய்க்கிய தேசம் முதலியனவெல்லாம் குடிஅரசு நாடுகளாகவே இருக்கின்றன. ஆனால் எங்கும் வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்து ஆடுகிறது. ரஷ்யா ஒன்றில் மட்டும் வேலை இல்லாத திண்டாட்டமே கிடையாது.

ஒரு சில பிச்சைக்காரர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் வயது சென்றவர்களும், அங்கவீனர்களுமே, அவர்களை அரசாங்கம் போஷிக்கிறது. உண்மையில் அது ஒரு புதிய உலகம். அதுபோல் முன்னொரு போதும், எந்நாட்டிலும் சீர்திருத்தம் நடந்தேறியதேயில்லை. அந்நாடு தொழிலாளர் மயமாகவே இருக்கிறது. தோட்டி முதல் தொண்டமான் ஈறாக எல்லோரும் அரசாங்கத் தொழிலாளராகவே கருதப்படுகின்றனர். அங்கு எல்லா மனிதரும் சமமாகவே கருதப்படு கின்றனர்.

மக்களுக்குள் உயர்வு தாழ்வு என்பதே கிடையாது. வியாபாரம், தொழில், வர்த்தகம், கல்வி முதலிய சமுக அபிவிருத்திக்கான தொழில் களெல்லாம் அரசாங்கப் பொறுப்பிலேயே நடைபெற்று வருகின்றன விவசாயம் அய்க்கிய முறையில் அரசாங்க பொறுப்பில்  பரிபாலிக்கப்பட்டு வருகிறது.

அங்கு சமயமென்பது ஒன்றுமே கிடையாது ஜன சமுக நன்மையே சமயம் அதுவே சன்மார்க்கம். கிறித்தவ கோயில்களுண்டு. அதற்கு அரசாங்கத்தார் எவ்வித பணஉதவியும் செய்வது கிடையாது. அவர்களுக்குக் கடவுளைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ கவலையோ, விசாரமோ, கிடையாது.

குற்றம் செய்தவர்களை அரசாங்கம் ஒரு நவீன முறையில் தண்டிக்கிறது. அவர்களுக்கு சகல சவு கரியங்களும் செய்து கொடுக்கப் பட்டாலும், அவர்கள் சம்பளத்தில் ஒரு பாகம் அபராதத்தொகையாக பறிமுதல் செய்யப்படுகிறது. பலமுறை குற்றம் செய்தவர்களைச் சுகாதார நிலையத்திற்கனுப்பி அங்கு அவர்களது மனோ நிலை மாறத்தக்க சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.

பாடசாலைகள் மூலமாயும் சினிமாக்கள் மூலமாயும் இதுவரை கற்றிராத பாமரமக்களுக்கும் தொழில் முயற்சியை அஸ்திவாரமாகக் கொண்ட கல்வி கற்பிக்கப்படுகிறது. ஒரு மதத்தையும் பின் பற்றாத அரசாங்கம், மத எதிர்ப்பு சங்கத்திற்குப் போதிய உதவியளித்து வருகிறது.

நான் இத்தேசத்தைப் பார்வையிடச் சென்றதின் நோக்கமெல்லாம், அங்குள்ள நிலைமைகளைச் சரிவர அறியவும், அத்தேசத்தைப் பற்றிப் பெருமிதப் படுத்திக் கூறும் கதைகள் உண்மையா வென்று அறியவு மேயாகும். அரசாங்கம் தாம் தேசத்தைப் புணருத்தாரணம் செய்ய வேண்டுமென்பதிலேயே தீவிர கவனம் செலுத்துவதால் கடவுளைப் பற்றியோ மதத்தைப் பற்றியோ நினைப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை.

எகிப்து நாட்டில் பர்தா( கோஷா) முறை அநேகமாக அழிந்து விட்டதென்றே சொல்லலாம். சில வயோதிகக் கிழவிகள் மட்டும் அதைவிடவில்லை. எகிப்திய பெண்கள் ஆங்கில மாதரைப் போலவே ஆடை அணிந்து கொள்ளுகிறார்கள் துருக்கிதேசத்தில் அதி தீவிரமான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. சமுக முன்னேற்றத்தில் துருக்கி மாதர் அதிகபிரயத்தனம் எடுத்து வருகிறார்கள். சமீபத்தில் ஒரு துருக்கி மாது போலீசு சூப்பிரெண்டாக நியமனம் பெற்றிருக்கிறார்.

(கொழும்பில் 17-10-32இல் சிலோன் டெல்லி நியூ பத்திரிகை

பிரதிநிதியொருவருக்கு பேட்டி கொடுத்துப் பேசியது)
- விடுதலை நாளேடு, 12.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக