புதன், 24 அக்டோபர், 2018

தற்கொலை தெய்வீகமா? (தேசியத்துரோகி)

05. 06. 1932 - குடிஅரசிலிருந்து...




மசூலிப்பட்டிணத்தில், ஒரு போலீஸ் சேவகரின் மகளுக்குக் கல்யாணம் நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். கல்யாணத்திற்கு முதல் நாள் அந்த மணப்பெண், கல்யாண உடைகளை அணிந்து கொண்டு வீட்டின் கொல்லைப் புறத்தில் அடுக்கி யிருந்த விறகில் ஏறித் தானே நெருப்பு வைத்துக் கொண்டு இறந்து விட்டாளாம். இவ்வாறு இறந்த தற்குக் காரணம் அப்பெண், தன்னை தெய்வத் தன்மை உள்ளவள் என்றும், தான் மனிதனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள யோக்கியதை இல்லை என்றும் கூறியதாகவும் கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அப்பெண் இறந்ததற்குத் தெய்வத்தன்மை கற்பிக்கப்பட்டவுடன், ஏராளமான ஜனங்கள் கூடி, முனிசிபல் அதிகாரிகளின் உத்தரவுப் பெற்று அப் பிணத்தை ஊர்வலமாகத் தூக்கிச் சென்று அடக்கஞ் செய்தார்களாம். இதன்பின் அப்பிணத்தைப் புதைத்த இடத்தில் கோயில் கட்டுவதற்காக ஜில்லா முழுதும் பணம் வசூல் பண்ணுகிறார்களாம்.

நமது நாட்டு மக்களின் பைத்தியக்காரத்தனத்தைக் காட்டுவதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

வாங்கினகடனை திருப்பிக் கொடுக்க முடியாத காரணத்தால் மானமுள்ளவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டு உயிர் துறந்திருக்கிறார்கள். கவுரவமாக ஜீவனம் பண்ணியவர்கள், கஷ்டப்பட வேண்டிய சந்தர்ப்பம் நேர்ந்த போது கஷ்டம் பொறுக்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்டி ருக்கிறார்கள்.

குடும்பச் சச்சரவு காரணமாகத் தற்கொலை செய்து கொண்டு மடிந்து போனவர்களில் ஆண் களும் உண்டு, பெண்களும் உண்டு. மணமகன் பிடிக்காத காரணத்தால், மணமகள் தற்கொலை செய்து கொண்டு இறப்பதும், மணமகள் பிடிக்காத காரணத்தால் மணமகன் தற்கொலை செய்து கொண்டு சாவதும் உண்டு. இம்மாதிரி இதற்கு முன் நடைபெற்றும் இருக்கின்றது ஆகையால் தற்கொலை செய்து கொண்டு இறப்பதில் தெய்வத் தன்மை கற்பிப்பதும், அதை மக்கள் நம்பி ஏமாறு வதும் மூடத்தனமேயாகும்.

மசூலிப் பட்டணத்தில் இறந்து போன மணப் பெண் விஷயமும் வெறும் தற்கொலையே தவிர வேறு ஒன்றும் ஆச்சரியமுள்ளதல்ல வென்றே நாம் சொல்லுவோம்.

அந்தப் பெண், தனக்குக் குறிப்பிட்டிருந்த மாப்பிள்ளை பிடிக்காத காரணத்தால் இறந்திருக்க வேண்டும்; அல்லது புத்தி தடுமாற்றத்தால் இறந்திருக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்த காரணமும் கூற முடியாது. இவ்வாறு உண்மையைச் சிந்தித்து பார்க்கும் அறிவில்லாமல் தெய்வீகத் தன்மையை நம்பி ஒருவர் சென்ற வழியே மற்றவர்களும் ஆட்டு மந்தைப் போலச் செல்வ தனால் உண்டாகும் பைத்தியக் காரத்தனத்தையும், பொருள் நஷ்டத்தையும் யாராவது கவனிக்கின் றார்களா?

இந்தமாதிரியே செத்துப் போனவர்கள் சம்பந்த மாக உண்டான மூட நம்பிக்கைகள் காரணமாகத்தான் இன்று நமது நாட்டில் எண்ணற்ற கோயில்கள் பெருகியிருக்கின்றன.

கிராமங்களில் உள்ள பலவகைப்பட்ட

கோயில்களெல்லாம் செத்துப் போனமனிதர்கள் பேரால் ஏற்பட்டவை என்பதை இன்றும் கிராமங் களில் உள்ளவர்கள் அந்தக் கோயில் சாமி களைப் பற்றிச் சொல்லும் கதைகளால் அறியலாம். இப் பொழுது மசூலிப் பட்டணத்தில் நடந்த சம்பவமும் இதற்குத் தகுந்த உதாரணமாகும்.

பொது ஜனங்களிடம், இந்த மாதிரியான இயற்கை நிகழ்ச்சிகளை எல்லாம் தெய்வத்தன்மை என்று நம்புகின்ற குணம் இருக்கின்ற வரையிலுமவர்கள் முன்னேற்றமடையப் போவதில்லை. ஆகையால் பகுத்தறிவுடைய தோழர்கள் இது போன்ற விஷ யங்கள் நேரும் போதெல்லாம் பொது ஜனங்களை எச்சரித்து ஏமாறாமலிருக்கும்படி செய்ய முன் வருமாறு வேண்டுகிறோம்.

- விடுதலை நாளேடு, 19.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக