புதன், 29 மே, 2019

புரட்சியாளரின் தகுதியும் வேலையும்

10.01.1948 - குடிஅரசிலிருந்து...  புரட்சி நாட்கள் கொண்டாடுவதால் நமக்கு ஏற்பட வேண்டிய படிப்பினை இதுதான். முக்கியமாகப் புரட்சிக் காரனுக்குப் பகுத்தறிவு வேண்டும்; மூட நம்பிக்கை ஒழிக்கப் பட்டவனாக இருக்க வேண்டும்.

கடவுள் சொல்லை நம்பினவனோ, கடவுள் கட்டளையை எதிர்பார்ப்பவனோ, மனு தர்மக்காரனோ, புரட்சிக்காரனாக ஆக மாட்டான். ரிஷிகளையும், முனிவர்களையும், மகாத் மாக்களையும் நம்புகிறவன் புரட்சிக்காரனாக மாட்டான். புரட்சித் தலைவர்களும், புரட்சி விருப்பமுடையவர்களும் மக்களுக்கு இதை முதலில் கற்பிக்க வேண்டும்.

ஏனெனில், புரட்சித் தன்மை பொதுமக்கள் லட்சியமாக இருக்க வேண்டும். மூட நம்பிக்கையை வைத்துக்கொண்டு, முதலாளி பணத்தைப் பிடுங்கி, தொழிலாளிக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டால் புரட்சி வெற்றி பெற்றுவிட்டதாக ஆகிவிடாது. மூட நம்பிக்கை உள்ளவரை, பணம் முதலாளிக்குப் போய்ச் சேராவிட்டாலும், முதல் இல்லாத முதலாளி ஆகிய கடவுளுக்கும், புரோகிதனுக்கும், மேல் ஜாதிக்காரனுக்கும் போய்ச் சேர்ந்து விடும். மூட நம்பிக்கை உள்ள மக்களைக் கொண்டு, புரட்சியைக் காப்பாற்றும் பலமான ஸ்தாபனம் அமைக்க முடியாது.
- விடுதலை நாளேடு, 24. 5 .2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக